பருவம் எய்திய மகளிடம் பக்குவமாக நடந்து கொள்வது எப்படி?

ஆண் – பெண் கலந்து பழகும், இஸ்லாத்துக்கு ஒவ்வாத சூழலில் வளர்கின்ற நம் பிள்ளைகளிடம் – அந்தச் சூழலின் தீங்குகளிலிருந்து அவர்கள் தம்மைத் தற்காத்துக் கொள்வதற்கு – தாய்மார்கள் கடைபிடிக்க வேண்டிய ஏழு வழிமுறைகளைக் கற்றுத் தருகிறார் - கிம்பர்லீ பென் – எனும் எழுத்தாளர்.

அவை:
ஒன்று: உங்கள் குழந்தைகள் மீது நீங்கள் வைத்திருக்கும் அன்பையும், பாசத்தையும் சொல்லாலும், செயலாலும் வெளிப்படுத்திக் காட்டிடத் தவறாதீர்கள். இதனை நீங்கள் அலட்சியம் செய்திட வேண்டாம்.

இரண்டு: வளர்ந்து ஆளாகி விட்ட உங்கள் குழந்தைகள் – வீட்டில் ஏதேனும் நல்லதொரு நற்செயலைச் செய்து விட்டால் – அதனை மனமாற பாராட்டி விடுங்கள். உதாரணமாக – நீங்கள் கேட்காமலேயே – சமையலறையைச் சுத்தம் செய்து விட்டாளா உங்கள் மகள். பாராட்டத்தவறாதீர்கள்.

மூன்று: அது போலவே, உங்கள் மகள் நற்பண்பு ஒன்றை எடுத்து நடக்கின்றாள் என்றால் – அப்போதும் அவளைப் பாராட்டுங்கள். தனது தம்பி, தங்கைகளுக்கு அவர்கள் படிப்பில், குர் ஆன் ஓதுவதில் – உதவி செய்கிறாள் என்றால் – “என் மகள் பொறுப்பு மிக்கவள், பொறுமை மிக்கவள்,” என்று பாராட்டி விடுங்கள்!

நான்கு: தனக்குள் “தன்னம்பிக்கைப் பேச்சு” ஒன்றைப் பேசுவது எப்படி என்று கற்றுக் கொடுங்கள். இதனை ஆங்கிலத்தில் – positive self talk – என்கிறார்கள். அது என்ன?

“நான் எதற்கும் இலாயக்கில்லாதவள். எந்த ஒன்றையும் என்னால் சரிவரச் செய்திட முடியாது. என்னை யாருக்கும் பிடிக்காது. என்னிடம் யாரும் நட்பு பாராட்ட விரும்ப மாட்டார்கள்” – என்று ஒரு பெண் பேசிக் கொண்டால் – அது – negative self talk. அது தனக்குள் பேசிக்கொள்கின்ற தன்னம்பிக்கையற்ற பேச்சு.

ஆனால், “படிப்பது என்பது எனக்குக் கொஞ்சம் கஷ்டம் தான். ஆனால் கடினமாக உழைத்தால் என்னால் நல்ல மதிப்பெண் பெற்றுக்காட்ட முடியும்” என்றோ

அல்லது - “இது கொஞ்சம் கடினம் தான். ஆனால் என்னால் என்னைக் காப்பாற்றிக் கொள்ள முடியும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது”! – என்று ஒருவர் பேசிக் கொண்டால் இதுவே - தன்னம்பிக்கை உடையவர்கள் பேசிக் கொள்கின்ற positive self talk!

ஐந்து: உங்கள் மகள் தவறு ஒன்றைச் செய்து விட்டாள் எனில் தவறை மட்டும் விமர்சியுங்கள். தவறு செய்த உங்கள் மகளை விமர்சித்து விடாதீர்கள். உதாரணமாக – உனது உடமைகளை நீ சுத்தமாக வைத்துக் கொள்வதை நான் விரும்புகிறேன்! என்று பேசிட வேண்டுமே ஒழிய – “நீ ஒரு காலமும் சுத்தமாக இருக்கப் போவதில்லை!” என்று ஒரு போதும் பேசிடக்கூடாது.

ஆறு: பிரச்னை ஒன்று வருகிறது என்றால் அந்தப் பிரச்னையை எதிர்கொண்டு, அதனைத் தீர்க்கும் வழிவகைகளை ஆய்ந்து, சரியான தருணங்களில், சரியான முடிவெடுத்து, பிரச்னைகளை வெற்றிகரமாக வென்றெடுக்கும் திறனைக் கொஞ்சம் கொஞ்சமாக உங்கள் மகளுக்குக் கற்றுக் கொடுங்கள். அவ்வாறு – தாமே ஒரு பிரச்னையை வெற்றிகரமாக சந்தித்து அதனை முறியடித்து விட்டு வந்தால் – அவளை வானளாவப் பாராட்டி விடுங்கள்! “Praise those efforts to the sky!” என்கிறார் கிம்பர்லீ பென்.

ஏழு: உங்கள் மகளை – இஸ்லாத்தைப் பின்பற்றி வாழும் இதர முஸ்லிம் பெண்களுடன் – அறிமுகம் செய்து வைத்திடுங்கள். அவர்களுடன் பழக விடுங்கள். “தான் மட்டும் தனி கிடையாது. தன்னோடு – இஸ்லாமிய விழுமியங்களுடன் – வாழ்கின்ற –சக தோழிகள் நமக்கு உண்டு!” என்பது உங்கள் மகளில் தன்னம்பிக்கைக்கு மேலும் வலுவூட்டும் அற்புதமான வழி இது!

இதனைப் படிக்கின்ற பெற்றோர்களை நாம் கேட்டுக் கொள்வது:

பருவம் அடைந்த பெண்மக்களை உடைய இதர பெற்றோர்கள் சிலருடன் – இந்தப் பதிவில் விவாதிக்கப்பட்டுள்ள வழிமுறைகளைக் குறித்து ஒரு கலந்துரையாடல் மேற்கொள்தல் மிக்க நலம் பயக்கும்!

Comments