"என்னைப்போல் என் மகள்களை யார் கவனித்துக் கொள்வார்கள்?"

நபியவர்களாருக்கு அப்போது வயது ஐம்பத்து இரண்டு. ஆருயிர் மனைவி அன்னை கதீஜா (ரளி) அவர்களும், பெரிய தந்தை அபூ தாலிப் அவர்களும் மரணித்து கொஞ்ச காலம் தான் ஆகியிருக்கும்.

மனைவியை இழந்த சோகம் இன்னும் குறைந்த பாடில்லை. அதே வேளையில் தாயை இழந்த நான்கு பெண் குழந்தைகளைத் தாமே கவனித்துக் கொள்ள வேண்டிய சூழல்.


இந்நிலையில் - ஒரு நாள் - நபித்தோழியர்களில் ஒருவரான கவ்லா பின்த் ஹகீம் (ரளி) அவர்கள் அண்ணலாரைச் சந்திக்க வருகிறார்கள்.

நபியவர்களோ, வீட்டை சுத்தம் செய்வது, பாத்திரங்களைக் கழுவி வைப்பது போன்ற வீட்டு வேலைகளை தனது நான்கு மகள்களுடன் சேர்ந்து செய்து கொண்டிருப்பதைக் கவலையுடன் கவனிக்கிறார்கள்.

அன்னை கதீஜா அவர்கள் இறந்த பின் இறைத்தூதர் (ஸல்) தனிமையில் மிகவும் சிரமப்படுவதைக் கவனித்த கவ்லா அவர்கள், "நீங்கள் கதீஜா அவர்களது நினைவிலேயே இருந்தால் என்னாவது? நீங்கள் திருமணம் முடித்துக்கொள்ளுங்களேன்!" - என்று ஆலோசனை கூறுகிறார்கள்.
அண்ணலார் என்ன பதில் சொன்னார்கள் தெரியுமா?

"என்னை யார் மணந்து கொள்வார்கள் ? இன்னும் எனது மக்களையும் என்னைப் போலவே யார் கவனித்துக் கொள்வார்கள் ?"

ஐம்பத்து ஐந்து வயதை அடைந்த ஸவ்தா (ரளி) அவர்களை திருமணம் புரிந்து கொள்ள அண்ணலாரிடம் கவ்லா அவர்கள் சம்மதம் கேட்க, அண்ணலார் அவர்களும் சம்மதித்திட திருமணம் நடந்தேறுகிறது என்பதெல்லாம் தனி விஷயம்.

ஆனால் பெண் குழந்தைகளைப் பெற்றிருக்கும் தந்தைமார்களுக்கு இதிலே மிக முக்கியமான படிப்பினை ஒன்று இருக்கிறது.

பொதுவாக - ஒரு பெண் குழந்தையை வளர்ப்பதில் - அவளின் தாய்க்குப் பங்கு அதிகமா; தந்தைக்குப் பங்கு அதிகமா என்று கேட்டால் - தாய்க்குத் தான் பங்கு அதிகம் என்றே சொல்ல முடியும்! அப்படியானால் குழந்தை வளர்ப்பில் தந்தைக்குப் பங்கே இல்லையா என்றால் - தந்தைக்கும் பங்கு உண்டு என்பதே நபிகளார் வாழ்க்கை நமக்குக் கற்றுத்தரும் பாடம்.

சரி, இந்தப் பாடத்தை எவ்வாறு செயல்படுத்துவது?

உங்கள் மனைவி வெளியூர் சென்றிருக்கின்றாரா? அல்லது உடல் நலமின்றி இருக்கின்றாரா? இது போன்ற சமயங்களில் - உங்கள் மகள்களோடு சேர்ந்து - தரையைத் துடைப்பது, சமையல் பாத்திரங்களைக் கழுவுவது, துணிகளைத் துவைத்துக் கொடுப்பது போன்ற வீட்டுப்பணிகளில் நீங்கள் ஈடுபட்டால் அதுவும் சுன்னத் தானே?

உங்கள் மகள்கள் மீது நீங்கள் வைத்திருக்கும் ஆழமான பாசத்தை வெளிப்படுத்திட - இதை விட வேறு சிறந்த வழி எதுவும் இருக்க முடியுமா சொல்லுங்கள்?

"என்னைப்போல் என் மகள்களை யார் கவனித்துக் கொள்வார்கள்?" - என்று அண்ணலார் சொன்ன அதே போல ஒரு சொல்லை நம்மால் சொல்ல முடியுமா என்று ஒவ்வொரு தந்தையும் தன்னைத் தானே கேட்டுக் கொள்ளலாம் தானே?

Comments