பாடம்: 2 யானை ஆண்டு (சிறுவர் சிறுமியர்க்கு)



பாடம்: 2 யானை ஆண்டு (சிறுவர் சிறுமியர்க்கு)
------------------------------------------------------------------------------------

1 அண்ணல் நபி அவர்கள் பிறந்த ஆண்டுக்குப் பெயர் யானை ஆண்டு என்பதாகும்.

2 அரேபியாவுக்குத் தெற்கே உள்ள யமன் நாட்டை,   அப்போது ஆப்ரஹா என்றொரு மன்னன் ஆட்சி செய்து வந்தான்.

3 அன்றைய அரபுலகம் முழுவதிலுமிருந்து, ஆண்டு தோறும் மக்காவில் உள்ள கஃபா எனும் இறையாலயத்துக்கு புனித யாத்திரை மேற்கொள்வதற்காக, மக்கள் திரண்டு வருவார்கள்.

4 அவர்களைத் திசை திருப்புவதற்காக, யமன் நாட்டிலேயே ஒரு பெரிய இறையாலயத்தைக் கட்டியெழுப்பினான் ஆப்ரஹா மன்னன்.

5 ஆனால் அரபுலக மக்கள் அதனைக் கண்டு கொள்ளாமல், வழக்கம் போல மக்காவில் உள்ள கஃபாவுக்கே புனித யாத்திரை மேற்கொண்டு ஹஜ் செய்தனர்.

6 இதனால் ஆத்திரமும் பொறாமையும் கொண்ட ஆப்ரஹா மன்னன், பெரியதொரு படை ஒன்றை அழைத்துக் கொண்டு க அபாவை இடித்து அழிப்பதற்காக மக்கா நோக்கிப் புறப்பட்டான். அந்தப் படையின் முன்னணியில் பல யானைகளும் கூட இடம் பிடித்திருந்தன.

7 அப்போது மக்காவின் தலைவராக அண்ணல் நபியவர்களின் பாட்டனார் அப்துல் முத்தலிப் இருந்தார்.

8 ஆப்ரஹாவின் பெரும்படையை எதிர்க்க அஞ்சிய மக்கத்து மக்கள் அருகில் உள்ள மலைகளில் போய் ஒளிந்து கொண்டனர்.

9 ஆனால் ஆப்ரஹாவின் திட்டம் நிறைவேறியதா? அது தான் இல்லை!

10 அல்லாஹ், அபாபீல் எனும் பறவைக் கூட்டத்த்தை அனுப்பினான்.

11 அந்தப் பறவைகள், சிஜ்ஜீல் எனும் கற்களை சுமந்து சென்றன.

12 ஆப்ரஹாவின் படைகள் மீது அந்தக் கற்கள் விழுந்ததும், யானைகள் உட்பட ஆப்ரஹாவும் அவன் பெரும்படையும் அழிந்து நாசமாயின.

13 இறைவன் தன் இறையாலயத்தைத் தானே காப்பாற்றிக் கொண்டான்.

14 அதே ஆண்டில் தான், அண்ணல் நபியவர்கள் மக்காவில் பிறந்தார்கள். எனவே தான் அண்ணலார் பிறந்த ஆண்டை யானை ஆண்டு என்கிறோம்.

Comments