அறிவுக்குத் தேவை - நேர்வழி!




(2B வழிகாட்டும் தலைமைத்துவம்)

சென்ற கட்டுரையில், மக்களை - இறைவனின் நேர்வழியில் தொடர்ந்து அழைத்துச் செல்வதே - இஸ்லாமியத் தலைமைத்துவத்தின் - அடிப்படையான, முதன்மையான இலக்கணம் என்பதைப் பார்த்தோம் அல்லவா?

ஆமாம்! தலைமைக்கு அவசியமான தகுதி என்பது, தன்னைப் பின்பற்றும் மக்களுக்கு - ஹிதாயத் எனும் நேர்வழி காட்டும் தகுதி தான்!  தலைமைக்கு நேர்வழி அவசியம் என்பதை ஏன் நாம் இந்த அளவுக்கு வலியுறுத்துகிறோம் தெரியுமா? 

மனிதனின் அறிவை, மனிதனின் கண்களோடு ஒப்பிட்டு பின் வருமாறு விளக்குகிறார் இஸ்லாமிய அறிஞர் முஹம்மத் அல் ஷனாவி அவர்கள்.

ஒருவருக்கு கூர்மையான பார்வை உடைய இரண்டு கண்கள் இருக்கின்றன என்று வைத்துக் கொள்வோம். ஆனாலும், அவரால் எதனையும் பார்க்க இயலாமல் போவது எப்போது? வெளிச்சம் என்ற ஒன்று இல்லாத போது! சரிதானா?

அது போலத்தான், மிகக் கூர்மையான அறிவுடையவர் ஒருவரை எடுத்துக் கொள்வோம்.  ஆனாலும், அவரால் அவரது அறிவைக் கொண்டு திறம்பட செயல் பட இயலாமல் போவது எப்போது? இறைவனின் வழிகாட்டுதல் எனும் நேர்வழி (ஹிதாயத்) அவரிடம் இல்லாத போது!

ஆம்! அறிவுக்குத் தேவை - நேர்வழி!

திருக்குர்ஆன் ஒரு பேரொளியாகும்! இதோ, ஒரு திருமறை வசனம்:

يٰۤـاَيُّهَا النَّاسُ قَدْ جَآءَكُمْ بُرْهَانٌ مِّنْ رَّبِّكُمْ وَاَنْزَلْنَاۤ اِلَيْكُمْ نُوْرًا مُّبِيْنًا

 மனிதர்களே! உங்கள் இறைவனிடமிருந்து உங்களுக்கு (உறுதியான) அத்தாட்சி வந்து விட்டது; தெளிவான பேரொளியையும் உங்களிடம் இறக்கி வைத்துள்ளோம். (4: 174)

**
ஹள்ரத் உமர் அவர்களிடம் ஒருவர் கேள்வி ஒன்றைக் கேட்டாராம்.

"இஸ்லாத்தைத்  தழுவுவதற்கு முன்பும் கூட, நீர் ஒரு மிகச் சிறந்த அறிவாளியாகத் தானே இருந்தீர்! பின்னர் ஏன் நீர் கற்களையும், சிலைகளையும் அப்போது வணங்கிக் கொண்டிருந்தீர்?"

உமர் (ரளி) அவர்கள் பதில் அளித்தார்களாம்:

ஏனெனில், எனது அறிவுக்கு அப்போது வழிகாட்டுதல் என்பது இல்லாதிருந்தது தான்! 

Umar’s reply to the question: "Because my intelligence did not have guidance."

***

பொதுவாக, தலைமைக்கு "அறிவாற்றல்" (அக்ல் - AQL) அவசியம் என்பதை நாம் உணர்ந்தே இருக்கின்றோம். ஆனால், நம்மில் எத்தனை பேர் - தலைமை "நேர்வழி" பெற்றிருத்தல் அவசியம் என்பதை உணர்ந்திருக்கின்றோம்? 

ஒரு தலைவனின் அறிவாற்றல் என்பது அவர் பயணிக்கும் வாகனம்! 

அவர் தாமும் தம்முடன் இருப்பவர்களும் சென்று சேர வேண்டிய இலக்கு - இறைவன்!

அவர்கள் பயணிக்கும் சாலை - சிராத்துல் முஸ்தகீம் எனும் Super Highway!

தலைவரின் கரங்களில் இருப்பது இறைவனின் திருமறை எனும் பேரொளி!

தலைவரும் அவரைப் பின்பற்றுபவர்களும், தம் இலக்கை அடைவது திண்ணம்!

சரிதானா?

ஆனால், இப்போது ஒரு கேள்வி?

தலைமைக்கு "நேர்வழி" கிடைப்பது எப்படி என்பது தான் அந்தக் கேள்வி! 

இன்ஷா அல்லாஹ் தொடர்வோம்...

எஸ் ஏ மன்சூர் அலி

***

Comments