நூல்: வாழ்க்கை என்பது இவ்வளவு தானா? - பகுதி 1

முகவுரை

இன்ஷா அல்லாஹ், நாம் இங்கே எழுதப் போவது இஸ்லாத்தைப் பற்றிய நம்பிக்கை குறித்த கருத்துக்களாகும்.

யார் யாருக்கு இவை பயனளிக்கும்?

இஸ்லாத்தை அறிந்து கொள்ள விரும்பும் முஸ்லிம் அல்லாதவர்களுக்கு!  முஸ்லிம்கள் எவற்றை நம்புகிறார்கள்? ஏன் நம்புகிறார்கள்? எந்த சான்றுகளின் அடிப்படையில் அவற்றை நம்புகிறார்கள்? - என்பதை அறிந்து கொள்ள விரும்புபவர்களுக்கு!



புதிதாக இஸ்லாத்தைத் தழுவியவர்களுக்கு! அவர்கள் தாங்கள் எவற்றை நம்பிட வேண்டும்? ஏன் நம்பிட வேண்டும்? - என்பதை அறிந்து கொள்ள!

முஸ்லிம் இளைஞர்களுக்கும் மாணவர்களுக்கும்! இயல்பாக அவர்கள் உள்ளத்தில் எழுகின்ற சந்தேகங்களை நீக்கிக் கொள்வதற்காகவும், மற்றவர்களின் சந்தேகங்களைப் போக்கிடவும்!

முஸ்லிம் ஆசிரியர்கள்களுக்கும் மற்றும் அழைப்பாளர்களுக்கும்!  கல்விப்பணியிலும் அழைப்புப் பணியிலும் உதவிடுவதற்காக!

வாருங்கள் சிந்திக்கத் தொடங்குவோம்!


நம்பிக்கை என்பது ஒன்றும் ஒரு சுமை கிடையாது!  

முதலில் பின் வரும் கேள்விகளுக்கு என்ன பதில் தரலாம் என்று சிந்தியுங்கள்:

நம்பிக்கை என்பது என்ன?
மூடநம்பிக்கை என்பது என்ன?
இவை இரண்டிற்கும் உள்ள வேறுபாடு என்ன?

அரபிக்கல்லூரி மாணவர்களுக்கான பயிற்சி முகாம் ஒன்றில் மேற்கண்ட மூன்று கேள்விகளையும் கேட்டேன். அவர்கள் குழுக்களாக பிரிந்து கலந்துரையாடி பல கருத்துக்களைச் சொன்னார்கள். அவற்றில் பின் வரும் கருத்துக்கு பாராட்டு கிடைத்தது.


தக்க சான்றுகளுடன் ஒன்றை ஏற்றுக் கொள்வது நம்பிக்கை. எந்த ஒரு ஆதாரமும் இன்றி ஒன்றை ஏற்பது மூடநம்பிக்கை.

எனவே இவ்விரண்டுக்;கும் உள்ள வேறுபாடு என்னவெனில் நம்பிக்கை என்பதை அறிவு பூர்வமாக நிரூபிக்க இயலும். ஆனால் மூடநம்பிக்கைகளை நிரூபிக்க இயலாது.

அப்படியானால் பதில் சொல்லுங்கள்:

நீங்கள் அல்லாஹ்வை நம்புகிறீர்களா?
நீங்கள் வானவர்களை நம்புகிறீர்களா?
நீங்கள் வேதங்களை நம்புகிறீர்களா?
நீங்கள் இறைத் தூதர்களை நம்புகிறீர்களா?
நீங்கள் மறுமையை நம்புகிறீர்களா?
நீங்கள் விதியை நம்புகிறீர்களா?

இக்கேள்விகள் அனைத்திpற்கும் உங்கள் பதில் ஆம் எனில் - இந்த நம்பிக்கை உங்களுக்கு எப்படி வற்தது?
நான் ஒரு முஸ்லிம் என்பதால்!
எனது பெற்றோர் கற்றுக் கொடுத்ததனால்!
எனது ஆசிரியர்கள் கற்றுக் கொடுத்ததனால்!
அல்லது .. தக்க சான்றுகளுடன் தான் நான் நம்புகிறேன்!

இப்போது கேள்வி என்னவெனில் - முஸ்லிம்களில் எத்தனை விழுக்காட்டினர் தங்கள் நம்பிக்கைக்கான தக்க சான்றுகளை அறிந்து வைத்திருக்கின்றனர் என்பது தான். அது மிகவும் குறைவு என்பதே நமது கணிப்பு.

ஏனெனில் நான் அரபிக்கல்லூரி மாணவர்களைக் கேட்டேன்: 'நீங்கள் சிறுவர் சிறுமிகளுக்கு - ஆமன்து பில்லாஹி பாடம் நடத்தும் போது ஆதாரங்களைக் கற்றுக் கொடுப்பது உண்டா?' மவுனமே பதில்.

அடுத்து எனக்கு ஏற்பட்ட அனுபவம் ஒன்று!

ஒரு முஸ்லிம் இளைஞன் இஸ்லாமிய அறிஞர் ஒருவரிடம் கேட்டானாம்: 'பூமிப் பரப்புக்கு மேலே ஒரு சில கிலோ மீட்டர் அளவுக்கு மட்டுமே ஆக்ஸிஜன் இருக்கின்றது என்று அறிவியல் அறிஞர்கள் கூறுகிறார்கள். அப்படி இருக்கும் போது முஹம்மது நபி (சல்) அவர்கள் மிஃராஜுக்கு ஆக்ஸிஜன் எடுத்துச் செல்லாமல் போய் வற்தது எப்படி?'

அதற்கு அந்த அறிஞர் சொன்ன பதில் என்ன தெரியுமா? 'நீ முஸ்லிம் என்பதால் இதனை நீ நம்பித் தான் ஆக வேண்டும்! நம்பவில்லை என்றால் நீ முஸ்லிம் இல்லை! நீ ஒரு முஷ்ரிக்! நீ ஒரு காஃபிர்!'

அந்த இளைஞனை நான் சந்தித்தேன். அவன் என்னிடம் கேட்டான்: 'கண்ணை'மூடிக் கொண்டு என்னை நம்பச் சொல்கிறீர்களா? சந்தேகம் கேட்டால் அறிவியல் ரீதியாக விளக்கம் தர வேண்டியது தானே! அதை விடுத்து ஏன் முஷ்ரிக் என்றும் காஃபிர் என்றும் இவர் பட்டம் கட்ட வேண்டும்;?' '
எனவே தான் அழுத்தம் திருத்தமாக ஒன்றை சொல்கிறோம், நம்பிக்கை என்பது ஒன்றும் ஒரு சுமை கிடையாது! அதனை யார் முதுகிலும் நாம் சுமத்தி விட முடியாது! சான்றுகளை எடுத்துச் சொல்ல வேண்டியது நம் கடமை. அக்கடமையை நிறைவேற்றுவதற்காகவே இந்தப் பக்கங்கள்!

(இறை நம்பிக்கைக்கான சான்றுகள்)

1. மனித வாழ்க்கை என்பது இவ்வளவு தானா?

சிறு துளியாகக் கருவறையில்
தனது பயணத்தைக் துவக்கிடு;ம ஒரு சிசு!

சிறிது சிறிதாக வளர்ந்து பெரிதாகி
இறப்பின் விளிம்பிற்குத் தாய் சென்றிட்ட பின்பே அந்த சிசுவின் பிறப்பு!

அழுகையைத் தவிர அதற்கு வேறென்ன தெரியும்?
பெற்றவர் பாசத்தை அள்ளிப் பொழிந்திட
தத்தித் தவழ்ந்து தடுமாறி எழுந்து நடை பயின்று
மழலை மொழி பேசி மகிழ்வித்து
சிறுவனாகி துள்ளிக் குதித்து ஓடி விளையாடி.....

இது ஏன்? அது எப்படி? – என்று கேள்விகள் கேட்டு
படிக்கத் தொடங்கி நண்பர் குழாம் அமைத்து வளர்ந்து வாலிபனாகி
வாழ்க்கையைப் புரிந்து கொண்டு அல்லது புரியாமலேயே
எப்படியோ பொருள் தேடி மணம் முடித்து மகிழ்ச்சி வெள்ளத்தில் திளைத்து
குடும்பம் அமைத்து குழந்தைகள் பெற்று
அவற்றையும் வளர்த்து ஆளாக்கி

கொஞ்சம் சொத்து சேர்த்து வைத்து விட்டு
வயதாகி நோயில் வீழ்ந்து அல்லது இடையிலேயே
திடுமென மரணத்தைச் சந்திக்கின்ற
மனித வாழ்க்கை என்பது இவ்வளவு தானா?

விண்ணிலே வலம் வருகின்ற எண்ணிலா விண் மீன்களுக்கிடையில்
எந்தப் பிடிப்பும் இன்றி இந்த பூமித் துண்டு சுற்றிச் சுழன்று கொண்டிருப்பது
இங்கே நாம் கொஞ்ச காலம் தங்கி இருந்து
விளையாடி விட்டுப் போவதற்குத் தானா?

இயற்கைப் பெருவெளியின் அத்தனை இயக்கங்களுக்கும்
அர்த்தம் இவ்வளவு தானா? சொல்லுங்கள்?

‘நாம் உங்களை வீணாகவே படைத்துள்ளோம் என்றும் நம்மிடம் நீங்கள் திரும்பக் கொண்டு வரப்படவே மாட்டீர்கள் என்றும் எண்ணிக் கொண்டிருந்தீர்களா, என்ன?’ (திருக் குர்ஆன் 23: 115)

2. தற்செயலா?

‘விண்வெளியில் ஒரு கற்பனைப் பயணம்! தயாரா? ஒரு கற்பனை வாகனத்திpல்! இதோ புறப்படு! திரும்பாமல் வளையாமல் ஒரே நேர்கோட்டில் செல்! வேகமாக! அதி வேகமாக! வேகம் என்ன தெரியுமா? வினாடிக்கு மூன்று லட்சம் கிலோ மீட்டர்; வேகத்தில்! வேகத்தைக் குறைக்காதே! அதே வேகத்தில் செல்! ஓரே சீராக!

எவ்வளவு நேரம் இந்தப் பயணம்? ஒரு ஆயிரம் ஆண்டுகள்? இல்லை! பத்தாயிரம் ஆண்டுகள்? இல்லை இல்லை!! ஒரு பத்து லட்சம் ஆண்டுகள்! பயணித்து விட்டாயா? நீ எங்கே போய் சேர்ந்திருப்பாய்?

விண் வெளியின் எல்லைக்கா? எல்லையைத் தொட்டு விட்டாயா என்ன?
இல்லை! அங்கே சற்றே நின்று வானத்தைப் பார்! இன்னும் அதிகமான விண்வெளி! இன்னும் புதிய விண்மீன்கள்! மீண்டு;ம் பயணத்தைத் தொடர்வோமா? சரி, புறப்படு! மீண்டு;ம் இன்னொரு பத்து லட்சம் ஆண்டுகள்!

இன்னொரு புதிய இடம்! இப்பொது எங்கிருக்கிறோம் நாம்? எல்லை தென்படுகிறதா? எப்போது தான் அடைவோம் எல்லையை?

சரி! நாம் கடந்து வந்த பாதையை சற்றே கணக்கிட்டுப் பார்! தூரத்தைக் கணக்கிட்டுப் பார்! இவ்வளவு தூரம் நாம் கடந்து வந்து விட்டாலும் இன்னும் நாம் நமது பேரண்டத்தின் நடுவில் தான் எங்கேயோ இருந்து கொண்டிருக்கிறோம்!’

இவ்வளவு தூரம், இவ்வளவு விண்வெளி, இவ்வளவு பிரம்மாண்டமான அமைப்பு எப்படி ஏற்பட்டது என்ற ஒரு கேள்வி எழுவது இயல்பு.
ஒரு புறம் இறைவனை நம்புபவர்கள், இறைவன் தான் இப்பேரண்டத்தைப் படைத்துப் பரிபாலிக்கின்றான் என்று நம்புகிறார்கள்.

‘இந்த வானங்களையும், பூமியையும் அவற்றிற்கிடையே உள்ளவற்றையும் விளையாட்டுக்காக நாம் படைக்கவில்லை. தக்க காரணத்திற்காகவே அன்றி இவைகளை றாம் படைத்திடவில்லை! எனினும் அவர்களில் பெரும்பாலோர் இதனை அறிந்து கொள்வதில்லை!’ (திருக் குர்ஆன் 44: 38-39)

ஆனால் இறைவனை நம்பாதவர்கள் – நமது பிரபஞ்சத்தின் அமைப்பு மற்றும் கட்டுக்கோப்பு, அதன் அனைத்து இயக்கங்கள் ஆகியவற்றை ஆய்ந்த பின்பும் – இது தற்செயலாக நடந்து விட்ட ஒரு விண்வெளி விபத்து (ஊழளஅiஉ யுஉஉனைநவெ) என்று துணிந்து கூறுகிறார்கள். எனவே இந்த தற்செயல் கோட்பாட்டை நாம் சற்றே ஆழமாக விவாதிப்போம்.

பத்து ஒரு ரூபாய் நாணயங்களை எடுத்துக் கொள்ளுங்கள். ‘பூவா தலையா’ போட்டுப் பாருங்கள். ஒரு தடவை ஏழு தலை – மூன்று பூ என்று விழலாம். மறு தடவை எட்டு பூ இரண்டு தலை என்று விழலாம். இவற்றை தற்செயல் என்று சொல்லலாம். ஆனால் ஆயிரம் ஒரு ரூபாய் நாணயங்களை எடுத்துக் கொண்டு பூவா தலையா போட்டுப் பார்ப்பதாக வைத்துக் கொள்வோம். ஆயிரமும் தலையாகவே விழுவதாக வைத்துக் கொள்வோம். தற்செயலாக!

ஆனால் மறு தடவை போட்டுப் பார்த்தால் அப்போதும் ஆயிரம் தலைகள். மூன்றாவது தடவையும் ஆயிரம் தலைகள் என்று விழுந்தால் – இதனை ‘தற்செயல்’ என்று ஏற்பீர்களா? எல்லா நாணயங்களையும் சோதித்துப் பாரப்பீர்கள் – இரண்டு பக்கங்களும் தலைகளாக உள்ளனவா என்று!

இதிலிருந்து என்ன தெரிகிறது? தற்செயலான ஒரு காரியம் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்க முடியாது என்பது தானே! இப்போது நமது பேரண்டத்தின் முழு வடிவத்தையும் நம் மனக்கண் முன்னே கொண்டு வருவோம். நமது பிரபஞசம் முழுவதிலும் ஒன்றல்ல, இரண்டல்ல – கோடிக்கணக்கான அதிசயங்கள் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. அவை தொடர்ந்து கொண்டும் இருக்கின்றன.

கணக்கிடப் பட்;டது போன்றதொரு தூரத்தில் கதிரவன். தற்செயலா?
அதனால் நமக்குப் போதுமான ஒளியும் வெப்பமும். தற்செயலா?
தன்னைத் தானே சுற்றிக் கொள்கிறது பூமி. அதனால் நமக்கு இரவும் பகலும். தற்செயல்தானா?

சூரிய மண்டலத்தின் ஒன்பது கோள்களும் ஒன்றுக்கொன்று மோதிக்கொள்ளாமல் ஆண்டாண்டு காலமாகச் சுழன்றோடிக் கொண்டிருப்பதும் தற்செயலாகத் தானா?

காற்றில் போதுமான அளவுக்கு மட்டும் ஆக்ஸிஜன். தற்செயல்தானா?
நாம் வெளியிடுகின்ற கரியமில வாயுவைத் தாவரங்கள் எடுத்துக் கொள்கிறதாம். தற்செயலா?

அதெல்லாம் இருக்கட்டும் – நம்மையே நமது உடலையே கவனிப்போம்.
நமது மகத்தான மூளை தற்செயலாக உருவானது தானா?

நமது கண்கள், நமது இதயம், நமது இன்ன பிற உறுப்புகள் அனைத்தும் சீராக அமைந்து சிறப்பாக செயல்படுவதெல்லாம் தற்செயலாகத் தானா?

ஏற்க முடியவில்லையே? என்ன சொல்கிறீர்கள்? ”

3. விரிவடையும் பேரண்டம்

நாம் வாழ்கின்ற இப்பேரண்டம் எவ்வாறு தோன்றியது, இது எங்கே எப்படிப் போய் முடியும், இது எவ்வாறு இயங்கிக் கொண்டிருக்கிறது - என்பது பற்றியெல்லாம் ஆராய்ச்சி செய்வது விஞ்ஞானிகள் பலருக்கு மிக விருப்பமானதொரு துறையாகும்.

கடந்த 20 - ம் நூற்றாண்டின் துவக்க காலம் வரை கூட விஞ்ஞானிகள் இப்பேரண்டத்தைப் பற்றி என்ன கருத்து கொண்டிருந்தார்கள் என்றால் - இப்பிரபஞ்சத்துக்குத் துவக்கம் என்று ஒன்று கிடையாது. இது தொடர்ந்து இப்படியே நிலை பெற்றிருக்கும். இதற்கு முடிவு என்று ஒன்றும் கிடையாது - என்பது தான். இதனையே static universe model - என்கிறார்கள் விஞ்ஞானிகள். அதாவது அசையா பிரபஞ்சக் கோட்பாடு என்று இதனைக் கூறலாம்.

ஆனால் 1929 - ஆம் ஆண்டு அமெரிக்காவைச் சேர்ந்த விண்வெளி ஆராய்ச்சியாளர் எட்வின் ஹப்ல் என்பவர் விண்வெளி ஆராய்ச்சியில் ஒரு மிகப் பெரிய உண்மையைக் கண்டுபிடித்துச் சொன்னார். மிக மிகப் பெரிய தொலை நோக்கி வழியாக, விண்மீன்களில் இருந்து புறப்பட்டு வருகின்ற ஒளிக்கற்றைகளை ஆய்வு செய்தார் அவர். அந்த ஒளிக்கற்றைகள் நிறமாலையில் (spectrum) ஏற்படுத்தும் மாற்றங்களை வைத்து விண்மீன்கள் நம்மை விட்டு விலகித் தொடர்ந்து சென்று கொண்டிருப்பதாக அவர் கண்டு பிடித்தார். அது மட்டுமல்ல விண்மீன்களும், விண்மீன் மண்டலங்களும் கூட ஒன்றை விட்டு ஒன்று விலகிச் சென்று கொண்டிருப்பதாகவும் அவர் கண்டுணர்ந்தார். ஆக, இப்பிரபஞ்சத்தில் உள்ள அனைத்துமே ஒன்றை விட்டு ஒன்று விலகிச் செல்வது எதனை உணர்த்துகிறது எனில் நாம் வாழ்கின்ற இப்பேரண்டம் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக விரிவடைந்து கொண்டே செல்கிறது என்பதைத்தான்!

ஆனாலும் இக்கண்டுபிடிப்பிற்கு முன்னரே, சென்ற நூற்றாண்டின் மிகச் சிறந்த அறிவியல் மேதை என்று போற்றப்படும் ஆல்பர்ட் ஐன்ஸ்டின் - தமது இயற்பியல் கணக்;கீடுகளின் அடிப்படையில் - இப்பேரண்டம் அசையாமல் நிலையாக இருந்து கொண்டிருத்தல் சாத்தியம் அல்ல என்று முடிவு செய்து வைத்திருந்தார். எனினும் அவர் தமது கருத்தை உடன் வெளியிட்டு விடவில்லை. காரணம் இப்பிரபஞ்சம் நிலைத்து நிற்கிறது என்ற முந்தைய கோட்பாட்டுடன் முரண்படுகின்ற ஒரு கருத்தை வெளியிட வேண்டாம் என்று தமது கண்டுபிடிப்பை ஓரம் கட்டி வைத்திருந்தார்! பின்னரே அவர் அக்கருத்தை வெளியிட்டார். தாம் கண்டுபிடித்து வைத்திருந்த உண்மையை உடனே வெளியிடாமல் இருந்து விட்டதை - (The greatest mistake of his career) - தமது துறையில் தாம் செய்து விட்ட மிகப்பெரிய தவறு - என்று வருத்தமும் தெரிவித்தார்.

எனவே நமது பிரபஞ்சம் விரிந்து செல்கிறது என்பது உறுதிப்படுத்தப் பட்டு விட்டது. ஆனால் விஷயம் இத்தோடு முடிந்து விட்டதா என்றால் அது தான் இல்லை. ஏற்கனவே முடிவு செய்து வைக்கப்பட்டிருந்த பல ஆய்வுக் கருத்துக்களை மறு பரிசீலனை செய்திட வேண்டிய கட்டாயமான சூழ்நிலை ஒன்று உருவாகி விட்டது.

பேரண்டம் விரிகிறது என்றால் என்ன பொருள்? காலம் செல்லச் செல்ல இப்பேரண்டத்தின் அளவு அதிகரித்துக்கொண்டே செல்கிறது என்றால் காலத்தால் பின்னுக்குச் செல்லச் செல்ல இப்பேரண்டத்தின் அளவு குறைந்து கொண்டே அல்லவா இருந்திருக்க வேண்டும்! ஆம்! அது உண்மை தான்.

ஒரு காலத்தில் நாம் வாழ்கின்ற இந்த இயற்கைப் பெருவெளியின் அளவு மிக மிகச் சிறியதாகத் தான் இருந்திருக்க வேண்டும். கோடிக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னால் - ஒரு குறிப்பிட்ட கட்டத்தில் இப்பிரபஞ்சம் என்பது ஒரு சிறு புள்ளியாக தனக்குள்ளே இப்பேரண்டத்தினை உருவாக்கக் கூடிய அத்தனைப் பொருட்களுடனும் ஆற்றலுடனும் (matter and energy) திகழ்ந்திருக்க வேண்டும். அதாவது அந்த சமயத்தில் நமது பிரபஞ்சத்தின் கன அளவு பூஜ்யம் என்றும் அதன் அடர்த்தி எல்லையற்றது என்றும் கொள்ளலாம். ஆனால் உண்மையிலேயே கன அளவு பூஜ்யம் என்பதன் பொருள் என்ன? எதுவுமே இல்லாத நிலை தானே அது! அதாவது - Nothingness!

எனவே - இல்லாத நிலை ஒன்றிலிருந்தே இப்பிரபஞ்சம் தோன்றியுள்ளது. அதாவது இப்பிரபஞ்சம் படைக்கப்பட்டுள்ளது! This universe was created!

இல்லாத நிலையிலிருந்து தான் இப்பிரபஞ்சம் படைக்கப்பட்பது என்பது உண்மையானால், இதனைப் படைத்த ஒருவனை ஏற்றுக் கொள்வதில் என்ன கடினம்?

4. பெருவெடிப்புக் கோட்பாடு (Big Bang Theory)

நமது பிரபஞ்சம் மிகப்பெரிய வெடிப்பு ஒன்றின் மூலமே தோன்றியது என்ற கண்டுபிடிப்பு - 20 - ஆம் நூற்றாண்டின் மிகப் பெரிய கண்டுபிடிப்பாகும். இந்தப் பெரு வெடிப்பை Bing Bang என்றும் இந்த அறிவியல் கோட்பாட்டை Bing Bang Theory என்றும் அழைக்கிறார்கள். சுமார் 15 பில்லியன் (ஆயிரத்து ஐந்நூறு கோடி) ஆண்டுகளுக்கு முன்னால் - மிக மிகச் சிறிய ஒரு புள்ளி அளவில் இருந்த பிரபஞ்சம் - ஒரு வினாடியின் ஒரு சிறு பகுதியிலேயே ஒரு கைப்பந்து அளவுக்குப் பெரிதாகி - முழுவதுமாக ஒரு வினாடி முடிவதற்குள்ளேயே - நமது பிரபஞ்சத்தின் அளவு கோடிக்கணக்கான மைல்கள் அளவுக்கு விரிந்து விட்டது என்று விஞ்ஞானிகள் கணக்கிட்டுச் சொல்கிறார்கள். இந்தப் பெரு வெடிப்பிற்குப் பின்னரே மிகச்சிறிய அணு முதல் மிகப்பெரிய விண்மீன்கள், விண்மீன் மண்டலங்கள், இன்ன பிற கோள்கள் எல்லாம் உருவானதாம்.

இப்பேரண்டம் தோன்றிய அந்த நேரத்திலேயே இயற்கைச் சட்டங்களும் (Laws of physics)உருவாகி விட்டனவாம். அந்த இயற்கைச் சட்டங்கள், இப்பிரபஞ்சம் முழுமைக்கும் ஒரே மாதிரியானவையாம். அவற்றில் எந்த ஒரு வேறுபாடும் இல்லை. அவை மாறுவதும் இல்லை! இந்த இயற்கைச் சட்டங்களில் மிக மிகச் சிறியதொரு மாற்றம் இருந்திருந்தாலும் கூட இப்பேரண்டம் முழுவதும் அழிந்தே போயிருக்கும் என்கிறார்கள் அறிவியலாளர்கள்.

அது போலவே, இப்பேரண்டம் விரிவடைந்து கொண்டே செல்கிறது என்று சொன்னோம் அல்லவா? அதன் விரிவடையும் வேகம் என்பது கூட ஒரு குறிப்பிட்ட வேகம் தான். அதனை 'ஆபத்தான விரிவடையும் வேகம்' (critical rate of expansion) என்று குறிப்பிடுகின்றார்கள். அதாவது இப்பேரண்டத்தின் 'வெடித்துச் சிதறும்' இயல்புக்கும் இப்பேரண்டத்தைக் கட்டிப் பிடித்து இழுக்கும் ஈர்ப்பு விசைக்கும் நடுவில் மிகச்சரியான, ஒரு நுணுக்கமான நடுநிலை வேகத்துடன் இப்பிரபஞ்சம் விரிந்து கொண்டிருக்கிறதாம். இப்பேரண்டத்தின் விரிவடையும் வேகம் சற்றே சற்று (அதாவது ஆயிரம் கோடி கோடியில் ஒரே ஒரு பங்கு) அதிகரித்தாலும் சரி, குறைந்தாலும் சரி - நாம் இன்று பார்க்கின்ற இப்பிரபஞ்சம் இன்றைய அளவை எட்டும் முன்னரே சிதறுண்டு அழிந்தே போயிருக்கும் என்கிறார் - இன்றும் நம்முடன் வாழ்ந்து கொண்டிருக்கும் அறிவியல் அறிஞர் ஸ்டீஃபன் ஹாக்கிங்.

என்றுமே மாறாத இயற்கைச் சட்டங்களைத் தமக்குத் தாமே உருவாக்கிக் கொண்டதா இப்பேரண்டம்? தமக்குத் தாமே ஒரு வேகத்தைக் கணக்கிட்டுக்கொண்டு இப்பேரண்டம் விரிகிறதா? இதனைத் 'தற்செயல்' என்று சொல்ல அறிவு இடம் கொடுக்கிறதா?
பொதுவாக - ஏதாவது ஒன்று வெடித்துச் சிதறினால் அது அழிவைத் தானே ஏற்படுத்திடும்? சான்றாக அணுகுண்டு ஒன்று வெடித்தால் என்ன நிகழும்? அல்லது எரிமலை ஒன்று வெடித்துச் சிதறினால் என்ன விளைவுகளை அது ஏற்படுத்தும்? அவை பல அபாயகரமான விளைவுகளைத் தானே ஏற்படுத்திடும்! ஆனால் Big bang வெடிப்பு மட்டும் விண்மீன்களையும் கோள்களையும் உருவாக்கி, அவற்றை ஓர் வரையரைக்குட்பட்டு காலம் காலமாக இயங்க வைத்துள்ளதே, அது எப்படி?

ஒரு காலத்தில் நமது பிரபஞ்சம் என்பது இல்லாத ஒன்று. பிறகு ஒரு கட்டத்தில் அது உருவாகிறது! ஓரு ஒழுங்குடனும், குறிப்பிட்ட சட்ட திட்டங்களின்படியும் அது செயலாற்றிக் கொண்டிருக்கிறது. இத்தனைக்கும் இப்பிரபஞ்சத்தின் அளவு என்பது ஒன்றும் சர்வ சாதாரணமான ஒன்றல்ல!

2000 கோடி ஒளி ஆண்டு தூரத்தைக் கடந்து விரிவடைந்து கொண்டிருக்கிறது நமது பிரபஞ்சம்.

அது என்ன 'ஒளி ஆண்டு'?

சற்றே நமது பிரபஞ்சத்தின் அளவைக் கணக்கிட்டுப் பார்ப்போமா? ஒரு மில்லி மீட்டரிலிருந்து ஒரு சில ஆயிரம் கிலோ மீட்டர் வரை உள்ள அளவுகளையும் தூரங்களையும் புரிந்து கொள்வதில் நமக்கு எந்த கடினமும் இல்லை. நாம் வாழ்கின்ற பூமியின் விட்டம் 12,756 கி.மீ! இந்த தூரத்தைக்கூட நம்மால் ஊகித்துப் பார்த்திட இயலும்.

ஆனால் நமக்கும் நமது பூமியின் துணைக் கோளான சந்திரனுக்கும் இடையே உள்ள தூரம் 383,000 கி.மீ! இந்த தூரத்தை எப்படி ஊகிப்பீர்கள்?

நமக்கும் சூரியனுக்கும் இடையே உள்ள தூரம் 14 கோடியே 95 லட்சம் கி.மீ! எப்படிக் கற்பனை செய்வீர்கள் இந்த தூரத்தை?

இதை விட அதிக தூரங்களை எவ்வாறு அளப்பது? அதற்காகக் கணக்கிடப்பட்ட அளவீடு தான் 'ஒளி ஆண்டு' எனப்படுவது! அதன் தூரம் என்ன? ஒளியின் வேகம் என்பது வினாடிக்கு 3 லட்சம் கி.மீ! அதாவது ஒரு வினாடிக்கு 3 லட்சம் கி.மீ வேகத்தில் ஒளி ஒரு ஆண்டில் சென்றடையும் தூரமே ஒரு ஒளி ஆண்டு ஆகும். அப்படியானல் அது எத்தனை கிலோ மீட்டர்?

300,000 X 60 X 60 X 24 X 365 ) அதாவது 9 லட்சம் கோடி கி.மீ.

இந்த தூரத்தைக் கற்பனை செய்து பார்க்க முடியுமா உங்களால்?

சூரியனும் ஒரு நட்சத்திரம் தான் என்பதை நாம் அறிவோம். அது போலவே சூரியன் என்பது milky way galaxy - என்றழைக்கப் படக்கூடிய பால்வளி மண்டலத்தின் கோடிக்கணக்கான நட்சத்திரங்களில் ஒன்று தான் என்பதும் நமக்குத் தெரியும். ஆனால் நமது சூரியனை உள்ளடக்கிய பால்வளி மண்டலத்தில் மொத்தம் எத்தனை நட்சத்திரங்கள் இடம் பெற்றுள்ளன என்பது தெரியுமா? அவை 20,000 கோடிக்கு மேல்!
நமது பால் வளி மண்டலத்தின் அளவு என்ன தெரியுமா உங்களுக்கு? ஒரு லட்சத்து ஐம்பது ஆயிரம் ஒளி ஆண்டுகளுக்கும் மேல்! கற்பனை செய்து பாருங்களேன் - ப்ளீஸ்!

நான் நமது பால் வளி மண்டலத்தின் வரைபடம் ஒன்றைப் பார்த்தேன். அதில் ஒரு இடத்தில் ஒரு சிறு அம்புக்குறியிட்டு இங்கே எங்கேயோ தான் (solar system is somewhere here!)  சூரிய மண்டலம் அமைந்துள்ளது என்று குறிப்பிடப் பட்டிருந்தது!

சரி, பால் வளி மண்டலத்தைப் போல நமது பேரண்டத்தில் இடம் பெற்றிருக்கக் கூடிய நட்சத்திர மண்டலங்கள் மொத்தம் எத்தனை தெரியுமா? அதன் எண்ணிக்கையை எப்படிக் குறிக்கிறார்கள் தெரியமா? அவை 'பல ஆயிரம் கோடி விண்மீன் மண்டலங்கள்' என்கிறார்கள்! (There are many hundred billion galaxies in our universe!)
.
இரண்;டு நட்சத்திர மண்டலங்களுக்கிடையேயான சராசரி இடைவெளி என்ன தெரியுமா? ஒரு கோடி ஒளி ஆண்டு தூரம் ஆகும். அப்படியானால் நமது பேரண்டத்தின் மொத்த அளவு எவ்வளவு இருக்கும்? அது இரண்டாயிரம் கோடி ஒளி ஆண்டு தூரத்தைக் கடந்து விரிவடைந்து கொண்டிருக்கிறது!!

இப்படிப்பட்ட பிரம்மாண்டமான ஒரு அமைப்பு தானாகத் தோன்றி - தானாக விரிவடைந்து - தானாகவே எந்த ஒரு கோளாறும் இன்றி கோடிக்கணக்கான ஆண்டுகளாக இயங்கிக் கொண்டிருக்கிறது என்று இன்றும் சில விஞ்ஞானிகள் அறிவியல் உலகின் காதில் பூ சுற்றிக் கொண்டிருக்கிறார்கள்!

இறை நம்பிக்கைக் கோட்பாட்டை வன்மையாக மறுத்திட வேண்டும் என்ற ஒரே நோக்கத்திற்காகவே அவ்வாறு பிடிவாதமாக தற்செயல் கோட்பாட்டை முன் வைக்கிறார்கள். இவர்களையும் உலகம் - அறிவியல் 'அறிஞர்கள்' என்று அழைப்பது தான் வேதனை!

ஒரு பேனாவின் அளவுடன் அந்தப் பேனாவின் முள்ளின் முனையின் அளவை ஒப்பிட்டால் முள்ளின் முனை மிகச்சிறியதே!

அந்தப் பேனாவை வைத்திருக்கின்ற மனிதனோடு ஒப்பிட்டால் பேனாவின் அளவு மிகச் சிறியதாகி விடும்.

அந்த மனிதன் இருக்கின்ற வீட்டுடன் ஒப்பிட்டால் மனித உருவம் சிறியதாகி விடும்.

அந்த வீடு இருக்கின்ற ஊருடன் ஒப்பிட்டால், வீடு சிறியதாகி விடும்.

ஒரு உலக வரைப் படத்தை வைத்துப் பார்த்தால் அந்த ஊரை மிகச்சரியாக சுட்டிக் காட்டிட இயலாது!

அது போலவே - நமது பேரண்டத்தின் அளவோடு ஒப்பிட்டுப் பார்த்தால் பால் வளி மண்டலம் மிகச்சிறியது.

நமது பால் வளி மண்டலத்தின் அளவுடன் ஒப்பிட்டுப் பார்த்தால் ஒன்பது கோள்களை உள்ளடக்கிய சூரிய மண்டலம் மிக மிகச் சிறியதாகி விடும்.

ஆனால் சூரிய மண்டலத்தின் அளவு என்ன தெரியமா? 1180 கோடி கிலோ மீட்டர்கள்!

இப்போது ஒரு கேள்வி உங்களுக்கு. நமது பிரபஞ்சத்தின் அளவோடு ஒரு மனித உருவத்தின் அளவை ஒப்பிட்டுப் பாருங்கள். என்ன தோன்றுகிறது?

5. செல் எனும் அற்புதம்!

சகோதரர்களே! இதற்கு முன் பெரு வெடிப்புக் கோட்பாட்டை முன் வைத்து - இவ்வளவு பிரம்மாண்டமான ஒரு அமைப்பு தற்செயலாகத் தோன்றி பல கோடி ஆண்டுகளாக - எந்த ஒரு தடங்களும் இன்றி இயங்கிக்கொண்டிருத்தல் சாத்தியமில்லை - இல்லாமையிலிருந்து இப்பேரண்டத்தைப் படைத்தவன் ஒருவன் இருந்தாக வேண்டும் என்பதை நாம் விளக்கியிருந்தோம்.

இறைவனின் உள்ளமைக்கு இன்னுமொரு சான்றாக - அடுத்து நாம் பார்க்க இருப்பது மிக மிக நுண்ணிய ஒரு அமைப்பைப் பற்றி!

உயிரினங்கள் எதுவாக இருப்பினும் - அவை அனைத்துக்கும் ஆதாரமான அதனுடைய மிக மிகச் சிறிய அறை போன்றதொரு அமைப்புக்குப் பெயர் தான் செல் (cell) எனப்படுவது. செல் என்றால் கிரேக்க மொழியில் ஒரு மிகச் சிறிய அறை (compartment) என்று தான் பொருள்.

உயிரினத்துக்கு உயிரினம் செல்களின் அமைப்பும் அளவும் வேறு பட்டாலும், பெரும்பாலான செல்கள் சாதாரணக் கண்களால் பார்க்க இயலாத அளவுக்கு மிகவும் சிறியவை. செல்களை அளப்பதற்கு ' மைக்ரான் ' எனும் அளவீடு பயன்படுத்தப் படுகிறது. ஒரு மைக்ரான் என்பது ஒரு மில்லி மீட்டரில் ஆயிரத்தில் ஒரு பங்காகும்.

அறிவியல் உலகம் நுண்ணோக்காடிகளைக் (microscope) கண்டுபிடித்த பின்னரே உயிர் செல்களைக் குறித்த விரிவான ஆய்வுகளை விஞ்ஞானிகளால் மேற்கொள்ள முடிந்தது.

உருவத்தில் மிக மிகச் சிறியதாக இருப்பினும் - ஒரு செல்லின் கட்டமைப்பும் (structure) அதன் பலவிதமான செயல்பாடுகளும் மிக மிக நுணுக்கமானவை. ஒரு உயிர் செல்லை ஒரு பெரும் நகரத்துடன் (city) ஒப்பிடலாம் என்கிறார் ஒரு அறிஞர். ஏனெனில் ஒரு பெரும் நகரத்தின் அமைப்புக்கும் செயல்பாடுகளுக்கும் எந்த விதத்திலும் குறைந்ததல்ல - செல் ஒன்றின் அமைப்பும் அதன் பல்வேறு இயக்கங்களும். அவை அவ்வளவு நுட்பமானவை!

ஒவ்வொரு செல்லுக்கும் ஒரு வெளிப்புறச் சுவர். இந்தச் செல் சுவர் அல்லது சவ்வு எப்படிப்பட்டது தெரியுமா? செல்லுக்குத் தேவையான பொருட்களை மட்டும் உள்ளே ஊடுருவிச் செல்ல அனுமதிக்கும். அது எவ்வளவு சிக்கலான கடினமான பொருளாக இருந்தாலும் சரி! செல்லுக்குத் தேவையற்ற பொருட்களை செல் சுவர் ஒரு போதும் அனுமதிப்பதில்லை. அது எவ்வளவு எளிமையான மென்மையான பொருளாக இருந்தாலும் சரியே!

இந்த செல் சுவருக்குள் தான் 'சைட்டோ-பிளாசம்' என்று அழைக்கப்படும் செல் சாறு நிரம்பியுள்ளது. இப்பகுதியில் தான் பல உப அமைப்புகள் பதித்து வைக்கப்பட்டுள்ளன. செல்லுக்குத் தேவையான ஆற்றலை வழங்கிடும் ஆற்றல் நிலையங்கள் (power houses) இங்கே உள்ளன. அதாவது கார்போஹைட்ரேட், கொழுப்பு மற்றும் புரொட்டீன்களை எரித்து செல்லுக்குத் தேவையான சக்தியை - ஆற்றலை வழங்குகின்றன.

செல் உயிர் வாழ்வதற்குத் தேவையான என்சைம் மற்றும் ஹார்மோன்களை உற்பத்தி செய்து தந்திடும் தொழிற்சாலைகளும் இங்கே உண்டு.

மூலப் பொருட்களையும் மற்றும் உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களையும் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடம் கொண்;டு சேர்த்திட போக்குவரத்து வசதிகளும் குழாய்களும் இதனுள் உண்டு. இறக்குமதி செய்யப்பட்ட மூலப் பொருட்களை தனக்குத் தோதுவான பல பொருட்களாக மாற்றித் தந்திடும் அதி நவீன ஆய்வுக் கூடங்களும் (laboratories) இங்கே அடக்கம்.

சரி, இந்த செல்லின் செயல்பாடுகளையெல்லாம் கண்காணித்துக் கட்டுப்படுத்துவது எது தெரியமா? அது தான் செல்லின் கரு (nucleus) ஆகும். இது செல்லின் மையப் பகுதியில் அமைந்துள்ளது. செல்லின் கருவுக்கும் ஒரு சுவர் உண்டு. கருவுக்குள்ளும் ஒரு சாறு உண்டு. கருவின் மத்தியிலே பல உட்கருக்களும் உண்டு.

நியுக்ளியோ-ப்ளாசம் என்றழைக்கப்படும் கருவின் சாற்றில் க்ரோமாட்டின் எனப்படும் இழை போன்றதொரு பொருள் காணப்படுகிறது. இதுவே பின்னர் சற்றே கடினமான க்ரோமோசோம் எனும் பொருளாக மாறி விடுகிறது. ஒரு செல் கருவில் உள்ள க்ரோமோசோம்களின் எண்ணிக்கை உயிரினத்துக்கு உயிரினம் மாறுபடும்.

சான்றாக, மனித உடலில் உள்ள ஒவ்வொரு உயிர் செல்லின் கருவிலும் 46 க்ரோமோசோம்கள் காணப்படுகின்றன. இந்த க்ரோமோசோம் என்பது DNA மற்றும் RNA என்றழைக்கப்படும் இரண்டு அமிலங்களாலும் சில புரொட்டீன்களாலும் ஆன ஒரு பொருள். க்ரோமோசோம்களுக்ளுள் காணப்படும் DNA அமிலம் ஒன்றின் ஒரே ஒரு குறிப்பிட்ட பகுதியே gene எனப்படும் மரபணுவாகத் திகழ்கிறது.

இந்த மரபணுக்களில் தான் மனித உடலின் கட்டமைப்புத் திட்டம் (construction plan) அமைந்துள்ளது. அதாவது நமது பரம்பரை குணங்களுக்கான தகவல்கள் அனைத்தும் இங்கே தான் பொதிந்துள்ளன. நமது தோற்றம், உயரம், நிறம், கண்களின் அமைப்பு, மூக்கின் வடிவம் மற்றும் நமது உள்ளுறுப்புகளின் அமைப்பு எல்லாமே - இந்த மரபணுக்களில் உள்ள செய்திகளைக் கொண்டே வடிவமைக்கப் படுகின்றன. ஒரே ஒரு மரபணுவில் மட்டும் எத்தனை ' எழுத்துகள்' பொதிந்திருக்கின்றன தெரியுமா? சுமார் 350 கோடி எழுத்துகளாம்!

இவை அனைத்தும் - செல்லைப் பற்றிய ஒரு சில தகவல்கள் தாம். இன்னும் விரிவாகப் பார்த்திட வேண்டுமென்றால் பள்ளிக்கூட மாணவர்களின் உயிரியல் பாட நூல்களிலிருந்து பல அரிய செய்திகளைப் பெற்றுக்கொள்ளலாம். நாம் இங்கே எடுத்துக் கொண்டிருக்கும் விஷயம் - மாணவர்களுக்கு சொல்லித் தராத, ஆனால் அவர்களுக்கு சொல்லித் தரப்பட வேண்டிய ஒரு விஷயமாகும்.

அது என்ன?

6. முதல் உயிர் செல் எவ்வாறு தோன்றியது?

ஓரு சின்னஞ்சிறிய செல். அதற்கு ஒரு சுவர். சுவருக்கள் ஒரு திரவம். அதற்கு நடுவில் ஒரு கரு. கருவுக்குள்ளே புரொட்டோபிளாசம். அதற்குள்ளே ஜீன். அந்த ஜீனுக்குள் பரம்பரை குணங்கள். இவ்வளவு அற்புதமானதொரு அமைப்பையும் செயல்திட்டத்தையும் தன்னகத்தே கொண்ட அந்த சின்னஞ்சிறிய முதல் உயிர் செல் உலகில் எவ்வாறு தோன்றியது?

விஞ்ஞானிகளில் சிலர் என்ன சொல்கிறார்கள்? சுமார் இருநூறு அல்லது முன்னூறு கோடி ஆண்டுகளுக்கு முன்னால் - நீராவி, மீத்தேன், அம்மோனியா மற்றும் ஹைட்ரஜன் ஆகிய நான்கு வாயுக்களும் காற்றில் கலந்திருந்தனவாம். சாதகமானதொரு இயற்கைச் சூழலினால் தற்செயலாக அவை ஒன்று சேர்ந்து அமினோ அமிலங்கள் உருவானதாம். நூற்றுக்கணக்கான அமினோ அமிலங்களின் மூலக்கூறுகள் ஒன்று சேர்ந்து தற்செயலாக புரொட்டீன் உருவானதாம். பிறகு பல்லாயிரக்கணக்கான புரொட்டீன் மூலக்கூறுகள் ஒன்று சேர்ந்ததால் தற்செயலாக நுட்பமான பல அமைப்புகளைக் கொண்ட முதல் உயிர் செல் தோன்றியதாம்.

சாதகமானதொரு இயற்கைச் சூழல் என்று அவர்கள் சொல்வது இடியுடன் கூடிய மின்னலைத் தான். அவர்களுடைய இந்தக் கோட்பாட்டைத் தான் உயிர் மலர்ச்சிக் கோட்பாடு (Theory of Evolution)  என்று அழைக்கிறார்கள்.

எதிர்ப்பெதுவும் இல்லாமல் எல்லா விஞ்ஞானிகளாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டு விட்டதொரு கோட்பாடா இது என்றால் அது தான் இல்லை.

இருநூறு கோடி ஆண்டுகளுக்கு முன்னால் - உண்மையிலேயே அந்த நான்கு வாயுக்களும் காற்றில் கலந்திருந்தன என்பது வெறும் யூகமாக இருக்கலாமே ஒழிய - அவை உண்மையிலேயே அப்படித்தான் இருந்தன என்று அறுதியிட்டுச் சொல்ல இயலாது என்று அடித்துச் சொல்கிற விஞ்ஞானிகள் ஒரு புறம்.

உயிரற்ற பொருட்களிலிருந்;து வேறு உயிரற்ற பொருட்களைத் தான் உருவாக்கிட முடியுமே தவிர உயிரற்ற பொருட்களிலிருந்து உயிருள்ள பொருட்களை உருவாக்கிடல் முடியாது என்று உரத்துக் குரல் கொடுக்கும் விஞ்ஞானிகள் ஒரு புறம்.

இன்றைய இருபத்தி ஒன்றாம் நூற்றாண்டின் அதி நவீன ஆய்வுக்கூடங்களில் வைத்துக் கூட உயிருள்ள ஒரு செல்லை உருவாக்கிட இயலவில்லையே என்று வியந்து நிற்கின்ற விஞ்ஞானிகள் ஒரு புறம்.

தற்செயலாக ஒரு செல் உருவாவது என்பது இருக்கட்டும். ஒரே ஒரு செல்லின் ஒரே ஒரு சிறு பகுதியாக விளங்குகின்ற ஒரு புரொட்டீன் மூலக்கூறு மட்டும் கூட தற்செயலாக உருவாதல் சாத்தியமே இல்லை என்று கணக்குப் போட்டுச் சொல்கின்ற விஞ்ஞானிகள் இன்னொரு புறம்.

இவை எல்லாவற்றையும் மீறித்தான் உயிர் மலர்ச்சிக் கோட்பாடு நிரூபிக்கப்பட்ட ஒரு விஞ்ஞான உண்மை போல் போதிக்கப் படுகிறது. இது வேதனையளிக்கப்கூடியது.

விஞ்ஞான உலகத்துக்குள்ளேயே பல எதிர்ப்புகளைச் சந்திக்க இயலாமல் அல்லாடிக் கொண்டிருக்கிறது இந்த ' எல்லாமே தற்செயல்' கோட்பாடு. ஏனினும் அதனை இன்றும் தூக்கிப் பிடித்துக் கொண்டிருப்பவர்களுக்கு உள்நோக்கம் ஒன்று இருந்திட நிச்சயமாக வாய்ப்பு இருக்கிறது. நமது கவலை எல்லாம் விஞ்ஞானம் என்ற போர்வைக்குள்ளே ஒளிந்து கொண்டு வலம் வருகின்ற இக்கோட்பாட்டை கண்களை மூடிக்கொண்டு ஏற்றுக்கொள்கின்ற நம்மவர்களைப் பற்றித்தான்.

7. தற்செயலாக புரோட்டீன் உருவாகுமா?

எல்லா உயிரினங்களிலும் காணப்படுகின்ற, மிகவும் சிக்கலானதொரு அமைப்பைக் கொண்டதொரு மூலக்கூறு தான் புரொட்டீன். பல்வேறு வகையான அமினோ அமிலங்களை ஒரு நூலில் மணி கோர்ப்பது போல் கோர்க்கப்பட்ட ஒரு சங்கிலி போன்ற அமைப்பைக் கொண்டது தான் புரொட்டீன் மூலக்கூறுகள். புரொட்டீன் மூலக்கூறுகளில் சிறியவையும் உண்டு. பெரியவையும் உண்டு.

நடுத்தரமான புரொட்டீன் மூலக்கூறு ஒன்றில் 288 அமினோ அமிலங்கள் இடம் பெற்றுள்ளன. அமினோ அமிலங்களில் சுமார் இருபது வகைகள் உண்டு. இந்த இருபது வகைகளில் இருந்தும் - அந்த சங்கிலித் தொடரின் ஒவ்வொரு 'மணிக்கும்' ஏதாவது ஒரு அமினோ அமிலம் வீதம் மொத்தம் 288 மூலக்கூறுகள் தேர்வு செய்யப்பட வேண்டும்.

இவ்வாறு 288 அமினோ அமிலங்கள் கொண்ட வௌ;வேறு புரொட்டீன் சங்கிலித் தொடர்களை கோடிக்கணக்கான விதங்களில் அமைத்திட இயலும் என்றாலும் (கணக்குப் போட்டுச் சொல்வதென்றால் எண் 1-க்குப் பக்கத்தில் 300 சைபர்களைப் போட்டுக் கொள்ளுங்கள்) - அவற்றுள் ஒரு குறிப்பிட்ட விதத்தில் அமைகின்ற ஒரே ஒரு இணைப்பு மட்டுமெ - ஒரு செல்லுக்குத் தேவையான புரொட்டீனாக உருவாகிட உதவும். மற்ற அனைத்துச் சங்கிலித் தொடர்களும் எதற்கும் பயனற்றவை. உயிரினத்திற்கே ஆபத்தானவை! தற்செயலாக அப்படிப்பட்ட ஒரே ஒரு இணைப்பு உருவாதல் சாத்தியம் தானா?

இதில் இன்னொரு வேடிக்கை இருக்கிறது. நாம் மேலே சொன்ன அமினோ அமிலம் ஒவ்வொன்றும் இரண்டிரண்டு வடிவங்களி;ல் கிடைக்கின்றன. நமக்கு வலக்கரமும் இடக்கரமும் அமைந்திருப்பது போலவே அமினோ அமிலங்களிலும் வலக்கரம் உடையதும் உண்டு. இடக்கரம் உடையதும் உண்டு. இரண்டு வடிவங்களும் இயற்கையில் சம அளவில் கிடைக்கவும் செய்கின்றன. இரண்டு வடிவங்களும் ஒன்றுடன் ஒன்று இணைவதிலும் எந்தச் சிக்கலும் இல்லை. ஆனாலும் நம்மை வியப்பின் உச்சிக்கே அழைத்துச் சென்றிடும் செய்தி என்ன தெரியுமா?

உயிரினங்களில் காணப்படுகின்ற எல்லா புரொட்டீன்களுமே இடக்கரம் கொண்ட அமினோ அமிலங்களை வைத்து மட்டுமே உருவாக்கப் படுகின்றன. மருந்துக்கென்று ஒரே ஒரு வலக்கரம் கொண்ட அமினோ அமிலம் கூட அங்கே காணப்படுவதில்லை! அப்படி இருந்து விட்டால் அந்தப் புரொட்டீனால் எந்தப் பயனும்இல்லை! ஐயா, இது தற்செயலாக நடைபெற இயலுமா?

மற்றொரு வேடிக்கை என்ன தெரியுமா? இரண்டு அமினோ அமிலங்கள் ஒன்றுடன் ஒன்று இணைக்கப் படும்போது அவை இரண்டு விதங்களில் இணைய முடியும் என்றாலும் சிறப்பானதொரு இணைப்பு முறை ஒன்று இருக்கிறது. அதற்கு பெப்டைடு இணைப்பு (peptide bond) என்று பெயர். புரொட்டீன் மூலக்கூறுகள் முழுவதிலும் இந்த சிறப்பான பெப்டைடு இணைப்பு மட்டுமே நடைபெறுகிறது. இதுவும் தற்செயல் தானா?

ஓரே ஒரு புரொட்டீனின் கதை தான் இவ்வளவும். மனித உடலில் உள்ள ஒரே ஒரு செல்லில் மட்டும் சுமார் பத்து லட்சம் புரொட்டீன் மூலக்கூறுகள் உள்ளன. இப்போது சொல்லுங்கள் - தற்செயலாக ஒரு செல் உருவாதல் சாத்தியம் தானா?

மாணவன் ஒருவன் பள்ளியிலிருந்து திரும்புகிறான். வீட்டில் நுழைந்ததும் நுழையாததுமாக நூல்களை பையிலிருந்து அப்படியே எடுத்து அலமாரியில் அடுக்குகிறான். தினமும் இது தான் கதை. ஆனால் என்ன வியப்பு? அவனுடைய நூல்கள் அனைத்தும் ஒரு குறிப்பிட்ட வரிசையில்தான் எப்போதுமே அமைகின்றன - என்றால் ஏற்பீர்களா? இது நாம் சொல்லும் உதாரணம். சில விஞ்ஞானிகள் தருகின்ற எடுத்துக்காட்டுக்களைப் பார்ப்போமா?

இரும்புத் தாதுப்பொருளும், கரியும் தற்செயலாக ஒன்று சேர்ந்து, வெப்பம் சேர்த்துக் கொண்டு எஃகு இரும்பாக மாறி விட்டதாம். மாறி விட்ட அந்த எஃகு இரும்பு தாமாகவே ஒன்று சேர்ந்து இறுதியில் - பாரிஸ் நகரத்தில் உள்ள ஈஃபில் டவரை உருவாக்கிக் கொண்டதாம். ஏற்பீர்களா இதனை? - கேட்பவர் புகழ் பெற்ற பிரெஞ்சு விஞ்ஞானி மாரிஸ் புகைல்.

'அச்சகம் ஒன்றிலிருந்த எல்லா எழுத்துகளும் கன்னா பின்னாவென்று ஒன்று கோர்த்து வைக்கப்பட்டன. அதனை அச்சு இயந்திரம் ஒன்று அச்சடித்துத் தந்த போது நாமறிந்த இனிய பாடலொன்று அழகாக அச்சாகி இருந்ததாம். நம்புவீர்களா இதனை?' - கேட்பவர் ஒப்பாரின் (Oparine) என்ற விஞ்ஞானி.

'குரங்கு ஒன்று தட்டச்சு இயந்திரம் ஒன்றின் முன்பு அமர்ந்து கொண்டது. அது தனது விருப்பம் போல ஒவ்வொரு எழுத்தாக அடித்துக் கொண்டே வந்ததாம். இறுதியில் பார்த்தால் 'மனித இனத்தின் வரலாறு' ஒன்றை அழகாக வடித்துத் தந்திருந்ததாம் அந்தக் குரங்கு. ஏற்றுக் கொள்வோமா இதனை?' கேட்பவர் டாக்டர் அலி டெமிர்ஸாய் என்ற விஞ்ஞானி!

8. இது வரை மறுத்து விட்டோமே! இனி எப்படி ஏற்பது?

இரண்டாயிரம் கோடி ஒளி ஆண்டு தூரங்களைக் கடந்து விரிவடைந்து கொண்டிருக்கும் பென்னம் பெரிய நமது பேரண்டமாக இருந்தாலும் சரி ஒரு சில மைக்ரான் அளவுக்குள்ளேயே பொதித்து வைக்கப் பட்டுள்ள சின்னஞ்சிறிய உயிர் செல்லாக இருந்தாலும் சரி - இவை அனைத்தும் - தற்செயலாக உருவாகி நிலைபெற்று இயங்கிக் கொண்டிருத்தல் சாத்தியமே இல்லை எனும்போது - இறைவன் ஒருவன் தான் திட்டமிட்டு இவற்றை உருவாகியிருக்க வேண்டும் என்று நாம் சொல்லலாம். அப்படியானால் அறிவியல் அறிஞர்கள் அனைவருமே இக்கருத்தை ஏற்றுக் கொள்ள வேண்டியது தானே? ஏன் சில விஞ்ஞானிகள் மட்டும் இறைவனை ஏற்க மறுக்கிறார்கள்?

நாம் முன்னர் குறிப்பிட்ட டாக்டர் அலி டெமிர்சாய் ஒரு ஒப்புதல் வாக்குமூலம் தருகிறார். அது என்ன என்று பார்ப்போம்.

இவர் தனது நூல் ஒன்றில் எழுதுகிறார்: ''சைட்டோகுரோம்-சி'' என்றொரு என்ஸைம். இது தற்செயலாக உருவாவதற்கான சாத்தியக் கூறு கிட்டத்தட்ட பூஜ்யமே. எனவே நமது கற்பனைக்கெட்டாத ஒரு ஆற்றல் அல்லது சக்தி (Meta Physical Power) ஒன்றே இதனை உருவாக்குவதில் தமது பங்கை ஆற்றி இருக்க வேண்டும். எனினும் அப்படிப்பட்ட நமது கற்பனைக்கெட்டாத ஒரு சக்தியை ஏற்றுக் கொள்வது என்பது விஞ்ஞானத்தின் நோக்கங்களுக்குப் பொருந்தக் கூடியதல்ல என்பதாலேயே நாம் 'தற்செயல்' கோட்பாட்டின் பக்கம் திரும்பிட வேண்டியுள்ளது. எனினும் அந்தக் குறிப்பிட்ட என்ஸைம் தற்செயலாக உருவாவதற்கு எந்த அளவுக்கு சாத்தியக்கூறு உள்ளதெனில் குரங்கு மனித வரலாற்றை வடித்துத் தருகின்ற அதே அளவுக்குத் தான்.''

முரண்பாட்டைக் கவனித்தீர்களா?

உண்மையை உணர்த்துவது தான் விஞ்ஞானத்தின் நோக்கம் என்று நாம் இது வரை நினைத்துக் கொண்டிருந்தோம். ஆனால் இறைவனை மறுப்பது தான் விஞ்ஞானத்தின் நோக்கம் என்று அலி டெமிர்சாய் போன்றவர்கள் நமக்குச் சொல்கிறார்கள். நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?

விஞ்ஞானிகளில் ஒரு பிரிவினர் இறைவனை மறுப்பது என்பது காலாகாலமாக இருந்து வந்துள்ளது என்று எண்ணிட வேண்டாம். இந்த நிலை எல்லாம் கடந்த இரு நூறு ஆண்டுகளாக மட்டும் தான். அதற்கு முன்னரோ விஞ்ஞானம் மனிதனை - இறை நம்பிக்கையை நோக்கி இட்டுச் சென்றிடும் சாதனமாகவே திகழ்ந்து வந்துள்ளது.

இப்பரபஞ்சம் என்பது படைப்பாளன் ஒருவனால் படைக்கப் பட்டதே என்று ஒத்துக் கொள்கின்ற விஞ்ஞானிகள் பலர்:

- நவீன வேதியியலின் தந்தை எனப் போற்றப்படும் ராபர்ட் பாயில்

- உலகின் மிகச் சிறந்த இயற்பியல் விஞ்ஞானி மைக்கேல் ஃபாரடே

- மரபணு விஞ்ஞானத்தின் தந்தை என்று போற்றப்படும் கிரிகோரி மெண்டல். இவர் டார்வினின் உயிர் மலர்ச்சிக் கோட்பாட்டை மதிப்பிழக்கச் செய்தவர் என்பது குறிப்பிடத் தக்கது.

- மிகச் சிறந்த நுண்ணுயிர் விஞ்ஞானி லூயிஸ் பாஸ்டர். டார்வினின் கொள்கைக்கெதிராகப் போர்ப் பிரகடனம் செய்தவர்.

- அணுக் கொள்கை விஞ்ஞானத்தின் தந்தை என்று புகழப்படும் ஜான் டால்ட்டன்.

பட்டியல் நீள்கிறது.

இன்று பல முனைகளிலும் தன்னைத் தற்காத்துக் கொள்ள இயலாமல் தத்தளித்துக் கொண்டிருக்கிறது உயிர் மலர்ச்சிக் கோட்பாடு. அதனை சற்று ஓரம் கட்டி வைத்து விட்டு நேர்மை உள்ளம் கொண்ட விஞ்ஞானிகள் என்ன சொல்கிறார்கள் என்று பார்ப்போமா?

நுண்-உயிரியல் (Micro Biology) துறையில் பிரபலமான விஞ்ஞானிகள் பலர் ஒரு மில்லி மீட்டரை விட மிகச் சிறிய அறை ஒன்றிலா இவ்வளவு அமைப்புகளும் இவ்வளவு இயக்கங்களும் என்று வியந்து போய் அற்புதமான இந்த செல்கள் உருவாவதன் பின்னணியில் நிச்சயமாக படைப்பாளன் ஒருவனின் அறிவுப் பூர்வமான திட்டம் ஒன்று இருந்தேயாக வேண்டும் என்று ஓங்கி ஒலிக்கிறார்கள்.

அவர்களுள் மைக்கேல் ஜே. பீஹே என்ற விஞ்ஞானி சிறப்பிற்குரியவர். அவர் சொல்கிறார்: 'ஒரு செல்லுக்குள் இருப்பது என்ன நடப்பது என்ன என்பது குறித்து எடுக்கப் பட்ட எல்லா ஆய்வுகளின் முடிவுகளுமே உரத்துச் சொல்லிக் கொண்டிருக்கும் பேருண்மை தான் ''அறிவுப் பூர்வமான திட்டம்'' (Intelligent Design) என்பது. குழப்பமோ சந்தேகமோ அற்ற இண்மை இது. விஞ்ஞான உலகின் வரலாற்றிலேயே மிகப்பெரிய சாதனை என்று சொல்லக்கூடிய அளவுக்கு இந்த முடிவுகள் மிக மிக முக்கிமானவை. இந்த சாதனையை அறிவியல் உலகம் உரத்துக் கொண்டாடியிருந்திருக்க வேண்டும்.

'ஆனால் எந்தக் கொண்டாட்டத்தையும் காணோம். மாறாக மயான அமைதி ஒன்று நிலவுகிறது. தாங்களே கண்டுபிடித்து விட்ட உண்மைக்கு முன்னால் தாங்களே தலை குனிந்து நிற்கிறார்கள். பொது மேடைகளில் இது குறித்து வெளிப்படையாகப் பேசிடத் தயங்குகிறார்கள். தனித்து உரையாடுகையில் உண்மையை ஒத்துக் கொள்கிறார்கள். ஏனிந்த நிலை தெரியுமா? 'அறிவுப் பூர்வமான திட்டம்' என்பதை ஏற்பதன் மறு பக்கம் இறைவனை ஏற்பது தான்.'

இந்த இடத்தில் திருக்குர்ஆனின் கருத்துக்கள் சிலவற்றை உங்கள் முன் சமர்ப்பிக்கிறோம். திருக்குர்ஆனில் இடம் பெற்றிருக்கும் இறைவனின் பண்புப் பெயர்களில் ஒன்று 'அல்-பாரி' (Al Baari) என்பதாம். இதன் பொருள் - திட்டமிடப்பட்டு தீர்மானிக்கப்பட்ட ஒன்றைத் திட்டமிட்ட படியே படைத்துத் தருபவன் - என்பது ஆகும். இந்தத் திட்டமிடுதலைத் தானே ஐயா விஞ்ஞானிகள் என்று குறிப்பிடுகிறார்கள்!

திருக்குர்ஆனின் இன்னொரு வசனத்தில் இறைவன் இவ்வாறு குறிப்பிடுகிறான்:

'அதி விரைவில் நாம் இவர்களுக்கு நம்முடைய சான்றுகளை அனைத்துத் திசைகளிலும் அவர்களுக்குள்ளேயும் காண்பித்துக் கொடுப்போம் - இந்தக் குர்ஆன் சத்தியமானது எனும் உண்மை இவர்களுக்குத் தெளிவாகி விடும் வரையில்!' (41: 53)

'நம்முடைய சான்றுகளை' - 'அவர்களுக்குள்ளேயும்' - 'காண்பித்துக் கொடுப்போம்' - இந்தச் சொற்றொடர்களை சற்றே ஆழமாக சிந்தித்துப் பாருங்கள். இந்த இறை வசனத்திற்கும் விஞ்ஞானிகள் சொல்கின்ற 'அறிவுப் பூர்வமான திட்டத்திற்கும்' உள்ள தொடர்பு புரியும்.

சகோதரர்களே! இறைவனை நம்புவது என்பதோ அவனை ஏற்க மறுப்பது என்பதோ - ஏதோ அவரவர் தனிப்பட்ட விஷயம் என்று ஒதுக்கி விட்டு விடக் கூடிய அளவுக்கு ஒன்றும் அற்பமான விஷயம் அன்று!

இறைவனைப் பற்றிய நமது நிலை - நமது வாழ்வின் குறிக்கோளையே நிர்ணயிக்கக் கூடியது. வாழ்க்கை என்பது நமக்கு ஒரே ஒரு தடவை மட்டும் தான்! எனவே நாம் ஒவ்வொருவருமே நமது சொந்த விருப்பு வெறுப்புகளையெல்லாம் சற்றே ஒதுக்கி வைத்து விட்டு உண்மையைத் தேடிடும் ஒரே நோக்கில் ''இறைவன் ஒருவன் தான் அனைத்தையும் படைத்துப் பரிபாலிக்கின்றானா?'' என்று ஆய்ந்து அறிந்திட வேண்டும்.

காலா காலமாகக் கடவுளை மறுத்து வந்து விட்டோமே இனி எவ்வாறு இறைவனை ஏற்பது என்று எண்ணுகிறீர்களா? மனிதன் - முன்னர் பூமி தட்டையானது என்ரு நம்பி வந்தான். பின்னர் உண்மை வெளிப்பட்டதும் தனது கருத்தை மாற்றிக் கொள்ளவில்லையா? பூமியைத் தான் சூரியன் உட்பட எல்லாக் கோள்களும் சுற்றி வருகின்றன என்று எண்ணிக் கொண்டிருந்தான். பின்னர் தனது கருத்தை மாற்றிக் கொள்ளவில்லையா?

இறைவனை ஏற்க மறுக்கும் நமது சகோதரர்களை நாம் கேட்டுக் கொள்வது இது தான்: உங்களுக்கு இது வரை இங்கே இரண்டே இரண்டு சான்றுகளே சமர்ப்பிக்கப் பட்டுள்ளன. இவை உங்களுக்கு திருப்தியளிக்கவில்லை என்றால் பரவாயில்லை. இன்னும் ஆயிரக் கணக்கான சான்றுகளை நீங்கள் உங்கள் வாழ்விலேயே காண வாய்ப்புகள் ஏராளம் இருக்கின்றன. நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் - உங்கள் இதயத்தைத் திறந்தே வைத்திருங்கள்! அதனை மூடி விடாதீர்கள்!

9. இரண்டு கேள்விகள்!

A. அவன் ஏன் போய் ஒளிந்து கொள்ள வேண்டும்?

பொதுவாகவே இறைவனை மறுப்பவர்கள் முன் வைக்கும் முக்கியமான கேள்விகளுள் ஒன்று இது.

இறைவன் என்று ஒருவன் இருந்தால், அவன் ஏன் போய் ஒளிந்து கொள்ள வேண்டும்? அவன் ஏன் நம் கண் முன்னால் தோன்றி தன்னை நிரூபித்துக் கொள்ளக் கூடாது?

ஒரு வாதத்துக்காக நாம் கேட்போம்:

கண்களால் பார்த்தால் தான் இறைவனை நம்புவோம் என்றால் - கண்களால் பார்த்துத் தான் மற்றவைகளையும் நீங்கள் நம்பிட வேண்டும். அப்படித்தான் செய்கிறீர்களா?

மின்சாரத்தைக் கண்களால் பார்த்ததுண்டா நீஙகள்? புவி ஈர்ப்பு விசையைப் பார்த்ததுண்டா நீஙகள்? எங்கே இவைகளை எங்கள் கண்களின் முன்னால் கொண்டு வந்து காட்டுங்களேன்.

இன்னொன்றையும் கேட்போம் நாம்:

கண்களால் பார்த்து விட்டால் மட்டும் ஒன்று உண்மையாகி விடுமா? ஆழமாக சிந்தியுங்கள் சகோதரர்களே! 'கண்ணால் பார்ப்பதுவும் பொய்; காதால் கேட்பதுவும் பொய்' என்ற கூற்றுக்கு உங்கள் பதில் என்ன?


இப்போது அவர்களின் கேள்விக்கு வருவோம்.

நமது பார்வைக்கு ஒரு எல்லை, ஒரு அளவு, ஒரு நிர்ணயம் இருப்பதை யாரும் மறுக்க முடியாது. ஒரு அளவு நிர்ணயிக்க்ப்பட்டு நமக்குக் கண் பார்வை அமைந்திருப்பது கூட நமக்கு நன்மையே!

ஏனெனில் ஒரு கால் நமக்கு சற்றே அதிகம் சக்தி வாய்ந்த, ஒரு 'மைக்ராஸ்கோப்" அளவுக்கு ஆற்றல் பொதிந்த, இரு கண்கள் கொடுக்க்பபட்டிருந்தால் என்ன ஆகும் என்று சற்று கற்பனை செய்து பாருங்கள்.

ஒரு சொட்டு நீரை நீங்கள் எவ்வாறு பார்ப்பீர்கள்?

உங்கள் முன் வைக்கபபடும்  உணவு உங்களுக்கு எவ்வாறு தோற்றம் தரும்?

நீங்கள் உள்ளே இழுக்கக்கூடிய மூச்சுக்காற்றில் உள்ள நுண்கிருமிகள் எல்லாம் உங்களுக்கு எவ்வாறு அழகாக (?) தோற்றம் தரும்?

வேண்டுமா அப்படிப்பட்ட கண்கள்?

சகோதரர்களே! ஒரு பொருளை சாதாரணமாகப் பார்த்தால் ஒரு விதமாகவும், ஒரு அளவிலும் தெரிகிறது. அதே பொருளை நுண்ணோக்காடி வழியே பார்த்தால் வேறு அளவிலும் வேறு விதமாகவும் தெரிகிறது. எனவே ஒரு பொருளை எந்த அளவில் எந்த விதத்தில் பார்த்திட வேண்டும் என்ற நிர்ணயம் நமது கண்களுக்கு உண்டு என்பது யதார்த்தமான உண்மை.

எனவே ஒரு குறிப்பிட்ட வரையரைக்குட்பட்டு வழங்கப்பட்டிருக்கின்ற இந்தக் கன்களின் மூலமாக அண்ட சராசரங்களையும் படைத்துக்காக்கின்ற அந்த ஆண்டவனைப் பார்த்திட வேண்டும் என்று வாதிப்பது அறிவுடைமை ஆகாது?

B.இறைவன் என்று ஒருவன் இருந்தால் ஏன் இங்கெ இவ்வளவு குழப்பங்கள்?

இறைவன் என்று ஒருவன் இருந்தால் ஏன் இங்கே இவ்வளவு குழப்பங்கள்?

இறைவனை மறுப்பவர்கள் இப்படி ஒரு கேள்வியையும் கேட்பதுண்டு. இறைவன் என்று ஒருவன் இருந்தால் ஏன் இங்கே இவ்வளவு குழப்பங்கள்? ஏன் இவ்வளவு அநியாயங்கள் நடக்கின்றன? இவற்றையெல்லாம் அந்த இறைவன் சும்மா பார்த்துக் கொண்டிருக்கின்றானா?

இறைவன் கருணை மிக்கவன் என்றால் நோய்களைக் கொண்டும், விபத்துக்களைக் கொண்டும், புயல், சூறாவளி, வெள்ளம், பூகம்பம், சுனாமி - போன்றவற்றால் மனித உயிர்களை ஏன் அவன் அழித்திட வேண்டும்? அவன் இரக்கமற்றவனா? அல்லது இயலாதவனா? இயலாதவன் என்றால் அவனை வணங்குவதால் எமக்கென்ன இலாபம்?

இவை அனைத்தும் இறைவனை மறுப்பவர்கள் தொடுக்கும் கேள்விக்கணைகள். இப்படிக் கேள்விகளை அடுக்கடுக்காகத் தொடுப்பதன் மூலம், ஏதோ இறைவனே இல்லை என்பதை நிரூபித்து விட்டதாக நினைத்துக் கொள்கின்றனர் அவர்கள்.

கேள்வி கேட்கின்ற உரிமை அவர்களுக்கு மட்டுமே உரித்தானது அன்று! அந்த உரிமை இறைவனை நம்புபவர்களுக்கும் உண்டு!

மனித வாழ்வில் காணப்படுகின்ற குழப்பங்களைப் பார்க்கின்ற இறை மறுப்பாளர்கள், மனிதனைத் தவிர்த்த இயற்கைப் பெருவெளியில் காணப்படுகின்ற அமைதியை, அழகை, கட்டுக்கோப்பை, சீரான இயக்கத்தை ஏன் பார்க்க மறுக்கின்றனர்?

சூரியக் குடும்பத்தில் ஏதேனும் குழப்பம் உண்டா? ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக எந்த ஒரு மோதலும் இன்றி, ஒன்பது கோள்களும் சுழல்கின்றனவே. அது எப்படி?

உயிரினங்கள் வாழ்வதற்குத் தோதுவான விதத்தில் சூரியனிலிருந்து பூமி பிரிந்திருக்கும் தூரத்தை நிர்ணயித்தது யார்?

கடல் நீர் நிலத்தை மூழ்கடித்து விடாத விதத்தில் சந்திரனும் பூமியும் - "நீ அங்கேயே இரு! நான் இங்கே இருக்கின்றேன்" - என்று பேசி வைத்துக் கொண்டு சுழல்கின்றனவா?    

இப்போது அவர்களின் கேள்விகளை சற்றே நாம் ஆய்வு செய்திடுவோம்: இயற்கைச் சீற்றங்களால் ஒன்றுமறியாத அப்பாவி மக்களும், ஒரு பாவமும் அறிந்திடாத குழந்தைகளும் இறந்து படுகின்றனர். இத்தகைய தருணங்களில்  இவர்களைக் காப்பாற்றிட கருணை மிக்க இறைவன் ஏன் முன்வந்திடக் கூடாது என்பதே அவர்களின் கேள்வி.

நாம் வாழ்கின்ற பேரண்டம் என்பது சுமார் 1500 கோடி ஆண்டுகளுக்கு முன்னரே தோன்றியது என்பதையும் இப்பேரண்டம் தோன்றிய அந்த நேரத்திலேயே இயற்கைச் சட்டங்களும் (Physical laws) உருவாகி விட்டன என்றும் அந்த இயற்கைச் சட்டங்கள், இப்பிரபஞ்சம் முழுமைக்கும் ஒரே மாதிரியானவை என்றும் அன்றிலிருந்து இன்று வரை அவற்றில் எந்த ஒரு மாறுபாடும் இல்லை என்பதையும் முன்னரே பார்த்தோம் அல்லவா?

இதன் அடிப்படையில் - நமது வேலையெல்லாம் அந்த இயற்கைச் சட்டங்களை அறிந்து புரிந்து கொண்டு அதற்குத் தக நமது வாழ்க்கையை அமைத்துக் கொள்ள வேண்டியது தான். நெருப்பு சுடும் என்பது நியதி. அதற்குத் தக நடந்திட வேண்டியது நமது பொறுப்பு.

மின்சாரத்தின் ஆற்றலை அறிந்து கொண்டு அதற்குத் தக அதனைப் பயன்படுத்திட வேண்டியது நமது பொறுப்பு. இப்படித்தான் ஒவ்வொன்றும்.

அறிந்தோ அறியாமலோ - விதிக்கப்பட்டிருக்கும் இயற்கைச் சட்டங்களில் நாம் "கை" வைக்கும்போது அதன் விளைவுகளை நாம் சந்தித்தே ஆக வேண்டியுள்ளது. குழந்தை ஒன்று கொதிக்கின்ற பாலில் கையை விட்டு விட்டால் - பால் சுட்டு விடத் தான் செய்யும். இந்தத் தருணத்தில் நாம் இறைவனிடம் என்ன எதிர்பார்க்கின்றோம்? அமானுஷ்யமான முறையில் இறைவன் அங்கு தோன்றி அக்குழந்தையைக் காப்பாற்றிட வேண்டும் என்பது தான்.

மனிதனுக்குத் தீமைகள் இரண்டு விதங்களில் வந்தடைகின்றன. ஒன்று - பூகம்பம், புயல் போன்ற இயற்கைச் சீற்றங்கள். இவற்றால் ஆயிரக்கணக்கான மக்கள் அவதிக்குள்ளாகின்றார்கள். இவைகளை Natural Calamities - என்று சொல்லலாம். மற்றொன்று: மனித வாழ்வில் மனிதனே பல தீமைகளுக்குக் காரணமாக விளங்குகின்றான். இவைகளை நாம் Moral Evils  என்று அழைக்கலாம்.

முதலில் இயற்கைச் சீற்றங்களை எடுத்துக் கொள்வோம். இயற்கைச் சீற்றங்களால் ஏற்படுகின்ற எல்லா விதமான ஆபத்துகளில் இருந்தும் மக்களை இறைவனால் காப்பாற்றிட முடியும் தான்!  இப்படி நாம் எதிர்பார்த்தால் - இயற்கைச் சட்டங்களுக்கு என்ன அர்த்தம் இருக்க முடியும்?

சான்றுக்கு ஒரு சூழ்நிலையை எடுத்துக் கொள்வோம்: குக்கிராமம் ஒன்று. காலையில் ஒரே ஒரு பேருந்து தான். பேருந்து 8.25 க்கு புறப்பட வேண்டும். அந்த பேருந்தைப் பிடித்தே ஆக வேண்டிய சூழ்நிலை உங்களுக்கு. ஆனால் இன்று நீங்கள் சற்றே தாமதமாக வீட்டிலிருந்து புறப்படுகிறீர்கள். நீங்கள் இறைவனிடம் எதிர்பார்ப்பது : இறைவா! பேருந்தை சற்று தாமதமாக வரச்செய்!

ஆனால் அதே குக்கிராமத்தில் ஒரு தாய் தனது கைக்குழந்தையை வைத்துக் கொண்டு பேருந்துக்குக் காத்திருக்கின்றார். குழந்தைக்குக் கடுமையான சுரம். மருத்துவமனைக்கு விரைந்து சென்றிட வேண்டும். அவர் இறைவனிடம் கேட்கின்றார்: இறைவா! சீக்கிரம் பேருந்தை அனுப்பு!

இப்படி ஆளாளுக்கு ஒன்றை இறைவனிடம் எதிர்பார்ப்போம். எல்லாரது வேண்டுகோள்களையும் நிறைவேற்றிட -அவனே விதித்த சட்டங்களை அவ்வப்போது அவன் மாற்றிக் கொண்டே இருக்க வேண்டும் என்று எதிர்பார்த்தால் - இயற்கைச் சட்டங்களை நாம் எப்படி சரியாகப் பயன்படுத்திக் கொள்ள முடியும்?

சிந்தியுங்கள்!

இப்போது மனிதனின் தவறுகளால் வருகின்ற ஆபத்துக்களை கவனிப்போம். மனிதர்களில் சிலர் என்ன செய்கின்றார்கள்? சுற்றுப்புறச் சூழலைக் கெடுக்கின்றார்கள்! உணவில் கலப்படம் செய்கின்றார்கள்! இரு நாடுகளுக்கிடையில் பெரும் போர்களைத் தூண்டி விடுகின்றார்கள்! அணு குண்டு ஒன்றைத் தூக்கி எறிந்து ஆயிரக்கணக்கானவர்கள் இறந்திடக் காரணமாக இருப்பவனும் மனிதன் தான்!

ஒன்றை நீங்கள் ஆழமாக சிந்திக்க வேண்டும். மனிதனுக்கும் மற்ற படைப்பினங்களுக்கும் உள்ள மிகப் பெரிய வேறுபாடே மனிதன் தன் விருப்பத்துக்கு சுதந்திரமாக செயல்படுகின்ற உரிமையைப் (freedom of choice) பெற்றிருப்பது தான். இதனை வழங்கியவனே இறைவன் தான்! அதனால் தான் மனிதன் அவன் விருப்பத்துக்கு ஆட்டம் போடுகின்றான். பல தீமைகள் நம்மை வந்தடைகின்றன.

குடித்து விட்டு வண்டியை ஓட்டுகின்றார்கள். தூக்கமின்றி ஓட்டுகின்றார்கள். சாலை விதியறியாதவர்களெல்லாம் வாகனங்களை இயக்குகின்றார்கள். இவையெல்லாம் அவர்கள் freedom of choice!

பத்திரிகை செய்தி ஒன்று: இரவு பனிரென்டு மணி. நட்ட நடுச்சாலையில் லாரி ஒன்றை நிறுத்தி விட்டு ஓட்டுனர் எங்கோ சென்று விட்டார். பின் பக்கம் விளக்கு கூட எறிந்திடவில்லை. அப்போது இரு சக்கர வாகனம் ஒன்றில் மூன்று இளைஞர்கள் படு வேகமாக வந்து லாரியில் மோதி அந்த இடத்திலேயே இறக்கின்றார்கள்.

இப்படிப்பட்ட தீமைகளில் இருந்து மக்களை இறைவன் எப்படிக் காத்திட வேண்டும் என்று நீங்கள் எதிர்பார்க்கின்றீர்கள்?

ஆட்சியாளர்களைத் தேர்வு செய்வது மட்டுமே நமது choice! ஆனால் ஆட்சியாளர்கள் செயல்பாடுகளெல்லாம் அவர்கள் chioce! அனுபவிப்பவர்கள் மக்கள்! இதனை இறைவனின் குற்றம் என்று எப்படி சொல்வது?

இந்தத் தீமைகளிலிருந்து நம்மை இறைவன் காத்திட வேண்டுமெனில் இறைவன் என்ன செய்திட வேண்டும்? நமக்கு வழங்கப்பட்டிருக்கின்ற இந்த "உரிமை"யைப் பறித்து விட வேண்டும்! அவ்வளவுதான்! அப்படிப் பறித்து விட்டால் என்ன ஆகும்? நாமும் ஆடு மாடுகளைப் போல் வாழ்ந்திட வேண்டியது தான்! என்ன சொல்கிறீர்கள்?

நமக்கு freedom of choice வேண்டுமா? வேண்டாமா? சொல்லுங்களேன்!

பொதுவாகவே ஒவ்வொரு மனிதனும் தான் "நல்லவன்" என்றே பெயர் எடுத்திட வேண்டும் என்று தான் விரும்புகிறான். நாம் குறிப்பிடும் - freedom of choice - மனிதனுக்கு இல்லையெனில் ஒருவன் எப்படி நல்ல பெயர் எடுப்பதாம்? நல்லவைகளும், கெட்டவைகளும் நம் கண்களுக்கு முன்னால் இருந்திடும்போது - அல்லவை தவிர்த்து நல்லவற்றைத் தேர்வு செய்திடும்போது தானே ஒருவனை நாம் நல்லவன் என்று சொல்ல முடியும்.

இந்த இடத்தில் - மனிதன் படைக்கப்பட்டதன் நோக்கமாக இறைவனே என்ன சொல்கிறான் என்று பார்த்திடுவோமா?

உங்களில் எவர் செயல்களால் மிகவும் அழகானவர் என்பதைச் சோதிப்பதற்காக அவன், மரணத்தையும் வாழ்வையும் படைத்தான்; மேலும், அவன் (யாவரையும்) மிகைத்தவன்; மிக மன்னிப்பவன். (67: 02)

Comments