நூல்: வாழ்க்கை என்பது இவ்வளவு தானா? - பகுதி 2

(இறைத்தூதர்கள் மீது நம்பிக்கை)

10. எங்கே நிம்மதி? 

நான் பிறந்து விட்டேன்
என் விருப்பப்படி அல்ல!

நான் எப்போது இறப்பேன்?
அதுவும் என் கையில் இல்லை!
ஐம்பது ஆண்டுகளா? அறுபது ஆண்டுகளா?
எனக்குத் தெரியாது!



இந்த வாழ்க்கையை எனக்கு
யார் தந்தது?
இறைவன் தந்தது தான் இந்த வாழ்க்கை
என்கிறார்கள் சிலர் -
கடவுளே இல்லை என்கின்றனரே வேறு சிலர்!
இதில் எது உண்மை? எதுபொய்?

சரி! இறைவன் தான் எனக்கு
வாழ்வைத் தந்தான் என்றால்
யார் அந்த இறைவன்?
அவன் எப்படிப் பட்டவன்?
ஏன் என்னைப் படைத்தான்?
என்னிடம் அவன் எதனை விரும்புகிறான்?
இந்தக் கேள்விகளுக்கெல்லாம்
எனக்கு யார் பதில் தருவார்கள்?
'நான் சொல்கிறேன் தக்க பதில்களை' -
என்று ஆளுக்கு ஒன்று அல்லவா சொல்கிறார்கள்!
ஏன் அவர்களின் பதில்கள்
ஒரே மாதிரியாக அமைந்திடவில்லை?
கிடைக்கின்ற செய்திகள்
ஒன்றுக்கு ஒன்று முரண்படுகின்றனவே
இவற்றில் எது சரி? எது தவறு?

இறைவன் இல்லை என்றே வைத்துக் கொள்வோம் -
அப்படியானால் இந்த வானமும் பூமியும்
எப்படி வந்தன?
தற்செயலாக நடந்து விட்ட
விண்வெளி விபத்து தான் (Cosmic Accident)
இந்த வானமும் பூமியும்
என்கிறார்கள் சில நவீன கால விஞ்ஞானிகள்!
கணக்கிடப் பட்டது
போன்றதொரு தூரத்தில் கதிரவன்!
அதனால் நமக்குப் போதுமான
ஒளியும் வெப்பமும்! தற்செயலா?
தன்னைத் தானே சுற்றிக் கொள்கிறது பூமி.
அதனால் நமக்கு இரவும் பகலும்!
தற்செயல் தானா?
சூரிய மண்டலத்தின்
ஒன்பது கோள்களும் அதனதன் பாதையில்
ஆண்டாண்டு காலமாகச்
சுழன்றோடிக் கொண்டிருப்பதும்
தற்செயலாகத் தானா?

காற்றில் போதுமான அளவுக்கு மட்டும்
பிராண வாயு - தற்செயல் தானா?
நாம் வெளியிடுகின்ற கரியமில வாயுவைத்
தாவரங்கள் எடுத்துக் கொள்கிறதாம்.
தற்செயலா?
அதெல்லாம் இருக்கட்டும்.
நம்மையே - நமது உடலையே கவனிப்போம்
நமது மகத்தான மூளை
தற்செயலாக உருவானது தானா?

நமது கண்கள் நமது இதயம்
நமது இன்ன பிற உறுப்புகள அனைத்தும்
சீராக அமைந்து சிறப்பாக
செயல்படுவதெல்லாம் தற்செயலாகத் தானா?
ஏற்க முடியவில்லையே!

சரி! நமது வாழ்க்கை கூட
தற்செயலாக நமக்குக்
கிடைத்திட்ட ஒரு வாய்ப்பு
என்றே வைத்துக் கொள்வோம்.
அப்படியானால் நான்
எப்படி வாழ்ந்திட வேண்டும்?
எப்படி வேண்டுமானாலும் வாழ்ந்து கொள் மனிதா!
எதை வேண்டுமானாலும் ஆண்டு
அனுபவித்துக்கொள்! - என்கிறார்கள் சிலர்.
ஆனால் என்னைச் சுற்றியிருப்பவர்களோ
நான் நேர்மையாகத்தான்
வாழ்ந்திட வேண்டும் என்கிறார்களே!
ஏன் நான் நல்லவனாக வாழ்ந்திட வேண்டும்?
நான் கெட்டவனாக வாழ்ந்திட்டால்
எனக்கு என்ன நேர்ந்து விடும்?
எல்லாரது கணக்கையும் முடித்திடுகின்ற
மரணம் என்பது
எல்லார்க்கும் பொதுவானது தானே!
ஆக - எனது வாழ்க்கை
எப்படி வேண்டுமானாலும்
இருந்து விட்டுப் போகட்டுமே!
உனக்கு 'மனசாட்சி' என்ற ஒன்று
இருக்கிறதல்லவா என்கிறார்கள் அவர்கள்!

ஆம்! இருக்கிறது தான்!
நான் ஒரு சில கூடாச் செயல்களைச்
செய்ய முனைந்துடும்போது
'டேய்! இது தவறு! இதனைச் செய்யாதே!'
என்று எனக்குள் ஒரு குரல்
ஒலிக்கத் தான் செய்கிறது!
ஆனால் அதே நேரத்தில்
'எவன் என்னைப் பார்க்கப் போகிறான்?'
'எவன் தான் இதனைச் செய்யவில்லை!'
என்று இன்னொரு குரலும்
எனக்குள் எழுகிறதே!
எதற்கு நான் கட்டுப் படுவது?

இவ்வாறு கேள்விக் கணைகளைத்
தொடர்ச்சியாகத் தொடுப்பது
எங்கோ, ஏதோ ஒரு மூலையில்
அமர்ந்து கொண்டு
வாழ்க்கையில் விரக்தி அடைந்து போய்விட்ட
ஒருவரின் அவலக் குரல் அன்று!

மாறாக - உண்மையை, யதார்த்ததினைக்
கண்டறியத் துடித்திடும்
உயிர்த் துடிப்புள்ள, அறிவுத் தாகம் கொண்ட
ஒவ்வொருவரிடத்திலும்
இந்தக் கேள்விகளும்
இது போன்ற கேள்விகளும்
இருக்கத் தான் செய்கின்றன!

இந்தக் கேள்விகள் எல்லாமே
நியாயமான கேள்விகள் தாம்!
தெளிவான பதில்களை வேண்டி நிற்கும்
அடிப்படையான கேள்விகள் தாம்!

ஆனால் - மிகவும் பரபரப்பானதொரு உலகில்
வாழ்ந்து கொண்டிருக்கும் நமக்கு
நமது வாழ்வின்
யதார்த்த நிலை குறித்தெல்லாம்
சிந்தித்துப் பார்ப்பதற்கு
நேரம் கிடைப்பதில்லை!

அன்றாடம் ஆயிரத்தெட்டு பிரச்னைகளில்
சிக்கித் தவித்திடும் மனிதன்
இறுதியில் - ஓடியாடி ஓய்ந்து போன பின்பு
தன் கடந்த காலத்தைத்
திரும்பிப் பார்த்து
கை சேதம் அடைகின்றான்!
ஐம்பது அறுபது என்று
ஆண்டுகள் உருண்டோடி விட்டனவே!
எதற்காக இங்கே வந்தோம்!
எதற்காக வாழ்ந்தோம்?
எதனைச் சாதித்தோம்?
இனி நாம் செல்லப் போவது எங்கே?
என்பன போன்ற காலம் கடந்த சிந்தனைகள்
மனிதனுக்கு அப்போது
நிச்சயமாக உதவிடப் போவதில்லை.

அன்றாடம் நடக்கின்ற
நாட்டு நடப்புகளை, சமூக அவலங்களை
நாம் செய்தித் தாள்களின் வாயிலாகப்
படித்திடும்போது
மக்களூடைய வாழ்க்கை குறித்து
கவலைப் படத் தான் செய்கின்றோம்.
ஆனால் நாம் வாசித்திடும்
நாளிதழ்கள், வார இதழ்கள், மாத இதழ்கள்
மற்றும் நமக்குக் காட்டப் படுகின்ற
தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்
அதில் வரும் விளம்பரங்கள்
இவை அனைத்தும் நம்மை
'ஒரு விதமான' வாழ்க்கைக்குத்
தயார் படுத்தி விடுகின்றன!

அடுத்து என்ன - அடுத்து என்ன என்று
அவசர கதியில் உலகம்
மிக வேகமாக இயங்கிக் கொண்டிருக்கிறது,
மக்கள் - கிராமங்களில் இயற்கைச் சூழலோடு
அமைதியாக வாழ்ந்திருந்த காலம்
மலையேறிக் கொண்டிருக்கிறது.
எங்கும் நகர வாழ்க்கை மயம்
மனிதனை ஒரு இயந்திரமாக
ஒரு நடை பிணமாக மாற்றி விட்டிருக்கிறது.

பணம் சேர்ப்பதிலும்,
சேர்த்த பணத்தைக் கொண்டு
வீடு நிறைய பொருட்களைக் குவிப்பதிலும்
தனது 'பொன்னான' நேரத்தைச் செலவு செய்து கொண்டிருக்கும்
மனிதனைச் சிந்திக்க வைப்பது மிகவும் கடினம்.
உலகெங்கிலும் நாம் நமது
இளந்தலைமுறையினர்க்கு
வழங்குகின்ற கல்வித் திட்டத்திலும்
'வாழ்க்கை' குறித்த பாடம்
சேர்க்கப் படவில்லை.
பெரும் பெரும் படிப்பு படித்தவர்களெல்லாம்
இன்று குற்றவாளிக் கூண்டில்!

வாழ்க்கை குறித்த சிந்தனை இன்றி
ஒரு கொள்கை வெற்றிடத்தைச்
சுமந்து கொண்டு
'எல்லாரையும் போல்
நாமும் வாழ்ந்து விட்டுப் போய்விடுவொம்'
என்று சமாதானம் செய்து கொண்டு
உண்மையைத் தேடும் முயற்சியைக்
கை விட்டு விடுகின்ற
ஒரு சமூகத்தின் எதிர்கால விளைவுகள்
பார தூரமானவை.
அழிவின் விளிம்பிற்கே
நம்மை இட்டுச் செல்பவை!

வாழ்க்கை சம்பந்தமான ஆய்வினை
மக்கள் எளிதில் ஒதுக்கி விடுவதற்கு
இன்னொரு காரணம்
வாழ்க்கை தொடர்பாகத் தரப்படுகின்ற
விளக்கங்கள் அனைத்தும்
சிக்கலானவை, மனதைக் குழப்புபவை
என்று அவர்கள் கருதுவதால் தான்.
எனினும் உண்மைகள் என்றும் எளிமையானவையே!
உள்ளதை உள்ளபடி அறிந்து கொள்வதற்கு
நமக்கு ஆர்வம் இருக்கிறதா
என்பதே இப்போது எழும் கேள்வி!

பொய்யை நிராகரித்து
உண்மையை ஏற்றுக் கொண்டிடும் இயல்பில் தான்
மனிதன் படைக்கப் பட்டிருக்கின்றான்.
உண்மையை அறிந்து கொண்ட பின்னரே
உள்ளங்கள் அமைதி அடைகின்றன!

(குறிப்பு: தொடரும் கட்டுரைகள் இறைத் தூதர்கள் குறித்து ...... )

11. உலகே மாயமா? வாழ்வே மாயமா? 

நமது உள்ளங்களை அழுத்திக் கொண்டிருக்கின்ற, நமது வாழ்க்கை சம்பந்தமான, அடிப்படைக் கேள்விகளுக்கான தெளிவான பதில்களை நாம் எங்கிருந்து பெறுவது? இப்படி இருக்கலாம், அப்படி அல்லாமலும் இருக்கலாம் என்பது போன்ற சந்தேகங்களுக்கு இடமளிக்கின்ற பதில்களை நமது உள்ளங்கள் ஒரு போதும் ஏற்றுக் கொள்வதில்லை. நமது தேவை எல்லாம் நமது சந்தேகங்கள் எல்லாவற்றையும் ஒட்டு மொத்தமாகத் தீர்த்து வைக்கின்ற தௌ;ளத் தெளிவான விளக்கங்கள் தான். அப்படிப்பட்ட தெளிவைப் பெற்ற பின்னரே உள்ளங்கள் அமைதி அடைகின்றன. அப்படிப்பட்ட தெளிவான வாழ்வியல் உண்மைகளை நாம் யாரிடமிருந்து கற்றுக் கொள்ள முடியும்?

ஒரு புறத்தில் தத்துவ ஞானிகள்! அறிவுலக மேதைகள்! மத குருமார்கள்! குறி சொல்பவர்கள்! இவர்கள் - இறைவனைப் பற்றி, மனிதப் படைப்பினைப் பற்றி, உலகத்தைப் பற்றி, வாழ்க்கையைப் பற்றி, மரணத்துக்குப் பின் மனிதனின் நிலையைப் பற்றியெல்லாம் நிறையக் கருத்துக்களைச் சொல்லியிருக்கின்றார்கள். இவர்கள் சொந்தமாக சிந்தித்ததன் விளைவாக, ஆழமான தியானங்களில் மூழ்கியதன் வாயிலாக, தமது சொந்த வாழ்வில் - அவர்கள் சந்தித்த அனுபவங்கள் வாயிலாக - தமது கருத்துக்களை, உபதேசங்களை மக்களுக்குச் சொல்லிச் சென்றிருக்கின்றார்கள்!

ஆனால் அவர்களுடைய கருத்துக்களெல்லாம் சரியானவை தானா? உண்மையானவை தானா? சந்தேகங்களுக்கு அப்பாற்பட்டவை தானா? - அறுதியிட்டு அப்படிச் சொல்ல முடியவில்லையே! அவர்களின் சிந்தனையின் முடிவுகள் சரியாக இருக்கலாம் தான். ஆனால் தவறாக இருப்பதற்கும் வாய்ப்பிருக்கிறதே!

சகோதரர்களே! வாழ்க்கை சம்பந்தப் பட்ட எந்த ஒரு கேள்விக்கும் சரி, அது குறித்த தெளிவான, சந்தேகங்களுக்குக் கொஞ்சமும் இடமளிக்காத விளக்கங்களை இந்தத் தத்துவ ஞானிகளால், அறிவுலக மேதைகளால் தரவே இயலாது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்! ஏன் தர இயலாது?

ஏனென்றால், அவர்கள் எடுத்து வைக்கின்ற ஒவ்வொரு கருத்தும் அவர்களுடைய சொந்த சிந்தனையில் உதித்தவை! இரண்டு தத்துவ ஞானிகள் - ஒரே ஒரு விஷயம் குறித்துக் கூட ஒரே மாத்ரியாக சிந்திப்பதில்லை! எனவே ஒருவரின் கருத்து மற்றவரின் கருத்துக்கு முரண்பட்டு நிற்கின்றது! ஒரே விஷயம் குறித்து இரண்டு தத்துவ ஞானிகள் இரண்டு முரண்பட்ட கருத்துக்களைச் சொன்னால் எதனை ஏற்பது? எதனை ஒதுக்குவது?

எனவே சொந்த மூளையைக் கொண்டு சிந்திக்கின்ற தத்துவ ஞானிகளிடமிருந்தும், அவர்களைப் போன்ற மற்றவர்களிடமிருந்தும் நாம் - வாழ்வியல் உண்மைகள் பற்றிய உறுதியான அறிவைப் பெற்றுக் கொள்ள இயலாது.

இறைவனைப் பற்றி, இறைவனின் தன்மைகள் பற்றி - பல பல மூட நம்பிக்கைகளை உருவாக்கியவர்கள் சொந்தமாக சிந்தித்த தத்துவ ஞானிகளே! இறைவனை வழிபடுவது எப்படி என்ற விஷயத்தில் பல நூதனமான வழிமுறைகளை உருவாக்கியதும் இவர்களே!

நமது வாழ்க்கையை எவ்வாறு வடிவமைத்திட வேண்டும் என்பது குறித்து அவரவரும் தத்தமது மனம் போன போக்கில் - இதைச் செய்! அதைச் செய்யாதே! - என்று உபதேசங்களை அள்ளி வீசியவர்கள் இத்தகைய தத்துவ வித்தகர்கள் தாம்!

சான்றுக்கு ஒன்றைப் பார்ப்போமா? இறை நம்பிக்கையையே எடுத்துக் கொள்வோம்.

கடவுள் மூவர். படைத்தலுக்கு ஒரு கடவுள். காத்தலுக்கு ஒரு கடவுள். அழித்தலுக்கு ஒரு கடவுள். இது ஒரு கொள்கை.

உர்முஸ் என்று ஒரு கடவுளாம். இவர் 'நன்மைக்கான' கடவுள். நல்லவை அனைத்தையும் இவர் தான் படைக்கிறார். இன்னொரு கடவுள் அஹ்ரிமன். இவர் 'தீமைக்கான' கடவுள். தீமைகள் அனைத்தையும் இவர் தான் படைக்கிறார். இந்த இரு கடவுள்களும் ஒன்றுக்கொன்று ஓயாமல் சண்டையிட்டுக் கொள்கிறார்கள். சில சமயம் நல்ல கடவுள் வெற்றி பெறுகிறார். அப்போது நல்லவை நடக்கின்றன. சில சமயம் தீமைகளுக்கான கடவுள் வெற்றி பெற்று விடுகிறார். அப்போது தீமைகள் நடந்தேறி விடுகின்றன! இது ஒரு நம்பிக்கை!

ஒன்றே குலம். ஒருவனே தேவன். இது ஒரு தத்துவம்.

இவற்றில் எது சரி? எவையெல்லாம் தவறுகள்? இவற்றுள் எதனை ஏற்பது? எவைகளைத் தவிர்ப்பது?

ஒருவனே தேவன் என்ற கருத்தே சரியென்று வைத்துக் கொள்வோம் எனில் - இது ஏன் மற்ற கருத்துக்களைச் சொன்ன 'அறிஞர்களுக்குத்' தோன்றிடவில்லை?

இறைவனைக் குறித்தும், மனித வாழ்வு குறித்தும் மனிதன் எவ்வாறெல்லாம் சிந்திக்கின்றான் பார்த்தீர்களா?

சிந்தனையைக் குழப்புகின்ற, மனிதனின் அறிவுத் தாகத்தைத் தீர்த்திடாத இத்தகைய தத்துவங்களை ஏற்கும் ஒரு சமூக மக்களின் வாழ்க்கை எப்படிப் பட்டதாயிருக்கும்? தங்களுக்கே வழி தெரியாதவர்களெல்லாம் மக்களுக்கு வழி காட்டுவதாகச் சொல்லி வழி கெடுத்துக் கொண்டிருப்பார்கள். இப்படிப் பட்ட 'ஞானிகளைக்' கண்ணை மூடிக் கொண்டு மக்கள் (படித்தவர்கள் உட்பட!) பின்பற்றுவதால் சமூகத்தில் மூட நம்பிக்கைகள் செழித்தோங்கும். அர்த்தமற்ற சடங்குகளை மக்கள் விடாப்பிடியாகப் பிடித்துக் கொண்டிருப்பர்.

சிந்திக்கத் தொடங்கும் புதிய தலைமுறையோ - முன்னோரின் தத்துவங்களைக் குறித்து கேள்விகள் எழுப்பும். தெளிவான பதில்கள் கிடைக்காது. விளைவு? கொள்கைக் குழப்பங்கள். அல்லது கொள்கை வெற்றிடம்! உண்மையைத் தேடிக் குழப்பத்தில் சிக்கிக் கொண்டவர்கள் மனோ வியாதிக்கு ஆட்பட்டு விடுவார்கள். இறைநம்பிக்கைக்கு எதிராக இறைமறுப்பு தலையெடுக்கும். எதற்காக வாழ்கிறோம் என்பது புரியாததால், வாழ்க்கைப் பிரச்னைகளை எதிர்கொள்ள இயலாமல் தற்கொலையை நாடுபவர்கள் அதிகரிப்பார்கள்! 'உலகே மாயம், வாழ்வே மாயம்' - என்ற புலம்பல் இதனால் தான்!

12. அனுபவி ராஜா அனுபவி? 

சரி! இந்தத் தத்துவ ஞானிகளை ஒரு புறம் வைத்து விட்டு, நவீன கால அறிஞர்களிடத்தில் செல்வோமா? இவர்களில் நவீன கால சிந்தனையாளர்கள் (Modern Thinkers), அறிஞர்கள் (Scholars), விஞ்ஞானிகள் (Scientists) - போன்றோர் அடங்குவர்.

இவர்கள் - முன்னோர்கள் கொண்டிருந்த மூட நம்பிக்கைகளை, தங்களது பகுத்தறிவின் திறமை கொண்டு, கேள்விகளை எழுப்பி, மக்களை சிந்திக்க வைத்து, மக்களின் அறியாமைகளை, மடமைகளை வெளிச்சம் போட்டுக் காட்டியவர்கள் தான்! ஆனால் அத்தோடு நில்லாமல் மனித வாழ்க்கையோடு பின்னிப் பிணைந்திருக்கின்ற இறை நம்பிக்கையையும் தூக்கி வீசி எறிந்து விட்டார்கள்! அத்துடன் மனித வாழ்க்கையை எப்படி அமைத்துக் கொள்ள வேண்டும் என்பது குறித்து 'அவர்களின் அறிவு' பலத்தைக் கொண்டு பல கொள்கைகளை (இஸங்களை) வகுத்துத் தந்து விட்டார்கள்.

இவர்கள் கற்றுத் தருகின்ற பாடங்களை இப்போது பார்ப்போம். கேள்விகளைக் கேட்டு பதில்களைப் பெறுவோமா?

இறைவன் இருக்கின்றானா?

இல்லை! இல்லவே இல்லை!

அப்படியானால் இந்த உலகம் தோன்றியது எப்படி?

ஒரு மிக மிகப் பெரிய வெடிப்பின் மூலம் (Big Bang) தானாகத் தோன்றியது
தான் இவ்வுலகமும் இன்ன பிற கோள்களும்!

அப்படியானால் இறைவன் மனிதனைப் படைக்கவில்லை என்கிறீர்களா?

இல்லை! இறை நம்பிக்கை சம்பந்தப்பட்ட சமாச்சாரங்கள் எல்லாம்
பழங்காலத்து மக்களின் கட்டுக் கதைகள்! முதலில் ஒரு செல் உயிர்
தானாகத் தோன்றி பின்பு பரிணாம வளர்ச்சி பெற்று -
குரங்கு, மனிதக் குரங்கு, இறுதியில் மனிதன் என்று
உயிரினங்கள் பல்கிப் பெருகி இருக்கின்றன என்பது தான் உண்மை!

அப்படியானால் - நமது வாழ்க்கைக்கு என்ன பொருள்?

வாழ்க்கை என்பது - இயற்கை நமக்குத் தற்செயலாகத் தந்து விட்ட ஒரு வாய்ப்பு!
இந்த வாய்ப்பு நமது மரணம் வரை மட்டுமே! மரணம் வருவதற்குள் நமக்குக் கிடைத்திட்ட இந்த வாய்ப்பை நழுவ விட்டு விடாமல் முழுவதும் பயன்படுத்திக் கொண்டு இயன்றவற்றையெல்லாம் அனுபவித்து விட வேண்டும்! குறிக்கோள், இலட்சியம், ஒழுக்கம், மார்க்கம் - என்றெல்லாம் பேசிக் கொண்டு நமது சுதந்திரத்துக்கு குறுக்கே யாரும் வந்திடுவதை - நாம் ஒரு போதும் அனுமதித்து விடக் கூடாது.

தங்களது அறிவு பலத்தைக் கொண்டு நவீன கால அறிஞர்கள் எப்படிப் பட்ட ஒரு வாழ்க்கையை மக்களுக்கு முன் சமர்ப்பித்திருக்கிறார்கள் பார்த்தீர்களா? ஆம்! தற்செயலாகக் கிடைத்து விட்ட வாழ்க்கை என்ற வாய்ப்பை முழுவதும் அனுபவித்து விடு - என்பது தான் நவீன உலகின் சித்தாந்தம்.

ஆனால் - எல்லாம் தானாகவே தோன்றியது, தற்செயலாகத் தான் நமக்கு இந்த வாழ்க்கை கிடைத்திருக்கிறது என்பதை மனித அறிவு ஏற்றுக் கொள்வதில்லை. எனவே - இந்த நவீன சித்தாந்தத்தின் அடிப்படையில் எழுப்பப் படும் சமூக அமைப்பிலும் கொள்கைக் குழப்பங்கள்! அமைதியின்மை! மனோ வியாதி! தற்கொலைகள்!

ஒழுக்கம் என்ற பேச்சுக்கே இத்தகைய சமூகத்தில் இடம் இருக்காது. எல்லாவற்றையும் அனுபவித்து விட வேண்டும் என்ற மோகம் மனிதனை மிருகமாக்கி விடும். ஆண்-பெண் உறவு என்பது எல்லா வரையறைகளையும் தாண்டி முறை கெட்ட உறவு முறைகளுக்கு வழி வகுத்திடும். கட்டுப்பாடுகளை விரும்பாத ஒரு சமூக அமைப்பு திருமணம்-குடும்பம் என்ற கட்டுப்ப்பாட்டுக்குள் வந்து நிற்பது மிகக் கடினம். ஜெர்மனியைச் சேர்ந்த இளம்பெண் ஒருத்தி - அங்குள்ள வானொலி நிலையம் ஒன்றுக்கு இவ்வாறு எழுதி ஆலோசனை கேட்டாளாம்:

'சில ஆண்டுகளாக நான் ஒரு இளைஞனுடன் தொடர்ந்து தொடர்பு கொண்டிருக்கின்றேன். அவன் எனக்கு அலுத்துப் போய் விட்டதால் இப்போது - இன்னொரு பையனை சேர்த்துக் கொள்ள விரும்புகிறேன். இருவரையும் நான் வைத்துக் கொள்ளலாமா? ( Can I keep them both?) அல்லது - இரண்டாவது பையனை விட்டு விட்டு முதல் இளைஞனை மட்டும் தான் நான் வைத்துக் கொள்ள வேண்டுமா?

வானொலி ஆலோசகர் - அந்தப் பெண்ணுக்கு இவ்வாறு வழி காட்டுகிறார்: 'உங்களுக்கு இருபத்தெட்டு வயது ஆகும் வரை எந்த நிபந்தனையோ, கட்டுப்பாடோ இன்றி ஒருவருடனோ - பலருடனோ தொடர்பு கொள்ளவும் உறவு வைத்துக் கொள்ளவும் உங்களுக்கு முழுமையான சுதந்திரம் உண்டு! எனவே தயங்க வேண்டாம். கவலைப் பட வேண்டாம். விரும்பியதைச் செயல்படுத்துங்கள்!

மது, போதைப் பொருட்கள், சூதாட்டம், இரவு நடனக் கேளிக்கைகள் - இதுவே அவர்களின் வாழ்க்கை முறையாகப் (Way of life) போய்விடும்! இத்தகைய வாழ்க்கை முறையைத் தான் இங்கே - நமது இளந்தலைமுறையும் காப்பியடிக்கத் துடிக்கின்றது!

எனினும், இறைக் கோட்பாட்டை மறுத்து நிற்பவர்களில் ஒரு சிலர் ஒழுக்கமுடையவர்களாகத் திகழ்வதும் உண்மை தான்! ஆனால் ஒரு அறிஞர் குரிப்பிடுவதைப் போல "There are moral atheists; but there is no moral atheism". அதாவது ஒழுக்கமுள்ள நாத்திகர்கள் இருக்கிறார்கள். ஆனால் ஒழுக்கமுள்ள நாத்திகம் என்று ஒன்று கிடையாது!

சற்று சிந்தியுங்கள்! அறிவியல் துறையில் அளப்பரிய சாதனைப் படைத்த அறிஞர்களால், கம்ப்யூட்டர் என்றும் இன்டர்நெட் என்றும் அணுகுண்டு என்றும் ஏவுகணைகள் என்றும் அறிவியல் முன்னேற்றத்தில் புகுந்து விளையாடும் விஞ்ஞானிகளால் மனித வாழ்க்கைக்கு சரியானதொரு வழியை ஏன் காட்டிட இயலவில்லை?

இயற்கையின் அளப்பரிய ஆற்றல்களை மனித் வாழ்வுக்குப் பயன்படுத்துவது எப்படி என்பதில் வெற்றி பெற்ற அவர்கள் மனித வாழ்க்கையையே கோட்டை விட்டு விட்டார்களே - இது ஏன்?

காரணத்தைக் கண்டுபிடிப்போம்!

13. அறிந்தவனிடமிருந்து தான் தெரிந்து கொள்ள முடியும்!

பொதுவாக மனிதன் - தன்னிடம் இருக்கின்ற ஐந்து புலன்களின் வழியாகத் தான் அறிவைப் பெறுகின்றான். வளர்த்துக் கொள்கின்றான். ஆனால் புலன் உணர்வுகளைக் கொண்டு 'அறிவியல்' அறிவைத் தான் வளர்த்துக் கொள்ள இயலுமே தவிர புலன் உணர்வுகளுக்கு அப்பாற்பட்ட 'அறிவைப்' பெற்றுக் கொண்டிட இயலாது.

புலன்கள் வழியே நாம் பெறுகின்ற அந்த 'அறிவியல் அறிவு' கூட எந்த அளவுக்கு உண்மையானவை? நம்பத் தகுந்தவை தெரியுமா? - இதோ கேள்வி-பதில்:

'மனிதா! நீ எப்படி அறிவைப் பெறுகிறாய்?'

'என் கண்களால் நான் பார்க்கிறேன். அதனால் அறிந்து கொள்கிறேன்.'

'உன் கண்களால் பார்த்து அறிந்து கொள்ளும் விஷயத்தில் உனக்கு சந்தேகமே கிடையாதே?'

' என் கண்களால் நானே பார்ப்பதை நான் ஏன் சந்தேகிக்க வேண்டும்?'

'அப்படியானால் 'கானல் நீருக்கு' நீ என்ன விளக்கம் சொல்கிறாய்? கண்ணுக்கு எதிரே இல்லாத நீரை உன் கண்கள் எப்படிக் காட்டியது?'

நண்பனே! உண்மையில் நாம் நமது கண்களால் ஒன்றைப் பார்த்து அறிந்து கொள்வது எப்படி தெரியுமா? நம் கண்களின் எதிரே உள்ள ஒரு பொருளின் பிம்பம் நமது விழித் திரையில் (Retina) தலை கீழாக விழுகிறது. அந்த பிம்பம் குறித்து மூளைக்குத் தகவல் அனுப்பப் படுகிறது. மூளை ஒன்றைப் புரிந்து கொள்கிறது. மூளை புரிந்து கொண்டது சரியாகவும் இருக்கலாம், தவறாகவும் இருக்கலாம். கண்களால் நாம் பெறும் அறிவின் நம்பகத் தன்மை இவ்வளவு தான்! மற்ற புலன்கள் வழி நாம் பெறுகின்ற தகவல்களின் நிலையும் அதே தான்!

அதனால் தான் சொன்னார்களோ - 'கண்ணால் பார்ப்பதுவும் பொய் - காதால் கேட்பதுவும் பொய்' - என்று!
விஞ்ஞானிகள் ஆய்வு செய்கிறார்களே ஆய்வுக் கூடங்களில். அந்த ஆய்வின் முடிவுகள் எல்லாம் சந்தேகங்களுக்கு அப்பாற்பட்டவை தானா? அவற்றில் சந்தேகங்களுக்கு இடமே இல்லை என்றால் - அதுவும் கேள்விக்குறி தான்! பின் ஏன் நேற்று சொன்ன ஒரு அறிவியல் கறுத்தை இன்று மாற்றிக் கொள்கிறார்கள்?

ஒளி நேர்கோட்டில் பரவுகிறது என்ற கருத்து இன்று எங்கே போயிற்று?

அணுவைப் பிளக்க முடியாது என்று அன்று டால்ட்டன் சொன்ன கோட்பாடு இன்று என்ன ஆனது?

அப்படியிருக்கும் போது இன்று சொல்லப்படுகின்ற அறிவியல் கோட்பாடுகளின் நாளைய கதி என்ன? அவை எதிர்காலத்தில் மாற்றப் படாது என்பதற்கு என்ன உத்தரவாதம்? மாற்றங்களுக்கு ஆளாகும் அத்துனை அறிவியல் கோட்பாடுகளையும் வெறும் ஊகங்கள் என்றல்லாமல் வேறு எப்படி அழைப்பது?

விஞ்ஞானக் கோட்பாடுகளின் நம்பகத் தன்மை குறித்து பாப்பர் என்ற விஞ்ஞானி என்ன கூறுகிறார் தெடியுமா?

"Theories are often bold conjectures!" - அதாவது அறிவியல் கோட்பாடுகள் பெரும்பாலும் துணிச்சலான கற்பனைகளே!

அறிவியல் கோட்பாடுகளின் நம்பகத் தன்மை குறித்துக் கவலைப் படாமல் - இயன்ற அளவுக்கு அதிகம் அதிகமான கோட்பாடுகளை அறிவியல் உலகுக்கு வழங்கிட வேண்டும் என்று ஆலோசனை வழங்குகிறார் டாவிஸ் என்ற விஞ்ஞானி.

"The world of science should be like a classical free enterprise market place with theories as commodities. When there is a demand for theories (of any sort) it is to the consumer's advantage to allow the largest possible supply...."

'விஞ்ஞான உலகம் என்பது சுதந்திரமான ஒரு வியாபரச் சந்தையைப் போல! இந்த சந்தையில் விற்கப் படும் பொருள்: விஞ்ஞானக் கோட்பாடுகள் தாம். ஒரு குறிப்பிட்ட வகைக் கோட்பாடுகளுக்கு 'கிராக்கி' ஏற்படும்போது, சந்தைக்கு - எந்த அளவுக்கு இயலுமோ - அந்த அளவுக்கு வகை வகையான கோட்பாடுகளை அனுமதிப்பது - அவைகளைப் பயன் படுத்துபவர்களுக்கு வசதி தானே!

நாம் கேட்பது என்னவென்றால் - அறிவியல் கோட்பாடுகளெல்லாம் 'வியாபாரப் பொருட்களா'? கிராக்கி இருக்கிறது என்றால் பொய்யான கோட்பாடுகளையும் 'விற்பனைக்குக் கொண்டு வந்து விடுவீர்களா?

ஆம்! இது தான் இன்றைய அறிவியல் உலகம்! இங்கே உண்மையும் பொய்யும் கலந்தே விற்பனை செய்யப் படுகின்றன! விழித்துக் கொள்ள வேண்டியது - நம்மைப் போன்ற 'வாடிக்கையாளர்கள்' தான்!

இது இப்படி இருக்க - என்னைப் படைத்தது யார்? நான் படைக்கப் பட்டதன் நோக்கம் என்ன? நமது துவக்கமும் முடிவும் என்ன? - என்பன போன்ற வாழ்வியல் கேள்விகளுக்கான விடைகளை இயற்பியல் ஆய்வுக் கூடத்திலோ வேதியியல் ஆய்வுக் கூடத்திலோ ஆய்வு செய்து கண்டு பிடித்து விட இயலுமா?

எனவே தான் சொல்கிறோம். அறிவு இரண்டு வகைப் படும்.

ஒன்று - புலன்களின் மூலமாகப் பெறப் படும் அறிவு.

இரண்டு - புலன்களுக்கு அப்பாற்பட்டவை பற்றிய அறிவு,

நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்டிருக்கும் மனித வாழ்க்கை சம்பந்தப்பட்ட அறிவு என்பது புலன் உணர்வுகளுக்கு அப்பாற்பட்ட அறிவைச் சார்ந்தது.

என்வே - வாழ்க்கை சம்பந்தமான தெளிவான அறிவை -

ஆளுக்கொரு கருத்தினை மனம் போன போக்கில் சொல்லிக் கொண்டிருக்கும் தத்துவ ஞானிகளின் சிந்தனைகள் மூலமாகவோ

ஐம்புலன்களை மட்டுமே நம்பி செயல் படுகின்ற அறிவியலாளர்கள் மூலமாகவோ
பெற்றுக் கொண்டு விட முடியாது!

அப்படியானால் - வாழ்க்கை சம்பந்தப்பட்ட அறிவை, அதாவ்து புலன் உணர்வுகளுக்கு அப்பாற்பட்ட அறிவை நாம் பெறுவது எங்கனம்?

இறைவனை நம்ப மறுக்கின்ற நாத்திகர்களுக்கு வாழ்க்கை என்பதே ஒரு விபத்துத் தான். ஆனால் இறைவன் ஒருவன் இருக்கின்றான் என்பதை ஏற்பவர்களுக்கு - புலன் உணர்வுகளுக்கு உட்பட்ட மற்றும் உட்படாத எல்லா அறிவுக்கும் ஆற்றலுக்கும் சொந்தக்காரன் அந்த இறைவனே என்பதைப் புரிந்து கொள்வதில் எந்த வித சிரமமும் இருக்கப் போவதில்லை. ஆம்! எல்லா அறிவுக்கும் சொந்தக் காரனான அந்த ஆண்டவனிடத்தில் இருந்து தான் நாம் வாழ்க்கைக்கான மிகச் சரியான் அறிவைப் பெற்றும் கொள்ள முடியும்!

14. இறைவன் கற்றுத் தருகின்றானா?

ஒரு பக்கம் விண்ணை முட்டும் மலைகள். பனி படர்ந்த மலைத் தொடர்கள். அதற்கும் மேலே வெள்ளை கறுப்பு மேக மூட்டங்கள். அதற்கும் மேல் நீல நிற வானம். சில்லென்று வீசும் குளிர் காற்று, மலையடிவாரத்தில் அங்கும் இங்கும் ஓடித் திரியும் விலங்கினங்கள். பறந்து திரிந்திடும் பல வண்ணப் பறவைகள்...

இன்னொரு பக்கம் - சல சலத்து ஓடும் ஆற்று நீர். ஆற்றின் இரு மருங்கிலும் பட்டுக் கம்பளம் விரித்தாற்போல் பசுமை வயல்கள், எங்கோ நம்மை அழைத்துச் சென்றிடும் ஒற்றையடிப் பாதைகள், கரும்பச்சை நிறக் கோட்டைகளைப் போன்று தோற்றமளித்திடும் தூரத்து கிராமங்கள்....

பிறிதொரு பக்கம் - சிறு சிறு அலைகளுடன் கடல் - ஓர் அமைதி நீர்ப்பரப்பு. தூரத்தே அதனைத் தொட்டு நிற்கின்ற அடிவானம். காலையில் கதிரவன் உதிக்கும் நேரம் அல்லது மாலையில் அது மறையும் நேரம். இரவில் விண்மீன் சிதறல்கள். ஒளி உமிழும் நிலா....

இப்படிப்பட்ட இன்னும் இதுபோன்ற இயற்கைக் காட்சிகள் அனைத்துமே மனிதனின் உள்ளத்தைக் கொள்ளை கொண்டிடும் மகிழ்ச்சியை, குதூகலத்தை, அமைதியை, பரவசத்தை அவனுக்கு அள்ளி வழங்குகின்றன.

ஆனால் இதே இயற்கைச் சூழல் சற்றே மாறுபடும்போது, இதமான காற்று புயலாய் உருவெடுத்து விடும்போது, சலசலத்து ஓடும் நதிநீர் வெள்ளமாய்ப் பெருக்கெடுத்து ஓடும்போது, அமைதியான பூமிப்பரப்பில் பூகம்பம் ஏற்பட்டு விடும்போது, எரிமலை நெருப்பைக் கக்கிடும்போது - தவித்துப் போய் விடுகிறான் மனிதன்.

இது ஏன்? மகிழ்ச்சியை வழங்கிக் கொண்டிருந்த இயற்கை - திடீரென துக்கத்தை அள்ளி வீசி விடுவது ஏன்? நம்மை மகிழ்விப்பதோடு ஏன் இயற்கை நின்றுவிடக்கூடாது?

இறைவனை நீங்கள் நம்புகிறீர்கள்! இறைவனே அனைத்தையும் படைத்தவன் என்பதை ஏற்றுக் கொள்கிறீர்கள்.அந்த இறைவன் தான் அனைவரையும் காக்கிறான் என்பதையும் ஏற்கின்றீர்கள். அவன் எல்லா ஆற்றல்களுக்கும் சொந்தக்காரன் என்று நம்புகிறீர்கள். அப்படியானால் தனது ஆற்றலைக் கொண்டு நம்மை இயற்கைச் சீற்றங்களிலிருந்து ஏன் அவன் காத்திடவில்லை? இந்த முரண்பாட்டுக்கான காரணத்தை நாம் அறிந்து கொள்ள வேண்டாமா?

இதையே இன்னொரு கோணத்தில் சிந்திப்போம். மனிதன் நலமாய் இருந்திடும்போது தன்னையே பார்த்து மகிழ்கின்றான். தனது முகத்தைப் பார்த்து மகிழ்கின்றான். மற்றவர்களோடு தன்னை ஒப்பிட்டுப் பார்த்து தனக்கு மதிப்பெண் போட்டுக் கொள்கின்றான். சாதனைகளை நிகழ்த்திடும்போது மகிழ்ச்சி. மணம் முடிக்கும்போதும், மனைவி வந்த பின்பும் மகிழ்ச்சி கரைபுரண்டு ஓடுகிறது. குழந்தைக்குத் தந்தையானால் மகிழ்ச்சி. சொத்துக்கள் குவியக் குவிய மகிழ்ச்சிப் பெருங்கடலில் நீந்துகிறான்.

ஆனால் அவன் வாழ்வில் சற்றே திசை மாறி திடீரென்று அவன் நோயுற்றால், விபத்தொன்றில் சிக்குண்டால், ஆபத்தொன்றில் மாட்டிக் கொண்டால், தான் சார்ந்த துறையில் நஷ்டங்களை சந்திக்க நேரிட்டால், எதிரிகளால் சூழப்பட்டால், நெருக்கத்தில் திடீர் மரணம் ஒன்று நிகழ்ந்தால் - நம்பிக்கை இழந்து நிராசை அடைந்து விடுகின்றான்.

பணம் இருக்கிறது - அமைதி இல்லை! மனைவி இருக்கிறாள் - மகிழ்ச்சி இல்லை! குழந்தைகள் இருக்கின்றன - நிம்மதி இல்லை. ஏன் இந்த முரண்பாடு? ஏன் நாம் மகிழ்ச்சியாகவே இருந்திட முடியவில்லை? கவலை இல்லாத வாழ்க்கை ஏன் மனிதனுக்குத் தரப்படவில்லை? ஏன் நோய்? ஏன் மரணங்கள்? ஏன் விபத்துக்கள்?

நல்லவர்களுக்கு மத்தியில் ஏன் கெட்டவர்கள்? ஏன் எல்லாருமே நல்லவர்களாக இருந்திடவில்லை? தான் வாழ ஆசைப்படும் மனிதன் பிறரை ஏன் கொல்லத் துடிக்கின்றான்? பிறரைக் கொல்வதற்கென்றே புதிது புதிதாக ஏன் ஆயுதங்களைக் கண்டுபிடிக்கின்றான்? ஏன் கொலைகள்? ஏன் போர்கள்?

மரணம். இந்த்ச் சொல்லைக் கேட்டாலே குலை நடுங்குகிறான் மனிதன். நிரந்தரமாக இங்கேயே வாழ்ந்திடப் போகின்றோம் என்று கட்டிய மனக் கோட்டைகள் திடீரென்று ஒரு நொடியில் - தனது கனவுகள் எல்லாம் - தகர்க்கப் படுவதைத் தன் கண் முன்னே காண்கின்றான். மரணம் - தனது கதையை முற்றாக முடித்து வைத்து விடுகின்றது என்ற எண்ணம் அவனுக்குள் நாராசமாக ஒலித்துக் கொண்டு இருக்கிறது. ஏன் மரணம்? ஏன் முடிவு?

இறைவனை நம்புபவர்களே! இறைவன் கருணையுள்ளம் கொண்டவன் என்று தானே ஏற்றுக் கொண்டிருக்கிறீர்கள்? அந்தக் கருணையாளன் ஏன் நம்மைக் கவலையிலும் துக்கத்திலும் ஆழ்த்திட வேண்டும்? இந்த முரண்பாடான நிலைகளுக்கெல்லாம் என்ன காரணம் என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டுமா? வேண்டாமா?

மனிதன் இவற்றையெல்லாம் முதலில் தனது அறிவைக் கொண்டு இயன்றவரை சிந்தித்துப் பார்க்கிறான். ஆம்! மனிதனுக்கு அறிவு இருப்பது உண்மை தான். ஆனால் அவனது சிந்தனை அவனைத் தெளிவான விளக்கங்களுக்கு இட்டுச் செல்வதில்லை என்பதை உணர்கின்றான். நேற்று ஒன்றைச் சரி என்று எண்ணுவது இன்று அவனுக்குத் தவறாகத் தெரிகின்றது. சரி, மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள் என்று பார்த்தால், அவர்கள் தந்திடும் விளக்கங்கள் அவனை மேலும் குழப்புகின்றன. இந்தக் கட்டத்தில் தான் மனிதன் தனது அறிவின் குறையை உணரத் தொடங்குகிறான். தனது அறிவின் குறையை உணர்ந்திடும்போது தான் - அவனுக்கு அறிவுத் தாகம் ஏற்படுகின்றது.

இந்தக் கட்டத்தில் - இறைவனை நம்புபவர்களைப் பார்த்து மகத்தான கேள்வி ஒன்றைக் கேட்போம்.

'அறிவுத் தாகம் கொண்டு உண்மையைத் தேடி நிற்கின்ற மனிதனின் அறிவுப் பசியைத் தீர்த்து வைத்திட வேண்டியது எல்லா வல்லமையும் கொண்ட அந்த இறைவனின் கடமையா? அல்லவா?

நமது உள்ளங்களில் கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருக்கின்ற சந்தேகங்களை நீக்கி வைப்பதற்கு எல்லாம் அறிந்த இறைவன் மறந்து விட்டிருப்பான் என்று எண்ணிட முடிகிறதா உங்களால்?

நமது எல்லா விதப் புறத் தேவைகளையும் நிறைவேற்றித் தந்திட்ட இறைவன், தனது படைப்பினங்களில் எல்லாம் மிகச் சிறந்த மனிதப் படைப்பு இருளில் சிக்கித் தவிக்கட்டும் என்று விட்டு விடுவான் என்று எண்ணிப் பார்த்திட முடிகின்றதா?

ஐயா! நமக்கு ஆக்ஸிஜன் தேவை. போதுமான அளவுக்குக் கிடைக்கின்றதா, இல்லையா? நமக்குத் தாகம் எடுக்கிறது? நீரைத் தருகின்றானா, இல்லையா? நமக்குப் பசிக்கின்றது. உணவளிக்கின்றானா இல்லையா அந்த இறைவன்? நமக்கு வெளிச்சம் தேவை. கதிரவனை நமக்கு அவன் அளித்திடவில்லையா? நமக்கு ஓய்வு தேவை, இரவை அவன் நமக்கு வழங்கிடவில்லையா? கதிரவனில் இருந்து புறப்படும் ஒளிக்கதிர்களில் நமக்குத் தீங்கு இழைப்பவற்றை 'ஓசோன்' மண்டலம் கொண்டு தடுத்திடவில்லையா? நமது பாலியல் தேவைகளுக்கு இறைவன் நம்மை ஜோடி-ஜோடியாகப் படைத்திடவில்லையா?

இறைவன் நமக்கு வழங்கியிருக்கும் 'அருட்கொடைகளுக்கு' ஓர் அளவே கிடையாது என்பதை நாம் உணர்கின்றோம். இவ்வாறு நமக்கு எல்லாவற்றையும் குறைவற வழங்கிட்ட இறைவன் - இவையெல்லாம் எதற்காக என்று சொல்லாமல் கொள்ளாமல், நம்மைத் தவிக்க விட்டு வேடிக்கைப் பார்ப்பான் என்று எண்ண முடிகின்றதா?

நிச்சயமாக இறைவன் நம்மை தவிக்க விட்டு விட மாட்டான் என்று தானே ஆகின்றது. நமது அறிவுப் பசியைத் தீர்த்து வைத்திட வேண்டயது அவன் கடமை என்று தானே ஆகின்றது. மனித வாழ்க்கைப் பயணத்தில் 'இது தான் பாதை மனிதா' - என்று ந்ம்மைக் கரம் பிடித்து அழைத்துச் சென்றிட வேண்டியது அவனது நீங்காப் பொறுப்பு என்று தானே ஆகின்றது!

இறைவன் நமக்குக் கற்றுத் தந்திட வேண்டியது அவன் கடமையே என்பதை ஏற்றுக் கொண்டால் - அவன் தனது கடமையிலிருந்து தவறியிருப்பான் என்ரு ஒருக்காலும் எண்ணி விட முடியாது தானே?

அப்ப்டியென்றால் இறைவன் கற்றுத் தந்த அந்த 'வழிகாட்டுதல்' எங்கே? அது யாரிடத்தில் இருக்கின்றது? என்று பார்த்திட வேண்டியது நமது கடமையல்லவா?

15. இறைவனுக்குத் தூதர்களா?

மனிதனுக்கு அறிவு இருக்கிறது. ஆனால் அது குறை உடைய அறிவு. ஒரு அளவுக்கு உட்பட்ட அறிவு தான் அது. குறை உடைய அந்த அறிவைக் கொண்டு தெளிவான வாழ்வியல் உண்மைகளை மனிதன் புரிந்து கொண்டு விட முடியாது என்பதைப் பார்த்தோம்.

ஆனால் நம்மைப் படைத்த இறைவனின் அறிவு என்பது - எல்லா அறிவையும் உள்ளடக்கியது. கடந்த காலம், நிகழ் காலம், எதிர்காலம் - ஆகிய முக்காலத்தையும் உள்ளடக்கிய அறிவு அவனது அறிவாகும். எல்லாம் அறிந்தவன் அவன் ஒருவனே. நமது வாழ்வின் இரகசியங்களை அறிந்தவன் அவன் ஒருவனே. ஏனெனில் வாழ்க்கையை நமக்குத் தந்தவனே அவன் தான்!

இப்போது கேள்வி என்னவெனில், நமது வாழ்க்கைக்குத் தேவையான, இறைவன் வசம் இருக்கின்ற அந்த அறிவு நம்மை எப்படி வந்தடையும் என்பது தான்.

நமது படைப்பின் துவக்கம், நமது படைப்பின் முடிவு, நாம் படைக்கப் பட்டதன் நோக்கம், நமக்கும் நம்மைப் படைத்த இறைவனுக்கும் இடையே உள்ள தொடர்பு, இறைவனின் தன்மைகள் - என்பன போன்ற மனித வாழ்வின் அடிப்படைக் கேள்விகளுக்கான அத்தகைய அறிவை உலக மக்களுக்குக் கொண்டு போய் சேர்த்திட இறைவனே தேர்ந்தெடுத்துக் கொண்ட வழிமுறைக்குப் பெயர் தான் 'இறைத்தூது'. ஆங்கிலத்தில் Prophethood.

அதாவது மனிதப் படைப்பின் வரலாற்றில் இப்பூவுலகில் முதல் மனிதன் நடமாடத் தலைப்பட்ட காலம் தொடங்கி - ஒவ்வொரு சமுகத்திலும் - ஒரு சில மனிதர்களைத் தேர்வு செய்து அவர்களுக்கு ஒரு வானவர் (Angel) மூலமாக 'செய்திகளை' அனுப்பி வைப்பதன் மூலம் - அந்த அறிவை மனித சமூகத்துக்குக் கொண்டு வந்து சேர்க்கிறான் இறைவன்! யார் யாரை இறைவன் தேர்வு செய்கின்றானோ அவர்கள் - இறைவனின் செய்திகளைத் தாங்கி நிற்பதால் - இறைவனின் தூதர்கள் என்று அழைக்கப் படுகின்றார்கள்.

இறைவனை நம்ப மறுப்பவர்கள், இறைவனின் அறிவு, இறைவனின் தூதர்கள், இறைவனின் செய்தி - இவையெல்லாம் சுத்தமான கட்டுக் கதைகள். அவை வெறும் ஊகங்களாக (Guesswork) வேண்டுமானால் இருக்கலாமேயொழிய அவை முற்றான உண்மைகள் தாம் என்பதை நிரூபித்திட யாதொரு வழிமுறையும் கிடையாது என்கின்றனர்.

ஒரு அரசியல் தலைவரின் கருத்தாக ஒன்றைப் படித்தது நினைவுக்கு வருகிறது: 'ஒன்றே குலம், ஒருவனே தேவன்' என்பதே எனது கொள்கை; ஆனால் அந்த இறைவன் தனது தூதர்களை அனுப்புகிறான்; அவர்கள் மூலம் வேதங்களை அனுப்பி வழி காட்டுகிறான் என்பதை எல்லாம் பகுத்தறிவு ஏற்க மறுக்கிறது; இவையெல்லாம் நம்பிட இயலாத விஷயங்களாகத் தான் நாம் கருதுகிறோம்!'

மனிதனை விடுங்கள். மனிதனைத் தவிர்த்து மற்ற படைப்பினங்களை சற்று கவனிப்போம். கண்டம் விட்டு கண்டம் புலம் பெயர்ந்து மீண்டும் புறப்பட்ட இடத்துக்கே வந்து சேரும் பறவைகள் பற்றி படித்ததுண்டா? அப்பறவைகள் உலகத்தின் ஒரு பகுதியிலிருந்து இன்னொரு பகுதிக்கு - உணவுக்காகவும், சிறப்பான வாழ்க்கைக்காகவும் - நீண்ட தூரப் பயணம் மேற்கொள்கின்றன. அதற்கென அவைகள் பெரும் கடற்பரப்பைக் கடந்து செல்ல வேண்டியுள்ளன. ஒரு நிலப் பரப்பை விட்டு இன்னொரு நிலப் பரப்பை நோக்கி கடல் கடந்து செல்கின்ற அப்பறவைகள் நீர்ப் பரப்பின் மேலே மிகக் குறைவான நேரமே பறப்பதற்கு வசதியாக மிகக் குறுகிய இடைவெளி கொண்ட பாதையை தேர்வு செய்து பறக்கிறதாம். இந்த அறிவு அப்பறவைகளுக்கு எப்படி வந்தது?

இறைவனை மறுப்பவர்கள் - தாமாகவே இந்த அறிவு அப்பறவைகளுக்குள் வளர்ந்திருக்க வேண்டும் என்பார்கள். அவர்களை விடுங்கள். இறைவனை ஏற்றுக் கொள்பவர்களைப் பார்த்து நாம் கேட்பது: இந்த 'வழிகாட்டுதலை' வழங்கியவன் இறைவனே என்று ஒத்துக் கொள்வதில் என்ன கடினம் உங்களுக்கு?

தேனீக்களை எடுத்துக் கொள்ளுங்கள். அவை கட்டும் 'தொழில் நுட்பம்'நிறைந்த கூடுகளை கவனியுங்கள். அவைகளுக்குத் தேவையான பூச்சாறு (Nectar)- எங்கிருக்கிறது, எவ்வளவு தூரத்தில் இருக்கிறது என்பதனை மற்ற தேனீக்களுக்கு அறிவித்திட அவை போடுகின்ற ஆட்டம் பாட்டம் (Bee Dance) - இவை அனைத்தும் இறைவன் காட்டித் தந்த 'உள்ளுணர்ச்சிகளே' என்று ஒத்துக் கொள்ள என்ன கடினம்?

எறும்புகளைக் கவனித்துப் பாருங்கள். அவைகளின் செயல்பாடுகளில் பல அதிசயம் அளிக்கும்.

சில் வண்டுகள் தனது துணையை அழைத்திட என்ன செய்கின்றன தெரியுமா? தமது சின்னஞ்சிறிய சிறகுகளை உரசித் தேய்த்து ஆண் வண்டு எழுப்பும் ஒலி - 600 டன் காற்றை அதிர வைத்து - அரை மைல் தூரத்திலுள்ள அதன் பெண் துணைக்குப் போய் சேருகிறதாம். பெண் துணையும் தமது இணக்கத்தை புதிரானதொரு முறையில் ((some mysterious way) தெரிவித்திட, ஆண் வண்டு மிகச் சரியாக அங்கே வந்து சேர்கிறதாம்! விட்டில் பூச்சியும் இப்படித்தான் சமிக்ஞை (Signal) அனுப்புகிறதாம்.

இயற்கையில் நம்மைச் சுற்றியே இத்தனை சான்றுகளைக் காணும் நாம், இறைவன் மனிதர்களில் சிலரைத் தேர்வு செய்து தனது வழிகாட்டுதலை சேர்ப்பிப்பதற்கு சாத்தியமே கிடையாது என்று எப்படி சொல்ல முடியும்?

16. இறைவனின் செய்தி என்பது உண்மையா? யூகமா?

இறைவன் தான் தெரிவு செய்த மனிதர்களுக்கு வழங்கிய அந்த அறிவின் தன்மை எப்படிப்பட்டது? அவை உண்மையானது தானா? அவற்றில் சந்தேகத்துக்கு இடமே கிடையாதா? - என்றெல்லாம் கேள்விகள் கேட்கலாம்.

சிந்திக்காமல் ஆய்வு செய்திடாமல் அப்படியே கண்களை மூடிக் கொண்டு நம்புங்கள் என்று ஒரு போதும் இறைவன் எதிர்பார்ப்பதில்லை. எனவே, இறைவன் தான் தெரிவு செய்திடும் மனிதர்கள் மூலமாக் வழங்கும் அறிவின் நம்பகத் தன்மை குறித்து ஆய்வு செய்வோம்.

இறைவன் தனது தூதர்களுக்கு செய்தியை வழங்கிடும் முறைக்கு 'வஹி' என்று பெயர். ஆங்கிலத்தில் இதனை (Revelation) என்று அழைக்கலாம். தமிழில் அதனை 'வெளிப்படுத்துதல்' என்று மொழி பெயர்க்கலாம். எனினும் மொழி பெயர்ப்புகள் வஹி என்பதன் முழுமையான பொருளைத் தந்திட இயலாது. வஹி என்று சொன்னால் - அது ஏதோ ஒருவர் ஒரு விஷயம் குறித்து ஆழமாகச் சிந்தித்துக் கொண்டிருக்கும்போது திடீரென்று மனதில் தோன்றுகின்ற ஒரு உதிப்பு என்று பொருள் கொண்டு விடக் கூடாது. இது போன்ற அனுபவம் சாதாரணமாக ஆழமாக சிந்திக்கும் எவருக்கும் ஏற்படக்கூடிய ஒன்று தான். ஆனால் வஹி என்பது முற்றிலும் தனித்தன்மை வாய்ந்தது. இறைவன் தான் தெரிவு செய்திடும் மனிதர் ஒருவருக்கு ஒரு குறிப்பிட்ட வானவர் (யுபெநட) மூலமாக தனது செய்திகளை மிகச் சரியான சொற்களைக் (Exact words) கொண்டு படித்துக் காட்டி அவர் உள்ளத்தில் அப்படியே பதிய வைக்கும் அசாதாரணமானதொரு நிகழ்ச்சிக்குப் பெயர் தான் வஹி என்பது!

இந்த அனுபவம் இறைத்தூதர்களுக்கு மட்டுமே உரித்தானது. வேறு எவரும் இந்த அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள இயலாது. எனவே இந்த வஹி எனும் அனுபவம் எப்படி இருந்திருக்கும் என்பதை வேறு எவராலும் ஊகித்து அறிந்து கொண்டிட இயலாது!

எனவே வஹி மூலம் பெறப்பட்ட செய்தி - அந்த செய்தியைச் சொல்லிட இறைவனே தேர்ந்தெடுத்த சொற்கள் மூலமாக அப்படியே இறைத்தூதருக்கு வேத வசனங்களாகக் கொண்டு போய் சேர்க்கப்படுவதால் - பெறப்பட்ட அந்த செய்தியை 'இது ஊகம் தான்! இது கற்பனை தான்!' - என்று எண்ணி ஒதுக்கி விட முடியாது.

ஆனால் ஒரே ஒரு கேள்வி மட்டும் கேட்கலாம். ஒருவர் தனக்கு வஹி வருகிறது என்று பொய் சொல்லி விட்டால்? அப்படிக் கேளூங்கள் என்று தான் சொல்கிறோம். இந்தக் கேள்விக்கு மட்டும் சரியான விடை கிடைத்து விட்டால், ஒருவர் உண்மை தான் சொல்கிறார் என்று நிரூபிக்கப் பட்டு விட்டால் மறைவான அறிவு ((knowledge about the unseen), வாழ்க்கை பற்றிய அறிவு, நாம் தேடிக்கொண்டிருந்த அறிவு - அதாவது இறை அறிவு நமக்கு வந்து சேர்ந்து விடாதா?

தன்னை இறைவனின் தூதர் என்று சொல்லிக் கொள்கின்ற ஒருவரை அவர் உண்மை தான் சொல்கிறார் என்று அறிந்து கொள்வது எப்படி என்ற ஆய்வுக்கு நாம் பின்னர் வருவோம்.

நாம் இப்போது எழுப்பும் கேள்வி என்னவென்றால் - ஒருவர் உண்மையான இறைத்தூதர் தான் என நிருவப்பட்டு விட்டால் - இறைவனிடமிருந்து அவருக்கும் அவர் மூலமாக நம்மிடமும் வந்து சேர்க்கப்படும் 'இறைவனின் செய்தி'யின் யதார்த்த நிலை என்ன?

இறைவனோ எல்லாம் அறிந்தவன். இறைவனின் தூதரோ உண்மையானவர். எனவே வஹி மூலமாக நம்மிடம் வந்து சேர்கின்ற செய்தி - சத்தியமானது! சந்தேகத்துக்கு இடம் இல்லாதது!

அந்தச் செய்தி குறித்து - அது உண்மையாகவும் இருக்கலாம் அல்லாமலும் இருக்கலாம் என்று பொத்தம் பொதுவாகக் கருத்துச் சொல்லிட இயலாது!

- வஹி மூலம் பெறப்படும் ஒவ்வொரு சொல்லும் இறைவனுடையவை!

- ஒவ்வொரு கருத்தும் இறைவனிடமிருந்து பெறப்பட்டவை!

- ஆதாரப் பூர்வமானவை!

- எனவே அறிவு என்றால் அது தான் அறிவு! சந்தேகத்துக்கு இடம் இல்லாத அறிவு! கோணல் இல்லாத அறிவு!

- அது பொய் என்று ஒதுக்கித் தள்ளி விட இயலாத அறிவு!

- வஹியின் கருத்துக்கு மாற்றமான எதனையும் உண்மை என்று நிரூபித்திட இயலாத அளவுக்கு உறுதி வாய்ந்த அறிவு!

வரிக்கு வரி அறிவு என்றும் உறுதி வாய்ந்த அறிவு என்றும் நீங்கள் தானே சொல்லிக் கொள்கிறீர்கள். அதனை எப்படி ஏற்றுக் கொள்வது என்று நீங்கள் கேட்கலாம்.

ஒருவர் வருகிறார். அவர் தன்னை ஒரு இறைத்தூதர் என்று சொல்லிக் கொள்கிறார். அதாவது இறைவனிடமிருந்து தமக்கு வஹி மூலமாக செய்திகள் வருகின்றன என்று சொல்கிறார் என்று வைத்துக் கொள்வோம்.

அப்போது நாம் செய்திட வேண்டியதெல்லாம் -

1. அவர் உண்மை தான் சொல்கிறாரா அல்லது பொய் சொல்கிறாரா என்று பார்ப்பதும்

2. அவர் அப்படி என்ன செய்தியைத் தான் சொல்கிறார் என்பதை ஆய்வு செய்வதும் தான்.

எனவே நீங்கள் இறைவனை நம்புபவராக இருந்தால், இறைவனே எல்லாம் அறிந்தவன் என்பதை நீங்கள் ஏறுக் கொண்டால், மனிதனுக்கு இறைவன் புறத்திலிருந்து வழிகாட்டுதல் தேவை தான் என்பதை நீங்கள் உணர்ந்தால் - ஒரு இறைத்தூதரின் குரலுக்கு செவி சாய்த்திட வேண்டாமா?

17. முஹம்மது நபி (ஸல்) ஓர் இறைத்தூதர்!

மனித வரலாற்றின் எல்லாக் கட்டங்களிலும், எல்லா சமூகங்களுக்கும், அவரவர் சமூகத்திலிருந்தே சிலரைத் தேர்ந்தெடுத்து இறைத்தூதர்களாக அனுப்பியிருக்கின்றான் இறைவன்.

முன்பெல்லாம் ஒரு குறிப்பிட்ட மொழி பேசும் ஒருவரையே தேர்ந்தெடுத்து, அதே மொழியிலேயே 'வஹி' கொடுத்து அனுப்பி வைத்தான் இறைவன். இறைவன் இறைத்தூதர்களுக்கு வஹி மூலமாகக் கொடுக்கின்ற செய்திகளின் தொகுப்புத் தான் இறைவேதங்கள் என்று அழைக்கப் படுகின்றன.

அப்படியானால் நமக்கு - அதாவது இன்று 21-ம் நூற்றாண்டில் - பல நாடுகளில் - பல மொழிகளைப் பேசி - வாழ்கின்ற இன்றைய நமது சமூகத்துக்கு அனுப்பப்பட்ட இறைத்தூதர் யார் என்ற கேள்வி எழுகின்றது!

சுமார் 1400 ஆண்டுகளுக்கு முன்னால், அரேபியா நாட்டில், மக்கா என்ற நகரில், 'குறைஷ்' என்றழைக்கப்படும் ஓர் உயர் குலத்தில், அப்துல்லாஹ்-ஆமினா என்ற பெற்றோருக்குப் பிறந்த முஹம்மத் - தனது 40 -வது வயதில் -

தம்மை - இறைவன் தனது தூதராகத் தெரிவு செய்திருக்கின்றான் என்று பிரகடனம் செய்கின்றார்!
அரபி மொழியில் இறைவன் 'ஜிப்ரயீல்' எனும் வானவர் மூலம் தமக்கு வஹி அனுப்புவதாகச் சொல்கிறார்! அதனைக் குர் ஆன் என்று அவர் அழைக்கின்றார்.

அப்படியானால் - அரபி மொழி பேசும் மக்களுக்கு மட்டுமா அவர் இறைத்தூதர்? இல்லை! அவர் - தம்மை இறைவனால் தேர்ந்தெடுத்து அனுப்பப்படும் இறைத்தூதர்களில் தாமே இறுதியானவர்! தமக்குப் பிறகு யாரும் இறைத்தூதராக அனுப்பப்படப் போவதில்லை என்றும் கூறுகிறார்!

எனவே - தமது வருகைக்குப் பின் - அவரது காலம் முதல் உலக இறுதி நாள் வரை, இப்பூவுலகில் பிறந்து வாழ்ந்த, வாழ்கின்ற, வாழ இருக்கின்ற அனைத்து மக்களுக்கும் தம்மையே இறுதி இறைத்தூதராக இறைவன் அனுப்பியுள்ளான் என்கிறார்!

எவ்வளவு பெரிய பிரகடனங்கள்? அவ்வளவு சுலபமாக எப்படி இவைகளை ஏற்றுக் கொள்ள முடியும்? ஆம்! ஆய்வு செய்த பின்னர் தான் ஒன்றை ஏற்கவோ அல்லது மறுக்கவோ வேண்டும்.

இதோ தம்மிடம் ஒப்படைக்கப்பட்ட இறைவனின் தூதர் என்ற பொறுப்பு குறித்து அவர் வஹி மூலம் பெற்ற இறைவனின் வாக்குகள் சிலவற்றை இங்கே காண்போம்:

'முஹம்மது - ஒரு தூதரே அன்றி வேறல்லர்! நிச்சயமாக அவருக்கு முன்பும் தூதர்கள் பலர் சென்றுள்ளனர்!' (திருக் குர்ஆன் 3:144)

'அல்லாஹ்வின் ஆணைப்படியே ஜிப்ரயீல் இதனை உம்முடைய உள்ளத்தில் இறக்கி வைத்தார்.' (2: 97)

'நபியே! நீர் கூறுவீராக: இறைவன் அனுப்பிய தூதர்களில் நான் புதிதாக வந்தவனன்று!' (46:9)

'மனிதர்களுக்கு அச்சமூட்டி எச்சரிக்கை செய்யும்படி அவர்களில் இருந்தே ஒரு மனிதருக்கு வஹி அருள்கிறோம் என்பது இம் மனிதர்களுக்கு வியப்பாய் இருக்கிறதா? (10:2)

'நபியே! நாம் உம்மை உலகத்தார் அனைவருக்கும் ஓர் அருட்கொடையாகவே அன்றி அனுப்பவில்லை!' (21: 107)

'நபியே! நாம் உம்மை மனித குலம் முழுவதற்கும் நற்செய்தி அறிவிப்பவராகவும், எச்சரிக்கை செய்பவராகவும் தான் அனுப்பி வைத்திருக்கிறோம். ஆயினும் மக்களில் பெரும்பாலோர் அறிவதில்லை! (34:28)

'அவர் அல்லாஹ்வின் தூதராகவும், இறைவனின் தூதர்களுக்கெல்லாம் இறுதியானவராகவும் இருக்கிறார்!' (33:40)

மேலே நாம் குறிப்பிட்ட இறைவசனங்கள் அனைத்தும் முஹம்மது நபி தாமாகவே 'கற்பனை' செய்து கொண்டு அறிவித்தவை அல்ல! மாறாக் - இறைவனே வஹி மூலமாக முஹம்மது நபி மூலம் அறிவிக்கச் சொன்னவை! இதனையும் குர் ஆன் பறை சாற்றுகிறது.

'அவர் தம் இச்சைப்படி எதனையும் பேசுவத்ல்லை! அது அவருக்கு வஹி மூலம் அறிவிக்கப் பட்டதே அன்றி வேறில்லை! (33:34)

முஹம்மது நபி ஒருவர் தான் இறைத்தூதர் என்பது அல்ல! உண்மையிலேயே ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் இறைத்தூதர்களாக மனித வரலாறு நெடுகிலும் அனுப்பப் பட்டே வந்துள்ளனர். அப்படியிருக்கும்போது முஹ்ம்மது என்ற ஒரே ஒரு இறைத்தூதரை முற்படுத்த வேண்டிய அவசியம் என்ன என்று கேட்கப் படலாம்.

மற்ற எல்லா இறைத்தூதர்களுமே ஒரு குறிப்பிட்ட காலகட்டத்திற்கு அல்லது ஒரு குறிப்பிட்ட சமூக மக்களுக்கு என்று மட்டும் தான் அனுப்பப் பட்டிருக்கின்றார்கள்.ஆனால் முஹம்மது நபியவர்கள் இறுதியான இறைத்தூதராக இருப்பதாலும், அவரது இறைத்தூது உலக மக்கள் அனைவரையும் தழுவி நிற்பதாலும் தான், அவர் என்ன சொல்கிறார் என்று பார்க்க வேண்டியது அவசியம் ஆகி விடுகின்றது.

சகோதரர்களே! முஹம்மது நபியின் வாழ்க்கை வரலாற்றைப் படிப்பவர்களில் சிலர் - அவரை ஒரு சிறந்த சீர்திருத்தவாதியாகப் பார்க்கிறார்களே த்விர அவரை ஒரு இறைவனின் தூதராகப் பார்ப்பதிலை!

'இஸ்லாம் என்பது முஹம்மது நபி என்பவரால் தோற்றுவிக்கப் பட்ட ஒரு மதம். அவர் அரேபிய நாட்டில், உயர் குலம் ஒன்றில் பிறந்தார். கதிஜா என்ற பணக்கார விதவையை மணந்தார். அங்கே மக்கள் சிலைகளை வணங்கிக் கொண்டும், மூட நம்பிக்கைகளில் மூழ்கியும் வாழ்ந்திடக் கண்டார். அவர் ஹிரா என்ற மலைக்குகை ஒன்றில் தங்கி இருந்து கொண்டு ஆழமாகச் சிந்தித்தார். தமது நாற்பதாவது வயதில் தமக்கு இறைவன் செய்திகளை அனுப்புவதாக எண்ணிக் கொண்டார். அவருடைய உபதேசங்கள் அடங்கிய நூலே குரான் என்றழைக்கப்படுகின்றது!'

முஹம்மது நபியின் வரலாற்றை இவ்வாறு புரிந்து வைத்திருப்பவர்கள், இறைவன் மனிதர்களுக்கு வழி காட்டிட தனது தூதர்களை அனுப்பி வைக்கிறான் என்ற தனித்தன்மை வாய்ந்த ஒரு கோட்பாட்டினை உணர்ந்து கொள்ள இயலாமல்போய் விடுகின்றனர்.

எனவே இப்போது நாம் மூன்று விஷயங்களை ஆய்வு செய்திட வேண்டியுள்ளது:

1. முஹம்மது நபி - தன்னை இறைவனின் தூதர் என்றும் அதுவும் இறுதியான இறைத்தூதர் என்றும் அழைத்துக் கொண்டாரே! அது உண்மை தானா?

2. அவர் அப்படித் தமக்கு வந்ததாகச் சொல்கின்ற 'செய்திகள்' தான் என்ன?

3. உலகில் தோன்றிய எண்ணற்ற தத்துவஞானிகள், சீர்திருத்தவாதிகளில் ஒருவர் தான் முஹம்மது நபியா?அல்லது அவர் சொன்ன கருத்துக்கள் அனைத்தும் இறைவனிடமிருந்து பெறப்பட்டவை தானா?

ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.

18. முரண்பாடு முஹம்மது நபியிடத்தில் இல்லை!

முஹம்மதுநபி அவர்கள் தமது வாழ்நாள் முழுவதும் உண்மைக்கும், நேர்மைக்கும் வாய்மைக்கும் இலக்கணமாகவே திகழ்ந்தார்கள் என்பதைப் பற்றி - தனியொரு நூலே எழுதிடும் அளவுக்கு ஆயிரக் கணக்கான சான்றுகளை அவரது வாழ்வு முழுவதும் நாம் காணலாம். எனினும் விருப்பு வெறுப்பின்றி சிந்திப்பவர்களின் சிந்தனைக்காக ஒன்றிரண்டு சான்றுகளை மட்டும் இங்கே தருகிறோம்:

மக்கா நகரத்தில் ஒரு சிறு மலைக்குன்று. அதன் பெயர் சஃபா. அந்த மலைக்குன்றின் மீது ஏறி நின்று கொண்டு முஹம்மது நபியவர்கள் - தான் ஒரு இறைத்தூதராக தெரிவு செய்யப்பட்ட் செய்தியை மக்களுக்கு பகிரங்கமாக அறிவிக்கிறார்:

யா சபாஹா! - என்று கூவி மக்களை அழைக்கிறார் முஹம்மத்.

'யா சபாஹா' என்ற இந்த சொற்றொடர் சாதாரண காலங்களில் மக்களை அழைத்திடப் பயன்படுத்தப் படுவதில்லை. மாறாக ஏதாவது ஒரு ஆபத்து ஏற்பட்டிருக்கும் நிலையில் அல்லது ஒருவருக்கு அவசர உதவி தேவைப் படுகின்ற நிலையில் மட்டுமே பயன்படுத்தப் படும் சொல் அது.

மக்கள் கூடி விடுகிறார்கள். அது வரை அந்த மக்களுக்கு மத்தியில் 'அமைதியான' ஒரு நபராக வாழ்ந்து வந்திருந்த முஹம்மத், ஏன் இப்படி இங்கே நின்று கொண்டு அவசரமாக நம்மை அழைக்கிறார் என்ற கேள்விக் குறி கூடியிருந்தவர்களின் நெஞ்சங்களில்!

மக்கள் கூடியதும் எல்லா மக்களையும் விளித்து அவர் குரல் எழுப்புகிறார்:

'இந்த மலைக்குன்றுக்குப் பின்னால் இருந்து கொண்டு சில குதிரை வீரர்கள் படை திரட்டி உங்களைத் தாக்குவதற்குத் திட்டமிட்டிருக்கிறார்கள் என்று நான் சொன்னால் - நீங்கள் என்னை நம்புவீர்களா?

கூடியிருந்தவர்கள் சொன்னார்கள்:'ஆம்! அப்படியே நம்புவோம். ஏனெனில் பொய்யை நாம் ஒரு போதும் உம்மிடம் கண்டதில்லையே!'

தான் உண்மை பேசுபவர் தான் என்பதை மக்கள் உறுதிப் படுத்திய பிறகே முஹம்மது நபி அறிவிக்கிறார்:

'ஒரு கடினமான வேதனை, இறைவன் புறத்திலிருந்து உங்களை வந்தடைவது குறித்து அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவனாக நான் அனுப்பப் பட்டுள்ளேன்.'

தான் ஒரு இறைத்தூதர் என்று முஹம்மது நபி அறிவித்ததும், கூடியிருந்த மக்களில் எவரும் அதனைப் பொருட்படுத்தவில்லை! கூடியிருந்தவர்களில் அபூலஹப் என்றொருவன் முஹம்மது நபியை சபிக்கவும் செய்தான்! இங்கு தான் நாம் சிந்திக்கக் கடமைப் பட்டிருக்கின்றோம்.

ஏன் இந்த முரண்பாடு? முரண்பாடு யாரிடத்தில்?

முஹம்மது நபியிடத்திலா? அல்லது அங்கு கூடியிருந்த மக்களிடத்திலா?

நாற்பது வயது வரை அதே மக்களிடத்தில் அல் அமீன் (நம்பிக்கைகுரியவர்) என்றும் அஸ்-ஸாதிக் (உண்மையாளர்) என்றும் பெயரெடுத்தவர், 'பொய்யை நாம் ஒரு போதும் உம்மிடத்தில் கண்டதில்லையே!' என்று அவர்கள் சாட்சி சொல்லும் அளவுக்கு வாய்மையானவர் - திடீரென்று ஒரு நாள் பொய் சொல்லத் தொடங்கி விட்டாரா?

உண்மையிலேயே முரண்பாடு முஹம்மது நபியிடத்தில் இல்லை! அவர் முன்பும் உண்மை தான் பேசினார்! இப்போதும் அவர் வெளிப் படுத்தியது உண்மையே!

முஹம்மது நபியை ஏற்க மறுத்தவர்களிடத்தில் முரண்பாடு இருக்கிறதா என்பதையும் நாம் பார்த்திட வேண்டுமல்லவா?

ஒரு தடவை அபூ ஜஹல் என்பவன் முஹம்மது நபியிடம் சொன்னான்: நீர் பொய் சொல்பவர் என்று நாங்கள் சொல்லவில்லை! நீர் கொண்டு வந்த செய்தியைத் தான் (வஹி) நாங்கள் பொய் என்கிறோம்!'

ஆனால் இதே அபூ ஜஹல், இன்னொரு சமயம் இன்னொரு இடத்தில் என்ன சொன்னான் தெரியுமா?

'பத்ர்' எனுமிடத்தில் போர் நடைபெறும் சமயம் ஒன்றில் அஃக்னாஸ் என்றொருவன் இதே அபூ ஜஹலிடத்தில் வருகின்றான். அப்போது இருவரும் தனிமையில்:

அஃக்னாஸ்: நாம் பேசுவதைக் காதில் வாங்கிட இங்கே யாருமே இல்லை! இப்போது சொல். இந்த முஹம்மத் உண்மை தான் சொல்கிறாரா? அல்லது பொய் சொல்கிறாரா?

அபூ ஜஹல்: இறைவ்ன் மீது ஆணையாக! முஹம்மத் உண்மை தான் சொல்கிறார். அவர் வாழ்நாளில் ஒரு தடவை கூட பொய் சொன்னதே இல்லை! ஆனால் இந்த மக்காவிலே - போர்க்களத்தில் கொடியைத் தாங்கிடும் பொறுப்பு, புனிதப் பயணிகளுக்குத் தண்ணீர் புகட்டும் பொறுப்பு, இறை ஆலயத்தின் அறங்காவலர் பொறுப்பு, இத்தோடு இறைத்தூதர் என்ற பொறுப்பு - இவையெல்லாமே 'குஸையி' - உடைய மக்களுக்குத் தான் சொந்தம் என்றால் குறைஷ் குலத்தைச் சேர்ந்த மற்றவர்களுக்கு ஒன்றுமே கிடையாதா??

(குறைஷிக் குலத்தில் பல பிரிவுகள் உண்டு. முஹம்மது நபி அவர்கள் ஒரு பிரிவைச் சேர்ந்தவர்கள். அபூ ஜஹல் இன்னொரு பிரிவைச் சேர்ந்தவன்)

அபூ ஜஹல் - சாதாரணமான ஆள் ஒன்றும் கிடையாது. அவனை மக்கள் 'அறிவின் தந்தை' என்றே அழைத்தார்கள். முஹம்மது கொண்டு வந்த செய்தி உண்மையானது தான் என்பதை அவன் உணர்ந்தே இருந்தான்.

ஆனால் அவன் முஹம்மது நபியிடம் பேசும்போது 'நீர் கொண்டு வந்த செய்தியைத் தான் பொய் என்கிறோம்' என்று சொன்னவன், தனிமையில் பேசும்போது மாற்றிப் பேசுவதற்கு என்ன காரணம்? புரிகின்றதா?

'இறைத்தூதர்' என்ற பொறுப்பு தன் குலத்தைச் சேர்ந்தவர்களுக்கு வழங்கப் படாமல், அது வேறு ஒரு குலத்துக்குப் போய் விட்டதே என்ற பொறாமை குணம் தான் அவனது மறுப்புக்குக் காரணம்!

முஹம்மது நபியை எதிர்த்த இன்னொருவன் கேட்டான்:

'முஹம்மதே! உம்மை விட்டால் இறைவனின் தூதராக அனுப்புவதற்கு வேறு ஆளே கிடைக்கவில்லையா?'

அதற்கு இறைவன் தக்க ஒரு பதிலையும் 'வஹி' மூலமாகவே தந்து விட்டான்:

'இறைத்தூதர் என்ற பொறுப்பை எங்கு எவருக்கு அளிக்க வேண்டும் என்பதை அல்லாஹ் தான் நன்கறிவான்!' (6:124)

ஆக முஹம்மது நபியின் பரம வைரிகளான எதிரிகளே முஹம்மது உண்மை பேசுபவர் என்பதை ஒத்துக் கொண்ட பிறகு உங்களுக்கு இன்னும் ஏதாவது சந்தேகம் இருக்கிறதா?

19. நமக்கும் மேலே ஒருவனடா! - ஆனால்...

அடுத்து நாம் ஆய்வு செய்திட வேண்டியது -

முஹம்மது நபியவர்கள் அப்படித் தமக்கு வந்ததாகச் சொல்கின்ற 'செய்திகள்' தான் என்ன?

உலகில் தோன்றிய எண்ணற்ற தத்துவஞானிகள், சீர்திருத்தவாதிகளில் ஒருவர் தான் முஹம்மது நபியா?அல்லது அவர் சொன்ன கருத்துக்கள் அனைத்தும் இறைவனிடமிருந்து பெறப்பட்டவை தானா?

இந்த இரண்டு கேள்விகளையும் இப்போது ஆய்வுக்கு எடுத்துக் கொள்வோம்.

சகோதரர்களே!

முஹம்மது நபியவர்கள் கொண்டு வந்தது - ஏதோ ஒரு தத்துவஞானியின் புத்திமதிகளைக் கொண்ட ஒரு உபதேசத் தொகுப்பு அன்று! அவர் கொண்டு வந்தது ஒரு முழுமையான வாழ்க்கை நெறி.

இறைவனிடமிருந்து வானவர் ஒருவர் மூலமாக சொல்லுக்கு சொல், வரிக்கு வரி - அப்படியே முஹம்மது நபியவர்கள் பெற்றுக் கொண்ட செய்திகள் அடங்கிய நூலே திருக்குர்ஆன் ஆகும். அவர் ஒரு இறைத்தூதராக இவ்வுலகில் பணியாற்றிய 23 ஆண்டு கால வாழ்க்கையில் அந்தத் திருக்குர்ஆனுக்கு செயல் வடிவம் தந்த செய்திகளின் தொகுப்பே நபிமொழிகள் (ஹதீஸ்) என்றழைக்கப் படுகின்றன.

இந்த செயல் வடிவத்தையே - அதாவது 'நபி வழியையே' சுன்னத் அல்லது சுன்னா என்று அழைக்கின்றோம். இவ்விரண்டும் தான் அவர் இறைவனிடமிருந்து பெற்றவை. இவ்விரண்டும் தான் இஸ்லாமிய மார்க்கத்தின் அடிப்படை ஆதார நூல்களாகும். எனவே அவர்தம் செய்திகளை ஆய்வு செய்வது என்பது, இஸ்லாத்தையே ஆய்வு செய்வது போன்றது தான்.

எனவே நாம் நமது வாசகர்களைக் கேட்டுக் கொள்வதெல்லாம் - தங்களால் இயன்றவரை இஸ்லாத்தின் செய்திகளை விருப்பு வெறுப்பு இன்றி ஆய்வு செய்திடும் படி அன்புடன் அழைக்கிறோம்.

எனினும், இங்கே ஒரு சில விஷயங்களை மட்டும் சிந்திப்பதற்காக முன் வைக்கிறோம். இங்கே எடுத்து வைக்கப்படும் திருக்குர் ஆன் வசனங்கள் கூறும் கருத்துக்களை ஆய்வு செய்திடும்போது பின் வரும் கேள்விகளையும் சேர்த்துக் கொள்ளுங்கள்.

1. இந்தக் கருத்து நம் அறிவுக்குப் பொருந்துகிறதா?

2. இந்தக் கருத்து உண்மையாக இருக்க வாய்ப்பிருக்கிறதா?

3. இந்தக் கருத்தை முஹம்மது நபியவர்கள் தாமாக சொல்லியிருக்க இயலுமா?

4. இந்தக் கருத்து - இக்காலத்துக்குத் தேவைதானா?

இப்போது சில இறைவசனங்களும் நபிமொழிகளும்:

ஒன்று:

'(நபியே!) நீர் கூறுவீராக: அல்லாஹ் - அவன் ஒருவனே.

அல்லாஹ் (எவரிடத்தும்) தேவையற்றவன்.

அவன் (எவரையும்)பெறவுமில்லை; (எவராலும்)பெறப்படவுமுல்லை'.

அன்றியும், அவனுக்கு நிகராக எவரும் இல்லை. அல்குர்ஆன்: அத்தியாயம் 112: 1-4)

பொதுவாக மனித வாழ்வை சீர்திருத்திட அனுப்பப்பட்ட இறைத்தூதர்கள் அனைவரும் எடுத்து வைத்த முதல் முழக்கமே - இறைவனைப் பற்றியது தான். இறைவன் ஒருவனே என்பது மிக மிக எளிமையானதொரு உண்மை.

ஒன்றே குலம், ஒருவனே தேவன் - என்பது ஒரு உலகம் தழுவிய கருத்துத் தான். ஆனால் - இன்று உலகிலேயே மிக மிக அதிகமாகக் குழப்பத்திற்கு உள்ளாக்கப் பட்ட ஒரு கொள்கை - இறைவனைப் பற்றிய கொள்கை தான்! ஏன் இந்த எளிமையான இறைக் கோட்பாட்டை விட்டு மக்கள் விலகிச் செல்கிறார்கள் என்பது தான் புரியாததொரு புதிர்.

இந்த இருபத்தொன்றாம் நூற்றாண்டில் கூட் மனிதனுக்கு ஏன் இதில் தெளிவு ஏற்படவில்லை என்பது வியப்புக்குரிய ஒரு விஷயமே! நமக்கும் மேலே ஒருவனடா என்றும் சொல்கிறோம். பிறகு எப்படி அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம் ஆனார்கள்? கணவனே எப்படி கண் கண்ட தெய்வமானான்? செய்யும் தொழிலே எப்படி தெய்வமாகும்? காசே தான் கடவுளாவது எப்படி?

இரண்டு:

'மனிதர்களே! நிச்சயமாக நாம் உங்களை ஓர் ஆண், ஒரு பெண்ணிலிருந்தே படைத்தோம்'. (அல் குர்ஆன்: அத்தியாயம் 49: 13)

மனிதனின் பூர்விகம் குறித்து அறிவியல் உலகம் சொல்வதென்ன? குரங்கிலிருந்து பரிணாம வளர்ச்சி பெற்றே மனிதன் தோன்றினான் என்பதே அது. இது ஒரு நிரூபிக்கப் படாததொரு அறிவியல் கோட்பாடு ஆகும்.

மனிதனுக்குப் பிறப்பிலேயே ஏற்றத் தாழ்வு கற்பிக்கும் கோட்பாடுகளையும் நாம் அறிவோம். கருப்பர்களை விட வெள்ளை நிறத்தவரே உயர்ந்தவர் என்றும் துணிந்து ஒரு பொய் சொல்லப் படுவதையும் கேள்விப் படுகிறோம்.

இவற்றில் எது உண்மையாக இருக்க முடியும்? திருக்குர் ஆன் கூறும் இந்தக் கருத்தினை நாம் அனைவரும் ஏற்றுக் கொண்டால் இன்றைய உலகின் எந்தெந்த பிரச்னைகளெல்லாம் தீர்க்கப் படும்?

மூன்று:

'அல்லாஹ் வட்டியை அழித்து விடுவான்; இன்னும் தான தர்மங்களை பெருகச் செய்வான்'. (அல் குர்ஆன்: அத்தியாயம் 2: 276)

'வட்டியும் வியாபாரம் போன்றது தானே அய்யா? இதிலென்ன தப்பு இருக்கின்றது?' - இது ஒரு குரல்.

இந்த இரண்டு கருத்துக்களில் எது உண்மையாக இருக்க முடியும்? வட்டியின் அடிப்படையில் அமைந்த முதலாளித்துவக் கோட்பாடு இன்று என்ன நிலையை அடைந்துள்ளது என்பதை நாம் இங்கு விளக்கிச் சொல்லத் தேவையில்லை!

வட்டியில்லாத பொருளாதாரத்தின் சாத்தியக் கூறுகள் குறித்து உலகம் இன்று சிந்திக்கத் தொடங்கி விட்டது. நீங்களும் சிந்தியுங்கள்.

நான்கு:

'உயிருடன் புதைக்கப் பட்ட பெண் (குழந்தை) வினவப் படும்போது - எந்தக் குற்றத்துக்காக அது கொல்லப் பட்டது என்று (விசாரிக்கப் படும்).' ( அல் குர்ஆன்: அத்தியாயம் 81: 8-9)

சகோதரர்களே! சகோதரிகளே! இன்றும் உயிருடனேயே கொல்லப் படுகின்ற கோடிக் கணக்கான பெண் சிசுக்களுக்காக வாதாடுவோர் யார் இங்கே? இது என்ன நியாயம்? திருக் குர் ஆனின் இந்தக் கருத்து இன்றைய உலகத்துக்குத் தேவை தான் என்று உங்கள் உள்ளம் சொல்லவில்லையா?

ஏன் அமைதியாகி விட்டீர்கள்? சிந்திக்கிறீர்களா? சிந்தியுங்கள்!

Comments