நூல்: வாழ்க்கை என்பது இவ்வளவு தானா? - பகுதி 3.

20. நல்லவனின் முடிவும் தீயவனின் முடிவும் ஒன்று தானா?

மரணத்துக்குப் பின்பு வரும் வாழ்க்கையைப் பொறுத்தவரை, உலகில் மூன்று கோட்பாடுகள் நிலவுகின்றன.

1. மரணத்துக்குப் பின்பு வாழ்க்கை என்று ஒன்று கிடையாது. மரணத்தோடு எல்லாம் முடிந்து விடுகிறது என்பது ஒரு கோட்பாடு.

2. மனிதன் செய்கின்ற நன்மைகள், பாவங்களைப் பொறுத்து - மீண்டும் மீண்டும் அவன் பிறவி எடுக்கின்றான் என்பது மற்றொரு கோட்பாடு.


3. 'உலக முடிவு நாள்' அன்று - மரணித்து விட்ட எல்லார்க்கும் உயிர் கொடுத்து எழுப்பப் பட்டு, விசாரிக்கப் பட்டு - சுவர்க்கத்தையோ, நரகத்தையோ அடைந்து அங்கே நிரந்தரமாக மனிதன் தங்கி விடுகிறான் என்பது இன்னும் ஒரு கோட்பாடு.

இறைவனை மறுக்கும் பிரிவினர் - மரணத்துக்குப் பின் வரும் வாழ்க்கையையும் மறுக்கின்றார்கள். அப்படி ஒரு வாழ்க்கை கிடையாது, இருக்கவும் முடியாது என்பது அவர்கள் வாதம். மரணத்துக்குப் பின் வாழ்வு உண்டு என்பதற்கு என்ன ஆதாரம் இருக்கிறது என்றும். யாராவது போய் பார்த்து விட்டு வந்தார்களா என்றும் கேள்விகள் எழுப்புகிறார்கள் அவர்கள்.

'மரணத்தோடு மனித வாழ்வு முடிந்து விடுகிறது என்பதற்கு .என்ன ஆதாரம் என்றும், யார் போய் பார்த்து விட்டு வந்து இவர்களுக்குச் சொன்னார்கள்' என்றும் - நாமும் திருப்பிக் கேட்கலாம்.

மேலும் இவர்களோடு விவாதத்தைத் தொடரும் முன்பு ஒரு விஷயம்.
'மரணத்துக்குப் பின்பு வாழ்க்கை இல்லை, மரணத்தோடு எல்லாமே க்லோஸ் (CLOSE) - என்ற நம்பிக்கை என்ன விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது என்பதை இங்கே பார்ப்போம்.

இந்தக் கொள்கை ஏற்படுத்திய மிக முக்கியமான விளைவு - விரக்திக்கு இட்டுச் செல்லும் உலக வாழ்க்கையை நவீன மனிதர்களுக்கு வழங்கியது தான்!

நிரந்தரமான ஒரு வாழ்வைத் தான் - மனிதன் விரும்புகிறான். 'மரணத்தோடு நாம் அழிந்து விடுகிறோம்' என்ற ஒலி நாராச ஒலியாகவே மனிதனுக்குப் படுகிறது.

மனோ தத்துவ மருத்துவர் ஒருவர் கூறுகிறார்:

'என்னிடம் வரும் நோயாளிகளில் மூன்றில் இரண்டு பங்கு பேர் படித்தவர்கள், பட்டதாரிகள், வாழ்வில் பல வெற்றிகளை அள்ளிக் குவித்தவர்கள். அவர்கள் ஏன் மனோ வியாதிக்கு ஆளானார்கள்? திடீரென்று வருகின்ற மரணத்தோடு எல்லாமே முடிந்து போய் விடுகின்ற இந்த வாழ்க்கையில் எதைச் சாதித்து என்ன பயன் என்ற விரக்தி மனப்பான்மை அவர்களை திருப்தியற்ற வாழ்க்கைக்கு இட்டுச் சென்றுள்ளது.'

இவ்வுலக வாழ்க்கை என்பது என்ன?

- தொடர்ந்து வருகின்ற துயரங்கள், சோகங்கள், கவலைகள்,

- முடிவே இல்லாத அநியாயங்கள், அக்கிரமங்கள், ஏமாற்று வேலைகள், மோசடிகள்,

- நீக்கிட முடியாத பசி, பட்டினி, நோய், வறுமை

- இவைகளைக் கொண்டது தான் மனித வாழ்வா? மனிதனுக்கு நிரந்தர அமைதியையோ, மகிழ்ச்சியையோ, தராத வாழ்க்கை ஒரு வாழ்க்கையா - என்ற சிந்தனை, உயிர்த் துடிப்புள்ள ஒரு மனிதனை செயலற்றவனாக ஆக்கி விடுகிறது. ஒரு கொள்கை வெற்றிடத்தை அவனுக்கு வழங்கி விடுகிறது!

அடுத்து - மனிதன் தனது செயலுக்கேற்ப பிறவி எடுக்கின்றான் என்ற கோட்பாடும் மனிதனுக்குத் தெளிவான சிந்தனையைத் தருவதில்லை! ஏனெனில் நமது பயணம் எங்கே துவங்கியது, எங்கே நாம் நிற்கிறோம், நாம் எங்கே செல்ல இருக்கிறோம் என்பது குறித்த தெளிவை இக்கொள்கை தந்து விட இயலாது.

தமிழில் வெளியாகும் ஒரு வார இதழில் படித்ததாக நினைவு:

ஒரு வகுப்பறையில் ஆசிரியர் பாடம் நடத்திக் கொண்டிருக்கிறார். அப்போது ஒரு மாணவன் ஒரு 'ஈ' யைப் பிடித்துக் கொன்று விட்டான்.

ஆசிரியர் சொன்னார்: 'இப்போது அந்த ஈயை நீ அடித்துக் கொன்று விட்டாய். அடுத்த பிறவியில் அந்த ஈ, மனிதனாக வரும். நீ ஒரு ஈயாகப் பிறவி எடுப்பாய். அப்போது அது உன்னைக் கொன்று விடும்.'

மாணவன் எழுந்து சொன்னான்: 'இல்லை சார்! சென்ற பிறவியில் நான் ஈயாக இருந்தேன். இந்த ஈ மனிதனாக இருந்தது. அப்போது அது என்னைக் கொன்று விட்டது. இப்போது அதனை நான் கொன்று விட்டேன். இத்துடன் பிரச்னை தீர்ந்து விட்டது!'

இப்போது சொல்லுங்கள்: மறு பிறவிக் கொள்கை மனிதனுக்குத் தெளிவைத் தருமா?

நல்லவனாகவோ, தீயவனாகவோ வாழ்ந்து விட்டு ஒவ்வொரு மனிதனும் மரணமடைகின்றான். மரணம் தான் ஒரு மனிதனின் முடிவு என்றால் - நல்லவனின் முடிவும் தீயவனின் முடிவும் ஒன்று தானா?

மக்கள் மீது அக்கிரமம் புரிந்தவனும், அக்கிரமத்துக்கு ஆளானவனும் மரணமடைகின்றார்கள்!

ஒடுக்குபவனும் ஒடுக்கப்பட்டவனும் மரணமடைகின்றார்கள்!

மக்களின் செல்வத்தைச் சுரண்டி ஆடம்பர வாழ்வை அனுபவித்தவனும், சுரண்டப்பட்ட ஏழையும் மரணமடைகின்றார்கள்!

அப்பாவிப் பெண் சிசுக்களும், அவர்களை உயிரோடு புதைத்தவர்களும் மரணமடைகின்றார்கள்!

பாவம் செய்தவனும், பாவங்களை ஏறெடுத்தும் பார்க்காதவனும் மரணத்தைச் சுவைக்கிறார்கள்!

தீயவன் தண்டனை அனுபவிப்பதில்லை!

நல்லவன் துன்பங்கள் நீங்கி வாழ்வதும் இல்லை!

இது உங்களுக்கு நியாயமாகப் படுகின்றதா?

மரணத்தோடு எல்லாம் முடிந்து போய் விடும் என்றால் 'நான் ஏன் நல்லவனாக வாழ்ந்திட வேண்டும் என்ற கேள்விக்கு என்ன பதில் சொல்வீர்கள்?

அரசு தண்டிக்கும் - சட்டம் அதன் கடமையைச் செய்யும் என்பார்கள். சட்டங்கள் எல்லாக் குற்றவாளிகளையும் தண்டித்து விட்டதா? அரசே குற்றம் செய்தால் அவர்களைத் தண்டிப்பது எப்படி? அரசுக்குத் தெரியாமல் நடக்கின்ற குற்றங்களுக்கு எப்படி தண்டனை தர முடியும்?

சரி! இறைவனை நம்பி, நல்லவனாக வாழ்ந்து, ஒழுக்கங்களைப் பேணி, தீமைகளை எதிர்த்துப் போராடி உயிர் விட்டவனுக்கு என்ன பரிசை இந்த உலகம் தந்து விட முடியும்? (பார்க்க: அல் குர் ஆன் 45: 21-22)

நீதி வழங்கப் பட வேண்டும், நியாயம் கிடைக்க வேண்டும் என்பது ஒவ்வொரு மனிதனின் உள்ளுணர்விலும் ஆழமாகப் பதிந்துள்ள வேட்கை! அதனால் தான் அநீதிக்கெதிரான போராட்டங்களை நாம் மனித வாழ்வில் சந்திக்கின்றோம். ஆனால் அந்தப் போராட்டங்கள் எல்லாம் வெற்றியைச் சந்தித்ததா என்றால் அது தான் இல்லை!அது இந்த உலகத்தில் சாத்தியப் பட்டதே இல்லை!

எனவே தான், நீதிபதிக்கெல்லாம் மேலான நீதிபதியாகிய இறைவன் - மனிதர்களுக்கு மீண்டும் உயிர் கொடுத்து எழுப்பி நீதியை நிலை நிறுத்துகிறான்!

'உங்களுக்கு உயிர் கொடுத்து எழுப்புவேன்' என்று இறைவன் சொல்லும்போது மனிதன் கேட்கிறான்:

'இது வியப்புக்குரிய விஷயம் தான்! நாங்கள் மரணமடைந்து மண்ணோடு மண்ணாகி விட்டாலுமா மீண்டும் எழுப்பப் படுவோம்?' இவ்வாறு எழுப்பப் படுவது என்பது அறிவுக்குப் புறம்பான விஷயமாகும்.' (50: 3)

மறுமையை மறுக்கும் மனிதன் எடுத்து வைக்கும் இந்த வாதத்துக்கு இறைவன் எப்படி பதில் தருகிறான் பார்ப்போமா?

மனிதன் கேட்கிறான்: 'நான் இறந்து விட்டால் உண்மையிலேயே மீண்டும் உயிர் கொடுக்கப் பட்டு எழுப்பப் படுவேனா? முன்பு அவன் எந்த ஒரு பொருளாகவும் இல்லாதிருந்த போது, நாம் தான் அவனைப் படைத்தோம் என்பதை மனிதன் நினைத்துப் பார்க்க வேண்டாமா?' (19: 66-67)

எழுதப் பட்ட ஏடு சுருட்டப் படுவதைப் போல நாம் வானத்தைச் சுருட்டும் அந்நாளில், நாம் முதலில் எவ்வாறு படைக்கத் துவங்கினோமோ அவ்வாறேநாம் மீண்டும் படைப்போம். இது நம்முடைய பொறுப்பில் உள்ள ஒரு வாக்குறுதியாகும்! (21: 104)

பூமி வரண்டு கிடப்பதையும் நீர் காண்கின்றீர். அதில் நாம் மழையைப் பொழிந்தவுடன் அது சட்டென்று உயிர் பெறுவதையும் தழைத்தோங்குவதையும் நீர் காண்கின்றீர். இது அல்லாஹ்வின் சான்றுகளீல் ஒன்றாகும். திண்ணமாக இறந்து விட்ட இப்பூமிக்கு எந்த இறைவன் உயிர் ஊட்டுகின்றானோ, அந்த இறைவன் இறந்தவர்களுக்கும் உயிரூட்டக் கூடியவன் ஆவான். (41: 39)

இந்த வானங்களையும், பூமியையும் படைத்தவனும், அவற்றைப் படைப்பதனால் சோர்வு அடையாதவனுமாகிய அல்லாஹ், இறந்தவர்களை உயிர்ப்பித்து எழுப்புவதற்கு ஆற்றல் உடையவனே என்பது இவர்களுக்குப் புலப்படவில்லையா? (46:33)

அவனுடைய எலும்புகளை நம்மால் ஒன்று திரட்ட முடியாது என்று மனிதன் எண்ணிக் கொண்டிருக்கின்றானா? ஏன் முடியாது? நாமோ அவனுடைய விரல்களின் நுனியைக் கூட மிகத் துள்ளியமாக அமைப்பதற்கு ஆற்றல் பெற்றுள்ளோம். (75:3-4)

ஆம்! மறுமை ஒரு சத்தியம் மட்டுமல்ல! சாத்தியமும் கூட!

21. இஸ்லாம் ஒன்றே வழி! 

இறைநம்பிக்கையில் மூட நம்பிக்கைகளைக் கண்ட சிந்தனையாளர்கள், இறைவனை மறுத்து நாத்திகக் கொள்கையைத் தழுவிக் கொண்டனர்.

அவர்கள் என்ன சொல்கிறார்கள்?

‘மனித அறிவு வளர்ச்சியடையாத – முற்காலத்தில் – உலகில் இயற்கையாக நடக்கின்ற ஒவ்வொரு நிகழ்வுக்கும் – மனித சக்திக்கு அப்பாற்பட்ட சக்தி அல்லது சக்திகளைக் காரணம் காட்டி வந்தான் – அன்றைய மனிதன்!


‘ஆனால் மனித அறிவு வளர்ச்சி அடைந்து பல நூற்றாண்டுகளைக் கடந்த பின்பும் இயற்கை நிகழ்வுகள் ஒவ்வொன்றுக்கும் இறைவனே காரணம் என்று கூறுவது – மனித அறிவின் பிற்போக்குத் தனத்தையே காட்டுகிறது.

‘விஞ்ஞானம் – இயற்கைப் பெருவெளியில் நிகழ்ந்து கொண்டிருக்கும் எல்லா அற்புதங்களுக்கும் காரணம் கண்டு பிடித்துச் சொன்ன பின்பும் எல்லாவற்றுக்கும் காரணம் இறைவன்…. இறைவன்…. என்று சொல்கின்ற பிற்போக்குத் தனத்தை என்னென்று சொல்வது?

‘இதனை விடுத்து விஞ்ஞானம்…. விஞ்ஞானம்…. என்ற முற்போக்குக் கொள்கையை (Positivism) மனிதன் ஏற்கும் போதே – நோய் பிடித்த சமுதாயத்தை (Sick society) உயிர்த்துடிப்புள்ள சமுதாயமாக (Dynamic society) மாற்றிட முடியும்!’
இதுவே மேற்கத்திய சமூகவியலாளர்களின் (Sociologists) தீர்க்கமான கருத்து!

உயிர்த் துடிப்புள்ள சமுதாயத்துக்கு அவர்கள் சுட்டிக் காட்டுவது – இன்றைய மேலை நாடுகளை!

அங்கே எல்லாரும் படித்திருக்கிறார்கள்!

அங்கே எல்லாரும் அறிவியல் வழியாகவே (Scientific thinking) சிந்திக்கிறார்கள்.

அங்கே மூட நம்பிக்கைகள் குறைவு!

அவர்கள் தொழில்நுட்பத்தில் வானளாவிய சாதனைகள் புரிகின்றார்கள்!

அவர்கள் தாம் உலகையே வழி நடத்திடும் ஆற்றலைப் பெற்றிருக்கிறார்கள்!

சுருங்கச் சொல்லின் – அவர்கள் தான் பூவுலக சுவர்க்கத்தை மேற்குலகில் நிர்மாணித்திருக்கிறார்கள்!

அவர்கள் காட்டும் ‘பூவுலக சுவர்க்கத்தை’ ‘ஆ’ வென வாய் பிளந்து பார்க்கின்ற நம்மவர்கள், அதே மேற்குலகக் கோட்பாடுகளை இங்கே இறக்குமதி செய்தால் நாமும் ஒரு சுவர்க்கத்தை உருவாக்கிடலாம் என்று மனக் கோட்டை கட்டுகிறார்கள்!

தாழ்வு மனப்பான்மை பிடித்துப் போய் மேலை நாடுகளைக் காப்பியடிக்கத் துடிக்கின்ற நவீன தலைமுறையினர்க்கு, மேற்குலகம் அனுபவிக்கின்ற அவலங்களைப் படம் பிடித்துக் காட்டுதல் அவசியம்.

அமெரிக்க இயற்பியல் விஞ்ஞானி J.R. Oppenheimer - அவர்களின் கூற்றுப் படி – மனிதன் – கடந்த 40 நூற்றாண்டுகளில் தொழில்நுட்பத்தில் அடைந்த வளர்ச்சியை விட இருபதாம் நூற்றாண்டின் 40 ஆண்டுகளில் அடைந்த வளர்ச்சி மிக அதிகம்!

இந்த தொழில் நுட்பம் மனிதனுக்கு செய்து கொடுத்த வசதிகள் எண்ணிலடங்காதவை.

கணினி மற்றும் தகவல் தொடர்புச் சாதனங்கள் உலகையே ஒரு பெரிய கிராமமாகச் சுருக்கி விட்டிருக்கின்றது.

மனித உறுப்புகளை மாற்றுவது , சர்வ சாதாரணமான நிகழ்ச்சியாக மாறிக் கொண்டிருக்கிறது.

தூக்கத்தைக் குறைத்து – மனித ஆயுளை நீடிக்கச் செய்கின்ற ஆராய்ச்சி மும்முரமாக நடந்து கொண்டிருகிறதாம்.

செயற்கை முறையில் DNA - வைத் தயாரித்து ‘நாம் விரும்பும்’ குழந்தையைப் பெற்றுக் கொள்ள முடியுமாம்!

தொழில் நுட்பம் தந்த பொருளாதார வளர்ச்சி மேலும் மனிதனை சுக போக வாழ்க்கைக்கு அழைத்துச் சென்றுள்ளது.

அமெரிக்கர்கள் விடுமுறையைக் கழிக்க என்று – ஒவ்வொரு ஆண்டும் செலவழிக்கும் தொகை பில்லியன் டாலர்கள் கணக்கில்!

மேலை நாடுகளில் – மனிதனின் வாழ்க்கைத் தரம் 1800 – ல் இருந்ததை விட ஐந்து மடங்கு உயர்ந்திருக்கிறதாம்! அப்படியானால் – அவர்களுடைய மகிழ்ச்சி ஐந்து மடங்கு உயர்ந்திருக்கிறது, அவர்களுடைய வாழ்க்கை ஐந்து மடங்கு அர்த்தமுள்ளதாக ஆக்கப் பட்டிருக்கின்றது என்றா பொருள்?

அது தான் இல்லை!

மேற்குலக நாடுகளில் ஆண்டு தோறும் நடக்கும் குற்றங்கள் மில்லியன் கணக்கில் பதிவு செய்யப் படுகின்றன.

இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு, நாகரிகம் அடைந்த நாடுகளில் மதுவின் வளர்ச்சி வேகம் பயமுறுத்தும் அளவுக்கு வளர்ந்துள்ளது. மதுவின் இந்த வளர்ச்சியில் பெண்களுக்கும் பங்குண்டு. மது குடிப்பதனால் இறப்பவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறதாம்.

ஆபாசப் படங்களைத் தயாரித்து வெளியிடுவதில் முன்னணி வகிப்பவை மேற்குலக நாடுகளே! இப்படிப் பட்ட படங்களுக்கென்றே தனிப்பட்ட திரையரங்குகள் உள்ளனவாம். இயந்திர மயமான வாழ்க்கையை விட்டு – சற்றே வெளியேறி – இளைப்பாற நினைப்பவர்களைக் கவர்ந்து இழுக்கிறதாம் – இந்த ஆபாசப் படங்கள்.

சூதாட்டங்களும் – மனித நாகரிகத்தோடு சேர்ந்து வளர்ந்திருக்கின்றன! உலகின் மிகப் பெரும் சூதாட்ட நகரங்கள் (Gambling cities) அனைத்தும் ‘நாகரிக மயமான’ நாடுகளில் தாம் அமைந்திருக்கின்றன.

போதைப் பொருட்களைப் பயன் படுத்துபவர்களின் எண்ணிக்கையும், அதற்கு அடிமையாகி விட்டவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டு தான் இருக்கின்றது.

நாகரிகத்துடன் தற்கொலை செய்து கொள்வதும் வளர்ந்துள்ளது! தொழில் மயமாதல், நகர் மயமாதல், குடும்பங்கள் உடைந்து போதல் – இம்மூன்று காரணிகளும் அதிகரிக்க அதிகரிக்க தற்கொலையும் அதிகரிக்கிறதாம்.

மன நோயால் பீடிப்பவர்களின் எண்ணிக்கையும் அப்படித்தான். உலகத்திலேயே அதிகமான மன நோய் நிபுணர்கள் இருப்பது ஹாலிவுட்டில் தானாம்.

போதுமா சகோதரர்களே!

இறை மறுப்பும், அதன் அடிப்படையில் உருவாக்கப்பட்ட கல்வித் திட்டமும் , அறிவியல் தொழில் நுட்பமும், மனிதனுக்குச் சாதித்துக் கொடுத்தவை இவை தான்!

இதனையே இங்கே இறக்குமதி செய்யத் துடிக்கின்றனர் மேல் நாட்டு மோகம் கொண்ட நம்மவர்கள்.

இன்றைய உலகம் சந்தித்துக் கொண்டிருக்கின்ற எல்லாப் பிரச்னைகளையும் தீர்த்து வைக்கின்ற – மனித வாழ்வில் – அமைதியையும் மகிழ்ச்சியையும் கொண்டு வரும் ஆற்றல் எந்தக் கொள்கைக்கு இருக்கிறது?

அது இஸ்லாத்துக்கு மட்டுமே இருக்கின்றது என்பது தான் மறுக்க இயலாத உண்மை!

மேலை நாட்டவர்கள் இஸ்லாத்தை ‘பயங்கரவாதத்துடன்’ ஒப்பிட்டுப் பேசிடுவதில் அவர்களுக்கு இருக்கின்ற உள் நோக்கத்தை ஏன் நம்மவர்கள் புரிந்து கொள்ளக் கூடாது?

யார் யார் எல்லாம் இஸ்லாத்தை எதிர்க்கிறார்கள் என்று பட்டியலிட்டுப் பாருங்கள்? அவர்கள் எப்படிப் பட்டவர்கள் என்றும் சற்றே எடை போடுங்கள். உண்மை தௌ;ளென விளங்கும்!

சகோதரர்களே!

இஸ்லாமிய இறை நம்பிக்கையில் மூட நம்பிக்கை கிடையாது!

இறைவனின் தூதர்களைக் கடவுளாக்கி வணங்குகின்ற அறியாமை இங்கே இல்லை!

இஸ்லாத்தின் கொள்கைகள் பாதுகாக்கப் பட்டவை! திருக் குர் ஆனும், நபிமொழிகளும் இடைச்செருகல்களுக்கு ஆளாகி விடாமல் பாதுகாக்கப் பட்டு ஒப்படைக்கப் பட்ட விதத்துக்கு ஈடு இணையே கிடையாது!

இஸ்லாம் – மனிதனின் ‘ஆன்மிகக் கொள்கை வெற்றிடத்தை’ முழுமையாக நிரப்பும் சக்தி வாய்ந்தது!

இஸ்லாம் – மன நோய் மற்றும் தற்கொலை எண்ணங்களை அடியோடு நீக்கி விடுகிறது!

இஸ்லாம் ஒன்று மட்டுமே கொல்லப் படுகின்ற பெண் சிசுக்களைக் காப்பாற்ற வல்லது!

இஸ்லாம் மட்டுமே உலகை – விபச்சாரத்திலிருந்தும், எய்ட்ஸ் போன்ற கொடிய நோய்களிலிருந்தும் காத்திடும் ஆற்றல் பெற்றது!

இஸ்லாம் மட்டுமே உலகை – வட்டியில் இருந்து விடுவித்து பொருளாதாரச் சுரண்டலைத் தடுத்து நிறுத்திடும் ஒப்பற்ற திட்டத்தை தன்னகத்தே கொண்டது!

இஸ்லாம் ஒன்று மட்டுமே – அரசியலைத் தூய்மைப் படுத்திடும் ஆன்மிக வலிமை கொண்டது!

இஸ்லாம் ஒன்று மட்டுமே, இன்று உலகைப் பிடித்து உலுக்கிக் கொண்டிருக்கின்ற இனவெறியிலிருந்து மக்களைக் காக்கின்ற ஆற்றல் வாய்ந்தது!

இஸ்லாம் எனும் இந்த முழுமையான வாழ்க்கை நெறி – காலம் கடந்து போன ஒரு வெற்றுச் சித்தாந்தம் அன்று! அது எல்லாக் காலத்துக்கும் பொறுத்தமானது!

இவ்வாறு எல்லாவிதமான் சிறப்பம்சங்களையும் இஸ்லாம் தன்னகத்தே கொண்டிருப்பதற்கு ஒரே காரணம் – இது இறைவனின் மார்க்கம் என்பதால் தான். இது முஹம்மது நபியின் சொந்த சிந்தனையும் கிடையாது. அது போலவே இஸ்லாம் என்பது பரம்பரை பரம்பரையாக வருகின்ற முஸ்லிம்கள் வீட்டுப் பாட்டன் சொத்தும் கிடையாது! அது உலக மக்கள் எல்லார்க்கும் சொந்தமானது!

ஏன் உங்களுக்கும் சொந்தமானதே! எனவே – ஏற்பீர்களா இஸ்லாத்தை?

22. புரிந்து கொள்ளுங்கள் முஸ்லிம்களின் நம்பிக்கைகளை!

நாம் இந்தத் தொடரின் துவக்கத்தில் மனித வாழ்க்கை சம்பந்தப் பட்ட பல கேள்விகளை எழுப்பியிருந்தோம். இப்போது அந்தக் கேள்விகளுக்கு விடை காண்போம் - இறைவனின் வழி காட்டலிலிருந்து!

'மனிதனுக்கு - அவன் அறியாதவற்றையெல்லாம் - இறைவன் கற்றுக் கொடுத்தான்.' (96:5)

இறைவன் அவ்வாறு என்னென்ன விஷயங்களையெல்லாம் கற்றுக் கொடுத்தான்?

- இறைவன் யார் என்பதை, இறைவனின் மகத்துவத்தை,இறைவனின் தன்மைகளை, ஆற்றல்களை

- இயற்கைப் பெருவெளியின் துவக்கத்தை, இவை படைக்கப் பட்டதன் நோக்கத்தை, இந்த இயற்கைப் பெருவெளியின் முடிவை,

- மனிதப் படைப்பின் துவக்கத்தை, மனிதன் படைக்கப் பட்டதன் நோக்கத்தை. இறைவனுக்கும் மனிதனுக்கும் உள்ள உறவை,

- இறைத்தூதர்கள் யார் என்பதை, அவர்கள் அனுப்பப்பட்ட நோக்கத்தை,

- மரணத்துக்குப் பின் வரும் மறுமை வாழ்வை, உலக இறுதி நாள் எவ்வாறு நிகழும் என்பதை, சுவனத்தை, நரகத்தை,

- மனிதனின் இயல்புகளை, உலக வாழ்வின் புதிர்களை, இறை வழி காட்டுதலை ஏற்க மறுத்தால் ஏற்படும் விளைவுகளை --

சுருங்கச் சொல்லின் - மறைவான விஷயங்களில் மனிதனுக்குத் தேவையானவற்றையெல்லாம் கற்றுக் கொடுத்தான் இறைவன்.

திருக் குர் ஆன் கூறும் வாழ்வியல் கருத்துக்களை சுருக்கமாக இங்கே பார்ப்போம்.

வானத்தையும், பூமியையும், இவைகளுக்கு இடையே உள்ள அனைத்தையும் படைத்தவன் இறைவன் தான்!

படைக்கப் பட்ட எந்த ஒன்றும் வீணுக்காகப் படைக்கப் படவில்லை. தக்கதொரு காரணத்துக்காகவே இவைகளைப் படைத்திட்டான் இறைவன்!

படைக்கப் பட்ட எந்த ஒரு படைப்பினமும் - வானமாயினும் சரி, பூமியாயினும் சரியே - நிரந்தரமானவை அல்ல! ஒரு குறிப்பிட்ட தவணை கொண்டே ஒவ்வொன்றும் படைக்கப் பட்டுள்ளது.

ஒவ்வொரு படைப்பினத்தின் வடிவம், தன்மைகள், அதன் துவக்கம், அதன் பணிகள்-பயன்கள், அதன் முடிவு - இவை அனைத்தையும் தீர்மானிப்பவன் இறைவனே!

எந்த ஒரு குளறுபடியும் இல்லாமல், இயற்கைப் பெருவெளியின் அனைத்துப் படைப்பினங்களையும் சீராக இயக்கிக் கொண்டிருப்பவனும் இறைவனே!

என்றென்றும் நிலையானது போல் தோற்றமளித்துக் கொண்டிருக்கும் இந்த வானமும், பூமியும், விண்மீன்களும், இதர கோள்களும் ஒரு நாள் அதன் முடிவை சந்தித்தே தீரும்!

இறைவனின் படைப்பாற்றல், படைப்பின் அழகு, அவற்றின் அதிசயிக்கத் தக்க இயக்கம் - குறித்து மனிதனின் சிந்தனையைத் தூண்டுகின்ற நூற்றுக் கணக்கான வசனங்கள் உண்டு திருமறை குர்ஆனிலே!

இந்த பூமி பரப்பில் மனிதனைப் படைத்திடு முன்னரே படைக்கப் பட்ட, நம் கண்களுக்குப் புலப்படாத இரண்டு படைப்புகளைக் குறித்து திருக்குர்ஆன் எடுத்து இயம்புகிறது. ஒன்று: ஒளீயால் படைக்கப் பட்ட வானவர்கள்; இரண்டு: நெருப்பால் படைக்கப் பட்ட 'ஜின்' என்றழைக்கப் படும் ஒரு படைப்பினம்.

உலகின் முதல் மனிதன் - ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்களே! உலக மக்கள் அனைவருடைய ஆதி பிதா ஆதத்தை மண்ணைக் கொண்டு படைத்தான் இறைவன். பின்பு தன் ஆன்மாவிலிருந்து ஒன்றை மனிதனுக்குள் ஊதினான் இறைவன். (எனவே - நமது உடல் மண்ணுக்குச் சொந்தம். நமது ஆன்மா இறைவனுக்குச் சொந்தம். வேறு யாருக்கும் அல்ல!)

ஆதத்தின் துணையை அவரிலிருந்தே படைத்தான் இறைவன்.

மனித இனத்தை ஒரே ஆண்-பெண்ணிலிருந்தே பரவச் செய்தான் இறைவன்! (முஸ்லிம்கள் ஏன் மனிதன் குரங்கிலிருந்து வந்தவன் என்ற - உயிர் மலர்ச்சிக் கோட்பாட்டை வன்மையாக மறுக்கிறார்கள் என்பதை தயவு செய்து புரிந்து கொள்ளுங்கள்!

இந்த பூமியில் - மனிதன் இறைவனின் பிரதிநிதி ஆவான்! (ஏஐஊநுபுநுசுநுNவு)

மனிதன் இறைவனால் கண்ணியப் படுத்தப் பட்டவன். 'நாயினும் கடையன்' அல்ல மனிதன்! மனிதப் படைப்பை மிக அழகான படைப்பு என்கிறான் இறைவன்!

மனிதன் படைக்கப் பட்டது வீண் விளையாட்டுக்காக அல்ல!

அடுத்து - மனிதனின் பலங்களும் - பலவீனங்களும் (ளுவுசுநுNபுவுர்ளு யனெ றுநுயுமுNநுளுளுநுளுளு) என்னென்ன என்று பார்ப்போம்?

மனிதனுக்கு அறிவையும் சிந்திக்கும் ஆற்றலையும் வழங்கியவன் இறைவன். மனிதனின் முதல் 'மனித வளமே' அவனது சிந்திக்கும் ஆற்றல் தான்! (நன்றி செலுத்த வேண்டாமா இறைவனுக்கு?)

மனிதனுக்கு அன்பு, இரக்கம், பாசம் - போன்ற உணர்வுகளைத் தன்னகத்தே கொண்ட இதயத்தை வழங்கியவன் இறைவன்!

வெட்க உணர்ச்சி மனிதனுக்குக் கொடுக்கப்பட்டுள்ளது!

தவறுகளை இடித்துக் காட்டி எச்சரிக்கின்ற 'மனம்' ஒன்று நமக்கு வழங்கப் பட்டுள்ளது.

மனித பலவீனங்களில் முதலாவது - அவன் பலவீனமானவன் என்பதே!

அவன் அவசரப் படுபவன். பொறுமையற்றவன். மறதி உடையவன்.

மனிதனுக்கு - தீமையைச் செய்யத் தூண்டும் மனமும் உண்டு! (இதைத் தான் 'மனத்தளவில் எல்லாரும் அயோக்கியர்களே' என்றார்களோ?)

நல்லதையோ, தீயதையோ - ஒன்றைத் தேர்வு செய்திடும் 'சுதந்திரம்' (குசுநுநு றுஐடுடு) வழங்கப் பட்டவன் மனிதன்.

இறைவனின் 'வழிகாட்டுதலை' ஏற்றுக் கொண்டு அவன் கட்டளைகளுக்குக் கட்டுப் பட்டு அடி பணிந்து நடப்பது தான் மனிதன் படைக்கப் பட்டதன் நோக்கம்.

மனிதன் நல்லவற்றைத் தேர்வு செய்து வாழ்கின்றானா என்று சோதித்துப் பார்க்கவே, மனிதனுக்கு வாழ்வையும் மரணத்தையும் தந்தான் இறைவன்.

மனிதனின் பொது எதிரி 'ஷைத்தான்' என்றழைக்கப்படும் ஜின் இனத்தைச் சேர்ந்தவனே! மனிதனுக்கு இறைவன் பூமியில் தனது பிரதிநிதி என்ற பொறுப்பை வழங்கியதை ஷைத்தான் விரும்பவில்லை.

'மனிதர்களைக் கெடுத்தே தீருவேன்' என்று இறைவனிடமே வாதிட்டவன் ஷைத்தான். அவனுக்கு உலக அழிவு நாள் வரை 'அவகாசம்' அளித்தவனும் இறைவனே!

ஷைத்தான் தீமைகளைச் செய்திடுமாறு மனிதர்களைத் தூண்டிக் கொண்டே இருப்பவன். ஷைத்தானின் தூண்டுதலிலிருந்து தன்னைக் காத்துக் கொள்ளும் மன வலிமையையும் (றுஐடுடு Pழுறுநுசு)இறைவன் மனிதனுக்கு வழங்கியுள்ளான்.

மறதியால், அவசரத்தால், ஷைத்தானின் தூண்டுதலால் - பாவம் செய்திட்ட மனிதன் வருந்தும் போது மன்னிக்கிறான் இறைவன்.

ஒவ்வொரு மனிதனுடைய அனைத்துச் செயல்களையும் கண்காணிக்கிறான் இறைவன். வானவர்கள் மனிதனின் அனைத்துச் செயல்களையும் பதிவு செய்கிறார்கள்.

மனிதன் மீது இறைவன் அளவற்ற அன்பை, இரக்கத்தை, கருணையைச் சொரிகின்றான் இறைவன்.

மனிதனுக்குத் தேவையான அனைத்தையும் அருட்கொடைகளாகக் கணக்கின்றி வழங்கியிருக்கிறான் இறைவன்.

இறைவனுக்கு அடி பணிந்து நடப்பதன் மூலமே, மனிதன் இறைவனுக்கு நன்றி செலுத்திட முடியும்.

இறைவனுக்குக் கீழ்ப் படிய மறுப்பவன் - நன்றி கொன்றவன் ஆகி விடுகின்றான்.

ஆதம் அவர்கள் தொடங்கி, முஹம்மது நபியவர்கள் வரை - ஒவ்வொரு சமுகத்துக்கும் இறைத்தூதர்கள் அனுப்பப் பட்டே வந்துள்ளனர்.

ஒவ்வொரு சமுகத்துக்கும் ஒரு தவணை உண்டு. இறைத் தூதர்களை, இறை வழி காட்டுதலை ஏற்க மறுத்து பூமியில் இறைவன் விதித்த வரம்புகளை மீறி, அழிச்சாட்டியம் செய்தவர்களை இறைவன் அழித்து விடுகின்றான். இது பூமியில் அவர்களுக்குரிய தண்ட்னை. இவ்வாறு அழிக்கப் பட்ட பல சமுகங்களை திருமறை எடுத்துக் காட்டுகிறது.

யுக முடிவு நான் ஒன்று வந்தே தீரும். அது எந்த நாள் என்று - யாருக்கும் சொல்லப் படவில்லை! இறைத் தூதர்கள் உட்பட!

அந்த நாளில் எல்லா மனிதர்களும் உயிர் கொடுத்து எழுப்பப் படுவர். (ஜார்ஜ் புஷ்{ம் எழுப்பப் படுவார்!)

அந்த நாள் விசாரணையிலிருந்து யாரும் தப்பி விட முடியாது.

அந்த நாளில் - எந்த ஒரு மனிதனுக்கும் - கிஞ்சிற்றும் - அநியாயம் இழைக்கப் பட மாட்டாது. முழுமையான் நீதி நிலை நிறுத்தப் படும் - இறுதித் தீர்ப்பு நாள் அது!

சுவனம் அல்லது நரகத்தைத் தவிர மனிதனின் முடிவு வேறு எங்கும் இல்லை!

சகோதரர்களே! நண்பர்களே! மனித வாழ்வு குறித்து, வேறு எந்த ஒரு வழிமுறையினாலும் அறிந்து கொள்ள முடியாத பேருண்மைகளைத் தான், இறைவன், தனது கருணையினால், வஹி மூலமாக நமக்குக் கற்றுத் தந்துள்ளான். வஹியின் ஒவ்வொரு சொல்லும் இறைவனுக்குச் சொந்தமானது என்பதால், மனித வாழ்வு குறித்து திருக் குர் ஆனில் சொல்லப் பட்டவை அனைத்தும் சந்தேகங்களுக்கு இடமில்லாத உண்மைகளாகும்.

சகோதரர்களே! ஒன்றை இங்கே நாம் கவனித்திடல் வேண்டும். இறைவனின் ஒருமை குறித்து, இறைத் தூதர்கள் அனுப்பப் படுவது குறித்து, மறுமை குறித்து - நிறைய விவாதித்த நாம், மனிதப் படைப்பின் துவக்கம் குறித்தோ, மனித வாழ்வின் நோக்கம் குறித்தோ, மனித வாழ்வின் முடிவு குறித்தோ, வஹி மூலமாக அருளப் பெற்றவைகளை ஒரு விவாதப் பொருளாக எடுத்துக் கொள்ளவில்லை. ஏனெனில் இறைவன் இவைகளை விவாதத்துக்குரியதாக ஆக்கிடவில்லை!

ஆதம் தான் முதல் மனிதன் என்பதற்கு என்ன ஆதாரம் என்றோ -

நெருப்பால் படைக்கப் பட்ட 'ஜின்' இனம் மற்றும் ஒளியால் படைக்கப் பட்ட 'வானவர்கள்' - இப்படைப்பினங்கள் - இருப்பதற்கு என்ன ஆதாரம் என்றோ-

பாவங்கள் செய்திடத் தூண்டுபவன் ஷைத்தான் தான் என்பதற்கு என்ன ஆதாரம் என்றோ -

நமது செயல்களை வானவர்கள் பதிவு செய்கிறார்கள் என்பதற்கு என்ன ஆதாரம் என்றோ -

- எவரேனும் கேள்விகள் எழுப்பினால் அவருக்கு நம்முடைய பதில் இது தான்:

- முதலில் இறைவன் ஒருவன் இருக்கின்றானா என்பதை ஆய்வு செய்யுங்கள். ஒரு முடிவுக்கு வாருங்கள்.

- இறைவன் ஒருவன் இருக்கிறான் என்ற முடிவுக்கு வந்தால், அவனுடைய வழி காட்டுதல் மனிதனுக்குத் தேவையா இல்லையா என்பதை ஆய்வு செய்யுங்கள். ஒரு முடிவுக்கு வாருங்கள்.

- இறைவனின் வழி காட்டுதல் தேவை தான் என்ற முடிவுக்கு வந்தால், அந்த வழி காட்டுதல் எது என்ற ஆய்வை மேற்கொள்ளுங்கள்.

- அந்த ஆய்வில், தன்னை இறுதி தூதர் என்று அழைத்துக் கொள்ளும் முஹம்மது நபியையும் சேர்த்துக் கொள்ளுங்கள்.

- முஹம்மது நபியவர்கள் உண்மையாளர் தானா என்பதையும் உங்கள் ஆய்வுக்கு உட்படுத்துங்கள்.

- அவர் உண்மையாளர் தான் என்ற முடிவுக்கு நீங்கள் வந்தால் - வஹி மூலம் அவர் பெற்ற கருத்துக்கள் இறைவனின் புறத்திலிருந்து வந்தவைகளே என்பதனை தர்க்க ரீதியாகவே நீங்கள் ஏற்றுக் கொள்ள இயலும்.

- இறைவன் விடுக்கின்ற சவால் என்னவென்றால் - திருக் குர் ஆன் சொல்கின்ற ஒரே ஒரு கருத்தினை - இது உண்மைக்குப் புறம்பானது என்று நிரூபித்துக் காட்டுங்கள் பார்க்கலாம்?

- போதும்! இதில் உங்களுக்கு இன்னும் சந்தேகங்கள் இருந்தால், குறைந்த அளவு - முஸ்லிம்கள் இப்படிப் பட்ட ஆதாரங்களின் அடிப்படையில் தான் இவ்வாறு நம்புகிறார்கள் என்பதனை தயவு செய்து புரிந்து கொள்ளுங்கள்.

23. இவன் தான் முஸ்லிம்! 

ஓர் ஆங்கிலத் திரைப்படம். படத்தின் பெயர் நவீன யுகம் (Modern Times). கதாநாயகன் சார்லி சாப்லின். அப்படத்தில் வரும் ஒரு காட்சி.
குடும்பத்தைப் பிரிந்து வேலைக்குச் செல்கிறான் கதாநாயகன். அது ஒரு மிகப் பெரிய தொழிற்சாலை. எனினும் நமது கதாநாயகனின் வேலை மிக எளிதானது தான். ஒரு மிகப்பெரிய கூடம். அதனுள் ஒரு சிறிய அறை. சுழலுகின்ற உலோகப் பட்டை ஒன்று அந்த அறையின் ஒரு பக்கமாக உள்ளே நுழைந்து மறு பக்கம் வழியாக அடுத்த அறைக்குச் சென்று கொண்டிருக்கும்.


அந்த உலோகப் பட்டை மீது திருகு மறைகள் (Nuts) வரிசையாக வைக்கப்பட்டு அவை அறைக்குள்ளே வரும். நமது கதாநாயகன் செய்ய வேண்டியது எல்லாம் முதலில் வருகின்ற இரண்டு திருகு மறைகளை விட்டு விட வேண்டும். மூன்றாவது திருகு மறையை எடுத்து ஒரே ஒரு தடவை மட்டும் திருகி அப்படியே அந்த உலோகப் பட்டையின் மீது வைத்து விட வேண்டும். அது போலவே மீண்டும் வருகின்ற இரண்டு திருகு மறைகளை விட்டு விட்டு, மூன்றாவதை எடுத்து ஒரே ஒரு தடவை திருகி வைத்து விட வேண்டும். அவ்வளவு தான் வேலை. ஒரு நாளைக்கு பத்து மணி நேரம் வேலை. மணியடித்தால் அன்றைய வேலை முடிந்தது.

வேலை முடிந்து வீட்டுக்குத் திரும்பும் நமது கதாநாயகனுக்கு அந்த திருகு மறைகள் எங்கிருந்து வருகின்றன, எதற்காக வருகின்றன, அவை எங்கே செல்கின்றன, எதற்கு அவை பயன் படுத்தப் படுகின்றன - இவை எதுவுமே தெரியாது! அதே அறையில் அவரோடு சேர்ந்து இன்னும் ஏழெட்டு பேர். அவர்கள் அனைவருக்கும் அதே வேலை தான். அவர்களுள் ஒருவருக்கொருவர் பேசிக் கொள்ளக் கூட முடியாது. அருகில் உள்ள தொழிலாளியிடம் பேச்சுக் கொடுத்தால் அந்த மூன்றாவது திருகு மறையைத் தவற விட்டு விடுவார். அப்படி அவர் தவற விட்டு விட்டால் தொழிற்சாலையின் எல்லா இயக்கங்களுமே நின்று போய் விடும்.

அப்படித்தான் ஒரு நாள். நமது கதாநாயகனை சந்திக்க அவனது தாய், அவனது காதலி, மற்றும் அவனது நண்பன் - மூவரும் தொழிற்சாலைக்கு வந்து விட்டனர். யந்திரத் தனமான ஒரு வேலையில் தொடர்ந்து ஈடுபட்டிருந்த நமது கதாநாயகனுக்கு அவர்களைக் கண்டதும் கையும் ஓடவில்லை, காலும் ஓடவில்லை. தன்னை மறந்தான். தனது வேலையை மறந்தான். ஓடி வந்தான். தாயைக் கட்டிப் பிடித்தான். நண்பனைக் கட்டிப் பிடித்தான். "ஹலோ! எப்படி இருக்கிறீர்கள் நீங்கள் எல்லாம்? எங்கிருந்து வருகிறீர்கள்? எல்லாரும் நலம் தானா? பார்த்து நீண்ட காலமாகி விட்டதே! நீங்கள் யாரும் அருகில் இல்லாததால் நான் தவித்துத் தான் போய் விட்டேன். வாருங்கள், எல்லாரும் போய் தேநீர் அருந்தலாம்" என்று அவர்களை அழைத்துக் கொண்டு வெளியே வந்து விட்டான்.

ஒரு சில நிமிடங்கள் தான் ஆகியிருக்கும். திடீரென்று தொழிற்சாலையின் சங்கு ஒலிக்கத் தொடங்கியது. அனைவரும் வெளியே ஓடி வந்தனர். காவலர்கள் சிலரும் உயர் அதிகாரிகள் சிலரும் நமது கதாநாயகன் வேலை பார்க்கும் அறைக்கு ஓடி வந்தனர். என்ன நடந்தது? உலோகப் பட்டையில் வைக்கப் பட்ட திருகு மறைகளுள் ஒன்று திருகப் படாமல் வந்து கொண்டிருந்ததாம். அதனால் தொழிற்சாலையின் அனைத்து இயக்கங்களும் நின்று விட்டனவாம். பிடித்தார்கள் நமது கதாநாயகனை! திட்டித் தீர்த்தார்கள்! தண்டனையும் கொடுத்தார்கள்!

இந்தக் கதையைக் குறித்துக் கொஞ்சம் சிந்தித்து விட்டு மேலே தொடருங்கள்.

தான் உருவாக்க நினைக்கும் ஒவ்வொன்றையும் திட்டமிட்டுப் படைப்பவன் இறைவன். ஒவ்வொரு படைப்பினத்தின் அளவையும் வடிவத்தையும் தீர்மானிப்பவன் அவனே. படைக்கப் பட்ட ஒவ்வொன்றும் சென்றடைய வேண்டிய இறுதி இலக்கையும் முடிவு செய்பவன் அந்த இறைவன் தான். அதனதன் இலக்கை நோக்கி அந்தப் படைப்பினங்களை வழி நடத்திச் செல்பவனும் அவனே தான்.

இந்த நான்கு அம்சங்களும் எல்லாப் படைப்பினங்களுக்கும் பொருந்தும். அது மிக மிகச் சிறிய அணுவாக இருந்தாலும் சரி, அல்லது மிக மிகப் பெரிய விண்மீனாக இருந்தாலும் சரி - அனைத்துப் படைப்பினங்களுக்கும் இது பொருந்தும்.

சான்றாக ஒரு அணுவுக்கு உள்ளே உள்ள எலக்ட்ரான் ஒன்றையே எடுத்துக் கொள்வோம். எலக்ட்ரான் ஒன்றைப் படைத்து, அதன் வடிவத்தை நிர்ணயித்து, அது சென்றடைய வேண்டிய இலக்கினை முடிவு செய்து அந்த இலக்கினை நோக்கி அதனைச் செலுத்துபவன் இறைவனே!

அது போலவே - நாம் வாழ்கின்ற பேரண்டத்தை இல்லாமையிலிருந்து உருவாக்கி, அதற்கு வடிவம் தந்து, அதன் இலக்கையும் நிர்ணயித்து, அதன் இறுதி இலக்கை நோக்கி அழைத்துச் சென்று கொண்டிருப்பவனும் அவன் தான்!

இந்த நான்கு அம்சங்களையும் இறைவன் தன்னகத்தே வைத்திருப்பதால் எந்த ஒரு படைப்பின் அமைப்பிலும், அதன செயல்பாட்டிலும் நாம் யாதொரு குறையும் கண்டு விட முடியாது.

ஒரு ரோஜா மலரின் வடிவத்தில் நம்மால் ஒரு குறை கண்டு விட முடியுமா?
பூமியின் சுழற்சியிலும், கதிரவன் அமைந்திருக்கும் தூரத்திலும் நாம் யாதொரு குறையும் கண்டு விட முடியுமா?

இதில் எந்த ஒரு படைப்பும் வீணுக்காகப் படைக்கப்படவில்லை. ஒன்றுக்கொன்று எந்த ஒரு தொடர்பு இல்லாமலும் படைக்கப்படவில்லை. அவை அனைத்தும் ஒரு ஒருங்கிணைக்கப்பட்ட இயக்கத்துக்குட்பட்டே செயல்படுகின்றன!

நமக்கு முன்னால் பரந்து விரிந்து கிடக்கின்ற நமது பேரண்டத்தின் எந்த ஒரு பகுதியை நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்டாலும் -
அவற்றில் இறைவனின் அறிவாற்றல் வெளிப் படும்!
அவற்றின் அழகு நம்மை வியப்பில் ஆழ்த்தும்!
அவற்றில் இறைவனின் கருணையும் தெரிய வரும்!

நாம் உள்ளிழுக்கும் காற்றில், நாம் அருந்திடும் தண்ணீரில், நமது உணவில், விண்ணில், கடற்பரப்பில், ஓசோன் மண்டலத்தில் - இவ்வாறு எங்கு நோக்கினும் - நாம் இறைவனின் அறிவை, அழகுணர்ச்சியை, கருணையைப் புரிந்து கொள்ள முடியும்.

ஒவ்வொரு அணுவும் இறைவனின் கட்டுப்பாட்டின் கீழ்! விண்ணீல் சிதறிக் கிடப்பது போல் தோற்றமளிக்கின்ற விண்மீண்கள் அனைத்துமே - இறைவனின் கட்டுப்பாட்டின் கீழ் தான்!

அதனால் எங்கும் அழகு! எங்கும் இறைவனின் கருணை! எங்கும் வெளிப் படுகின்ற இறைவனின் அறிவாற்றல்! அதனால் எங்கும் அமைதி!
***

ஆனால் - மனிதன் முற்றிலும் வித்தியாசமானவன். மற்ற படைப்பினங்களிலிருந்து முழுவதும் வேறுபட்டவன். பல சிறப்பியல்புகளை தன்னகத்தே கொண்ட்வன்.

மனிதனின் சிறப்புகளிலேயே மிக மிக முக்கியமான சிறப்பு, வேறு எந்த ஒரு படைப்பினத்துக்கும் இல்லாத ஒரு சிறப்பு - தாமே ஒன்றைத் தெரிவு செய்து செயல்படுகின்ற சுய அதிகாரம் (Will Power)தான்!

மற்ற எல்லாப் படைப்பினங்களையும் தன் முழுக் கட்டுப்பாட்டின் கீழ் வைத்துக் கொண்ட இறைவன், மனிதனுக்கு மட்டும் ஏன் சுயமாக ஒன்றைத் தேர்வு செய்து செயல்படும் உரிமையை வழங்கிட வேண்டும்? அதற்கு ஒரு காரணம் இருக்கிறது! அதற்கு ஒரு நோக்கம் இருக்கிறது! மனிதப் படைப்பின் பின்னணியில் இறைவனின் மகத்தானதொரு திட்டம் இருக்கிறது!

இப்போது முதலில் நாம் குறிப்பிட்ட அந்த நான்கு அம்சங்களையும் மனிதனிடத்தில் பொருத்திப் பார்ப்போமா?
- இறைவன் தான் மனிதனைப் படைத்தான்! - ஒத்துக் கொள்கிறீர்களா?
- இறைவன் தான் மனிதனின் வடிவத்தை அழகுற அமைத்துத் தந்தான் - ஒத்துக் கொள்கிறீர்களா?
- மனிதன் சென்றடைய வேண்டிய இலக்கினை இறைவனே தீர்மானிக்கிறான் - ஒத்துக் கொள்கிறீர்களா?
- அப்படியானால் - மனிதன் சென்றடைய வேண்டிய இலக்கை நோக்கி மனிதனுக்கு வழி காட்டி அழைத்துச் சென்றிட வேண்டிய பொறுப்பு இறைவனுக்கு உண்டு - ஒத்துக் கொள்கிறீர்களா?

இந்த பொறுப்பைத் தான் இறைவன் இறைத்தூதர்களை அனுப்பி வைப்பதன் மூலம் நிறைவேற்றித் தந்திருக்கின்றான்.

இப்போது மனித சமூகத்துக்கு முன்னால் இரண்டு பாதைகள்.

ஒன்று: இறைத் தூதர்கள் மூலம் அனுப்பப் பட்ட இறை வழிகாட்டுதலை ஏற்று நடந்திடும் பாதை!

மற்றொன்று : இறைவனின் வழி காட்டுதலைக் கண்டு கொள்ளாமல் தனது விருப்பப்படி செல்கின்ற பாதை!

இந்த இரண்டு வெவ்வேறு நிலைகளிலும் - என்னென்ன விளைவுகள் நிகழும் என்பதே இப்போது எழும் கேள்வி.

முதலில், இறைவனின் வழி காட்டுதலின் படி மனிதன் நடந்தால் என்ன நிகழும்? நமது வாழ்வோடு தொடர்புடைய ஒவ்வொரு படைப்பையும் குறித்து சற்று சிந்தியுங்கள்.

149.5 மில்லியன் கிலோ மீட்டர் தூரத்திலுள்ள கதிரவன் நமக்குப் போதுமான ஒளியும் வெப்பமும் தருகின்றது.

3, 83,000 கிலோ மீட்டர் தூரத்தில் நமக்கென்று ஒரு சந்திரன் சுழன்று கொண்டிருப்பதால் தான் நாம் பூமியில் "நடமாட" முடிகின்றது. அறிவியல் அறிஞர்களைக் கேட்டால் ஒரு பட்டியலே போட்டுத் தருவார்கள் - என்னென்ன பொருள்களால் மனிதனுக்கு என்னென்ன நன்மைகள் என்று.

சொல்லப் போனால் அப்படி ஒரு பட்டியல் போட்டால் அதற்கு ஒரு முற்றுப் புள்ளியே வைக்க முடியாது!

மற்ற படைப்பினங்கள் மூலம் மனிதன் நன்மைகளை அடைய முடிவது எதனால்? அவை அனைத்துமே இறைவனின் கட்டளைகளுக்கு அடி பணிந்து நடப்பதினால் தான். "சுதந்திரம்" வழங்கப் பட்ட மனிதனும் இறைவனுக்கு அடி பணிந்து நடந்து கொண்டால், மற்ற படைப்பினங்கள் மூலம் மனிதன் அடைந்திடும் நன்மைகள் பன்மடங்கு பெருகி விடும். இது ஏனெனில் - படைப்பினங்கள் அனைத்தும் இறைவனின் பாதையில். மனிதனும் இறைவனின் பாதையில் எனும்போது ஒரு ஒருங்கியைந்த இயக்கத்துக்கு அது வழி வகுக்கிறது. இறைவனின் "குடும்பத்தில்" எல்லாரும் ஓரணியில். எனவே நன்மைகள் பெருகுகின்றன. இதனை திருக் குர்ஆனின் சில வசனங்களைக் கொண்டு ஆய்வு செய்வோமா?

"அவ்வூர்களில் வாழ்ந்த மக்கள் இறை நம்பிக்கை கொண்டு இறையச்சமுள்ள போக்கை மேற்கொண்டு இருப்பார்களேயானால் வானம், பூமி ஆகியவற்றின் அருள்வளங்கள் அனைத்தையும் அவர்களுக்கு நாம் திறந்து விட்டிருப்போம்." (குர்ஆன் 7:96)

மேலும், 'நீங்கள் உங்களுடைய இறைவனிடம் மன்னிப்புத் தேடுங்கள். நிச்சயமாக அவன் மிகவும் மன்னிப்பவன்" என்றும் கூறினேன். அப்படிச் செய்வீர்களாயின் அவன் உங்கள் மீது தொடர்ந்து மழையை அனுப்புவான். அன்றியும் அவன் உங்களுக்குப் பொருள்களையும், புதல்வர்களையும் கொண்டு உதவி செய்வான். இன்னும், உங்களுக்காகத் தோட்டங்களை உண்டாக்குவான். உங்களுக்காக ஆறுகளையும் (பெருக்கெடுத்து ஓடுமாறு) உண்டாக்குவான். (குர்ஆன் 71: 10 - 12 )

இறை நம்பிக்கைக்கும் வானம் - பூமியின் அருள் வளங்கள் நம்மை வந்தடைவதற்கும் சம்பந்தம் இருக்கிறது. மன்னிப்பு கேட்பதற்கும் மழை பொழிவதற்கும் சம்பந்தம் இருக்கிறது.

***

அப்படியானால் இறை வழிகாட்டுதலைக் கண்டு கொள்ளாமல் மனித சமூகம் தன்னிச்சையாக செயல்பட்டால் என்ன தான் நிகழ்ந்து விடும்?

இறைவனின் படைப்புகள் எண்ணற்றவை. சின்னஞ்சிறிய அணுக்கள் முதல், பென்னம்பெரிய விண்மீன் மண்டலங்கள் வரை - எல்லாமே இறைவன் காட்டிய பாதையில் - அதாவது - இயற்கை விதிகளுக்குட்பட்டு - இம்மியளவும் பிசகாமல் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. அதாவது இறைவனின் படைப்புகளில் 99.9999% இறைவனின் பாதையில். இறைவனின் படைப்பில் 0.00001% மட்டுமே உள்ள மனிதன் இறைவனின் பாதைக்குள் வர மறுப்பு. என்ன நிகழும்?

இப்போது மேலே சொல்லப்பட்ட திருகு மறை கதையை மீண்டும் எடுத்துக் கொள்வோம். தொழிற்சாலையின் ஏதோ ஒரு மூலையில் வேலை பார்த்து வந்த நமது கதாநாயகன் அந்தத் தொழிற்சாலையின் மிகச் சிறியதொரு இயக்கத்தில் தான் குறை வைக்கிறான். ஆனால் என்ன நிகழ்கிறது? அது ஒட்டு மொத்தத் தொழிற்சாலையின் செயல் பாட்டையும் பாதித்து விடுகின்றது.

இதே கதை தானைய்யா மனிதனின் விவகாரத்திலும்!

அதாவது மனிதன் தனக்கென ஒரு பாதையைத் தானே வகுத்துக் கொண்டு, இறை வழிகாட்டுதலைப் புறக்கணித்து வாழத் தலைப்பட்டான் எனில் ஒட்டு மொத்தப் பேரண்டத்தின் சீரான இயக்கத்தோடு அவன் மோதிடத் தலைப் படுகின்றான் என்றே பொருள்.

அதாவது மனிதத் தவறுகளின் விளைவுகள் மனிதனை மட்டும் பாதிப்படையச் செய்வதில்லை. மாறாக அவை பேரண்டத்தின் ஏனைய படைப்புகளின் செயல்பாடுகளையும் சீர் குலைக்கச் செய்து விடுகின்றன. இதனை ஒத்துக் கொள்ள நமக்கு என்ன தயக்கம்?

நமது உடலில் உள்ள ஒரு உறுப்பில் குறை ஏற்பட்டால் அது நமது ஒட்டு மொத்த உடல் நலனை பாதிக்காதா?

ஒரு சிலர் தான் புகைக்கிறார்கள். ஆனால் சுற்றுப் புறச் சூழலை அது கெடுத்து விடுவதில்லையா?

ஒரு வீட்டில் தீப்பிடித்தால் அது அந்த வீட்டோடு நின்று விடுமா?

ஒரு யந்திரத்தில் இணைக்கப் பட்டுள்ள ஒரு பற்சக்கரத்தின் ஒரே ஒரு பல் உடைந்து விட்டால், யந்திரம் தொடர்ந்து இயங்குமா?

ஒரு கப்பலின் கீழ்த்தட்டு மக்கள் அந்தக் கப்பலின் அடிப்பகுதியில் ஒரே ஒரு ஓட்டை போட்டால், கப்பலின் மேல் தட்டு மக்கள் கவலையின்றிக் கரை போய் சேர்வார்களா?

இப்போதாவது ஒத்துக் கொள்கிறீர்களா - மனிதனின் தவறுகள் பேரண்டத்தின் ஏனைய பகுதிகளில் - குறிப்பாக மனிதனைச் சுற்றியுள்ள படைப்பினங்களின் இயக்கத்தைச் சீர் குலைக்கச் செய்து விடுகின்றன என்பதை?

மனிதன் - இறை வழிகாட்டுதலைப் புறக்கணித்து வாழத் தலைப்பட்டான் எனில் அப்படி என்ன தான் நிகழ்ந்து விடும் என்பதை அறிந்திடு முன் ஒரு வேலை. இறைவன் வழி காட்டுகிறான், இறைவன் வழி காட்டுகிறான் - என்கிறீர்களே, எது ஐயா அந்த இறைவனின் வழி காட்டுதல் என்பதை முதலில் பார்ப்போமா?

திருக் குர் ஆனின் மூன்று வசனங்களை மட்டும் உங்கள் முன் சமர்ப்பிக்கிறோம்:

நபியே! இவர்களிடம் கூறும்: 'வாருங்கள்! உங்கள் இறைவன் உங்கள் மீது விலக்கியிருப்பவற்றையும் (ஏவியிருப்பவற்றையும்) நான் ஓதிக் காண்பிக்கிறேன்.

எப்பொருளையும் அவனுக்கு இணையாக வைக்காதீர்கள்.
பெற்றோர்களுக்கு நன்மை செய்யுங்கள்.

வறுமைக்குப் பயந்து உங்கள் குழந்தைகளைக் கொல்லாதீர்கள் - ஏனெனில் உங்களுக்கும், அவர்களுக்கும் நாமே உணவளிக்கின்றோம்.

வெளிப்படையான இரகசியமான மானக்கேடான காரியங்களை நீங்கள் நெருங்காதீர்கள்.

அல்லாஹ் தடுத்துள்ள எந்த ஓர் ஆத்மாவையும் நியாயமானதற்கு அல்லாமல் - கொலை செய்யாதீர்கள் - இவற்றை நீங்கள் உணர்ந்து கொள்வதற்காக (இறைவன்) உங்களுக்கு (இவ்வாறு) போதிக்கின்றான்.

அநாதையின் பொருளின் பக்கம் அவன் பிராயத்தை அடையும் வரையில் அழகான முறையிலன்றி நீங்கள் நெருங்காதீர்கள்.

அளவையும், நிறுவையையும் நீதத்தைக் கொண்டு நிரப்பமாக்குங்கள். நாம் எந்த ஆத்மாவையும் அதன் சக்திக்கு மீறி கஷ்டப்படுத்துவதில்லை.

நீங்கள் பேசும்பொழுது அதனால் பாதிக்கப்படுபவர் நெருங்கிய உறவினராக இருந்த போதிலும் - நியாயமே பேசுங்கள்.

அல்லாஹ்வுக்கு (நீங்கள் கொடுத்த) உறுதி மொழியை நிறைவேற்றுங்கள். நீங்கள் நினைவு (கூர்ந்து நடந்து கொள்ளும் பொருட்டே அல்லாஹ்
உங்களுக்கு (இவ்வாறு) போதிக்கிறான்.

நிச்சயமாக இதுவே என்னுடைய நேரான வழியாகும். ஆகவே இதனையே பின்பற்றுங்கள் - இதர வழிகளை நீங்கள் பின்பற்ற வேண்டாம் - அவை உங்களை அவனுடைய வழியைவிட்டுப் பிரித்துவிடும். நீங்கள் (நேர் வழியைப் பின்பற்றி) பயபக்தியுடையவர்களாக இருப்பதற்கு இவ்வாறு அவன் உங்களுக்கு போதிக்கிறான். (6:151 - 153)

இறை வழிகாட்டுதலின் மிக மிக அடிப்படையான அம்சங்களை இரத்தினச் சுருக்கமாக இங்கே எடுத்துச் சொல்லியிருக்கிறான் இறைவன். இறை வழிகாட்டுதலின் இந்த அடிப்படைகளில் இருந்து இன்றைய உலகம் எவ்வளவு தூரம் விலகிப் போயிருக்கிறது என்பதைக் குறித்து விரிவாக அலசிட இது இடமல்ல. எனினும் சுருக்கமாக இது குறித்துப் பார்ப்போமா?

# இறை மறுப்பு, பல தெய்வக் கோட்பாடுகள் மற்றும் இறைவனைப் புறக்கணித்து விட்டு எழுதப் பட்ட நவீன விஞ்ஞானம், மற்றும் ஏராளமான நவீன இஸங்கள்....

# பெற்றோரை அவமதித்தல், அவர்களைக் கொடுமைப் படுத்துதல், அவர்களைக் கை விட்டு விடுதல்....

# கருக்கலைப்பு, பெண் சிசுக்கொலை,மனிதனின் இயற்கையான இன விருத்தி அமைப்பில் இஷ்டத்துக்குக் கை வைத்தல்....

# மானக்கேடானவை எவை என்பதற்கு இலக்கணம் வகுத்துத் தருகின்ற - திரைப்பட உலகம், நிர்வாணப் படங்கள், விபச்சாரம், அழகிப் போட்டிகள், ஆபாச விளம்பரங்கள், ஓரினச் சேர்க்கை, மது, போதைப் பொருட்கள்....

# அன்றாட நிகழ்ச்சியாகிப் போய் விட்ட கொலை பாதகச் செயல்கள், இனப் படுகொலைகள், குழு பயங்கரவாதம், அரசு பயங்கரவாதம்....

# வெளியே தெரியாம்ல் சூரையாடப் படுகின்ற அனாதைகளின் சொத்துக்கள், சுரண்டப் படும் ஏழை நாடுகளின் வளங்கள்....

# சிறு வியாபாரிகள் முதல் பன்னாட்டு வணிக நிறுவனங்கள் வரை நடத்துகின்ற வியாபார மோசடிகள், தில்லுமுல்லுகள்....

# ஏழைக்கு ஒரு நீதி,பணக்காரனுக்கு ஒரு நீதி,வல்லரசுகளுக்கு ஒரு நீதி, ஏழை நாடுகளுக்கு ஒரு நீதி....

இவை தானே இன்றைய உலகம்!

விளைவு? இறைவனே என்ன சொல்கின்றான் என்று பார்ப்போமா?

மனிதர்களின் கைகள் தேடிக்கொண்ட (தீச் செயல்களின்) காரணத்தால் கடலிலும் தரையிலும் (நாசமும்) குழப்பமும் தோன்றின. (தீமைகளிலிருந்து) அவர்கள் திரும்பிவிடும் பொருட்டு அவர்கள் செய்தார்களே (தீவினைகள்) அவற்றில் சிலவற்றை (இவ்வுலகிலும்) அவர்கள் சுவைக்கும்படி அவன் செய்கிறான்.(30:41)

அண்ணல் நபியவர்கள் சொன்னார்கள்:

# எந்தச் சமூகத்தில் மோசடிகள் நடக்கின்றனவோ அந்தச் சமூக மக்களின் உள்ளங்களில் இறைவன் கலக்கத்தை உண்டாக்கி விடுகின்றான்.

# எந்தச் சமூகத்தில் விபச்சாரம் பரவுகிறதோ அந்தச் சமூகத்தில் மரணங்கள் அதிகரித்தே தீரும்.

# அளவையிலும் நிறுவையிலும் மோசடி செய்யும் ஒரு சமூகத்தில் உணவுக்குப் பஞ்சம் ஏற்பட்டு விடும்.

# எந்தச் சமூகத்தில் அநீதியான தீர்ப்புகள் வழங்கப் படுகின்றனவோ அந்தச் சமூகத்தில் - படுகொலைகள் அதிகரித்து விடும்.

# எந்தச் சமூகம் தங்களின் ஒப்பந்தங்களை முறித்து விடுகின்றனவோ அந்தச் சமூகம் எதிரிகளின் அடக்குமுறைக்கு ஆளாக்கப் பட்டு விடும்.

(ஆதாரம்: நபிமொழி நூல் - மாலிக்)

மேலும் அவர்கள் சொன்னார்கள்: நிலத்திலோ, நீரிலோ, கடலிலோ பொருளில் நஷ்டமேற்பட்டு அழிவு உண்டாவதெல்லாம் (ஏழைகளுக்குச் சேர வேண்டிய) ஜகாத்தினைத் தடுத்து வைப்பதின் காரணத்திலேயாகும். (ஆதாரம்: நபிமொழி நூல் - தபரானி)

இறை வழி காட்டுதலைப் புறக்கணித்தால் நீரிலும், நிலத்திலும் ஏற்படுகின்ற குழப்பங்களைக் கவனித்தீர்களா? ஆக - நாம் சொல்ல வருவது என்னவெனில் மனிதனின் செயல்கள் மற்ற மனிதர்களையும் பாதிக்கும், இறைவனின் ஏனைய படைப்புகளையும் பாதிப்படையச் செய்யும் என்பதைத் தான். எனவே தான் தரையிலும் குழப்பம். கடலிலும் குழப்பம்!
***

சரி! குழப்பம் நீங்கி அமைதி பெற என்ன வழி? சீர்திருத்தம். ஆம். மனிதன் ஏற்படுத்தி விட்ட குழப்பங்கள் அனைத்தையும் நீக்கிடும் சீர்திருத்தமே உடனடித் தேவை. சீர்திருத்தத்தின் முதல் படி என்ன?

மக்களுக்கு எது நன்மை, எது தீமை என்பதைப் பிரித்துக் காட்டுகின்ற அறிவை ஊட்டுவது தான். அதாவது கல்வி. அது மக்களுக்கு நன்மை பயக்கின்ற கல்வி. இந்தக் கல்வியைப் பெற்றுக் கொள்பவன் சீர்திருந்துகிறான். பிறரை சீர்திருத்துகிறான்.

நீரில் வாழ்வனவும் நிலத்தில் வாழ்வனவும் அத்தகைய சீர்திருத்தம் ஒன்றுக்காக ஏங்கி நிற்கின்றன என்பதை அறிந்திட நீங்கள் வியந்து போவீர்கள்!

அண்ணல் நபியவர்கள் சொன்னார்கள்:

மக்களுக்கு நன்மை பயக்கின்ற கல்வியைக் கற்றுத் தருகின்ற அறிஞனுக்காக - இறைவனும், அவனது வானவர்களும், புற்றுகளில் வாழ்ந்திடும் எறும்புகள் உட்பட எல்லா தரை வாழ் உயிரினங்களும், மீன்கள் உட்பட எல்லா நீர் வாழ் உயிரினங்களும் தங்கள் நல் வாழ்த்துக்களைத் தெரிவிக்கின்றனர். (நபிமொழி நூல்: திர்மிதி)

மக்கள் பாதை மாறிப் போய்க் கொண்டிருக்கிறார்கள். அப்போது அவர் புறப்பட்டுச் செல்கிறார் மக்களை சீர்திருத்தம் செய்திட. மக்களுக்கு நற்போதனை அளித்திட. அவருக்கும் - புற்றுகளில் வாழ்ந்திடும் எறும்புகளுக்கும், தண்ணீரில் வாழ்ந்திடும் மீன்களுக்கும் என்ன சம்பந்தம்? ஏன் அவை அவரை வாழ்த்திட வேண்டும்? மனிதக் கரங்கள் செய்திட்ட குளறுபடிகளினால் அவைகளும் பாதிக்கப் பட்டிருக்க வேண்டும். எனவே மனிதன் சீர்திருந்தினால் தங்களுக்கும் விடிவு பிறந்திடும் என்று அவரை வாழ்த்திட முன் வந்தன போலும்!

இத்தகைய சீர்திருத்தத்தைத் தான் முஹம்மது நபி (ஸல்) உட்பட அனைத்து இறைத்தூதர்களும் செய்தார்கள். முஹம்மது நபி (ஸல்) அவர்களை "அகில உலகத்தாருக்கும் ஓர் அருட்கொடை" -யாக நாம் அனுப்பினோம் என்கிறான் இறைவன். அகில உலகத்தாருக்கும் என்று இறைவன் சொல்வது ஏன் என்பது புரிகின்றதா?

சரி, குழப்பங்கள் தோன்றிட மனிதன் ஏன் காரணமாகி விடுகின்றான்? மனிதனின் ஒரு குறிப்பிட்ட மன நிலையே எல்லாக் குழப்பங்களுக்கும் அடிப்படைக் காரணம். அந்த மன நிலை எது தெரியுமா? கீழ்க்காணும் இறை வசனத்தைக் கூர்ந்து கவனியுங்கள்:

அல்லாஹ் தனக்கு அரசாட்சி கொடுத்ததின் காரணமாக (ஆணவங்கொண்டு), இப்ராஹீமிடத்தில் அவருடைய இறைவனைப் பற்றித் தர்க்கம் செய்தவனை (நபியே!) நீர் கவனித்தீரா? இப்ராஹீம் கூறினார்: 'எவன் உயிர் கொடுக்கவும், மரணம் அடையும்படியும் செய்கிறானோ, அவனே என்னுடைய ரப்பு (இறைவன்)" என்று. அதற்கவன், 'நானும் உயிர் கொடுக்கிறேன். மரணம் அடையும் படியும் செய்கிறேன்" என்று கூறினான்¢ (அப்பொழுது) இப்ராஹீம் கூறினார்: 'திட்டமாக அல்லாஹ் சூரியனைக் கிழக்கில் உதிக்கச் செய்கிறான். நீ அதை மேற்குத் திசையில் உதிக்கும்படிச் செய்!" என்று. (அல்லாஹ்வை) நிராகரித்த அவன், திகைத்து வாயடைப்பட்டுப் போனான். தவிர, அல்லாஹ் அநியாயம் செய்யும் கூட்டத்தாருக்கு நேர் வழி காண்பிப்பதில்லை. (2:258)

புரிகின்றதா?
***

சரி, மனிதன் ஏற்படுத்தியிருக்கும் குழப்பங்கள் சீர்திருத்தப் படாமலேயே விட்டு விடப் பட்டால் என்ன தான் ஆகும்?

மனிதனின் நன்மைக்காகவே படைக்கப் பட்ட ஏனைய படைப்புக்களைக் கொண்டே இறைவன் மனிதனைத் தண்டிக்கின்றான். கடும் புயலைக் கொண்டும், இடி முழக்கத்தைக் கொண்டும்,கடலைக் கொண்டும், நில நடுக்கத்தைக் கொண்டும், கல் மாறி பொழிந்தும் அந்த சமூகம் தண்டிக்கப் படுகின்றது. இத்தகைய தண்டனைக்காக அவர்கள் இறைவனைக் குறை சொல்லிட இயலாது. ஏனெனில்...

"உண்மையில் அல்லாஹ் மனிதர்களுக்கு அணு அளவும் அநீதி இழைப்பதில்லை. எனினும் மனிதர்கள் தமக்குத் தாமே அநீதி இழைத்துக் கொள்கிறார்கள்". (10:44)

அக்கிரமக்காரர்கள் அழிந்து போனால் மக்களுக்கு மகிழ்ச்சியே. ஆனால் வானத்துக்கும் பூமிக்கும் என்ன வந்தது? கொடுங்கோல் மன்னன் பிர்அவ்னும் அவனுடைய படையினரும் செங்கடலில் வைத்து மூழ்கடிக்கப் பட்டனர்.

இதனைக் குறித்து இறைவன் இப்படிச் சொல்கின்றான்:

"பிறகு அவர்களுக்காக வானமும் அழவில்லை! பூமியும் அழவில்லை!" (44:29)
ஏன் அழவில்லை? புரிகிறதா?

***
ஒரு மனிதன் சிந்திக்கின்றான். அவன் தன்னப் படைத்த இறைவனைப் புரிந்து கொள்கின்றான். இப்பேரண்டத்தின் பிரிக்க முடியாத ஒரு அங்கம் தான் மனித சமூகம் என்பதை உணர்கின்றான். இப்பேரண்டத்தின் அனைத்துப் படைப்புகளும் இறை நியதிக்குக் கட்டுப்படுவதினால் தான் இப்பேரண்டமே நிலைத்து நிற்கிறது என்பதை ஒப்புக் கொள்கின்றான். தானும் இறைவனின் பாதைக்குத் திரும்பிட விழைகின்றான்.இதைப் பார்த்து இறைவன் மகிழ்ச்சியடைகின்றான். இவன் இறைவனுக்கு அடி பணிந்து அமைதி அடைகின்றான்.

இவன் இறைவன் ஒருவனை மட்டுமே வணங்கிடுவான். இவன் பெற்றோரை அவர்கள் உயிருள்ளவரைக் கை விட்டு விட மாட்டான். இவன் வறுமைக்கு அஞ்சி தன் குழந்தைகளைக் கொன்று விட மாட்டான். மானக் கேடான எந்த ஒரு துறையிலும் இவன் ஈடுபட மாட்டான் - ஒட்டு மொத்த உலகமே அவைகளை நியாயப் படுத்தினாலும் சரியே. இவன் கொலை காரனும் அன்று. பிறர் சொத்துக்களைக் கொள்ளையடிப்பவனும் அன்று. இவனது வணிகத்தில் மோசடி இருப்பதில்லை. நீதி என்று வந்து விட்டால் - இவனுக்கு முன்னால் எல்லாரும் ஒன்று தான்.

இவன் தன்னளவில் மட்டும் அமைதி அடைந்தவன் அன்று. தன் குடும்பத்துக்கு அமைதி தருபவன் அவன். தனது சமூகத்துக்கு அமைதி தருபவன் அவன். உலக மக்கள் அனைவருக்கும் அமைதி தருபவன் அவன். ஏன், சீர் கெட்டுப் போயிருக்கும் உலகத்தைச் சீர்திருத்த இவன் புறப்பட்டு விட்டதால் எறும்பு, மீன் உட்பட எல்லா உயிரினங்களுக்கும் அமைதி தருபவன் தான் அவன். இவன் தான் முஸ்லிம்!

நீங்கள்?

Comments