திறமையா? சீனியாரிட்டியா??

உசாமா இப்னு ஸைத் (ரளி) அவர்கள். இவர் ஒரு சிறந்த நபித் தோழர். இளைஞர். நபி (ஸல்) அவர்கள் உசாமா(ரளி) அவர்களை முஸ்லிம்களின் படைக்குத் தளபதியாக்கினார்கள்.

அப்படையில் மூத்த வயதுடைய நபித்தோழர்களும் இருந்தனர். அப்போது உசாமா (ரளி) அவர்களின் வயது 19ஐத் தாண்டவில்லை. அச்சமயத்தில், வயதில் மூத்த முஹாஜிர்கள் மற்றும் அன்ஸாரிகளுக்கு இவர் தளபதியாக்கப்பட்டுள்ளாரே! என்று சிலர் குறை கூற ஆரம்பித்தனர்.


இளவயதில் தளபதியாக்கப்பட்டுள்ளது பற்றிக் குறைகளும் விமர்சனங்களும் நபி (ஸல்) அவர்களின் காதை எட்டியபோது அவர்கள் மிகுந்த கோபமடைந்தார்கள். உடனே மிம்பரில் ஏறி, அல்லாஹ்வைப் புகழ்ந்து,

பின்னர் கூறினார்கள்:

மக்களே! நான் உசாமாவைத் தளபதியாக்கியுள்ளது பற்றி நீங்கள் குறை கூறியது என் காதுக்கு எட்டியது. நான் உசாமாவைத் தளபதியாக்கியுள்ளது பற்றி நீங்கள் குறை கூறினால் இதற்கு முன்னர் அவருடைய தந்தையை நான் தளபதியாக்கியதையும் நீங்கள் குறைகூறிவிட்டீர்கள். அல்லாஹ்வின் மீதாணையாக! தலைமைக்கு அவர் தகுதியானவராக இருந்திருந்தால் அவருக்குப்பின் அவருடைய மகனும் தலைமைக்குத் தகுதியானவரே! நிச்சயமாக அவர் மக்களுள் எனக்கு மிகவும் அன்பிற்குரியவராக இருந்தார். மேலும் அவ்விருவரும் எல்லா வித நன்மைக்கும் உரித்தானவர்களே. எனவே இவர் விசயத்தில் நன்மையையே நாடுங்கள். ஏனென்றால், நிச்சயமாக இவர் உங்களுள் உள்ள நல்லோர்களில் ஒருவராவார்.


நபி (ஸல்) அவர்களின் இறப்புக்குப்பின் அபூபக்ர் ஸித்தீக் (ரளி) அவர்கள் கலீஃபா ஆக்கப்பட்டார்கள். அப்போது அன்ஸாரிகள் உமர்(ரளி) அவர்களிடம், உசாமாவைவிட வயதில் மூத்த யாரேனும் ஒருவரைத் தங்களுக்குத் தலைவராக நியமிக்குமாறு தாங்கள் வேண்டிக்கொள்வதாக அபூபக்ர் (ரளி) அவர்களிடம் தெரிவிக்கச் சொன்னார்கள்.


அதனால் உமர் (ரளி) அவர்களிடம் சென்று இதுபற்றித் தெரிவித்தபோது, உமர் (ரளி) மீது பாய்ந்தார்கள். அமர்ந்த வண்ணம் உமர்(ரளி) அவர்களின் தாடியைப் பிடித்து உலுக்கினார்கள். மேலும் கூறினார்கள்: உமரே ! உம் தாய் உமக்குக் கடினமாகட்டுமாக! அவள் உம்மை இழக்கட்டுமாக! இறைத்தூதர் (ஸல்) அவர்கள் அவரைத் தலைவராக்கியுள்ளார்கள். அவரை அப்பதவியைவிட்டு நீக்க என்னை நீர் ஏவுகிறீரா?


பின்னர் அபூபக்ர் ஸித்தீக் (ரளி) அவர்கள் உசாமாவின் படையில் சென்றார்கள். அப்போது உசாமா (ரளி) அவர்கள் தம்முடைய குதிரையில் பயணித்தார்கள். அபூபக்ர் (ரளி) அவர்கள் உசாமாவுடைய குதிரையின் கடிவாளத்தைப் பிடித்தவண்ணம் நடந்து சென்றார்கள். அவ்வேளையில், அபூபக்ர் (ரளி) அவர்களிடம் உசாமா(ரளி) கூறினார்கள்: நான் இறங்கிக் கொள்கிறேன்; தாங்கள் குதிரையில் ஏறிக்கொள்ளுங்கள்.


அதைக் கேட்ட அபூபக்ர் (ரளி) அவர்கள், அல்லாஹ்வின் மீதாணையாக! நீர் இறங்க வேண்டாம்; நான் ஏறிக் கொள்ளவும் வேண்டாம். அல்லாஹ்வின் பாதையில் சற்றுநேரம் என்னிரு கால்கள் புழுதிபடிவது என்மீது கடமையல்லவா? என்று மறுவினாத் தொடுத்தார்கள்.

நாம் கேட்கும் கேள்வி இது தான்:

இஸ்லாமியக் கண்ணோட்டத்தில் - ஒருவரை ஒரு பொறுப்புக்குத் தேர்வு செய்திடும் போது - கவனத்தில் கொள்ளப் பட வேண்டியது - திறமையா? சீனியாரிட்டியா??

Comments