ஆர்வமுள்ளவர்களே! களம் இறங்குங்கள்!!

எனது நீண்ட நாள் ஆசைகளுள் ஒன்று: நமதூர் இளைஞர்கள் அனைவரும் - " பொருளீட்டுதற்காக குடும்பத்தைப் பிரிந்து பயணம் சென்று விடுகின்ற" - இஸ்லாத்துக்கு ஒவ்வாத கலாச்சாரத்துக்கு முற்றுப் புள்ளி வைப்பதில் முன்னோடிகளாக விளங்கிட வேண்டும் என்பதே எனது நீண்ட நாள் கனவு.
நன்றாகப் படித்து நல்ல திறமைகளை வளர்த்துக் கொண்டு (skilled) குடும்பத்துடன் வெளி நாடு செல்பவர்களைப் பற்றி நான் இங்கே பேசிடவில்லை.

காலத்துக்கேற்ற திறமைகளை வளர்த்துக் கொள்ளாமல், ஏதோ ஒரு வேலை கிடைத்தால் போதும் என்று வெளி நாட்டுக்குக் கிளம்பி விடுகின்ற நமது இளைஞர்களைப் பற்றியே நமது கவலை எல்லாம்.

இது குறித்து நாம் நிறையப் பேசியிருக்கின்றோம். ஆனால் மாற்றம் கண்ட பாடில்லை.

எனவே இது குறித்து நமது இளைஞர்களுடன் எமது கருத்துக்களைப் பகிர்ந்து கொள்வதே இக்கட்டுரையின் நோக்கம்.

பல இளைஞர்களுடன் நாம் பேசும்போது அவர்கள் கேட்பதெல்லாம் - '"இங்கிருந்து கொண்டு என்ன செய்யச் சொல்கிறீர்கள்?" என்பது தான்! இக்கேள்விக்கு நாம் பதில் கண்டு பிடித்தே ஆக வேண்டும்.

இன்னொன்று: "வீட்டில் ஒத்துக் கொள்ள மாட்டார்கள்!" - இதற்கும் நாம் வழி கண்டு பிடித்தாக வேண்டும்.

எனவே நீடூர் சகோதரர்களை நாம் கேட்டுக் கொள்வதெல்லாம் - புதிய தலைமுறைக்கு உங்கள் ஆலோசனைகளை வழங்குங்கள் என்பது தான்.

இந்த கருத்துப் பரிமாற்றத்துக்கு ஒரு தொடக்கமாக -


இதோ ஒரு பிஸினஸ் ஐடியா!

காலையில் எழுந்தவுடன் பெரும்பாலான தாய்மார்களுக்கு இருக்கின்ற பெரிய "வேலை" பள்ளிக்கூடம் செல்கின்ற குழந்தைகளுக்கு மதிய உணவு தயாரித்து "பாக்ஸில்" கட்டித் தருவது தான்.

தாய்மார்களின் இந்தச் சுமையைக் குறைத்திட ஒரு பிஸினஸ் யுத்தி!

நமதூரிலேயே உணவகம் ஒன்றைத் துவக்குவது தான் அது.

பள்ளிக் குழந்தைகளின் வார நாட்கள் ஆறிலும் அவர்களுக்கென மதிய உணவுப் பொட்டலங்கள் தயார் செய்து வீட்டுக்கே சென்று (door delivary) வழங்கிடும் ஒரு புதிய யுத்தி.

அதிகாலையில் எழுந்து பஜ்ர் தொழுது விட்டு உங்கள் பிஸினஸைத் துவக்கிட வேண்டும்.

வெஜிடபிள் பிரைடு ரைஸ், வெஜிடபிள் பிரியாணி, லெமன் ரைஸ், டொமாடோ ரைஸ், என்று நாளொன்றுக்கு ஒரு அயிட்டம். முட்டை வேண்டுமானால் சேர்த்துக் கொள்ளலாம்.

சுவை என்றால் அப்படி ஒரு சுவை இருக்க வேண்டும்!

சுத்தம் என்றால் அப்படி ஒரு சுத்தம் இருந்திட வேண்டும்! உலகத் தரத்தை உள்ளூருக்கே கொண்டு வந்து விட வேண்டும்.

அலுமினியம் பாக்ஸில் பொட்டலம் செய்து வீட்டுக்கே சென்று டெலிவரி செய்திட வேண்டும்.

ஒரு இருநூறு பொட்டலங்கள் விற்பனையாகும் என்பது எமது கணிப்பு.

நிகர லாபம் ஒரு பொட்டலத்துக்கு ஐந்து ரூபாய் வையுங்கள். காலை 9 மணிக்குள் ஆயிரம் ரூபாய் சம்பாதித்து விடலாம்.

மனித வள மேம்பாட்டு அறிஞர்கள் சொல்வதெல்லாம் - எந்த ஒன்றில் ஒருவருக்கு ஆர்வம் இருக்கின்றதோ அந்த ஒன்றிலேயே அவர் ஈடுபடுவது தான் அவருக்கு வெற்றியளிக்கும் என்பது தான்.

எனவே நாம் கேட்பதெல்லாம் -

ஆர்வமுள்ளவர்களே! களம் இறங்குங்கள்!!

Comments