உம்மு அய்மன் (ரலி) அவர்கள் ஏன் அழுதார்கள்?

உம்மு ஐமன் ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் அண்ணல் நபியின் மரணத்தால் கடும் துயரத்திற்கு ஆளானார்கள். மனம் நொந்து அழுது அழுது கடுமையான பலவீனம் ஏற்பட்ட பிறகும் அவர்களின் அழுகை நிற்கவே இல்லை! இதனைக் கேள்விப்பட்டதும் அபூபக்கர் ரளியல்லாஹு அன்ஹு அவர்களும் உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்களும் வந்து உம்மு ஐமனைத் தேற்றினார்கள்.


அவர்களுக்கு ஆறுதல் அளிக்கும் வண்ணம் இவ்வாறு கூறினார்கள். ''ஏன் இவ்வளவு தூரம் கவலைப்படுகின்றீர்கள்! நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு இறைவனிடத்தில் மிகச் சிறந்த சன்மானங்கள் உள்ளன.'' அதற்கு உம்மு ஐமன் ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் ''இதுதான் எனக்குத் தெரியுமே! நான் அழுது கொண்டிருப்பது இறைச் செய்தியின் வருகை (வஹீ) நின்று விட்டதே என்பதற்காகத்தான்!'' என்று பதில் அளித்தார்கள். இதனைக் கேட்டதும் அவர்கள் இருவரின் மனமும் இளகியது. அவர்களும் அழலாயினர். - (ஸஹீஹ் முஸ்லிம்)

ஆனால் தபகாத் இப்னு சஃத் எனும் நூலில் இவ்வாறு உள்ளது:- மக்கள் உம்மு ஐமன் ரளியல்லாஹு அன்ஹா அவர்களுக்கு ஆறுதல் கூறி மரணம் ஏற்படுவது இயற்கையே எனப் புரியவைத்தபோது, ''இறைவனின் விதிப்படி நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மரணம் அடைந்தது குறித்து எனக்குத் தெரியும்! இறைச் செய்தியின் வருகை தடைப்பட்டு விட்டதே என்பதற்காகத்தான் நான் அழுகின்றேன்'' என்று பதில் அளித்தார்கள்.

இந்த ஹதீஸில் நமக்கு நிறைய பாடங்கள் இருக்கின்றன:

1. நமது மார்க்கம் - நிறைவு படுத்தப் பட்டு விட்ட மார்க்கமாகும்.

"இன்றைய தினம் உங்களுக்காக உங்கள் மார்க்கத்தை பரிபூர்ணமாக்கி விட்டேன்; மேலும் நான் உங்கள் மீது என் அருட்கொடையைப் பூர்த்தியாக்கி விட்டேன்; இன்னும் உங்களுக்காக நான் இஸ்லாம் மார்க்கத்தையே (இசைவானதாகத்) தேர்ந்தெடுத்துள்ளேன்;" (5:3)


2. மறைவான அறிவைப் பெறும் வழி முறை வஹீ மட்டுமே. நபியவர்கள் இறுதித் தூதராக அனுப்பப்பட்டு விட்டதால், அவர்களின் மரணத்துக்குப் பின் - மறைவான அறிவு குறித்து நாம் எந்த ஒன்றையும் பெற்றுக் கொண்டு விட முடியாது.

3. நபியவர்கள் கனவில் வந்து சொன்னார்கள் என்பதையெல்லாம் வைத்து மார்க்கத்தில் புதுமையாக எதனையும் புகுத்தி விட முடியாது. கூடாது.      

Comments