தவறுகளைச் சுட்டிக் காட்டுங்கள்! திட்டித் தீர்க்க வேண்டாம்! – பகுதி 2

எதற்கெடுத்தாலும் குற்றம் பிடிப்பவரின் மனநிலை என்ன தெரியுமா?

"எடுத்துக் கொண்ட காரியம் ஒன்றில் எனக்குத் தோல்வி ஒன்று ஏற்பட்டு விட்டால் அதன் பொருள் என்ன? அந்தக் காரியத்தை செய்வதற்கு நான் இலாயக்கானவன் இல்லை என்றல்லவா ஆகி விடும்?


அத்தோடு என்னுடைய தவறான நடைமுறைகள் தான் இந்தத் தோல்வியை எனக்குத் தேடித் தந்தது என்பதை நானே ஒத்துக் கொண்டால் என்னை யார் மதிப்பார்கள்? அப்படியானால் நான் என்ன செய்யலாம்? பழியை இன்னொருவர் மீது போட்டு விட்டால் நான் தப்பித்துக் கொள்ளலாம் அல்லவா?

Exactly -  இதனைத் தான் செய்கிறார்கள் - மற்றவர்கள் மீது குற்றம் பிடிப்பவர்கள்!


"நான் என் மேலதிகாரியிடம் திட்டு வாங்கியதற்குக் காரணமே என் மனைவி தான்! அவள் மட்டும் அன்றைக்கு சரியான நேரத்தில் என் சட்டையையும் பேண்டையும் அயர்ன் பண்ணிக் கொடுத்திருந்தால் எனக்குக் கோபம் வந்திருக்குமா?

கோபம் இல்லை என்றால் நான் எனது கோப்புகளை மறந்து விட்டுச் சென்றிருப்பேனா? ஆக எனக்கு ஏற்பட்ட இந்த நிலைக்கு என் மனைவியே முழுக் காரணம்! எனவே என் மனைவி தான் தன்னை மாற்றிக் கொள்ள வேண்டும்; என் மீது எந்தத் தவறும்  இல்லை!"

இப்படிக் குற்றம் பிடித்தலில் ஒருவர் சுவை கண்டு விட்டார் எனில் அது ஒரு தொடர் கதையாகி விடும். தனக்கு எப்போது தோல்வி ஏற்பட்டாலும் இவர் பிறர் மீது பழியைப் போட்டுவிட்டு தான் குற்றமற்றவர் என்று காட்டிக் கொள்பவராக ஆகி விடுவார்!

இப்படிப்பட்டவர்கள் தங்களைத் திருத்திக் கொண்டு முன்னேறிச் சென்றிடும் வாய்ப்பை முற்றிலும் இழந்து விடுகிறார்கள்!

இந்த கெட்ட பழக்கத்திலிருந்து விடுபட ஒரு உதாரணம் சொல்லப்படுகின்றது.

ஒரு கொடிய விஷப்பாம்பு அது! வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் அது மற்றவர்களைக் கொட்டி விடும்! அந்தப் பாம்பு கொட்டினால் எப்படி வலிக்கும் என்பதும் உங்களுக்குத் தெரியும்; அது மரணத்துக்கும் வழி வகுக்கும் என்பதும் உங்களுக்குத் தெரியும்; அப்படிப்பட்ட பாம்பு ஒன்றிடம் போய் நீங்கள் உங்கள் கையை நீட்டுவீர்களா?

நாம் சொல்வதெல்லாம் நாம் கொடிய பாம்பாகவும் இருந்திட வேண்டாம்!

அந்தப் பாம்பிடம் போய் கொட்டு வாங்குபவர்களாகவும் இருந்திட வேண்டாம்!

குற்றத்தை மற்றவர் மீது சுமத்திடும் கெட்ட பழக்கம் ஒரு தொற்று நோய் போல! கணவனிடமிருந்து மனைவிக்குத் தான் தொற்றும் என்பதில்லை!

குழந்தைகளுக்கும் இந்த நோய் தொற்றிக் கொண்டால் என்னவாகும் குடும்பத்தின் நிலைமை?

இந்தக் கெட்டப் பழக்கம் குடும்பத்தில் ஏற்படுத்தும் தாக்கங்கள்:

- குடும்பத்தினர் யாரும்  தங்களின் கருத்துக்களை வெளியே சொல்ல பயப்படுவார்கள்!

- ஒருவரும் தங்களின் தவறுகளை ஒப்புக் கொள்ள மாட்டார்கள்!

- எந்த ஒரு விஷயத்திற்கும் தாமாகவே நல்லதொரு முடிவை எடுத்திட அஞ்சுவார்கள்!

-  புதிதாத எந்த ஒன்றையும் சாதித்திட வேண்டும் என்ற ஊக்கம் மங்கிப்போய் விடும்!

- குற்றம் சுமத்தப்படுபவர் தனது கோபத்தை அடக்கிக் கொள்வார்; வாய் திறக்க முடியாது!

- மன அழுத்தத்துக்கு ஆளாவார்கள்! வீடே சோக மயமாகக் காணப்படும்!

- தங்களுக்கு எந்த ஒரு மதிப்புமில்லையே என்று கையறு நிலைக்கு ஆளாகுவர்!

- அங்கே தட்டிக் கொடுப்பார் யாரும் இருக்க மாட்டார்கள்! மட்டம் தட்டுதல் மட்டும் தவறாமல் நடந்து கொண்டிருக்கும்!

இப்படிப்பட்ட குடும்பத்தில் மன அமைதி இருக்குமா? கிஞ்சிற்றும் இருக்காது! ஏன்? அங்கே அன்பு, காதல், நேசம், இரக்க உணர்வு எதற்கும் இடமில்லை எனும்போது மன அமைதி எப்படி கிட்டும்!

இல்லற வாழ்வை இதற்காகவா தந்தான் வல்லோன் அல்லாஹ்?

இன்னும், நீங்கள் அவர்களிடம் ஆறுதல் பெறுதற்குரிய (உங்கள்) மனைவியரை உங்களிலிருந்தே உங்களுக்காக அவன் படைத்திருப்பதும்; உங்களுக்கிடையே  அன்பையும், கருணையையும் உண்டாக்கியிருப்பதும் அவனுடைய அத்தாட்சிகளில் உள்ளதாகும்; சிந்தித்து உணரக்கூடிய சமூகத்திற்கு நிச்சயமாக, இதில் (பல) அத்தாட்சிகள் இருக்கின்றன. (30:21)

குற்றம் சுமத்தும் குடும்ப வாழ்வில் - இம்மூன்று அருட்கொடைகளும் காணாமல் போய் விடுகின்றன! இந்த குடும்ப வாழ்க்கைக்கு அர்த்தம் ஏதாவது உண்டா?

எனவே - இன்றே அப்படிப்பட்ட கணவன் மனைவியர் ஒரு முடிவுக்கு வந்திட வேண்டும். அது என்ன?

"நம் குடும்பத்தில் இனி இந்தக் குற்றம் சுமத்தும் கெட்டப் பழக்கத்துக்கு இடமே கிடையாது!"

முடிவு எடுத்து விட்டீர்களா?

அப்படியானால் குடும்பத்தினர் தவறுகள் செய்திடும்போது எப்படி அவர்களைத் திருத்துவது என்று கேட்கிறீர்களா?

ஒரு உண்மையை மீண்டும் இங்கே சொல்வோம்!

திருந்திட வேண்டியது நாம் தான்!  மற்றவர்கள் அல்ல!!

அது எப்படி என்கிறீர்களா? இன்ஷா அல்லாஹ் தொடர்வோமே!

Comments