வெற்றி வாய்ப்பை இழந்த மாணவர்களுக்கு மட்டும்!

அன்புள்ள மாணவச் செல்வங்களே!

மேல்நிலைத் தேர்வில் வெற்றி பெற்ற மாணவச் செல்வங்கள் அனைவருக்கும் எம் இதயம் கனிந்த வாழ்த்துக்கள்!

ஆனால் இம்மடல் மேல்நிலைத் தேர்வில் வெற்றி வாய்ப்பை இப்போது (மட்டும்) இழந்திருக்கின்ற மாணவச் செல்வங்களுக்காக எழுதுகிறேன்.
மேல்நிலைப் படிப்பில் அதிக மதிப்பெண்கள் பெற்றுத் தேறுவது என்பது ஒவ்வொரு மாணவனின் கல்வி வாழ்க்கையிலும் ஒரு முக்கியமான மைல்கல் தான்.


ஆனால் ஒரு சில மாணவர்களும் மாணவிகளும் இத்தேர்வில் வெற்றி பெறாமல் போய்விட்டால் - அவர்கள் தங்கள் வாழ்க்கையிலேயே தோற்று விட்டது போல் எடுத்துக் கொள்ளத் தேவையில்லை.

தாழ்வு மனப்பான்மை தேவையில்லை. விரக்தியடையத் தேவையில்லை. தற்கொலை எண்ணம் தலைதூக்கிடத் தேவையில்லை.

பெற்றோருக்கு பயந்து சாக வேண்டிய அவசியம் இல்லை. பெற்றோர்கள் உங்கள் மீது அளவிலாத அன்பும் நம்பிக்கையும் வைத்திருப்பவர்கள். உங்கள் நலம் நாடுபவர்கள். உங்களைத் திட்டினாலும் அதுவும் உங்கள் நன்மைக்குத் தான்! அதற்கு அவர்களுக்கு உரிமை இருக்கிறது என்று எடுத்துக் கொள்ளுங்கள்.

தேர்வில் வெற்றி பெறவில்லையா? உணர்ச்சி வசப் படுகிறீர்களா? தனிமையை நாட வேண்டாம். உங்கள் நலம் நாடும் நண்பர்களுடன் (மட்டும்) சேர்ந்திருங்கள். வேறு யாரிடமும் ஒரு மூன்று நாட்கள் வரை பேச்சுக் கொடுக்க வேண்டாம்.

உங்கள் தந்தை உங்களைப் புரிந்து கொள்ளக் கூடியவரா? அவரிடம் சென்று உங்கள் நிலையை விளக்க முயற்சியுங்கள். மீண்டும் தேர்வு எழுதுகிறேன், அப்பா! என்று பணிவுடன் சொல்லுங்கள்.

அல்லது ஒரு கால் உங்களுக்கு விருப்பம் இல்லாமலேயே ப்ளஸ்-டூ வில் சேர்க்கப் பட்டிருந்தால் வேறு என்ன துறையில் நீங்கள் ஈடுபட விருப்பம் என்பதையும் உங்கள் பெற்றோரிடம் பொறுமையாக எடுத்துச் சொல்லி அவர்களை சமாதானப் படுத்துங்கள்.

உங்கள் தந்தை மிகவும் கண்டிப்பானவரா? உங்கள் நிலையை உங்கள் உறவினர் அல்லது ஆசிரியர் யாராவது ஒருவர் மூலமாக உங்கள் தந்தைக்குத் தெரிவியுங்கள்.

வாழ்க்கையே முடிந்து போய் விட்டது போல் துக்கப்பட வேண்டாம். உங்கள் வாழ்க்கையின் அடுத்தக் கட்டத்தைத் தேர்வு செய்வதற்கான வாய்ப்பு இப்போது உங்கள் கைகளில்!

வாழ்க்கையில் வெற்றி பெறுவதற்கு பல்லாயிரக் கணக்கான வாய்ப்புகள் உங்களுக்கு முன்னே காத்திருக்கும் போது வாழ்க்கையையே முடித்துக் கொள்ள நாடுதல் புத்திசாலித் தனமே இல்லை.

பள்ளிப் படிப்பில் வெற்றி பெற்றவர்கள் எல்லோருமே வாழ்க்கையில் வெற்றி
பெற்றவர்கள் அல்ல!

பள்ளிப் படிப்பில் தோல்வி அடைந்தவர்கள் எல்லோருமே வாழ்க்கையில் தோல்வி அடைந்தவர்களும் அல்ல!

நீ ஒரு விதை! இனி மேல் தான் -நீ விண்ணை நோக்கி கிளை பரப்பும் மரமாக எழுந்திட வேண்டியுள்ளது!

நீ ஒரு சுரங்கம்! இனி மேல் தான் உனக்குள் இருப்பதை நீ தான் தோண்டி எடுத்திட வேண்டியுள்ளது!

நீ ஒரு பட்டை தீட்டப்படாத வைரம்! இனி மேல் தான் உன்னை நீயே பட்டைத் தீட்டப் புறப்பட வேண்டும்.

நீ இருட்டில் விடப் பட்டதாக எண்ணாதே! ஒரே ஒரு அடி முன்னே எடுத்து வை! வெளிச்சம் உன்னை அரவணைக்கும்!
***

பெற்றோர்களே!

உங்கள் இளவல்கள் தோல்வி அடைந்து உங்களிடம் வரும் போது -
தஞ்சம் புகும் குஞ்சுகளைத தன் இறக்கைகளுக்குள் உள் வாங்கிக் கொள்ளும்
ஒரு தாய்க்கோழி போல் நடந்து கொள்ளுங்கள்!

உங்கள் குழந்தைகளுக்கு நீங்கள் தானே எல்லாம்!

அவர்கள் வேறு எங்கு செல்வார்கள்? அரவணைத்துக் கொள்ளும் தருணம் இதுவே!

நாம் ஒன்றும் குறைந்து போய்விட மாட்டோம்!

நாமும் வெற்றி தோல்விகளை மாறி மாறி சந்தித்தவர்கள் தானே!

Comments