தொடர்ந்து படிப்பதா? அல்லது திருமணம் முடிப்பதா?

கேள்வி:

இந்தக் காலத்தில் படித்த பெண்களைத் தான் திருமணத்தின் போது விரும்புகிறார்கள். இந்த நிலையில் படித்து பட்டம் வாங்க விரும்பினால் திருமணம் தாமதமாகிறது. இந்த சூழ்நிலையில் தொடர்ந்து படிப்பதா? அல்லது திருமணம் முடிப்பதா? இவற்றில் எது சிறந்தது?

பதில்:


இக்கேள்விக்கு எல்லோருக்கும் பொருந்தி வரக்கூடிய பொதுவான ஒரு பதிலைத் தர இயலாது.

பருவ வயதை எட்டுகின்ற ஒவ்வொரு பெண்ணும் - இக்கால சூழ்நிலையையும், நமது மார்க்கத்தின் எதிர்பார்ப்புகளையும் கவனத்தில் கொண்டு தன் திருமணம் மற்றும் தனது மேற்படிப்பு குறித்து தன் குடும்பத்தினருடன் மனம் திறந்து பேசி, அவர்களுடன் கலந்தாலோசித்து நல்லதொரு நிலைப்பாட்டை எடுத்துக் கொள்ள வேண்டும்.
திருமணம் ஆகாத ஒரு பெண்ணைப் பொறுத்தவரை மார்க்கம் எதிர்பார்ப்பதென்ன? உங்களில் திருமணம் ஆகாதவருக்கு திருமணம் செய்து வைத்து விடுங்கள் என்பதே நபிமொழி.

ஆனால் இக்கால சூழ்நிலைகள் ஒரு பெண்ணை எவ்விதங்களில் பாதிக்கின்றன?

படித்து பட்டம் வாங்கினால் தான் நல்ல மாப்பிளை கிடைப்பார்கள் என்கின்ற ஒரு கருத்தோட்டம் நிலவுகின்ற ஒரு காலம்.

மார்க்கத்தை பின்பற்றி வாழத் துடிக்கும் பெண்ணுக்குக் கூட, மார்க்கத்தைப் பின்பற்றி நடக்கும் மாப்பிள்ளை கிடைப்பது அரிதான ஒரு காலகட்டம்.

என்ன படித்திருந்தாலும் ஒரு பெண்ணின் திருமணச் செலவுக்காக பொருள் சேர்த்தாக வேண்டியிருப்பதால் திருமணம் தாமதமாகும் நிலை.

திருமணம் தாமதமாவதால், திருமண உணர்ச்சிகளைக் கட்டுக்குள் வைத்துக் கொள்ள வேண்டிய ஒரு நிலை.

ஒரு பெண் இவ்வாறு முடிவு செய்தால் அது நல்லதே:

"எனக்குப் படிப்பில் மிகுந்த ஆர்வம் இருக்கின்றது. நான் மேற்படிப்பு படிக்கவே ஆசைப்படுகின்றேன். எனது படிப்பு என் எதிர்காலத்துக்கு மிகவும் அவசியம் எனக் கருதுகிறேன்".

ஆனால் குடும்பத்தினர், தங்கள் பெண்ணுக்கு உடன் திருமணம் செய்து விட விரும்புகிறார்கள். மார்க்கத்தின் விருப்பமும் அது தான். இந்தச் சூழலில் அந்தப் பெண் என்ன செய்யலாம்?

திருமண ஏற்பாடுகளைத் தொடங்கி விடலாம். பெண் கேட்டு வருகின்ற மாப்பிள்ளை வீட்டாரிடம் - திருமணத்திற்குப் பிறகு, தங்கள் மகள் படிப்பைத் தொடர்ந்திட அனுமதி அளித்திட வேண்டும் என்பதை திருமண ஒப்பந்தத்திலே எழுதிக் கொண்டு விடலாம்.

ஒரே கல்லில் இரண்டு மாங்காய்!

ஆனால் - இன்னொரு குடும்பத்தின் நிலை வேறு:

பெண் படிக்க ஆசைப் படுகிறாள். குடும்பமோ போதுமான வசதி இல்லாத குடும்பம். தங்கள் பெண்ணுக்கு உடன் திருமணம் செய்து வைக்க இயலாது.
இந்தச் சூழலில் ஒரு பெண் மேற்படிப்பைத் தேர்வு செய்திடலாம்.

ஆனால் ஒரே ஒரு பிரச்னை தான்.

அது என்ன? திருமண உணர்வுகள் தலை தூக்கினால் என்ன செய்வது?

கீழ்க்கண்ட வழி முறைகளைப் பின் பற்றலாம்:

1. உள்ளச்சத்துடன் தொழுதிட வேண்டும். ஆனால் தொழுகை சடங்காகிப் போய்விடக் கூடாது.

2. உபரியான நோன்புகளை வைத்துக் கொள்ள வேண்டும்.

3. வெளியே செல்லும்போது - கண் பார்வையைத் தாழ்த்திக்கொண்டு செல்ல வேண்டும்.

4. ஹிஜாப் - முழுமையாகப் பேணிட வேண்டும்.

5. ஆண்கள் கூடுகின்ற பகுதிக்கு செல்வதைத் தவிர்த்திட வேண்டும். குறிப்பாக இருபாலர் படிக்கின்ற கல்லூரியில் சேர்வதைத் தவிர்த்துக் கொள்ள வேண்டும்.

6. பாலியல் சம்பந்தப்பட்ட பேச்சுக்களைப் பேசுகின்ற இடங்களைத் தவிர்க்க வேண்டும்.

7. பாலியல் சம்பந்தப்பட்ட வார மாத இதழ்கள், வலைதளங்கள் இவற்றை முற்றாகத் தவிர்த்திட வேண்டும்.

8. உடற்பயிற்சி அவசியம்.

9. திருமணம் ஆகும் வரையிலான கால கட்டம் வரை - ஒரு குறிப்பிட்ட லட்சியத்தை நிறைவேற்றிட தங்களை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும்.

10. இறைவனைப் பற்றி அதிகம் அதிகம் நினைத்துக் கொண்டிருக்க வேண்டும். எப்போதும் திருக்குர்ஆனும் கையுமாக இருந்திட வேண்டும்.

Comments