மாப்பிள்ளையிடம் பேசுவது சரியா? தவறா?

கேள்வி:

பெற்றோர் பார்த்து முடிவு செய்ததற்குப் பிறகு தனக்குப் பார்த்த மாப்பிள்ளையிடம் பேசுவது சரியா? தவறா?

பதில்:

வருங்காலக் கணவன் என்பவன் – திருமணம் ஆகும் வரை ஒரு அன்னிய மனிதனே! பெற்றோர் பார்த்து முடிவு செய்ததற்குப் பிறகும் கூட திருமணம் நின்று போய் விட வாய்ப்புகளே இல்லை என்று சொல்லிட இயலாது! எனவே ஒரு மனைவி கணவனுடன் பேசுவது போல், திருமணத்துக்கு முன்னர் இருவரும் பேசிக்கொள்ள அனுமதி இல்லை.


எனினும் – திருமணத்துக்கு முன்னர் மணப்பெண், தான் மணக்க இருக்கும் மாப்பிள்ளையுடன் பேசுவதற்கு இரண்டு நிபந்தனைகளின் அடிப்படையில் அனுமதி உண்டு.

ஒன்று: பெற்றோர் முடிவு செய்திடுவதற்கு முன்னரேயே, ஒரு பெண் அல்லது ஆண் – தான் திருமணம் செய்து கொள்ள இவர் பொறுத்தமானவர் தானா என்பதைத் தெளிவாகப் புரிந்து கொள்ளவும், திருமணத்தின் வழியே இருவரின் எதிர்பார்ப்புகள் என்னென்ன என்பது பற்றியும் பேசிக் கொள்வதற்கு அவ்விருவருக்கும் அனுமதி உண்டு.

இரண்டு: அப்போதும் கூட அவ்விருவரும் தனிமையில் பேசிக் கொள்வதற்கு இறைவன் அனுமதிக்கவில்லை என்பதை இறையச்சம் உள்ள மணமக்கள் புரிந்து கொள்ள வேண்டும். தன் குடும்பத்தார்கள் முன்னிலையில் தான் அப்படிப்பட்ட உரையாடலுக்கு அனுமதி உண்டு.

மற்ற படி – திருமணம் தான் நிச்சயமாகி விட்டதே என்று – இருவரும் – தனிமையில் சந்தித்துப் பேசிக் கொள்வது, காதல் பேச்சுக்களில் ஈடுபடுவது, அன்பளிப்புகள் பரிமாறிக் கொள்வது – இவை எல்லாம் – அறியாமைக்காலப் பண்பாட்டு வகையைச் சேர்ந்ததாகும்.

இன்னொரு கருத்தையும் இங்கே வலியுறுத்த வேண்டியுள்ளது. திருமணம் செய்வது என்று முடிவு செய்து விட்டால் திருமணத்தைச் செய்திட வேண்டியது தானே? ஏன் திருமணத்தை மாதக் கணக்கில் ஒத்திப் போட வேண்டும்? ஒரு சிலர் – ஆண்டுக் கணக்கில் கூட ஒத்திப் போடுகின்றனர்.

பேசி முடித்த பின்னர் – விரைவிலேயே – திருமணத்தை எளிமையாக முடித்துக் கொள்ளுங்கள். பிறகு யாரிடமும் எதற்கும் நீங்கள் அனுமதி கேட்டுக் கொண்டிருக்க வேண்டிய அவசியம் இருக்காது!

Comments