நூல்: சுன்னத்தான இல்லறம் - பகுதி 8

கணவன் - மனைவி பாலியல் குறித்து



தாம்பத்திய வாழ்வில் தடுமாற்றமா?

திருமறையின் 23 வது அத்தியாயத்தின் முதல் 11 வசனங்களின் தமிழ் மொழிபெயர்ப்பைக் கீழே தந்துள்ளேன் உங்கள் சிந்தனைக்கு.


இவ்வசனங்கள் எனக்குள் ஏற்படுத்திய சிந்தனைகளை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். நீங்களும் சிந்தியுங்கள்.

ஈமான் கொண்டவர்கள் நிச்சயமாக வெற்றி பெற்று விட்டனர்.

அவர்கள் எத்தகையயோரென்றால், தங்கள் தொழுகையில் உள்ளச்சத்தோடு இருப்பார்கள்.

இன்னும், அவர்கள் வீணான (பேச்சு, செயல் ஆகிய)வற்றை விட்டு விலகியிருப்பார்கள்.

ஸகாத்தையும் தவறாது கொடுத்து வருவார்கள்.

மேலும், அவர்கள் தங்களுடைய வெட்கத் தலங்களைக் காத்துக் கொள்வார்கள்.

ஆனால், அவர்கள் தங்கள் மனைவிகளிடமோ அல்லது தங்கள் வலக்கரம் சொந்தமாக்கிக் கொண்டவர்களிடமோ தவிர – (இவர்களிடம் உறவு கொள்வது கொண்டும்) நிச்சயமாக அவர்கள் பழிக்கப்படமாட்டார்கள்.

ஆனால், இதற்கு அப்பால் (வேறு வழிகளை) எவர் நாடுகிறாரோ அ(த்தகைய)வர்கள் தாம் வரம்பு மீறியவர்களாவார்கள்.

இன்னும், அவர்கள் தங்கள் (இடம் ஒப்படைக்கப்பட்ட) அமானிதப் பொருட்களையும், தங்கள் வாக்குறுதிகளையும் காப்பாற்றுவார்கள்.

மேலும் அவர்கள் தம் தொழுகைகளை(க் குறித்த காலத்தில் முறையோடு) பேணுவார்கள்.

இத்தகையோர் தாம் (சுவர்க்கத்தின்) வாரிசுதாரர்கள்.

இவர்கள் ஃபிர்தவ்ஸ் (என்னும் சுவனபதியை) அனந்தரங் கொண்டு அதில் இவர்கள் என்றென்றும் தங்கியிருப்பார்கள். (23:1-11)

இந்த இறை வசனங்களில் இடம் பெற்றிருக்கும் முக்கியமான விஷயங்கள் என்னென்ன?

வெற்றி, ஈமான், தொழுகை, உள்ளச்சம், ஸகாத்,  ”வீணானவை”, பாலியல், அமானத், வாக்குறுதி, சுவனம் - இவை தான்!

இவ்வசனங்களை நாம் இரண்டு கண்ணோட்டங்களில் வைத்து அணுகுவோம்.

ஒன்று: சமூக அளவில்; மற்றொன்று: குடும்ப அளவில்

முதலில் குடும்ப அளவில் வைத்து இவ்வசனங்களை ஆய்வோம்.

எங்கிருந்து துவங்கலாம்?

நான் “வீணானவை” என்பதிலிருந்து துவங்கிட விரும்புகிறேன்.

“இன்னும், அவர்கள் வீணானவற்றை விட்டு விலகியிருப்பார்கள்.”

வீணானவை என்பது எவற்றையெல்லாம் குறிக்கும்?

நமக்குப் பயனளிக்காத அனைத்தையும் குறிக்கும்!

இன்று மேற்குலகில் ஒரு விஷயம் மிக ஆழமாக விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப் பட்டிருக்கின்றது.

அந்த விஷயம் என்ன தெரியுமா?

அது தான் DISTRACTION! கவனச் சிதறல்!

இது எதனால் ஏற்படுகின்றது?

நமது கம்ப்யூட்டர் மற்றும் அது வழங்கும் இணைய தள வசதிகளால் ஒரு விதமான கவனச் சிதறலுக்கு நாம் ஆளாகி இருக்கின்றோம் என்கிறார்கள் வல்லுனர்கள்.

கம்ப்யூட்டரும், இணைய தள வசதியும் நமக்கு வழங்கி இருக்கின்ற வசதிகள் எதனையும் நாம் மறுத்திடவில்லை!

ஆனால் அதே நேரத்தில் – எந்த ஒரு பயனும் இல்லாமல் எந்த ஒரு குறிப்பிட்ட வேலைக்கு என்றில்லாமல் கம்ப்யூட்டருக்கு முன்னால் அமர்ந்து கொண்டு (இப்போது லேப்டாப், ஐபாட், ஐஃபோன் – இவையும் அடங்கும்) மணிக்கணக்கில் – உணர்வற்றுப் போய் – நேரத்தை நம்மில் பலர் வீணடித்துக் கொண்டிருக்கின்றோமே – இது ஏற்படுத்தியிருக்கும் நவீன நோய் தான் distraction – கவனச் சிதறல் என்கிறார்கள்.

அதனை நாம் நோய் என்று சொல்வதற்குக் காரணம் இருக்கின்றது.

சற்றே கவனமாக இதனைப் படியுங்கள்:

நமது மூளை இருக்கின்றதே – அது ஒரு அற்புதமான மனித உறுப்பு. அதன் அற்புதங்களில் இரண்டை மட்டும் இங்கே பார்ப்போம்.

ஒன்று:

மனிதனின் இதயமும் மனிதனின் மூளையும் – அவைகளின் இயல்பிலேயே மற்றவர்களுடன் நல்லுறவு வைத்துக் கொள்ளும் தன்மையைப் பெற்றிருக்கின்றன! அப்படித்தான் அவைகளை வடிவமைத்திருக்கின்றான் வல்லோன் அல்லாஹ்! ”we are wired to connect with others” என்கிறது neuroscience.  அதாவது மூளை நரம்பியல்.

இரண்டு:

மனித மூளை – தனது மூளை நரம்புகளை (neurons) வைத்து பல நுணுக்கமான இணைப்புகளைத் தனக்குள் ஏற்படுத்திக் கொள்கின்றது.

சற்றே புரியுமாறு சொல்வோம். வீடு ஒன்றைக் கட்டுகின்றோம். அதில் மின் இணைப்புகளை நம் வசதிக்கு ஏற்றவாறு அமைத்துக் கொள்கிறோம். பின்னர் அந்த இணைப்புகளின் அமைப்பினை வைத்தே நமது வசதிக்கேற்றவாறு மின்சாரத்தை நாம் பயன்படுத்திக் கொள்கிறோம். அதுபோலத்தான் நமது மூளை நரம்புகள் தமக்குள்ளே ஏற்படுத்திக் கொள்ளும் இணைப்புகளும்.

அப்படியானால் நமது மூளையில் ஏற்படுத்தப்படும் அந்த நரம்பு இணைப்புகள் எதனை வைத்து அல்லது எவ்வாறு வடிவமைக்கப்படுகின்றன எனில் – ஒரு மனிதன் அவன் பார்க்கும் உலகம், அவனுக்கு ஏற்படும் அனுபவங்கள்,  அவனது சிந்தனை மற்றும் அவன் தேர்வு செய்கின்ற செயல்பாடுகள் (choices) – இவைகளை வைத்துத் தான்.

ஒரு தடவை ஒரு இணைப்பு ஏற்படுத்தப்பட்டால் – அவனுக்கு ஏற்படுகின்ற அதே போன்ற அனுபவங்கள் அல்லது சற்று ஆழமான அனுபவங்கள், அது அவனது மூளையில் ஏற்படுத்தும் தாக்கத்துக்குத் (impact) தகுந்தவாறு அவனது மூளையின் நினைவாற்றலில் பதிவு செய்யப்பட்டு – அதே போன்று அவன் சிந்திக்கவும் செயல்படவும் அந்த இணைப்பு அவனை வழி நடத்துகிறது. இது தொடரத் தொடர அந்த இணைப்பு வலிமை பெற்று விடுகின்றது!  அந்த இணைப்பின் அடிப்படையிலேயே ஒருவன் தொடர்ந்து சிந்திக்கவும் செயல்படவும் செய்திடும்போது அதுவே அவனது பழக்கமாக  மாறி விடுகின்றது. இதனைத் தான் habit formation என்கிறார்கள்.

அதே நேரத்தில் – மனித மூளை – அதனைப் பயன்படுத்தும் விதத்துக்குத் தகுந்தாற்போல் தன்னுடைய நரம்பியல் இணைப்புகளை நெகிழ்ச்சியுடன் (neural plasticity) மாற்றிக் கொள்ளும் தன்மையும் அதற்கு உண்டு!

இப்போது வலைதளங்களில் அளவுக்கு அதிகமாகத் தங்களின் கவனத்தையும் நேரத்தையும் செலவழிப்பவர்களின் நிலை என்ன என்று பார்ப்போம்.

பின் வரும் சொல்லாடல்கள் எல்லாம் வலைப்பிரியர்களுக்கு மிகவும் அத்துப்படியானவை: tweets, texts, notifications, blogs, shares, and tags….

இவ்வாறு தங்கள் முழுக் கவனத்தையும் வலையிலே தொலைத்து விட்டு நிற்கும் ஒரு மனிதனின் மூளை – தனது நரம்பியல் இணைப்புகளையே மாற்றிக் கொள்கிறதாம்! அதுவும் அதி விரைவாக! Our brain maps are rapidly changing!

இதன் தவிர்க்க முடியாத மாபெரும் விளைவு என்ன தெரியுமா?

செய்கின்ற ஒன்றையே திரும்பவும் திரும்பவும் செய்திடத் தூண்டுகின்ற ஒரு கெட்ட பழக்கம் (compulsion)

இயல்பான மனித வாழ்க்கையிலிருந்து திசை திரும்பி விடுதல் (distraction from mainstream life)

மாய வலைக்கு வெளியே, மற்றவர்களுடன் நாம் நேருக்கு நேர் நல்ல முறையில் பழகுவதற்குத் தேவைப்படும் அழகிய திறமைகள் (relationship skills) எல்லாம் அடிபட்டுப் போய்விடுதல்!

ஏனெனில் எந்த ஒன்றையும் குறித்து தெளிவாக சிந்திக்க இயலாத குழப்பமான மனநிலை (scattered thinking)

முடிவெடுக்கும் திறனில் தெளிவற்ற நிலை (difficulties in making good decisions)

ஆம்!  நமக்கு பல்வேறு “வசதிகளை” அள்ளித்தந்த அதே வலை தான் இப்படிப்பட்ட பின் விளைவுகளையும் சேர்த்தே நமக்கு வழங்கியிருக்கின்றது!

இதனை இன்னும் சற்று ஆழமாகப் பார்ப்போம்.

எந்த ஒன்றையும் ஆழமாக சிந்திப்பதற்கு அமைதியான மனம் தேவை என்பது எப்படி ஒரு உண்மையோ அது போலவே நம்மைச் சுற்றியிருப்பவர்களின் உணர்வுகளைப் புரிந்து கொள்வதற்கும் அமைதியான மனநிலை ஒன்று அவசியம் தேவை!

ஆனால் அதீதமான மின்னணுத் தொடர்பு சாதனங்களைச் சார்ந்து தங்களை அதற்கு அடிமைப்படுத்திக் கொள்பவர்கள் – மற்றவர்களின் உணர்வுகளைப் புரிந்து கொண்டு தங்களின் உறவுகளை செம்மைப்படுத்திக் கொள்ளும் திறனை இழந்து கொண்டிருக்கின்றார்கள் – அவர்களை அறியாமலேயே!

functional memory என்று ஒன்று சொல்வார்கள். இது என்னவென்றால் – குறிப்பிட்ட ஒரு செயலில் நாம் ஈடுபடும்போது அந்த உடனடிச் செயலைச் செய்வதற்கான நினைவாற்றலையே இது குறிக்கும். இது மிகவும் சிறப்பாகச் செயல்பட்டால் தான் – எந்த ஒரு செயலைச் செய்வதற்கும் தேவையான முழுமையான கவனமும் (attention), ஒருமுகப்படுத்தும் திறனும் (concentration) கைவரப் பெறும்.

இந்த உடனடி நினைவாற்றல் நமது மூளையின் எந்தப் பகுதியில் உள்ளது என்றால் நமது முன் நெற்றிக்கு சற்று உள்ளே உள்ள பகுதியில் தான். அதனை ஆங்கிலத்தில் pre-frontal lobe என்று சொல்வார்கள்.

வலை உலகத்தில் தம்மை மறந்து ஒரு மாய உலகத்தில் உலவிக்கொண்டிருப்பவர்களுக்கு இந்த உடனடி நினைவாற்றல் வெகுவாக பாதிப்படைந்து விடுகின்றது!

இதனால் ஏற்படுகின்ற மிகப்பெரும் நஷ்டம் – அவர்களால் மற்றவர்களுடன் நல்ல உறவை அமைத்துக் கொள்ளவே இயலாது என்பது தான்! இதன் பாதிப்பு குடும்பத்துக்குள்ளேயே எனில் கணவன் மனைவி உறவு என்னவாகும்?

சான்று ஒன்றுடன் விளக்குவோம்.

சற்று கற்பனை செய்து கொள்ளுங்கள். நீங்கள் எப்போது பார்த்தாலும் வலைதளத்துக்கு உள்ளேயே வாழ்ந்து கொண்டிருப்பவர் என்று வைத்துக் கொல்வோம். (மன்னியுங்கள்!)

உங்கள் மனைவி ஏதோ ஒன்றை (ஏங்க! வரும்போது குழந்தைக்கு “இது” வாங்கிட்டு வாங்க!) வாங்கி வரச் சொல்லியிருப்பார். அது “எது” என்று உங்கள் நினைவில் பதிந்தே இருக்காது!   நீங்கள் தேமே என்று வந்து நிற்பீர்கள் வெறுங்கையுடன். வருமே கோபம் உங்கள் மனைவிக்கு!

இந்நிலை தொடர்ந்தால் கணவன் மனைவி உறவு என்னாகும்?

நாம் சொன்ன உதாரணம் நமக்குச் சாதரணமாகத் தோன்றலாம். அடிப்படையான விஷயத்தையே எடுத்துக் கொள்வோமே. கணவன் மனைவி பாலியலின் நிலைமை (sexual intimacy) என்னவாகும்?  அடி வாங்கியிருக்கின்றது என்பது தான் அதிர்ச்சித் தகவல்!

மனைவி என்ன சொல்கிறாள் என்பதுவும் உங்கள் மூளையில் பதிவாகாது. நீங்கள் உங்கள் மனைவியுடன் என்ன பேசினீர்கள் என்பதுவும் உங்கள் நினைவில் தங்காது. தாம்பத்திய உறவுக்கும் கூட கவனக் குவிப்பு (excellent working memory) மிக மிக அவசியமாம்!

குழந்தைகளை பள்ளியிலிருந்து வீட்டுக்கு அழைத்து வந்து விடுங்கள் என்று சொல்வார் மனைவி. OK என்று மனைவியிடம் போனில் சொல்வார் கணவர். ஆனால் கவனம் இருந்திருக்காது. வீட்டுக்கு வந்து சேர்வார். குழந்தைகளின் நிலைமை? இது ஒரு சிறிய “வாக்குறுதி” (promise) தான்! இதனை கணவன் மறந்து விடும்போது கணவனின் சொற்களுக்கு என்ன மதிப்பு தருவாள் மனைவி? தன் மறதியை கணவன் நியாயப்படுத்தலாம். ஆனால்  கணவன் தன் மனைவியின் “நம்பிக்கையை” (trust – அமானத்) இழந்து விடுவார்!

விளைவு? கணவன் மனைவியருக்குள் சண்டை சச்சரவு, வாக்குவாதம், அதிரடி விமர்சனங்கள், அவமானப்படுத்துதல், அமைதியாக ஒதுங்கிக் கொண்டு விடுதல்… இறுதியில் விவாக விலக்கு!

இவ்வளவு விளைவுகளுக்கும் அடிப்படைக் காரணம் வலை உலகம் நமக்களித்த distraction தான்!

இப்போது நாம் இறை வசனங்களுக்குச் செல்வோம்:

நாம் எடுத்துக் கொண்ட இறை வசனங்களில் இடம் பெற்றிருக்கும் முக்கியமான விஷயங்களை மீண்டும் நினைவுக்குக் கொண்டு வருவோம்.

அவை என்னென்ன?

வெற்றி, ஈமான், தொழுகை, உள்ளச்சம், “வீணானவை”, பாலியல், அமானத், வாக்குறுதி, சுவனம் – இவை தான்!

வெற்றியுடன் துவங்குகிறது இறைவசனம். வெற்றியை இறை நம்பிக்கையோடு சேர்த்துச் சொல்கிறான் வல்லோன் அல்லாஹ்!

ஈமான் தொழுகையுடன் இணைக்கப்படுகிறது.

தொழுகை உள்ளச்சத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.

இந்த உள்ளச்சம் நமக்கு கவனக் குவிப்பை (concentration and mindfulness) வழங்குகிறது.

ஐந்து வேளை தொடர்ந்து தொழுபவர்கள் “வீணானவற்றில்” மூழ்கிட முடியாது.

அதாவது இறை நம்பிக்கையாளர்களை நவீன கால distraction – ஒன்றும் செய்து விட முடியாது.

தொழுகை தரும் கவனக் குவிப்பு – இறைநம்பிக்கையாளனின் தாம்பத்திய வாழ்க்கையைச் சிறப்பாக ஆக்கி விடுகின்றது. எனவே அவன் தன் திருமண பந்தத்தைத் தவிர்த்த வழிகளில் செல்வதில் இருந்து காக்கப்படுகின்றான்.

மனைவியிடம் தரும் வாக்குறுதிகளை அவை மிகச் சிறியதாக இருந்தாலும் தவறாது நிறைவேற்றுகிறான். மனைவி குளிர்ந்து போய் விடுகின்றாள். கணவன் எந்நேரத்திலும் தனக்காகவே இருக்கின்றான் என்று நம்புகிறாள்.

இது தான் உலகிலேயே அவர்களுக்குச் சுவர்க்கம்!

இவர்களே சுவனத்தின் வாரிசுதாரர்கள்!

சகோதரர்களைக் கேட்டுக் கொள்வது:

1. நீங்கள் வலைதளங்களில் மூழ்கிக் கிடக்கின்றீர்களா?
2. உங்கள் மனைவி உங்களுடன் அடிக்கடி வாக்குவாதங்களில் ஈடுபடுகின்றாரா?
3. உங்களுடைய தாம்பத்திய வாழ்வில் தொய்வு ஏற்பட்டிருக்கின்றதா?

இவை எல்லாவற்றுக்கும் உங்கள் பதில் “ஆம்!” எனில் – நீங்கள் மாறிட வேண்டிய தருணம் இப்போதே தான்!

நபிமொழி ஒன்றைக் கொண்டு நிறைவு செய்வோம்:

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ‘விடைபெறும் ஹஜ்’ஜின்போது ஆற்றிய பேருரையில், “பெண்கள் விஷயத்தில் அல்லாஹ்வை அஞ்சி நடந்துகொள்ளுங்கள். அல்லாஹ்விடம் உடன்படிக்கை செய்தே அவர்களைக் கரம் பிடித்துள்ளீர்கள்; அல்லாஹ்வின் ஆணையின்பேரிலேயே அவர்களின் கற்புக்கு உரிமை பெற்றுள்ளீர்கள்” என்று கூறினார்கள். (அபூதாவூத், இப்னு மாஜா)

மேலும் படித்திட:

கட்டுரை: மனைவியே உங்கள் மையப்புள்ளி!

Comments