மற்றவர் உணர்வுகளுக்கு மதிப்பளியுங்கள்!


மற்றவர் உணர்வுகளை மதிப்பது (respecting the feelings of others) குறித்து நபிமொழிகள் நிறைய உண்டு!

அடுத்தவர் நிலையில் நம்மை வைத்து சிந்தித்தால் அவருடைய உணர்வுகளை நாம் புரிந்து கொள்ள முடியும். இதற்கு ஆங்கிலத்தில் empathy என்று பெயர்.


இவ்வாறு மற்றவர்களின் உணர்வுகளைப் புரிந்து நடந்து கொள்வது நபி வழியாகும். நபியவர்கள் மற்றவர்கள் உணர்வுகளுக்கு எந்த அளவுக்கு மதிப்பளிப்பவர்கள் என்பதை சில நபிமொழிகளைக் கொண்டு ஆய்வோம்.

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்களில் ஒருவரிடம் அவரின் பணியாள் அவரின் உணவைக்கொண்டு வந்தால், அவர் அப்பணியாளைத் தம்முடன் (அமர வைத்துக்கொள்ளட்டும். அவ்வாறு) அமர வைத்துக் கொள்ளவில்லையென்றாலும் அவருக்கு ‘ஒரு பிடி அல்லது இருபிடிகள்’ அல்லது ‘ஒரு கவளம் அல்லது இரண்டு கவளங்கள்’ உணவு கொடுக்கட்டும். ஏனெனில், அவர் (அதை சமைத்தபோது) அதன் வெப்பத்தையும் அதன் சிரமத்தையும் சகித்துக் கொண்டார். அறிவிப்பாளர்: அபூ ஹுரைரா(ரலி) – நூல்: ஸஹீஹுல் புகாரி

இன்னொரு நபிமொழியைப் பார்ப்போம்:

நபி (ஸல்) அவர்கள் கூறியதாக இப்னு மஸ்வூது (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: ”நீங்கள் மூவர் இருந்தால் ஒருவரைத் தவிர்த்து இருவர் மட்டும் உரையாட வேண்டாம், நீங்கள் மக்களுடன் கலக்கும்வரை. ஏனெனில் அது மூன்றாமவரைக் கவலையில் ஆழ்த்திவிடும்.” (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)

அந்த மூன்றாவது நபருடைய நிலையில் உங்களை வைத்து சிந்தித்துப் பாருங்கள். உங்களை அந்த இருவரும் அவமானப்படுத்துவது போல் நீங்கள் உணர்வீர்கள்!

அப்துல்லாஹ இப்னு தீனார் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: நானும் இப்னு உமர் (ரழி) அவர்களும் கடைவீதியிலுள்ள காலித் பின் உக்பாவின் வீட்டின் அருகிலிருந்தோம். அப்போது ஒரு மனிதர் இப்னு உமர் (ரழி) அவர்களிடம் ரகசியம் பேச விரும்பினார். அது சமயம் இப்னு உமர் (ரழி) அவர்களுடன் என்னைத் தவிர வேறு எவருமில்லை. அதனால் இப்னு உமர் (ரழி) மற்றொரு மனிதரையும் அழைத்துக் கொண்டார்கள்.

இப்போது நான்கு நபர்களானோம். என்னிடமும், தான் அழைத்த மூன்றாவது நபரிடமும், ”நீங்கள் இருவரும் சிறிது நேரம் தாமதியுங்கள். ஒருவரைத் தவிர்த்து இருவர் மட்டும் இரகசியம் பேச வேண்டாம் என நபி (ஸல்) அவர்கள் சொல்லக் கேட்டிருக்கிறேன்” என்றார்கள். (அல் முவத்தா)

இப்னு உமர் (ரழி) அவர்கள் ஒருவர் தன்னை வழியில் சந்தித்து ரகசியம் பேச விரும்பியபோது மூன்றாம் நபருக்கு அது சங்கடத்தை ஏற்படுத்தும் என்பதால் அதைத் தவிர்த்து விட்டார்கள். நான்காமவரை அழைத்ததன் மூலம் நபி (ஸல்) அவர்களின் வழிமுறையைக் கற்றுத் தந்து விட்டார்கள். என்ன அற்புதமான அணுகுமுறை பார்த்தீர்களா?

நபித் தோழர்களை – அடுத்தவர் நிலையில் தம்மை வைத்து – சிந்தித்துப் பார்த்திடச் சொல்லி – பாடம் கற்பித்திருக்கின்றார்கள் நபியவர்கள்.

கேள்விப்பட்ட நபிமொழி தான் அது: நபித்தோழர் ஒருவர் நபியவர்களிடம் வந்து விபச்சாரம் செய்திட அனுமதி கேட்டிட மற்ற நபித்தோழர்களுக்குக் கோபம் வந்திட நபியவர்களோ அவரை தம் அருகில் அமர்த்திக் கொண்டு — “நீங்கள் எந்த செயலை செய்திட விரும்புகின்றீர்களோ அதே செயலை உங்கள் தாயோ, சகோதரியோ, மனைவியோ அல்லது மகளோ செய்திட விரும்பிட மாட்டீர்கள் அல்லவா?” என்று சிந்திக்க வைத்து அவரைத் திருத்திய நிகழ்ச்சியை நாம் அறிவோம்.

பொதுவாகவே – அடுத்தவர் நிலையில் நம்மை வைத்து சிந்தித்தாலே போதும் – நமது பல பிரச்னைகள் தீர்ந்து போகும்!

தொழுகை இந்த உணர்வினை நமக்குக் கற்றுத் தரும் என்பதற்கு நபியவர்களே முன்மாதிரி:

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: "நீண்ட நேரம் தொழுகை நடத்தும் எண்ணத்துடன் நான் தொழுகையைத் துவக்குகிறேன். அப்போது குழந்தையின் அழுகுரலை கேட்கிறேன். (எனக்குப் பின்னால் தொழுது கொண்டிருக்கும்) அந்தக் குழந்தையின் தாயாருக்குச் சிரமமளிக்கக் கூடாது என்பதனால் தொழுகையைச் சுருக்கமாக முடித்து விடுகிறேன்'. என அபூ கதாதா(ரலி) அறிவித்தார். (புகாரி)

Comments