எது முழுமையான வளர்ச்சி?

ஒருங்கிணைந்த மனித வள மேம்பாடு

ஆளும் வளரனும், அறிவும் வளரனும், அது தான்டா வளர்ச்சி! - இது ஒரு பாடலின் வரிகள்! ஆம்! இது உண்மை தான். அது எப்படி என்று பார்ப்போம்.


இஸ்லாத்தைப் பொருத்தவரை மனித வள மேம்பாடு என்பது மனிதனின் அனைத்து விதமான வளங்களையும் ஒருங்கிணைத்து வளர்த்திடும் (comprehensive) அற்புதமான வழிமுறையாகும். ஏனெனில் இது இறைவனின் வழிமுறை.


மனித வளங்களை நாம் ஐந்து விதங்களாக பிரித்து ஆய்வு செய்து வருகிறோம் அல்லவா?

அவை: அறிவு வளம் (intellectual resources); ஆன்மிக வளம் (spiritual resources); மன வளம் (psychological resources); ஒழுக்க வளம் (ethical resources); உடல் வளம் (physical resources).

இந்த ஐந்து விதமான வளங்களும் இஸ்லாத்தில் எவ்வாறு ஒன்றுடன் ஒன்று ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன என்பதை பார்ப்போம்.

தொழுவது நம் ஆன்மிக வளம் சம்பத்தப் பட்டது. ஆனால் அதற்கு உடல் சுத்தம் அவசியம் என்பது வல்லோன் அல்லாஹ்வின் கட்டளை!

‘முஃமின்களே! நீங்கள் தொழுகைக்குத் தயாராகும்போது, (முன்னதாக) உங்கள் முகங்களையும், முழங்கைகள் வரை உங்கள் இரு கைகளையும், கழுவிக் கொள்ளுங்கள்; உங்களுடைய தலைகளைத் தடவிக் கொள்ளுங்கள்; உங்கள் கால்களை இரு கணுக்கால் வரை (க் கழுவிக் கொள்ளுங்கள்) – நீங்கள் பெருந்தொடக்குடையோராக (குளிக்கக் கடமைப் பட்டோராக) இருந்தால் குளித்துக் கொள்ளுங்கள்.’ (5: 6)

ஆன்மிக வளம், ஒழுக்க வளத்தை வலிமையாக்கிடும் வல்லமை படைத்தது. ஒழுக்க மேம்பாட்டினை தொழுகை வழியே பெற்றிட வகை செய்கிறான் வல்லோன் அல்லாஹ்!

இன்னும் தொழுகையை நிலை நிறுத்துவீராக் நிச்சயமாக தொழுகை (மனிதரை) மானக்கேடானவற்றையும் தீமையையும் விட்டு விலக்கும்.’ – (29: 45)

மனிதனின் அறிவாற்றல் அவனது ஆன்மிக வளத்தை வலிமையடையச் செய்திடும் என்பது வியப்பாக இல்லை?

நிச்சயமாக அல்லாஹ் வானத்திலிருந்து மழையை இறக்குவதை நீர் பார்க்கவில்லையா? பின்னர் நாமே அதனைக் கொண்டு பல விதமான நிறங்களுடைய கனிகளை வெளியாக்கினோம். மலைகளிலிருந்து வெண்மையானதும், சிவந்ததும், தன் நிறங்கள் பற்பல விதமானவையான பாதைகளும் சுத்தக் கரிய நிறமுடையவும் உள்ளன.

இவ்வாறே மனிதர்களிலும், ஊர்வனவற்றிலும், கால் நடைகளிலும், பல நிறங்கள் இருக்கின்றன் நிச்சயமாக அல்லாஹ்வின் அடியார்களில் அவனுக்கு அஞ்சுவோரெல்லாம் – ஆலிம்கள் (அறிஞர்கள்) தாம். நிச்சயமாக அல்லாஹ் யாவரையும் மிகைத்தவன்; மிக மன்னிப்பவன். (35:28)

அது போலவே ஆன்மிக வளம் மனிதனின் அறிவாற்றலை வளர்த்திடும் என்பதும் உண்மையே!

(யாவற்றையும்) படைத்த உம்முடைய இறைவனின் திரு நாமத்தைக் கொண்டு ஓதுவீராக.

‘அலக்’ என்ற நிலையிலிருந்து மனிதனை படைத்தான்.

ஓதுவீராக: உம் இறைவன் மாபெரும் கொடையாளி.

அவனே எழுதுகோலைக் கொண்டு கற்றுக் கொடுத்தான்.

மனிதனுக்கு அவன் அறியாதவற்றையெல்லாம் கற்றுக் கொடுத்தான். (96: 1- 5)

அது போலவே நமது ஆன்மிக வளம் நம் மன வளத்தையும் மேம்படுத்திட வல்லது.

தொழுகை நமக்கு பொறுமையைக் கற்றுத்தருகிறது.

நோன்பு நமக்கு மன வலிமையை (will power) வழங்கிட வல்லது.

அது போலவே -

ஆன்மிக வளர்ச்சிக்கு அறிவு அவசியம். அறிவு வளத்தை வளர்த்துக் கொள்ளாமல் ஆன்மிகத்தில் ஒருவர் ஈடுபடுகிறார் என்றால், அவர் ஒன்று மூட நம்பிக்கைகளில் மூழ்கி விட வாய்ப்பு அதிகம்!

அல்லது – அவரது ஆன்மிக ஈடுபாடு என்பது வெறும் சடங்கு ரீதியில் மட்டுமே அமைந்திருக்கும்.

அல்லது – நடுநிலையற்ற ஒரு தீவிர போக்கு அவரிடம் காணப்படலாம்.

இஸ்லாத்தைப் பொறுத்தவரை அறிவும் ஆன்மிகமும் கை கோர்த்துச் செல்பவை.இன்னொரு கண்ணோட்டத்தில் உடல் வளமும் ஆன்மிகமும் பின்னிப் பிணைந்தவை.

ஒருவர் தடை செய்யப் பட்ட வழி முறைகளில் ஈட்டிய உணவை உண்கிறார். இறைவனிடம் பிரார்த்திக்கவும் செய்கிறார் எனில் அவர் பிரார்த்தனை ஏற்கப் படாது என்பது நபிமொழி.

மது அருந்துகிறார் ஒருவர் எனில் – அது உடலை மட்டும் கெடுப்பதில்லை. அவரது ஒழுக்க வளம் கேள்விக்குறியாகி விடுகிறது. ‘குடிகாரன்’ பட்டம் வந்து விடுகிறது. மது அறிவு வளத்தையும் கெடுக்க வல்லது.

இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்.

இப்படி மனித வாழ்வு என்பது எல்லா வளங்களையும் ஒருங்கிணைத்தே செல்கிறது எனும்போது – ஒருங்கிணைந்த மனித வள மேம்பாடு மட்டுமே – மனிதனுக்குத் தேவை.

இந்த ஒருங்கிணைந்த மனித வள மேம்பாடு, இஸ்லாத்தைத் தவிர வேறு எதிலும் சாத்தியமில்லை. ஏனெனில் மற்ற அனைத்து வழிமுறைகளும் ‘மனிதர்களால்’ (man-made) உருவாக்கப் பட்டவைகளே!

Comments