யார் சொல்வார்கள் பதில்?

நாம் யார்?

நம்மைப் பெற்றார்கள் நமது பெற்றோர்கள். வளர்ந்தோம். சிறுவனாகப் பள்ளிக்குள் நுழைந்தோம்!

பின்னர் இளைஞனாகக் கல்லூரிக்குள் ஏறி இறங்கினோம். ஆனாலும் 'நாம் யார்?' என்பதை அறிந்து கொள்ளாமலேயே நம் வாழ்வைத் தொடங்கி விட்டோம்.



பொருள் சேர்த்தோம். உண்டோம். குடித்தோம். குடும்பம் அமைத்தோம். நாமும் பிள்ளைகள் பெற்றோம். அவர்களை வளர்த்தோம். ஆனாலும் நமக்கு - நாம் யார் என்று தெரியவில்லை?

ஒரு விஞ்ஞானக் கதை.

விண்வெளிப் பயணி ஒருவர் செவ்வாய் கிரகத்துக்குச் சென்றிருந்தாராம். செவ்வாய் கிரகத்தில் இறங்கியதும் அங்கே அவர் தமது ஆய்வினை மேற்கொண்டிருந்த போது ஒரு கல்லூரிச் சுவர் ஒன்றில் அறிவிப்பு ஒன்று காணப்பட்டதாம்.

அதில் சமீபத்தில் புமிக்குச் சென்று திரும்பிய செவ்வாய்க்கிரக அறிஞர் ஒருவர் புமியில் தாம் கண்டு விட்டு வந்த ஒரு வித்தியாசமான உயிரினம் பற்றி உரையாற்றிடப் போவதாக அறிவிக்கப் பட்டிருந்ததாம். நம்மைக் பற்றித் தான் ஏதோ பேசிடப் போகிறார்கள் என்பதை ஊகித்தறிந்து கொண்ட நமது விஞ்ஞானி ஆர்வத்துடன் அங்கே சென்றாராம்.

அந்த செவ்வாய்க் கிரக அறிஞர் முதலில் பூமியில் உயிரினங்கள் இருக்கின்றன என்பதைத் தக்க சான்றுகளுடன் செவ்வாய்க் கிரகவாசிகளிடம் விளக்கி விட்டு பின்பு இவ்வாறு கூறினாராம்:

'நாம் இது வரை அறிந்த உயிரினங்களிலேயே மிக மிக முன்னேறி விட்ட ஓர் இனம் தான் மனித இனம். மனிதனின் உருவம் எப்படி இருக்கும் என்பதைப் புரிய வைப்பது சற்று கடினமே. எனினும் புரிவதற்காகச் சொல்கிறேன். தலைகீழாகக் கவிழ்க்கப் பட்ட ஒரு மத்து. அதற்கு நான்கு கைப்பிடிகளை மாட்டி விட்டது போல் தான் இருக்கிறான் மனிதன்.

இவர்கள் பூமியில் அங்கும் இங்குமாக ஓடித் திரிகின்றார்கள். இவர்கள் அதி வேகமாக ஓடுகிறார்கள். இவர்களுக்கு கோப உணர்ச்சி அதிகம். கோப வெறி தலைக்கேறியவர்களாக அவர்கள் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொள்கிறார்கள். மற்ற மனிதர்களைக் கொன்று விடுவதில் இவர்களுக்கு அலாதியான இன்பம்.

நான் பூமியில் பல பகுதிகளுக்கும் சென்று பார்த்தேன். ஆயிரக்கணக்கான மனிதர்கள் அணி வகுத்துக் கொண்டு ஒருவரையொருவர் அழித்துக் கொள்வதற்காக ஒன்று சேர்கிறார்கள். நவீனமான ஆயுதங்களை அவர்கள் வைத்திருக்கிறார்கள். மற்றவர்களை சித்திரவதை செய்கிறார்கள். அவர்களுடைய போர்க்களம் கொடூரமாகக் காட்சியளிக்கிறது.

அவர்கள் தங்களின் பசியைத் தணித்துக் கொள்வதற்காகத் தான் இவ்வாறு மற்றவர்களைக் கொன்று போடுகிறார்களோ என்று தான் முதலில் நினைத்தேன். இறந்த மனித உடல்களை அவர்கள் உண்பதில்லை! எனவே, அவர்களுக்கு மனிதர்களைக் கொலை செய்கின்ற அந்தச் செயலே அவர்களுக்கு மகிழ்ச்சியைத் தருகின்றது என்று நான் புரிந்து கொண்டேன்.

தக்கக் காரணங்கள் எதுவுமின்றியே, மனிதர்களை அழிக்கின்ற அந்த மக்கள் தங்களுடைய அதிகமான நேரத்தையும், ஆற்றலையும், திறமையையும் கொலை ஆயுதங்களை உருவாக்குவதிலேயே செலவழிக்கிறார்கள்.

மற்றவர்களைக் கொன்று போட்டு அவர்களின் சொத்துக்களை அழித்த பின்பு தங்களுடைய 'வெற்றியை' பெருமையோடும் உணர்ச்சி பொங்கிடவும் கொண்டாடுகிறார்கள். தங்களுடைய மக்களின் வீரத்தைக் குறித்துக் கவி பாடி மகிழ்கிறார்கள்.

மேலும் இவர்களின் உணவுப் பழக்கங்கள் மிகவும் வேடிக்கையானவை. பழங்கள், காய்கறிகள், மாமிசம் - போன்றவற்றை இவர்கள் வீட்டுக்கு வாங்கிச் செல்கிறார்கள். மிகவும் காரமான பல பொருட்களை அவற்றில் கலந்து வேக வைக்கிறார்கள்.

பின்பு மிகுந்த ஆவலுடன் அவற்றை விழுங்குகிறார்கள். சத்தான பல உணவு வகைகளை அவர்கள் உண்டாலும் அடிக்கடி அவர்களுக்கு மருத்துவர்கள் தேவைப் பட்டுக் கொண்டே இருக்கிறார்கள்.

மருத்துவர்களுக்கு அந்த சமூகத்தில் அவ்வளவு மதிப்பு. இருந்த போதிலும் மனிதர்கள் பல விதமான நோய்களால் அவதிப் படுகிறார்கள்.

மிக முன்னேறி விட்ட ஓர் உயிரினமாகக் காட்சியளித்தாலும் மனிதர்கள் உண்மையிலேயே பரிதாபத்துக்குரியவர்களாகவே காணப்படுகிறார்கள்.'

மற்றவர்கள் பார்த்து பரிதாபப் படக் கூடிய நிலையிலா நாம் இருக்கின்றோம்?

இல்லை - நமக்கெனப் பெருமை ஏதும் இருக்கிறதா?

"நாம் யார்?"

"எங்கிருந்து வந்தோம் நாம்?"

"எங்கே செல்லப்போகிறோம் நாம்?"

யார் சொல்வார்கள் பதில்?

அதுவும் "சரிய்யான" பதில்!

Comments