மாற்றி யோசி!

(அறிவு வளத்தை வளர்த்துக் கொள்வது எப்படி?)

மனிதனின் அறிவு வளத்தை நாம் இரண்டு வகையாகப் பிரித்துப் பார்க்கலாம்.

ஒன்று – புலன்களின் மூலமாகப் பெறப் படும் அறிவு.

இரண்டு – புலன்களுக்கு அப்பாற்பட்டவை பற்றிய அறிவு,


மனிதன் – தன்னிடம் இருக்கின்ற ஐந்து புலன்களின் வழியாகத் தான் அறிவைப் பெறுகின்றான். வளர்த்துக் கொள்கின்றான். இவ்வாறு தனது ஐந்து புலன்களின் வழியாகப் பெறுகின்ற அறிவைத் தான் நாம் ‘அறிவியல்’ என்று சொல்கிறோம்.


இந்த அறிவியல் அறிவு மனிதனின் துவக்க கால வரலாற்றிலிருந்து இன்று வரை நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக – இப்போது அதி விரைவாக – வளர்ந்து கொண்டிருக்கிறது!

அதே நேரத்தில் – மனிதனின் அறிவு வளத்தை முழுமையாக வளர்த்துக் கொள்வதற்கு இந்த அறிவியல் அறிவு மட்டும் போதாது!

மனிதனுக்கு - நாம் எதற்காகப் படைக்கப்பட்டிருக்கின்றோம்; நமது படைப்பின் நோக்கம் என்ன; நாம் எவ்வாறு இப்பூவுலகில் வாழ்ந்திட வேண்டும்; மரணத்துக்குப்பின் நமது நிலை என்ன; – என்பன போன்ற நமது வாழ்க்கைக் குறித்த கேள்விகளுக்கு புலன் உணர்வுகள் மூலமாக நாம் பெறுகின்ற அறிவியல் அறிவைக்கொண்டு தக்க பதில்களை நாம் பெற்றுக் கொண்டு விட முடியாது!

அப்படியானால் புலன் உணர்வுகளுக்கு அப்பாற்பட்ட நமது வாழ்க்கை சம்பத்தப்பட்ட அறிவை நாம் பெறுவது எங்ஙனம்?

நமக்குத் தெரியாத ஒரு விஷயத்தை நாம் தெரிந்து கொள்வது எப்படி? அந்த விஷயத்தை யார் தெளிவாகத் தெரிந்து வைத்திருக்கின்றாரோ அவரிடம் கேட்டுத் தெரிந்து கொள்வது தான் அதற்குரிய வழி! ஆம், அறிந்தவனிடமிருந்து தான் ஒன்றை நாம் தெரிந்து கொள்ள முடியும்!

புலன் உணர்வுகளுக்கு உட்பட்ட மற்றும் உட்படாத எல்லா அறிவுக்கும் ஆற்றலுக்கும் சொந்தக்காரன் நம்மைப் படைத்த இறைவனே! ஆம்! எல்லா அறிவுக்கும் சொந்தக் காரனான அந்த ஆண்டவனிடத்தில் இருந்து தான் நாம் வாழ்க்கைக்கான மிகச் சரியான அறிவைப் பெற்றுக் கொள்ள முடியும்!

எனவே முழுமையான அறிவு வளத்தை நாம் வளர்த்துக் கொள்ள நமக்கு இரண்டு வழிமுறைகள் உண்டு:

ஒன்று: இறை வழிகாட்டுதல்

மற்றொன்று: அறிவியல்

இக்கட்டுரையில் மனிதன் – தன் புலன்களின் வழியே பெற்றுக் கொள்கின்ற அறிவியல் அறிவை வளர்த்துக் கொள்வது என்பதை மட்டும் என்று பார்ப்போம்.

இன்னும், (இறைவன்) எல்லாப் (பொருட்களின்) பெயர்களையும் ஆதமுக்கு கற்றுக் கொடுத்தான்; (2:31)

அறிவு என்பது மனிதனின் முதன்மையான மனித வளம் ஆகும்.

ஆனால் பிறக்கும்போதெ மனிதன் அறிவாற்றல் மிக்கவனாகப் பிறப்பதில்லை. தாயின் வயிற்றிலிருந்து பிறக்கும் எந்த ஒரு குழந்தையும் எந்த ஒன்றையுமே அறியாத நிலையிலேயே பிறக்கின்றது.

உங்கள் தாய்மார்களின் வயிறுகளிலிருந்து நீங்கள் ஒன்றுமே அறியாதவர்களாக இருந்த நிலையில் உங்களை அல்லாஹ் வெளிப்படுத்துகிறான்; அன்றியும் உங்களுக்குச் செவிப்புலனையும், பார்வைகளையும், இதயங்களையும் – நீங்கள் நன்றி செலுத்தும் பொருட்டு – அவனே அமைத்தான். (16:78)

மனிதர்கள் தங்களின் அறிவை வளர்த்துக் கொள்வதற்காகத்தான் ஐந்து புலன்களையும், சிந்திகின்ற இதயத்தையும் வழங்கியிருக்கின்றான் வல்லோன் அல்லாஹு தஆலா. ஆதிபிதா ஆதம் (அலை) அவர்கள் காலம் தொடங்கி, இன்றைய நவீன அறிவியல் யுகம் வரை மனிதனின் அறிவு எப்படி வளர்ந்தது? நாம் மேலே குறிப்பிட்ட படி ஐந்து புலன்களின் வழியே தான் தன் அறிவை வளர்த்துக் கொள்கிறான் மனிதன். உதாரணமாக கண்களால் உற்று நோக்கி (observation) மனிதன் கற்றுக் கொண்ட ஒரு சம்பவம் பற்றி திருமறை குர்ஆன் நமக்குச் சொல்லிக்காட்டுகிறது.

ஆதத்தின் இரு மகன்கள் வரலாறு நமக்குத் தெரியும். ஆபில் அவர்களை அவருடைய சகோதரர் காபில் கொன்று விட்டார். இச்சம்பவம் திருமறையிலே விளக்கப் பட்டுள்ளது.

(இதன் பின்னரும்) அவருடைய மனம் தம் சகோதரரைக் கொன்றுவிடுமாறு தூண்டிற்று; ஆகவே அவர் (தம்) சகோதரரைக் கொலை செய்துவிட்டார்; அதனால் அவர் நஷ்டமடைந்தவர்களில் ஒருவர் ஆகிவிட்டார். (5:30)

இது உலகில் நடந்த முதல் கொலை. சரி, பிரேதத்தை என்ன செய்வது?

பின்னர் தம் சதோதரரின் பிரேதத்தை (அடக்குவதற்காக) எவ்வாறு மறைக்க வேண்டுமென்பதை அவருக்கு அறிவிப்பதற்காக அல்லாஹ் ஒரு காகத்தை அனுப்பினான்; அது பூமியை தோண்டிற்று (இதைப் பார்த்த) அவர் “அந்தோ! நான் இந்த காகத்தைப் போல் கூட இல்லாதாகி விட்டேனே! அப்படியிருந்திருந்தால் என் சகோதரனுடைய பிரேதத்தை நான் மறைத்திருப்பேனே!” என்று கூறி, கை சேதப்படக் கூடியவராகி விட்டார். (5: 31)

மனித இனம் இப்படித் தான் தனது அறிவை வளர்த்துக் கொண்டு வருகிறது – ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் காலத்திலிருந்து.. இன்று வரை!

பறவையைக் கண்டான் விமானம் படைத்தான் என்பதும் உண்மையே!

மண்டை ஓட்டினை உதைத்து விளையாடியத் துவங்கிய மனிதன் தான் பின்னர் அதனை கால் பந்தாக மாற்றியிருக்கிறான்.

மாதிரிக் கணக்கு ஒன்றை விளக்கிக் காட்டித்தான் மற்ற கணக்குகளைப் போடச் சொல்கிறார் கணித ஆசிரியர்.

வல்லோன் இறைவன் உதாரணங்கள், உவமைகளைக் கூறுவதன் நோக்கமும் – மனிதனின் இயல்பு அறிந்து தான்! நாம் கண்களால் பார்த்து ரசிக்கின்ற தோட்டம் எனும் சொல் மூலமாகத் தான் நாம் பார்க்காத சுவனத்தை அறிமுகப்படுத்துகிறான் வல்லோன் அல்லாஹ்!

நபியவர்களை அழகிய முன்மாதிரியாக நமக்கு ஆக்கியிருப்பதுவும், நபியவர்களைப் பார்த்து நாம் கற்றுக் கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான்.

என்னை எவ்வாறு தொழக் கண்டீர்களோ அவ்வாறே நீங்கள் தொழுங்கள் என்பதுவும் நபிமொழி. ஹஜ் கடமைகளை நிறைவேற்றுவதும் இதே வழிமுறையைப் பின்பற்றித்தான்.

குழந்தைகளும் அப்படித்தான் ஒவ்வொன்றையும் கற்றுக் கொள்கின்றன.

எங்கள் ஊரில் ஒரு ஆசிரியர். ஒரு முறை அவர் வீட்டில் நடந்த நிகழ்ச்சி ஒன்றைச் சொன்னார். அவரது சிறிய மழலைக் குழந்தைக்கு ஒவ்வொன்றாக இது என்ன, அது என்ன – என்று ஒவ்வொன்றாகச் சொல்லிக் கொடுத்து வந்தாராம்.

“கைக்குழந்தைக்கு” ஆங்கிலச் சொல் இலகுவாக இருக்கும் என்று BABY என்று சொல்லிக் கொடுத்திருக்கிறார். வீட்டில் வளர்க்கப் பட்டு வந்த கோழிகளை “BO-BO” என்றும் சொல்லிக் கொடுத்தாராம். ஒரு நாள் அவர் வீட்டுக் கோழி குஞ்சு பொரித்த போது கோழிக் குஞ்சுகளைப் பார்த்த அந்த மழலை எப்படி அழைத்திருக்கும் என்கிறீர்கள்?

“BABY-BOBO” என்று அழைத்ததாம்!

ஒரு உணவுப் பண்டத்தைத் தயாரிக்கிறான் ஒருவன். இன்னொருவன் வந்து அதில் புதிதாக ஒன்றை சேர்த்து அல்லது ஒன்றுக்கு பதிலாக இன்னொன்றைப் போட்டு புதியதொரு உணவுப் பண்டத்தை செய்து தருகிறான்.

நவின் கிருஷ்ணா என்ற மாணவன் ஒருவன் – பூச்சிகளைக் கொல்லும் பூச்சிக் கொல்லி மருந்து மனிதனையும் கொல்லும் என்றால் மனிதனுக்கு விஷமான நிகோடினை வைத்து பூச்சிகளைக் கொல்ல முடியுமா என்று சிந்தித்தான். விளைவு – நமக்கு அவ்வளவாகத் தீங்கு விளைவிக்காத தாவர-பூச்சிக் கொல்லி மருந்து தயார்!

இப்படித்தான் மனிதனின் அறிவு வளம் வளர்ந்து கொண்டே செல்கிறது. நம்மைப் போன்ற சாமானியர்களுக்கும், இது போன்று பல சிந்தனைகள் உதிக்கத் தான் செய்யும். நமக்கும் கண்டுபிடிப்பாளர்களுக்கும் உள்ள ஒரே வேறுபாடு, நாம் சிந்திப்பதோடு நிறுத்திக் கொள்வோம். அவர்கள் செய்து பார்த்து விடுவார்கள். அவ்வளவு தான்!

இன்ஷா அல்லாஹ் இது குறித்து மேலும் எழுதுவோம்.

Comments