உன்னை நீ வளர்த்துக் கொள்ளாவிட்டால்?

மனித வள மேம்பாடு எதற்காக?

மனித வளங்களை நாம் ஐந்து விதங்களாகப் பிரித்து நாம் ஆய்வு செய்திடலாம். அவை: அறிவு வளம் (intellectual resources); ஆன்மிக வளம் (spiritual resources); மன வளம் (psychological resources); ஒழுக்க வளம் (ethical resources); உடல் வளம் (physical resources).


இப்போது மனித வள மேம்பாட்டின் அவசியம் குறித்து நாம் சிறிது கவனம் செலுத்துவோம்.


1. மனிதன் பிறந்ததே அவன் வளர்வதற்காகத்தான்! ஒருவனின் மனித வளங்கள் வளர்க்கப்படவில்லை எனில் – அவன் ஒரு குறை மனிதன்! இதனை ஆங்கிலத்தில் – personality disorder என்று குறிப்பிடுகின்றார்கள்.

2. ஒரு மனிதனின் செயல்பாடுகளைத் (behavior) தீர்மானிப்பவை அவனது மனித வளங்களே! வாழ்க்கையில் – சிறப்பாகச் செயல்பட இயலாதவர்கள் சூழ்நிலைக் கைதிகளாகிறார்கள் (victims of situations).

3. மனித வாழ்வின் மிகப்பெரிய சவால்களைச் சந்திப்பதற்கு – வாழ்வின் முக்கியமான தருணங்களில் அவன் சிறப்பான முடிவுகளை எடுத்திட வேண்டிய அவசியம் ஏற்படும். ஒருவனது முடிவெடுக்கும் திறமை (decision making skill) என்பது அவனது மனித வளத்தைப் பொறுத்ததே!

4. ஒவ்வொரு மனிதனும் வாழ்க்கையில் வெற்றி பெறவே விரும்புகின்றான். ஒரு மனிதனின் மனித வளங்கள் எந்த அளவுக்கு வளர்க்கப் படுகின்றதோ, அந்த அளவுக்குத் தான் அவனது வாழ்க்கை வெற்றியின் (life success) ஆழ அகலம் அமைந்திருக்கும் என்றால் அது மிகையில்லை!

5. அது போலவே – மனிதன் தனது ஐந்து விதமான வளங்களையும் எந்த அளவுக்கு வளர்த்துக் கொள்கின்றானோ அந்த அளவை வைத்தே ஒரு மனிதனின் வாழ்க்கை இலக்கினை (life goal) தீர்மானிக்க இயலும்.

6. ஒரு மனிதன் இவ்வுலகுக்கு அளிக்கின்ற பங்களிப்பு (contribution) என்பதும் அவனது மனித வளங்கள் எந்த அளவுக்கு மேம்படுத்தப்பட்டுள்ளதோ அந்த அளவைப் பொறுத்ததே.

7. தலைமைத்துவம் பற்றி நிறைய பேசுகிறாம். ஆனால் அந்தத் தலைமைத்துவத் திறன் (leadership skills) என்பது ஒருவனது மனித வளங்களைப் பொறுத்ததே!

8. மனித வளங்கள் வளர்க்கப் பட்டால் தான் மனித உறவுகள் (human relations) சீரடையும். அது குடும்பத்துக்கு உள்ளே கணவன்-மனைவி உறவாக இருந்தாலும் சரி, பெற்றோர்- பிள்ளைகள் உறவாக இருந்தாலும் சரி, பணியிடங்களில், பொது வாழ்வில் நாம் மற்றவர்களுடன் பழகுகின்ற உறவாயினும் சரி – நமது மனித வள மேம்பாட்டைப் பொறுத்தே அவை சீர் பெறும்.

அடுத்து – நாம் மேலே குறிப்பிட்ட ஐந்து வளங்களையும் ஒவ்வொருவரும் வளர்த்துக் கொள்ள வேண்டியதன் அவசியத்தையும், அப்படி வளர்த்துக் கொள்ளாவிட்டால் ஏற்படும் பாதிப்புகளைப் பற்றியும் சுருக்கமாக இங்கே பார்ப்போம்.

ஆன்மிக வளம் மனிதனுக்கு மன அமைதியைத் (peace of mind) தருகிறது. ஆன்மிக வளம் மனிதர்களுக்கு நேர்வழியைக் (Guidance) கற்றுத் தருகின்றது. ஆன்மிக வளம் மனிதனைப் பொறுப்புள்ளவனாக (responsible and accountable) ஆக்குகின்றது. ஆன்மிக வளம் மனிதனைப் பண்பாளனாக (character) மாற்றிக் காட்டுகின்றது.

ஆனால் அதே நேரத்தில் முறைப்படியான ஆன்மிக வளம் வழங்கப்படவில்லால் ஏற்படும் விளைவுகள்: மூட நம்பிக்கை (superstitious); ஆணவம் (aggressiveness); பொறுப்பற்ற மனிதர்கள் (irresponsible); குறிக்கோள் அற்ற வாழ்க்கை (no worthwhile goal in life).

அறிவு வளம் மனிதனை தன்னம்பிக்கை (self confidentce) உடையவனாக மாற்றுகிறது. அறிவு வளம் மனிதனைத் திறமை உடையவனாக (skilled) ஆக்குகின்றது. அறிவு வளம் மனிதனின் பிரச்னைகளுக்குத் தீர்வைச் (problem solving) சொல்லித் தருகின்றது. அறிவு வளம் மனித வாழ்வை இலகுவாக ஆக்கித் தருகின்றது; மேம்படச் செய்கின்றது.

ஆனால் தூய்மைப்படுத்தப்படாத “அறிவு” மனிதனுக்கு கேட்டையே மிகுதியாக வழங்கி விடுகின்றது; தனக்கு எல்லாம் தெரியும் எனும் ஆணவம்; மற்றவர்களைச் சுரண்டிப் பிழைக்கும் மோசடித்தனம் (exploitation); மனித இனத்தையே கூண்டோடு காலி செய்கின்ற – weapons of mass destruction – ஆயுதங்களை உருவாக்கித் தந்தது மனிதனுக்குத் தூய்மையைக் கற்றுத் தராத நவீன கல்வி!

மன வளம் மற்றவர் உணர்வுகளைப் புரிந்து கொள்ள உதவுகின்றது. மன வளம் தனது உணர்ச்சிக்களைக் கையாளக் கற்றுத் தருகின்றது. மன வளம் பொறுமையைக் கற்றுத் தருகின்றது. ஆனால் மன வளம் பண்படுத்தப் படாத போது அது மனிதனை மிருகமாக்கி விடுகின்றது. மன அழுத்தம், மனச்சோர்வு, பதற்றம் – போன்ற மன நலப் பிரச்னைகளை உண்டாக்கி விடுகின்றது. மனிதனைத் தற்கொலைக்குத் தள்ளி விடுகின்றது.

ஒழுக்க வளம் (ethical resources) மனிதனை பண்புள்ள மனிதனாக (people of character)ஆக்குகின்றது. நேர்மையாளர்களை உருவாக்குகின்றது (people of integrity). கொள்கைப் பிடிப்புள்ளவர்களை (principled people) உருவாக்குகின்றது தீமைக்கெதிராக மனிதர்களைக் (people of courage) குரல் கொடுக்க வைக்கின்றது. ஏழைகள், அனாதைகள், பெண்கள் , முதியவர்களுக்காகப் பாடுபட வைக்கின்றது (culture of concern for others).

ஆனால் ஒழுக்க வளம் வளர்க்கப்படவில்லையெனில் – சமூகத்தில் எல்லாவிதமான தீமைகளும் அரங்கேறுகின்றன. குற்றவாளிகள் உருவாகின்றார்கள். நீதி நிலைநிறுத்தப் படுவதில்லை. படுகொலைகள் அதிகரிக்கின்றன. விபச்சாரம் பெருகுகின்றது.

உடல் வளம் மேம்படுத்தப் படும்போது மனிதன் உடல் வலிமையைப் பெறுகின்றான். ஆரோக்கியமாக வாழ்கின்றான். சுறுசுறுப்பாக இயங்குகின்றான். இல்லறம் சிறக்கின்றது.

உடல் வளம் மேம்படுத்தத் தவறும் போது பல விதமான நோய்கள் மனிதனைப் பீடிக்கின்றன. வளர்ச்சியற்ற குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரிக்கின்றது. குண்டு மனிதர்கள் (obesity) உருவாகின்றார்கள். சோம்பேறி மனிதர்கள் தோன்றுகின்றார்கள்.

அதே நேரத்தில் இன்னொன்றையும் நாம் சொல்லிட வேண்டும். அதாவது நாம் மேலே சொன்ன ஐந்து விதமான வளங்களும் ஒருங்கிணைந்த முறையில் வளர்க்கப்பட வேண்டும். ஒன்றை வளர்த்து இன்னொன்றை விட்டு விடக்கூடாது.

Comments