எதற்கெடுத்தாலும் அவசரப்படுபவரா நீங்கள்?

(மனத் தூண்டலைக் கட்டுப்படுத்துவதன் அவசியம்!)

மனத்தூண்டலை ஆங்கிலத்தில் Impulse என்றும் அதனைக் கட்டுப் படுத்துவதை Impulse control என்றும் அழைக்கிறார்கள். பின்விளைவைப் பற்றி யோசிக்காமல் ஒன்றை செய்து விடுவதைத் தான் ஆங்கிலத்தில் Impulsiveness என்று குறிப்பிடுகின்றார்கள்.


ஒருவர் மனத்தூண்டலுக்கு ஆட்பட்டு விட்டால்- அவர் அவசரக் காரராக மாறி விடுவார். எனவே அவர் செய்யும் செயல்கள் அறிவுக்குப் பொறுத்தமாக இருக்காது. ஒன்றைச் செய்து விட்டு பின்னர் வருந்துவார்.

இவர் தாமாக எந்த ஒரு நன்மையான காரியத்தையும் செய்திட முன் வர மாட்டார்.அப்படி ஒரு காரியத்தில் அவர் இறங்கினாலும் கூட ஒரு சிறு பின்னடைவு ஏற்பட்டாலும் தொடர்ந்து முன்னேறிச் செல்லும் ஆர்வம் இவரிடம் இருக்காது. அப்படியே போட்டு விட்டுப் போய் விடுவார். தற்காலிகத் தோல்வியைக் கூட இவரால் தாங்கிட இயலாது. அடிக்கடி எரிந்து விழக் கூடியவராக இருப்பார்.

வேறு எவரும் கூட – இவரை வைத்துக் கொண்டு ஒரு காரியத்தில் இறங்கிட இயலாது. ஒத்துழைக்க மாட்டார். பாதியில் விட்டு விட்டு ஓடி விடுவார். நம்பிக்கைக்கு உரியவராக இவர் விளங்கிட மாட்டார்.

தன்னம்பிக்கை சுத்தமாக இருக்காது. தான் எதற்கும் இலாயக்கில்லை என்ற தாழ்வு மனப்பான்மை இவரிடம் தவறாது குடி கொண்டிருக்கும். எனவே மற்றவர் மீது இவர் பொறாமை கொள்வார்.

ஒருவர் இப்படிப்பட்ட “மனோ இச்சைக்காரர்” (impulsive person) தானா என்பதை எப்படி அறிவது? ஒரு விஷயத்தில் ஒருவர் ஆசைப்பட்டு விட்டால் அதனை உடனேயே அடைந்திடத் துடிக்கின்றாரா அல்லது ஆலோசித்து முடிவெடுக்கும் பொறுமை அவரிடம் இருக்கிறதா என்று பாருங்கள்.

ஒரு திரைப்படம் வெளி வருகிறது. முதல் நாள் நல்ல கூட்டம். வெளியில் மறைமுகமாக அதிக விலைக்கு டிக்கெட் விற்கிறார்கள். ஓராயிரம் ரூபாய் வரை கூட விற்கப் படுவதாகக் கேள்வி. அன்றே அந்த திரைப்படத்தைப் பார்த்திடத் துடிக்கின்றாரா அவர்? – இவரைத் தான் நாம் சொல்கிறோம் – மனோ இச்சைக்காரர் என்று!

ஆடித் தள்ளுபடி. ஒன்று வாங்கினால் ஐந்து இலவசம். மோட்டார் சைக்கிளை எடுத்துக் கொண்டு விழுப்புரத்திலிருந்து சென்னைக்கு விரைகிறார் ஒருவர். தனக்கு அது தேவை தானா, இப்போதே தேவையா, இவ்வளவும் தேவை தானா – என்றெல்லாம் சிந்திப்பதற்கு அவருக்கு நேரம் இல்லை. இவர் தான் நாம் குறிப்பிடும் மனோ இச்சைக்காரர்!

இத்தகையவர்கள் வாழ்க்கையில் வெற்றி பெறுவது மிக மிகக் கடினம்!

மனோ இச்சையைக் கட்டுக்குள் வைத்திருப்பவர்களும் நம்மிடையே இருக்கிறார்கள். மனம் ஒன்றை உடனேயே எதிர்பார்க்கும். உடனேயே செயற்களத்தில் நம்மைத் தள்ளி விடத் துடிக்கும். ஆனாலும் அவர் ஒரு கணம் சிந்திப்பார். இது தேவை தானா? இப்போதே தேவை தானா? பின்னர் பார்த்துக் கொண்டால் என்ன? ஒத்தித் தான் போடுவோமே! – என்றெல்லாம் எண்ணிப் பார்க்கும் அவர் – மனம் இடுகின்ற கட்டளைக்கு வீட்டோ போட்டு விடுவார். இவரே வெற்றியாளர்.

இவர் துணிந்து ஒரு காரியத்தில் இறங்கக் கூடியவர். தோல்வி ஏற்பட்டாலும் ஒன்றை பாதியில் விட்டு விட்டு ஓடி விட மாட்டார். இறுதி வரை போராடி இலக்கை அடைந்திடுவார். தன்னம்பிக்கை இவரிடம் குடி கொண்டிருக்கும். இவரை நம்பி யாரும் ஒரு பொறுப்பை ஒப்படைக்கலாம்.

Comments