அறிவா? உணர்வா? இரண்டுமா?

நவீன உலகம், மனிதனை ஒரு சிந்திக்கும் மிருகமாகவே சித்தரித்து வந்துள்ளது. அதே நேரத்தில் மனிதன் சிந்திக்கும் மூளையோடு மட்டும் பிறந்திடவில்லை.


உணர்வுகள் ததும்பி வழிகின்ற இதயம் ஒன்றுடனும் தான் பிறந்துள்ளான்.
மனிதனின் உணர்வுகள் மற்றும் உணர்ச்சிகள் குறித்தும், அவை எந்த அளவுக்கு நம் வாழ்வில் ஆழமான தாக்கங்களை ஏற்படுத்த வல்லவை என்பது குறித்தும் மிகத் தாமதமாகவெ நவீன உலகம் சிந்திக்கத் தலைப் பட்டுள்ளது.

அறிவு ரீதியாகவே ஒவ்வொரு விஷயத்திலும் முடிவெடுத்துச் செயல் படுகின்ற மனிதனை, வாழ்க்கையின் பல முக்கியமான தருணங்களின் போதும், சவால்களின் போதும் உணர்வுகளே அவனை வழி நடத்திச் சென்றிடுவதை நாம் பார்க்கலாம். மனிதனை உடனடியாக செயல்படத் தூண்டி விட்டு விடுகின்ற ஒரு வலிமை மிக்க சாதனமாக விளங்குவது நமது உணர்வுகளே!

சான்றாக – ஒரு காரியத்தில் தோல்வி அடைந்த ஒருவனைத் தொடர் முயற்சியில் ஈடுபட வைப்பது எது? ஆர்வம் எனும் அவன் உணர்ச்சிகளே!

- தன் குடும்பத்துக்காக ஒருவனைத் தியாகம் செய்ய வைப்பது எது? பாசம் காட்டும் அவன் உணர்வுகளே!

- ஆபத்து ஒன்றில் சிக்கிக் கொண்டு விடுவோமோ என்ற பய உணர்ச்சி தான் தன்னையும், தன் குடும்பத்தையும் பாதுகாத்திடுகின்ற செயல்பாடுகளில் ஒருவனை ஈடுபட வைக்கிறது!

- தன் கண் முன்னே ஒரு தீமை அரங்கேறிக் கொண்டிருக்கும் போது, அதனைத் தட்டிக் கேட்கின்ற துணிவைத் தருவது கோபம் எனும் உணர்ச்சியே!

அதே நேரத்தில் – உணர்ச்சிகளின் அடிப்படையில் செயல்பட்டு விடுகின்ற மனிதன் – பின்னர் நாம் ஏன் இவ்வாறு செயல்பட்டோம் என்று வருந்துகின்ற அளவுக்கு அறிவுக்குப் பொருத்தமில்லாத செயல்களில் ஈடுவட்டு விடுவதையும் நாம் பார்க்கிறோம்.

கோபத்தில் – மனிதன் மிருகமாக மாறி விடுகின்றான்.

பாசம் – சில சமயங்களில் நம் கண்களை மறைக்கின்றது.

மனத்தூண்டல் – பல கட்டங்களில் நமது பண்புகளை இழப்பதற்குக் காரணமாக அமைந்து விடுகின்றது.

இப்படி வாழ்வின் மிக முக்கியமான தருணங்களில், நம்மை வழி நடத்தவோ அல்லது வழி தவறச் செய்திடவோ, நமது உணர்வுகளே வலிமை மிக்க ஒரு காரணியாக விளங்குகின்றது எனும் போது, நாம் மனிதனின் உணர்வுகள் குறித்தும், அவற்றின் வலிமை குறித்தும், அவ்வுணர்வுகளை நெறிப் படுத்திட வேண்டியதன் அவசியம் குறித்தும் விரிவாக ஆய்வு செய்திட வேண்டியுள்ளது.

Comments