அருகே ஒரு பேருந்து விபத்து! என்ன செய்வாய் நீ?

(மனித வளங்களே நமது செயல்களைத் தீர்மானிக்கின்றன!)

மனித வளங்களை நாம் ஐந்து விதங்களாகப் பிரித்துப் பார்க்கலாம் என்பதை முன்னரேயே எடுத்துச் சொல்லியுள்ளோம்.


அவை: அறிவு வளம் (intellectual resources); ஆன்மிக வளம் (spiritual resources); மன வளம் (psychological resources); ஒழுக்க வளம் (ethical resources); உடல் வளம் (physical resources).

இந்த ஐந்து விதமான வளங்களையும் கண்டு பிடித்து, தூய்மைப் படுத்தி, மேம்படச் செய்வது தான் இஸ்லாத்தின் அடிப்படையில் செய்யப் படும் மனித வள மேம்பாடு ஆகும்.


நாம் மேற்சொன்ன ஐந்து விதமான மனித வளங்களும் எந்த அளவுக்கு ஒரு மனிதனிடத்தில் வளர்ந்திருக்கின்றதோ அதனைப் பொறுத்துத் தான் ஒரு மனிதனின் குண நலனும் செயல்பாடும் (character and behaviour) அமைந்திருக்கும்.

சான்றுக்காக ஒரு சூழலை எடுத்துக் கொள்வோம்:

இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதிக் கொள்கின்ற ஒரு விபத்து. இரண்டு பேருந்துகளிலும் பயணிகளின் அலறல் சத்தம். மக்கள் ஓடோடி வருகின்றார்கள். அடுத்து என்ன நடக்கும்?

பலரும் பல விதமாக நடந்து கொள்வதைப் பார்க்கலாம்.

ஆனால் இங்கே ஒருவர்.

அறிவாற்றல் (intellectual strength); உடல் வலிமை (physical strength); அன்புடைமை (psychological strength); நற்குணம் (ethical strength); இறை உணர்வு (spiritual strength) - - இவை அனைத்தும் நிரம்பப் பெற்ற ஒருவர். இவர் என்ன செய்வார்?

உடனே – காவல் துறைக்கு தொலை பேசி அழைப்பு விடுப்பார்.

அவசரமாக ஆம்புலன்ஸுக்கும் அழைப்பு விடுப்பார்.

அடுத்து ஒரு சிலரை அழைத்துக் கொண்டு பேருந்துக்குள் நுழைந்து பயணிகளை வெளியேற்ற முயற்சி செய்வார்.

காயம் பட்ட பயணிகளை மருத்துவ மனைக்கு அனுப்பும் வழிகளைப் பார்ப்பார்.

இத்தனைக்கும் அவர் கூட ஒரு அவசர வேலையாக வீட்டை விட்டுப் புறப்பட்டவர் தான்.

தன் வேலையை ஒதுக்கி வைத்து விட்டு – விபத்து நடந்த இடத்திலேயே இருந்து கொண்டு தன்னால் இயன்றதையெல்லாம் பொறுமையாக ஒவ்வொன்றாகச் செய்து கொண்டிருப்பார்.

பயணிகளின் தொலைபேசி எண்களைக் கேட்டு, அவர்களின் வீட்டுக்கு நிதானமாக தகவல் தெரிவிப்பார்.

மருத்துவ மனைக்குச் செல்வார். தன்னால் இயன்ற எல்லா உதவிகளையும் செய்திடுவார்.

தனது பசியைப் பற்றிக் கவலைப் பட மாட்டார். தன் பாக்கெட்டிலிருந்து செலவு செய்திடவும் தயங்க மாட்டார்.

இப்படிப்பட்டவர் தான் மனித வளங்களைப் பெற்றவர் என்று சொல்கிறோம்.

ஆனால் மற்ற பெரும்பாலான மக்கள் என்ன செய்வார்கள்?

இது போன்ற தருணங்களில்கூட தான் உண்டு தன் வேலை உண்டு என்று செல்பவர்களை நாம் பார்க்கலாம்.

இவர்களைத் தான் நாம் “எல்லா விதமான மனித வளங்களையும் முறைப்படி வளர்த்துக் கொள்ளாதவர்கள்” என்று சொல்கிறோம்.

ஒரு மனிதனின் குணநலனும் செயல்பாடும் அவனது மனித வளங்களைப் பொறுத்ததே! சரிதானே?

எந்த ஒரு சூழலையும் செவ்வனே எதிர் கொண்டிட – நாம் மேலே குறிப்பிட்டுள்ள ஐந்து விதமான வளங்களும் ஒரு சேர அமையப் பெற்றிருத்தல் அவசியம்.

இப்படிப்பட்ட ஆபத்தான தருணங்களிலிருந்து மக்களைக் காத்திட வேண்டுமெனில் – ஒருவருக்கு இறை உணர்வு மிக அவசியம்.

ஒரு உயிரைக் காப்பாற்றுவது என்பது ஒரு சமுதாயத்தையே காப்பதற்குச் சமம் என்பதை இறை உணர்வு மிக்கவர்கள் அறிவார்கள்.

“எவரொருவர் ஓராத்மாவை வாழ வைக்கிறாரோ அவர் மக்கள் யாவரையும் வாழ வைப்பவரைப் போலாவார்” (திருக்குர்ஆன் 5:32)

இந்த ஆன்மிக உணர்வு தான் ஒரு மனிதனின் குண நலனைத் தீர்மானிக்கிறது.

அது போலவே விபத்தில் சிக்கியவர்களைக் காப்பாற்றுவது எப்படி என்ற அறிவாற்றலும் ஒருவருக்கு அவசியம். (பள்ளிக் கூடங்களில் இதைப் பற்றிய அறிவை ஊட்டாமல் தென் அமெரிக்காவின் தலை தட்ப வெப்ப சூழ்நிலை பற்றியும், ஆஸ்திரேலியாவின் தலை நகரத்தையும் சொல்லிக் கொடுத்து என்ன பயன்?).

அது போலவே இந்தச் சூழ்நிலைகளில் உடல் வலிமையும் அவசியம் ஆகிறது. விபத்தில் சிக்குண்டவரை அப்படியே தூக்கிக் கொண்டு வர வேண்டிய நிலை ஏற்படலாம். சுறுசுறுப்பான செயல்பாட்டுக்கும் உடல் வலிமை அவசியம்.

அது போலவே தான் – இந்தச் சூழ்நிலைகளில் ஒருவனைக் களத்தில் இறக்கி விடுவதற்குத் தேவை – அன்பு, இரக்கம், கருணை, பற்று, பாசம் – போன்ற மனித உணர்வுகளும் தான்.

ஆக – இவ்வாறு அனைத்து விதமான மனித வளங்களையும் வளர்த்தெடுப்பதின் மூலமே மனித நேயமிக்க மனிதர்களைக் கொண்ட ஒரு புதிய தலை முறையை நாம் உருவாக்க முடியும்.

ஆனால் நமக்குக் கவலை அளித்திடும் நிலை என்னவென்றால் – விபத்தொன்று நடந்து விட்டால் – குற்றுயிரும் குலை உயிருமாக பயணிகள் உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கும் போது, அவர்களது பணத்தை, நகைகளை, மற்ற உடைமைகளைக் கவர்ந்து செல்கிறார்களே!

இந்தக் கொடுமையை நினைக்கும்போது – நெஞ்சம் பொறுக்குதில்லையே!

Comments