நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே!

(மனித வளங்களும் நற்பண்புகளும்!)

திடமாக, நாம் மனிதனை மிகவும் அழகிய அமைப்பில் படைத்தோம்.(95:4)


வல்ல இறைவன் மனிதனை மிக அழகிய அமைப்பில் தான் படைத்துள்ளான் என்பதன் பொருள் - அவன் அடிப்படையிலேயே மிக நல்லவன் என்பதாகும்.

இதனையே பொதுவாக the essential goodness of mankind என்று அழைக்கிறார்கள்.

முஹம்மது நபியவர்களின் பொன் மொழி ஒன்றின் பகுதி இது:


நிச்சயமாக அல்லாஹ் உங்களுக்கிடையே பொருள்களை (ரிஸ்கை) பங்கிட்டது போல நற்குணங்களையும் உங்களுக்கிடையே பங்கிட்டுள்ளான். நூல்: அஹ்மது,

பொதுவாக – மனிதன் நற்பண்பு உடையவனாகத் திகழ்வதற்கு அவனுக்கு வழங்கப் பட்டுள்ள மனித வளங்கள் மூன்று.

1. இயற்கையான வெட்க உணர்ச்சி (Natural modesty):

மனிதனுக்கு இயற்கையிலேயே வெட்க உணர்ச்சியை வைத்து அல்லாஹ் படைத்துள்ளான்.

இந்த வெட்க உணர்ச்சி மனிதனைத் தவறுகளில் இருந்து பாது காக்கும் ஒரு கேடயம் என்றால் அது மிகையாகாது.

2. இடித்துரைக்கும் ஆன்மா (Self Reproaching Soul):

நிந்தித்துக் கொண்டிருக்கும் ஆன்மாவின் மீதும் நான் சத்தியம் செய்கின்றேன்.(75:2)

மனிதனுக்கு இதுவும் இறைவன் அளித்த மாபெரும் அருட்கொடை!
இந்த இடித்துரைக்கும் ஆன்மா மனிதனிடத்தில் இருப்பதனால் தான் – மனிதன் தவறு ஒன்றைச் செய்து விட்டு “நிம்மதியாக” இருந்து விட முடிவதில்லை. தன் ஆன்மா தவறு செய்து விட்ட ஒரு மனிதனை இடித்துக்கொண்டே இருக்கும்.

ஆங்கிலத்தில் இதனை conscience என்றும் தமிழில் இதனை மனசாட்சி என்றும் சொல்கிறார்கள்.

வெட்க உணர்ச்சியைப் போலவே நமது இடித்துரைக்கும் ஆன்மாவும் மனிதனைத் தவறுகளில் இருந்து பாதுகாத்திடும் அரண் தான். அது மட்டுமல்ல, ஒரு முறை தவறு செய்து விட்டால்கூட அது குறித்து “இப்படி ஒரு காரியம் செய்து விட்டோமே” என்று தன்னைத் தானே நிந்தித்துக் கொண்டு மீண்டும் அந்தத் தீமையின் பக்கம் செல்ல விடாமல் தடுக்கும் அரணாகவும் இது விளங்குகிறது.

3. இறையச்சம் (God consciousness):

இறைவன் நம்மைக் கண்காணித்துக் கொண்டிருக்கின்றான் எனும் உணர்வு ஒருவனுக்கு இறையச்சத்தை வழங்குகிறது. மனிதனை எல்லாவிதமான தீமைகளில் இருந்தும் தடுத்திட வல்லது இந்த இறையச்சம். இது ஒரு ஆன்மிகக் கேடயம் ஆகும்.

மேலே நாம் குறிப்பிட்டுள்ள இரண்டையும் விட மிக அதிக வலிமை வாய்ந்தது ஒரு மனிதனின் இறையச்சம்.

இந்த மூன்று மனித வளங்களை வளர்ப்பதன் மூலமே – மனித சமூகத்தை பண்பட்ட சமூகமாக மாற்றிக் காட்ட முடியும்.

Bottomline:

இறைவனை நம்பாதவர்களில் பலர் “நல்லவர்களாக” இருப்பதற்குக் காரணம் என்ன?

நாம் மேலே குறிப்பிட்ட மூன்று மனித வளங்களில் முதல் இரண்டும் எல்லாருக்கும் பொதுவானவை. இறைவனை நம்பாதவர்கள் கூட நல்லவர்களாக இருப்பதற்குக் காரணம் – அவர்களது வெட்க உணர்ச்சியும், இன்னும் அவர்களது இடித்துரைக்கும் ஆன்மாவும் தான்!

ஆனால் இறை நம்பிக்கையாளர்கள் நற்பண்புடையோராக விளங்குவதற்கு – மூன்று வளங்களை அவர்கள் பெற்றுள்ளார்கள். இந்த அடிப்படையில் இறை நம்பிக்கையாளர்கள், இறை நம்பிக்கை இல்லாதவர்களை விட “கொடுத்து வைத்தவர்கள்”. அவ்வளவு தான்!!

Comments