மறைந்து கிடக்கின்றன – குழந்தைகளின் திறமைகள்!


“மக்கள் சுரங்கங்கள்! தங்கத்தைப் போல! வெள்ளியைப் போல!” – இந்த நபி மொழியில் பெற்றோர்கள் படித்துக் கொள்ள வேண்டிய பாடங்கள் நிறைய உண்டு. ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.

முதல் பாடம்:


அது தங்கச் சுரங்கமோ அல்லது வெள்ளிச் சுரங்கமோ அல்லது பெட்ரோலியச் சுரங்கமோ – இவை அனைத்தும் மறைந்தே கிடக்கின்றன! அவை ஒரு காலத்தில் கண்டு பிடிக்கப் படுகின்றன! பின்னரே அங்கிருந்து அவை அனைத்தும் கொஞ்சம் கொஞ்சமாகத் தோண்டி எடுக்கப் படுகின்றன.


அது போலத் தான் மனித வளங்களும். நமது எல்லா வளங்களும் மறைந்தே கிடக்கின்றன. அதாவது – குழந்தையாக நாம் பிறக்கும் போது – உடலளவில் மிகவும் பலவீனமாகவும், அறிவைப் பொறுத்தவரை ஒன்றுமே அறியாத நிலையிலும் தான் பிறக்கின்றோம். என்னென்ன குணங்களுடன் நாம் பிறக்கின்றோம், என்னென்ன திறமைகள் நம்மிடம் ஒளிந்திருக்கின்றன – ஒன்றுமே நமக்குத் தெரியாது!

“உங்கள் தாய்மார்களின் வயிறுகளிலிருந்து நீங்கள் ஒன்றுமே அறியாதவர்களாக இருந்த நிலையில் உங்களை அல்லாஹ் வெளிப்படுத்துகிறான்; அன்றியும் உங்களுக்குச் செவிப்புலனையும், பார்வைகளையும், இதயங்களையும் – நீங்கள் நன்றி செலுத்தும் பொருட்டு – அவனே அமைத்தான். (16:78)

அப்படியானால் அவை அனைத்தும் கண்டுபிடிக்கப் பட்டாக வேண்டும். எப்படி?

பெற்றோர்களே! குழந்தை வளர்ப்பில் உங்களுக்கு மகத்தான பொறுப்பு ஒன்று இருக்கிறது. அது உங்கள் குழந்தைகளின் மனித வளங்கள் என்னென்ன என்று நீங்களே கண்டு பிடிப்பது தான்!

அதற்காக நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் – அவர்களை நீங்கள் சற்றே உற்று கவனியுங்கள்! அவ்வளவு தான்! Obeserve your children!

இங்கே மூன்று சம்பவங்கள் உங்கள் சிந்தனைக்காகத் தரப் படுகின்றன:

ஒன்று:

நபி ஸல் அவர்கள் பெரிய தந்தை அப்பாஸ் (ரலி) அவர்களின் மகனார் அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள். அவர் சிறு வயதாக இருக்கும்போது, அண்ணலார் வீட்டில் இரவுத் தங்குவார்கள். அவர்களின் சிறிய தாயார் மைமூனா (ரலி) அவர்களை அண்ணலார் மண முடித்திருந்தார்கள்.

ஒரு நாள் பின் இரவில் அண்ணலார் தஹஜ்ஜுத் தொழுகைக்காக எழுந்த போது, சிறு நீர் தேவைக்காக சென்றார்கள். அப்போது வெளியில் உளூ செய்ய தண்ணீர் தயாராக எடுத்து வைக்கப் பட்டிருந்தது. அவ்வாறு தண்ணீர் எடுத்து வைத்தது யார் என்று பார்த்த போது, சிறுவர் இப்னு அப்பாஸ் தான் எனத் தெரிய வந்தது.

இரவில் தான் கண் விழிப்பதை எதிர்பார்த்து, தமக்குத் தெரியாமல் பணிவிடை செய்வதைப் பார்த்த பெருமானார் மன மகிழ்வடைந்தார்கள். அதற்காக சிறுவர் இப்னு அப்பாஸை பாராட்டி, “அல்லாஹும்ம ஃபக்கிஹ்-ஹூ ஃபித்தீனி வ ‘அல்லிம்ஹுத் – தஃவீல் – யா அல்லாஹ்! இவருக்கு மார்க்க சட்ட விளக்கத்தைத் தருவாயாக! திருக் குர் ஆனின் விரிவுரையை இவருக்குக் கற்றுத் தருவாயாக! – என்று பிரார்த்தனையும் செய்தார்கள்.

இரண்டு:

நபிகள் (ஸல்) அவர்கள் ஒரு சமயம் கடைத்தெருவுக்குச் சென்றார்கள். அங்கு அப்துல்லாஹ் பின் ஜஃபர் (ரலி) என்ற சிறுவர் குழந்தைகளின் விளையாட்டுச் சாமான்கள் விற்றுக் கொண்டிருப்பதைப் பார்த்து அவரை அண்ணலார் பாராட்டினார்கள். “அல்லாஹும்ம பாரிக் லஹூ ஃபீ பை-இ-ஹீ!” – யா அல்லாஹ்! இவரின் வியாபாரத்தில் பரக்கத் செய்வாயாக! – என்று பிரார்த்தனையும் செய்தார்கள். (நூல்: அபூ தாவூத்)

மூன்று:

உமைர் (ரலி) என்ற சிறுவரபொரு குருவி வளர்த்து வந்தார். அவர் வீட்டு வழியாக அண்ணலார் செல்ல நேர்ந்தால், ” யா உமைர்! மா ஃபஅலன் நுஃகைர் – உமைரே! உனது சின்னக் குருவி என்ன செய்கிறது? என்று அக்கரையுடன் விசாரிப்பார்கள்.

இந்த மூன்று சம்பவங்களில் இருந்து நாம் பெற வேண்டிய பாடங்கள்:

ஒன்று: குழந்தைகளை அவர்கள் என்ன செய்கிறார்கள் என்று சற்றே கவனியுங்கள்.

இரண்டு: அவர்களை மனம் திறந்து பாராட்டுங்கள். அவர்களுக்காக துஆவும் செய்யுங்கள்.

மூன்று: அவர்கள் செய்யும் செயல் மிகச் சாதாரணமானது தானே என்று விட்டு விடாதீர்கள். அவற்றில் தான் உங்கள் குழந்தைகளின் மனித வளங்கள் பொதிந்து கிடக்கின்றன!

Comments