தந்தையின் பொறுப்பு!

ஒப்பு நோக்குங்கால் தந்தையை விட தாய்க்கே குழந்தை வளர்ப்பில் பொறுப்பு அதிகம் என்பது உண்மைதான். ஆனால் தந்தையின் பொறுப்பு என்பது தன் குழந்தைகளுக்கு செலவு செய்வது மட்டும் தான் என்று பல தந்தைமார்கள்; நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அது அப்படியல்ல.





குழந்தை வளர்ப்பு என்பது பின்வரும் ஐந்து பரிணாமங்களைக் கொண்ட ஒரு பெரும் பொறுப்பு ஆகும்.


1. உடல் வளர்ச்சி (Physical Development)

2. மன வளர்ச்சி (Psychological Development)

3. அறிவு வளர்ச்சி (Intellectual Development)

4. ஆன்மிக வளர்ச்சி (Spiritual Development)

5. ஒழுக்க வளர்ச்சி (Character Development)

பெற்றோர் தங்கள் குழந்தைகளை வளர்க்கும் போது மேற்கண்ட ஐந்து பரிணாமங்களிலும் தங்கள் குழந்தைகள் வளர்கிறார்களா என்று கண் காணித்திட வேண்டும். அதுவே முழுமையான குழந்தை வளர்ப்பு முறை ஆகும். இப்பெரும் பொறுப்பினை தாயும் தந்தையும் சேர்ந்தே ஏற்றுக்கொள்ள வேண்டுமேயல்லாமல் எனக்கு எங்கே இருக்கிறது நேரம் என்று ஒரு தந்தை ஒதுங்கி விடக் கூடாது. அப்படி ஒதுங்கினால் பின்னர் 'என் பிள்ளை என் பேச்சைக் கேட்பதேயில்லை, எதிர்த்து எதிர்த்துப் பேசுகிறான், நான் அவனுக்கு என்ன குறை வைத்தேன், எவ்வளவு அவனுக்காக செலவு செய்திருக்கறேன் தெரியுமா' என்றெல்லாம் ஒப்பாரி வைப்பதில் எந்தப் பயனும் இல்லை!

இங்கே இரண்டு நபிமொழிகளைப் பதிவு செய்வோம்:

நபித்தோழர் ஒருவர் தமது குழந்தையை தமது கைகளில் அரவணைத்து அணைத்துக் கொண்டவராக நபி (சல்) அவர்களை சந்திக்க வந்திருந்தார். இதனைக்கண்ட நபியவர்கள் 'உங்கள் குழந்தையின் மீது கொண்ட அன்பினாலும் இரக்க குணத்தாலும் தான் இவ்வாறு செய்கிறீர்களா?' என்று கேட்டார்கள். ஆம் என்றார் அந்த நபித்தோழர். நபி (சல்) அவர்கள் அவரிடம் தெரிவித்தார்கள். 'நீங்கள் எப்படிப்பட்ட அன்பையும் இரக்க குணத்தையும் கொண்டு உங்கள் குழந்தையை இவ்வாறு நடத்துகிறீர்களோ அதை விட பன்மடங்கு அதிகமாக அல்லாஹுதஆலா விடமிருந்து அவன் அன்பையும் அருளையும் நீங்கள் பெற்றுக் கொள்வீர்கள். ஏனெனில் அல்லாஹுதஆலாவின் அன்பும் இரக்க குணமும் அவன் படைப்பினங்கள் அனைத்தின் இரக்க குணத்தை மிகைத்து நிற்கக் கூடியது!' (அல் அதபுல் முஃப்ரத்)

நபி (சல்) அவர்கள் சொன்னார்கள்: ஒரு தந்தை தமது மகனது முகத்தைப் பார்த்து மகிழ்ச்சியடைகின்றார் எனில், அதற்காக அவருக்கு ஒரு அடிமையை உரிமை விட்ட நற்கூலி வழங்கப்படுகிறது. நபித்தோழர் ஒருவர் : முன்னூற்று அறுபது தடவை அப்படிச் செய்தாலுமா என்று கேட்டார்? நபி (சல்) அவர்கள் பதிலளித்தாரகள்: அல்லாஹுதஆலாவைப் பற்றி நீங்கள் எண்ணுவதை விட அவன் மிகப்பெரியவன் (தபரானி)

தந்தையின் பொறுப்பு என்பது தன் குழந்தைகளுக்கு செலவு செய்வது மட்டும் அல்ல என்பதை இப்போதாவது ஒத்துக் கொள்கிறீர்களா தந்தைமார்களே?

(இன்ஷா அல்லாஹ் தொடர்வோமே)

Comments