குழந்தைகளைக் கொஞ்சுங்கள்!

பிறந்து சில மாதங்களே ஆன குழந்தை ஒன்று. இரவில் தூங்கிக் கொண்டிருந்த குழந்தை திடீரென்று விழித்துக் கொள்கிறது. அழத் தொடங்குகிறது. நீங்கள் ஒரு தாய். என்ன செய்வீர்கள்?





இங்கே ஒரு தாய். அவர் பாசத்துடன் தனது குழந்தையை வாரி அணைத்துத் தூக்கிக் கொள்கிறார். 'என்னம்மா, முழிச்கிக்கிட்டியா? என்னம்மா வேணும், இதோ நான் இருக்கேன் உனக்காக!' என்று கொஞ்சுகிறார். கைகளில் அரவணைத்துக் கொண்டே பால் கொடுக்கத் தொடங்குகிறார். குழந்தை தனது அம்மாவைப் பார்த்து சிரித்த முகத்துடன் பால் குடித்து விட்டு அப்படியே திருப்தியுடன் தூங்கி விடுகிறது.


இன்னொரு தாய். இவர் தனது குழந்தையை இரவில் தூங்க வைக்கிறார். தானும் எல்லா வேலைகளையும் முடித்து விட்டு தூங்கப் போகும் சமயம் மாமியார் சண்டைக்கு வரகிறார். எல்லாம் வரதட்சனைப் பிரச்னை தான். ஒருவாறு சண்டை ஓய்ந்து அந்த இளந்; தாய் தூங்கப்;போகிறார். தூக்கம் வரவில்லை. இரவு ஒரு மணி இருக்கும். அப்போது தான் அசந்து தூங்கியிருப்பார். திடீரென்று கண் விழித்துக் கொண்டு அழத் தொடங்குகிறது குழந்தை. 'ஏய்! சும்மா இரு, தூங்க விட மாட்டியா என்னை!' என்று அதட்டியவாறே குழந்தையைத் தூக்குகிறார் தாய். குழந்தை பால் குடிக்க மறுக்கிறது. மீண்டும் அதட்டுகிறார் அந்தத் தாய் சற்றும் முகத்தில் பாசம் இல்லாத படி. குழந்தை தாயை அச்சத்துடன் பார்க்கிறது. நெளிகிறது. அப்படியே விரைத்துக் கொள்கிறது குழந்தை. பால் குடிக்காமல் பசியுடனேயே அசந்து தூங்கி விடுகிறது. இதுவே ஒரு தொடர்கதையானால்?

மேற்கண்ட இரு விதமான தாய்மார்களிடத்தில் வளர்கின்ற குழந்தைகள் எதிர்காலத்தில் எப்படிப்பட்டவர்களாக வளர்கிறார்கள் தெரியுமா? முதல் தாயின் குழந்தை சாதனையாளனாக மாறுகிறது. ஆனால் இரண்டாவது தாயின் குழந்தை யாரையும் நம்புவதில்லை. யாரையும் ஒரு உதவிக்குக் கூட அணுகுவதில்லை. ஒட்டு மொத்த உலகமே தனக்கு எதிரானது என்று ஒதுங்கி ஒதுங்கி சென்று பயந்து பயந்து வாழும் இவன் எதனை சாதிக்க முடியும் என்று நினைக்கிறீர்கள்?

மைக்கேல் ஜோர்டன் (Mickhal Jordan) ஒரு தலை சிறந்த முன்னணி கூடைப்பந்து ஆட்டக்காரர். அவர் சொல்கிறார்: நான் கூடைப்பந்தில் மிகச் சிறந்த ஆட்டக்காரராக வந்திட வேண்டும் என்பது எனது கனவாக இருந்தது. அதற்கென தி;ட்டமி;ட்டு நான் உழைத்தேன். முயற்சிகள் மேற்கொண்டேன். எனக்கு உதவி தேவைப்படின் யாரையும் அணுகுவதற்குத் தயங்கவே மாட்டேன். நான் ஏன் அதற்கு பயப்பட வேண்டும்?'

இங்கே தான் நாம் நன்றாக சிந்தித்தாக வேண்டும். ஒருவர் சாதித்தே ஆக வேண்டும் என்று முடிவெடுத்து விட்டால் முதலில் அவர் தயக்கங்களைத் தூக்கி யெறிந்திட வேண்டும். உதவி தேடுவதற்கு வெட்கப்படக் கூடாது. அதற்கு மற்றவர்கள் நமக்கு உதவிடுவார்கள் என்று நம்பிக்கை அவசியம். கைக்குழந்தையாக இருக்கும் நிலையில் தன் தாயே தன் உதவிக்கு வராத போது அக்குழந்தை வளர்ந்து ஆளாகும் போது வேறு யாரை நம்பிடும்? மைக்கேல் ஜோர்டனின் தாய் தனது மகனைக் கொஞ்சிக் கொஞ்சி வளர்த்திருப்பாரோ என்றே நமக்கு நினைக்கத் தோன்றுகிறது!

எனவே தான் சொல்கிறோம் - கொஞ்சுங்கள்!

விளையாட்டுக்குக் கூட குழந்தைகளை அதட்டிப் பேசாதீர்கள். 'கோபம்! ரோஷம்! பொத்துக்கிட்டு வர்ரதைப் பாரு!' என்று சில பெற்றோர்கள் சிறு குழந்தைகளை அதட்டி அழ வைத்து வேடிக்கைப் பார்ப்பதை நான் நேரில் பார்த்திருக்கிறேன். இதை விட ஒரு கொடுமையை நாம் ஒரு குழந்தைக்குச் செய்து விட முடியாது.

பெற்றோர்கள் இதனை உணர்வார்களா?

இங்கேயும் இரண்டு நபிமொழிகளைப் பதிவு செய்வோம்:

அண்ணல் நபியவர்கள் குழந்தைகளுடன் எவ்வாறு நடந்து கொள்வார்கள் தெரியுமா? 'நபியவர்கள் தங்களின் பேரக்குழந்தைகள் ஹசன் மற்றும் ஹூசைன் இருவரையும் தங்களிடம் வரச்சொல்லி அழைத்து இருவரையும் ஆரத் தழுவிக்கொள்வார்கள்' என்று அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் தெரிவிக்கிறார்கள்.

ஜாபிர் பின் சமுரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: 'நான் அல்லாஹ்வின் தூதர் (சல்) அவர்களுடன் முதல் தொழுகையைத் தொழுதேன். பின்னர் நபியவர்கள் தங்கள் வீட்டிற்குத் திரும்பினார்கள். நானும் அவர்களுடன் கூடவே சென்றேன். வழியில் அவர்கள் சில சிறுவர்களைச் சந்தித்தார்கள். ஒவ்வொரு குழந்தையின் கன்னத்தையும் அன்போடு அவர்கள் தட்டிக் கொடுத்தார்கள். எனது கன்னத்தையும் அவர்கள் தட்டிக் கொடுத்த போது நான் நபியவர்களின் கரங்களின் குளிர்ச்சியையும் வாசனையையும் உணர்ந்தேன். அது எப்படி இருந்தது என்றால் ஒரு வாசைன திரவியம் நிரம்பிய பையில் கையை விட்டு எடுத்தவர் கைகள் போன்று இருந்தது. (முஸ்லிம்)

குழந்தைகளைக் கொஞ்சுவதும் ஒரு சுன்னத். சரி தானே?

(இன்ஷா அல்லாஹ் தொடர்வோமே)

Comments