குழந்தைகளை பாராட்டுங்கள்!

ஒரு வயது கூட நிரம்பியிருக்காது அக்குழந்தைக்கு. அதன் தாய் அந்தக் குழந்தை விளையாடுவதற்காக சில ப்ளாஸ்டிக் டப்பாக்களை எடுத்து வருகிறார். குழந்தைக்கு முன்னே அமர்ந்து கொண்டு அவைகளை எப்படி அடுக்கிட வேண்டும் என்று செய்து காட்டுகிறார். குழந்தை அந்த டப்பாக்களை எடுத்து வைத்துக் கொண்டு அடுக்கத் தொடங்குகிறது. ஒரு டப்பா உருண்டோடுகிறது.





அம்மா அதனை எடுத்து மீண்டும் குழந்தையிடம் கொடுக்கிறார். குழந்தை அம்மாவைப் பார்த்து சிரித்த படி மீண்டும் முயற்சி செய்கிறது. இதோ அடுக்கியும் விட்டது. கண்கள் பளிச்சிட அம்மாவை கவனிக்கிறது. அதன் பொருள் என்ன? ‘அம்மா, எப்படி என் சாதனை?’ அம்மாவும் கை கொட்டி சிரிக்கிறார். அப்படியே தன் குழந்தையை வாரி அணைத்து முத்தமிடுகிறார். குழந்தை தன் தாயின் பாராட்டு மழையில் அப்படியே நனைகின்றது.


இந்தக் குழந்தைக்கு அதன் தாய் கற்றுக் கொடுத்தது என்னென்ன தெரியுமா? தன்னம்பிக்கையும், ஒன்றைக் கற்றுக் கொள்வதில் ஆவலும் ஆர்வமும், மேலும் சாதித்திட வேண்டும் என்ற ஊக்கமும் தான். இப்படி அம்மாவினால் ஊக்கம் பெறுகின்ற குழந்தைகள் பள்ளிக்கூடத்திலும் சாதிக்கின்றன. தன் வாழ்க்கையிலும் சாதிக்கின்றன.

இதிலிருந்து நாம் புரிந்து கொள்ள வேண்டியது என்னவெனில் நமது குழந்தைகள் ஏதாவது ஒரு மிகச்சிறிய செயலை செய்து முடித்தால் கூட அதனை வாய் விட்டுப் பாராட்டி விட வேண்டும். இதனையே ஆங்கிலத்தில் “Celebrating small success” என்று அழைக்கிறார்கள். நமது பெற்றோர்கள் சிலர் அப்படிப் பாராட்டினால் குழந்தைகளுக்கு கர்வம் வந்து விடும் என்று தவறாக எண்ணிக் கொண்டிருக்கிறார்கள். இது தவறு.

குழந்தைகளின் எல்லா வளர்ச்சிக் கட்டங்களிலும் அவர்களை நாம் ஊக்கப் படுத்திட வேண்டும். குழந்தைகளைப் பாராட்டுவதற்கு அவர்கள் ஏதாவது பெரிதாகத் தான் செய்திருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. மிகச் சிறிய ‘சாதனை’ ஒன்றை அவர்கள் செய்து விட்டால் கூட அவர்களைப் பாராட்டி விடுங்கள்.

உங்கள் குழந்தை – புதிதாக ஒரு வார்த்தையைச் சொல்லி விட்டதா – பாராட்டுங்கள்.

உங்கள் மகன் ஏதாவது படம் ஒன்றை வரைந்து வந்து காட்டுகின்றானா – பாராட்டுங்கள்;

கீழே சிந்தாமல் ஒரு நாள் உணவு உண்டு விட்டானா – பாராட்டுங்கள்.

உங்கள் மகன் ஒரு தேர்வில் 15 மதிப்பெண் பெற்று வந்திருப்பான். ஆனால் அடுத்த தேர்வில் 25 மதிப்பெண் பெற்றிருப்பான். அடடா! இந்தத் தடவை 10 மதிப்பெண்கள் அதிகம் பெற்றிருக்கிறாயே – இன்னும் முயற்சி செய் – வெற்றி பெற்று விடுவாய் என்று பாராட்டுங்கள்.

உங்கள் மகனுக்கு படிப்பு வரவில்லையா? வேறு ஏதாவது திறமைகள் அவனுக்குள் ஒளிந்திருக்கும். ‘அத்தா! இதைப் பார்த்தீர்களா’ என்று ஏதாவது ஒன்றை செய்து வந்து காட்டுவான். பாராட்டுங்கள்.

ஒரு சிறுவன் தெருவில் மட்டைப் பந்து விளையாட வத்தானாம். ஆனால் அவன் நண்பர்கள் யாரும் வந்து சேரவில்லை. அவனே பந்தை ஒரு கையால் தூக்கிப் போட்டு இன்னொரு கையில் உள்ள மட்டையால் பந்தை அடிக்க முயற்சி செய்தானாம். ஆனால் பந்து அடிபடவில்லை. தவறி விட்டது. இதனைக் கவனித்த பெரியவர் ஒருவர் Good என்றாராம். சிறுவனுக்கு ஒன்றும் புரியவில்லை. அவரை ஒரு கணம் பார்த்து விட்டு மீண்டும் பந்தைப் போட்டு மட்டையை விளாசினான் சிறுவன். இப்போதும் பந்து அடிபடவில்லை. பெரியவர் இப்போது Very Good என்றாராம். சிறுவனுக்கு சற்றே கோபம். அவரை முறைத்துப் பார்த்து விட்டு மூன்றாவது தடவை சற்றே எச்சரிக்கையுடன் பந்தைப் போட்டு மட்டையை வீசினான். ஆனால் இப்போதும் பந்து அடிபடவில்லை. பெரியவர் இப்போது Superb என்றாராம். சிறுவனுக்கு கோபம் இப்போது தலைக்கு மேல். கடைசியாக இந்தத்; தடவை எப்படியும்; பந்தை அடித்தே தீர்வது என்று உறுதியுடன் பந்தைப் போட்டு மட்டையை வீசினான். ஆனால் பரிதாபம். இந்தத் தடவையும் பந்து அடிபடவில்லை. பெரியவரோ தனது கைகளைத் தட்டிக் கொண்டே Excellent என்றாராம். வந்ததே கோபம் சிறுவனுக்கு. நேரே அவரிடம் வந்து என்ன கிண்டலா? என்று அவரைத் திட்டினானாம். அதற்கு அந்தப் பெரியவர் என்ன சொன்னார் தெரியுமா? ‘தம்பி! நான் உனது மட்டை வீசும் திறமையைப் பற்றி ஒன்றும் சொல்லிடவில்லை. ஆனால் நான் பாராட்டியதெல்லாம் லாகவமாக நீ பந்தை வீசியதைத் தான். எவ்வளவு அற்புதமாக பந்து வீசுகிறாய் தெரியுமா!’

ஆமாம்! இப்படித் தான் பாராட்டிட வேண்டும் நமது குழந்தைகளை! பாராட்டுவதால் என்ன நன்மை? ஏதாவது ஒன்றில் ஒரு சிறு வெற்றி பெறுகின்ற குழந்தை பாராட்டப் படுகின்ற போது அதற்கு தன் மீது ஒரு நம்பிக்கை வருகிறது! இன்னும் இதை விட ஏதாவது பெரிதாக ஒன்றைச் செய்திட வேண்டும் என்ற வேட்கை அதற்கு ஏற்படுகிறது. துணிந்து இறங்கி இன்னொன்றை சாதித்துக் காட்டுகிறது. அது மீண்டும் பாராட்டைப் பெறுகிறது. இந்த சுழற்சி அந்தக் குழந்தையை சாதனையின் உச்சிக்கு அழைத்துச் செல்கிறது. இது தான் ரகசியம்.

இப்போது நபிவழிக்கு வருவோம். ஆமாம் பாராட்டுவதும் நபிவழியே! இதோ சான்றுகள்:

அப்போது அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் ஒரு சிறுவர். ஓரு நாள் நபி (சல்) அவர்கள் பின்னிரவில் தொழுவதற்காக எழுந்து சிறுநீர் கழித்து வி;ட்டு திரும்புகிறார்கள். அப்போது உளு செய்வதற்காக தண்ணீர் தயாராக எடுத்து வைக்கப் பட்டிருந்தது. யார் வைத்திருப்பார்கள் என்று பார்த்தால் சிறுவர் இப்னு அப்பாஸ் தான் அது என்று தெரிய வருகிறது. தமக்குத் தெரியாமலேயே பணிவிடை செய்த இப்னு அப்பாஸ் அவர்களை நபியவர்கள் பாராட்டுகிறார்கள். அவருடைய கல்வியாற்றல் பெறுகிட துஆவும் செய்கிறார்கள். பின்னாளில் இப்னு அப்பாஸ் அவர்கள் மிகச் சிறந்த திருக்குர்ஆன் விரிவுரையாளராக விளங்கினார்கள் என்பது வரலாறு.

சிறு வயதிலேயே விளையாட்டுச் சாமான்களை வைத்து வியாபாரத்தில் ஈடுபட்ட சஹாபி ஒருவரை நபியவர்கள் பாராட்டி துஆ செய்ததாக நபிமொழி உண்டு.

சிறுவர்களுக்கு ஓட்டப் பந்தயம் வைத்து அதில் வெற்றி பெறுபவரை முத்தம் கொடுத்துப் பாராட்டுவார்கள் நபியவர்கள் என்றும் நபிமொழி உண்டு.

இப்போது சிந்தியுங்கள். எத்தனைத் தடவை உங்கள் குழந்தைகளைப் பாராட்டும் தருணங்களைத் தவற விட்டிருப்பீர்கள் என்பது புரிய வரும். இனியேனும் உங்கள் குழந்தைகளைப் பாராட்டுவீர்களா?

Comments