மனைவியை மன்னியுங்கள்!

பணியாளரின் குற்றங்குறைகளையே ஒவ்வொரு நாளும் நாம் எழுபது தடவை மன்னித்திட வேண்டும் என்றால் - நமது மனைவியை ஒவ்வொரு நாளும் ஒரு சில தடவைகளேனும் நாம் மன்னித்திடக் கூடாதா? முடியாதா?

இதோ உமர் (ரலி) அவர்கள் கூறுவதைக் கேளுங்கள்:

ஒரு மனிதர் கலீஃபா உமர் (ரலி) அவர்களை சந்தித்து தன் மனைவியைப் பற்றி புகார் கொடுக்க வந்து கலீஃபா வீட்டு வாசலை அடைந்தார். வீட்டுக்குள்ளே கலீஃபாவின் மனைவி சப்தமிட்டுக் கொண்டிருந்தார். இதனால் அம்மனிதர் திரும்பிய போது கலீஃபா உமர் (ரலி) அவர்கள், அவரை அழைத்து விசாரித்து விட்டு கூறினார்கள்.

"என் மனைவி எனக்காக பல சேவைகள் செய்வதால் அவளை நான் மன்னித்து விடுகிறேன். என் வீட்டில் காவல்காரியாக இருக்கிறாள். என் துணிகளை துவைத்துப் போடுகின்ற வண்ணாத்தியாக இருக்கிறாள். என் குழந்தைகளுக்கு செவிலியராக இருக்கிறாள். சுவையாக சமைக்கும் சமையல்காரியாக இருக்கிறாள்.

எல்லாவற்றுக்கும் மேலாக என் உடல் வேட்கையை தணித்து, பாவமான வழிகளின் பக்கம் என்னைப் போக விடாது தடுக்கும் திரையாக, கேடயமாகத் திகழ்கிறாள். இவ்வாறு பற்பல வடிவங்களில் எனக்கு என் மனைவி பணி செய்வதால் அவள் செய்யும் தவறுகளை மன்னித்து விடுகிறேன். இதைக்கேட்ட அந்த மனிதர் நானும் அவ்வாறு நடந்து கொள்கிறேன்" என விடை பெற்றார். (நூல்: தன்பீஹுல் காஃபிலீன்)

மனைவியை மன்னிக்கும் தன்மை எப்போது வரும்?

மேற்கண்ட உமர் (ரலி) அவர்களின் அறிவுரையைப் பார்க்கும்போது - மனைவியின் நேர்மறையான (positive) விஷயங்களைக் கணக்கில் எடுத்துக் கொண்டால் - மன்னிக்கும் மனப்பான்மை தானாகவே ஊற்றெடுக்கும் என்பது புரிகிறது. உமர் (ரலி) அவர்களிடன் அறிவுரை பெற வந்தவரின் மன மாற்றத்துக்கு அதுவே காரணம்.    

Comments