படிப்பு வராத குழந்தைகளைப் படிக்க வைப்பது எப்படி?


எல்லாக் குழந்தைகளையுமே அல்லாஹு தஆலா சுரங்கங்களாகவே தான் படைத்து இவ்வுலகுக்கு அனுப்பி வைக்கிறான். குழந்தைகளில் சிலரை இயல்பிலேயே “திறமை உள்ளவர்களாகவும்” வேறு சிலரை “திறமை அற்றவர்களாகவும்” படைப்பதில்லை இறைவன். எல்லாக் குழந்தைகளுமே சில அல்லது பல உள் ஆற்றல்களுடன் தான் பிறக்கின்றன.



ஆனால் – நாம் நமது குழந்தைகளைப் பள்ளிக்கூடங்களில் சேர்த்த பின்பு, சில காலம் கழித்து பள்ளிகளின் பொறுப்பாளர்கள் நம்மை அழைத்துச் சொல்வார்கள்:

“உங்கள் குழந்தைக்கு படிப்பு வரவில்லை!” சிறப்பு வகுப்புகள் எல்லாம் எடுத்த பிறகும் எந்த முன்னேற்றமும் இல்லை!

எனவே – Your child is unfit for our school! – என்று சொல்லி TC கொடுத்து நம்மை அனுப்பி விடுவார்கள்!!

இப்படிப்பட்ட சூழ்நிலைகளில் பெற்றோர்கள் திகைத்து விடுகிறார்கள்.

படிப்பு வராத குழந்தை என்று முத்திரை குத்தப்பட்ட குழந்தைக்கு அடுத்து நாம் என்ன செய்திட வேண்டும் என்று புரியாதவர்களாக – வேறு சில பள்ளிக்கூடங்களை நோக்கிச் செல்கிறார்கள். அங்கு சேர்த்த சில காலத்துக்குப் பின் அதே அழைப்பு…. அதே விளக்கம்… அதே நீக்கம்…..

இக்கட்டுரை குறிப்பாக அத்தகைய குழந்தைகளின் பெற்றோர்களுக்காக எழுதப்படுகிறது.

ஒரு குழந்தைக்கு படிப்பு “வராமல் போவதற்கு” பலப்பல காரணிகள் உண்டு!

எனவே எந்த ஒரு குறிப்பிட்ட காரணத்தினால் குழந்தைக்கு படிப்பு வரவில்லை என்பதைக் கண்டறியும் பொறுப்பு பெற்றோர்களுக்கு இருக்கிறது.

படிப்பு வராமல் போவதற்கான காரணங்களில் சிலவற்றை கீழே தருகின்றோம்:

மகிழ்ச்சியான, குதூகலமான, பாதுகாப்பான சூழலில் தான் குழந்தைகள் நன்றாகக் கல்வி கற்கிறார்கள் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

குழந்தைக்கு “பாதுகாப்பற்ற” உணர்வு (insecure) இருந்தால் அக்குழந்தைக்கு படிப்பு வராதாம். Very strict ஆன பெற்றோர்களும், குழந்தைகளை அடிக்கும் பெற்றோர்களும் சற்று கவனிப்பார்களாக.

கவலை மற்றும் மனச்சோர்வுக்கு (depression) ஆளான குழந்தைகளுக்கு மண்டையில் எதுவுமே ஏறாதாம். மனச்சோர்வுக்குக் காரணம் கண்டு அதனை நீக்கினாலே – குழந்தை படிக்கத் துவங்கும். அதற்குத் தேவை குழந்தையின் மீது அக்கரை காட்டும் பெற்றோர்கள்.

பதற்றப்படும் (anxiety) குழந்தைகளும் கற்றுக் கொள்ளவியலாது. குழந்தைகளுக்கு நிதானத்தைக் கற்றுக் கொடுத்தல் பெற்றோர் பெற்றோர் கடமை!

மனத் தூண்டலுக்கு (impulsiveness)ஆளாகும் குழந்தைகளும் சரிவரக் கற்பதில்லையாம். தொலைக்காட்சிப் பெட்டியின் முன் அதிக நேரம் செலவிடும் குழந்தைகள், தான் ஆசைப்படும் எந்த ஒன்றையும் உடனேயே அடைந்திடத் துடிக்கும் குழந்தைகள், செல்லம் கொடுக்கப் படும் குழந்தைகள் எல்லாம் இப்பிரிவில் அடங்குவர். கவனிக்க வேண்டியது பெற்றோர் கடமை!

திட்டப்படும் குழந்தைகள் படிப்பதேயில்லை! “உனக்குப் படிப்பே வராது!” என்றால் “தனக்குப் படிப்பே வராது!” என்று குழந்தை முடிவெடுத்து விடும்!

எனவே பெற்றோர்களே! உங்கள் குழந்தைகளுக்குப் படிப்பு வரவில்லை என்றால் அவர்களை மக்குப் பிள்ளை என்று முத்திரை குத்தி விட வேண்டாம்!

இன்னொன்றையும் பெற்றோர்கள் கவனித்திட வேண்டும். அதாவது உங்கள் குழந்தைகளை நீங்கள் எந்தப் பள்ளியில் சேர்த்திருக்கின்றீர்களோ அந்தப் பள்ளியின் ஆசிரியர்கள் நம் குழந்தைகளுடன் எப்படி நடந்து கொள்கிறார்கள் என்பதையும் பார்த்துக் கொள்ள வேண்டும்.

எல்லாக் குழந்தைகளும் பாடங்களை ஒரே மாதிரியாக கற்றுக் கொள்வதில்லை! குழந்தைகளின் “கற்கும் பாணிகளில்” (learning styles) பல விதங்கள் உண்டு. “காதால் கேட்டு கற்றுக் கொள்தல்” , கண்களால் பார்த்துக் கற்றுக்கொள்தல், எந்த ஒன்றையும் செய்து காட்டுவதன் மூலம் கற்றுக் கொள்தல் – என்பவை அவற்றுள் முக்கியமானவை. உங்கள் குழந்தைகளின் பள்ளியில் பாடங்கள் நடத்தப் படும் முறைகள் குறித்தும் அறிந்து கொள்வதும் நலம்.

Comments