உங்கள் குழந்தைகளின் ஆர்வங்களைப் பட்டியலிடுங்கள்!


உங்கள் குழந்தைகளின் ஆர்வங்கள் என்னென்ன என்று நீங்கள் அறிந்து வைத்திருப்பது அவர்களின் ஆளுமை வளர்ச்சிக்கு மிகவும் அவசியமாகும். எனவே உங்கள் குழந்தைகள் எவற்றிலெல்லாம் ஆர்வத்துடன் ஈடுபடுகின்றார்கள் என்று அவர்களை உற்று நோக்குங்கள்.


உங்கள் குழந்தைக்கு ஒரு விஷயத்தில் ஆர்வம் இருக்கின்றது என்பதற்கு என்ன அளவுகோல்? அக்குழந்தை அந்த ஒன்றில் எவ்வளவு நேரம் செலவிட்டாலும் அது அக்குழந்தைக்கு அலுத்துப் போவதில்லை! that will not be boring! அது அவரது சிந்தனையையும் செயல்பாட்டையும் ஆக்கிரமித்திருக்கும். மீண்டும் மீண்டும் அதன் பக்கமே அதன் கவனம் சென்று கொண்டிருக்கும். அது தான் அளவுகோல்!


நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் -

உங்கள் மகனுக்கென்று / மகளுக்கென்று ஒரு டைரியை தனியே எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். அவர்கள் ஆர்வத்துடன் ஈடுபடுகின்ற காரியங்கள் அனைத்தையும் அதில் பட்டியலிடுங்கள். அவர்களை ஆர்வப்படுத்துகின்ற விஷயம் எதுவாயினும் அவையனைத்தையும் – அது பத்து அல்லது பதினைந்து அல்லது இருபது என்று இருந்தாலும் தவறில்லை – பட்டியலில் சேர்த்துக் கொள்ளுங்கள்.

சரி, அனைத்தையும் பட்டியலிட்டு விட்டீர்களா?

அடுத்தது நீங்கள் செய்ய வேண்டியது:

அந்தப் பட்டியலில் – இறைவன் தடை செய்துள்ள ஏதாவது இடம் பெற்றுள்ளதா என்று பாருங்கள். உதாரணமாக – உங்கள் மகன் drums வாசிப்பது போல் அல்லது guitar வாசிப்பது போல் சமிக்ஞை செய்து கொண்டிருக்கின்றான் என்று வைத்துக் கொள்ளுங்கள். அதனை நீங்கள் பட்டியலில் சேர்த்திருந்தால் அதனை நீக்கி விடுங்கள். இது போன்று மார்க்கத்தில் ஹராம் ஆக்கப்பட்டுள்ள விஷயங்கள் எதுவாயினும் அவற்றை நீக்கி விட்டு – இரண்டாவது பட்டியல் ஒன்றை அதற்குக் கீழே தயாரித்துக் கொள்ளுங்கள். உங்கள் குழந்தைகளுக்கு ஹராம் – ஹலால் பற்றிய விழிப்புணர்வை கொஞ்சம் கொஞ்சமாக ஏற்படுத்துங்கள்.

அடுத்தது -

அந்தப் பட்டியலில் – உங்கள் செல்வங்கள் ஆர்வத்துடன் ஈடுபடுகின்ற ஏதாவது விஷயம் ஒன்றில் அவர்களுக்கு எந்த ஒரு பயனும் அளிக்காத காரியம் ஏதாவது இருந்தால் அதனையும் நீக்கி விடவும். சான்றாக உங்கள் குழந்தைகளுக்கு தொலைக்காட்சியில் கிரிக்கெட் விளையாட்டைப் பார்த்துக் கொண்டிருப்பது பிடிக்கும்; கார்ட்டூன் கதைகளை மணிக்கணக்கில் பார்த்துக் கொண்டிருப்பது மிகவும் பிடிக்கும் என்று எழுதியிருந்தால் இவைகளையும் பட்டியலிலிருந்து நீக்கி விடுங்கள். “உங்களுக்கு எது பயன் அளிக்குமோ அதில் ஆர்வம் காட்டுங்கள்” – என்பது நபிமொழியாகும். எனவே பயனற்ற விஷயங்களை நீக்கி விட்டு அதற்குக் கீழே மூன்றாவது பட்டியல் ஒன்றைத் தயாரியுங்கள். இப்பட்டியலில் உங்கள் குழந்தைகளை ஆர்வப்படுத்தும் விஷயங்களின் எண்ணிக்கை மிகவும் குறைந்திருக்கும். பரவாயில்லை!

அடுத்தது -

இந்த மூன்றாவது பட்டியலில் நீங்கள் எழுதியிருப்பவற்றுள் – உங்கள் குழந்தைகளுக்கு எது மிக மிக அதிகமான விருப்பமாக இருக்குமோ அதற்கு முன்னுரிமை தந்து அதன் அடிப்படையில் அவைகளை வரிசைப்படுத்தும் நான்காவது பட்டியல் ஒன்றைத் தயாரியுங்கள். இது தான் உங்களுடைய குழந்தைகளின் இப்போதைய ஆர்வப் பட்டியல்!

அடுத்தது -

ஒரு வாரம் அல்லது ஒரு மாதம் கழித்து மீண்டும் அந்த டைரியைப் புரட்டுங்கள். உங்கள் குழந்தைகளின் ஆர்வப்பட்டியலைப் பார்வையிடுங்கள். இப்போது அப்பட்டியலில் ஏதாவது புதிதாக சேர்க்க வேண்டும் என்று விரும்புகிறீர்களா; சேருங்கள். அதிலிருந்து ஏதாவது ஒன்றை நீக்க வேண்டும் என்று நினைக்கிறீர்களா, நீக்கி விடுங்கள். புதிய பட்டியல் ஒன்றைத் தயாரித்து வைத்துக் கொள்ளுங்கள்.

இவ்வாறு ஒரு வருடம் கழித்தும் புதிய பட்டியல் ஒன்றைத் தயாரித்து வைத்துக் கொள்ளுங்கள்.

அடுத்து – நீங்கள் பட்டியலிட்ட விஷயங்களுக்கு முன்னுரிமை அளித்து அவற்றில் உங்கள் குழந்தைகள் தங்களின் திறமைகளை வளர்த்துக் கொள்வது எப்படி என்பது குறித்து சிந்தியுங்கள். தகவல்களை சேகரியுங்கள். களத்தில் இறக்கி விடுங்கள் உங்கள் குழந்தைகளை! அது போலவே உங்கள் குழந்தைகள் தங்கள் எதிர்கால் வாழ்க்கையை அமைத்துக் கொள்ளும் களம் ஒன்றைப் பற்றியும் சிந்தியுங்கள். சிந்தித்துக் கொண்டே இருங்கள்.

இறைவன் உங்கள் குழந்தைகளுக்கு மகத்தான வாய்ப்புகளைத் திறந்து விடுவான் – இன்ஷா அல்லாஹ்!

“மேலும் எவர்கள் நம்முடைய வழியில் முயல்கின்றார்களோ நிச்சயமாக அவர்களை நம்முடைய நேரான வழிகளில் நாம் செலுத்துவோம்; நிச்சயமாக அல்லாஹ் நன்மை செய்வோருடனேயே இருக்கின்றான். (29: 69)

Comments