குழந்தைகளை திட்டாதீர்கள்!


எந்த ஒரு தாயாவது தான் பெற்றெடுத்த குழந்தைகயை 'சனியனே!' என்று அழைப்பாளா? ஆனால் அழைக்கிறார்களே! இதை எங்கே போய் சொல்வது? 'சனியனே! இங்கே வந்து தொலையேன், உன்னை எத்தனை தடவைக் கூப்பிடறது!' என்று திட்டுகின்ற தாய்மார்களை நாம் பார்த்துக் கொண்டு தானே இருக்கிறோம்.


இன்னும் எப்படியெல்லாம் திட்டுகிறோம் தெரியுமா?

'இங்கே வாடா நாயே!'

'உயிரை வாங்காதேடா'

'நீ ஒன்னுக்கும் லாயக்கில்லைடா'.

'டேய்! சோம்பேறிக் கழுதை'.

குழந்தைகளை திட்டுவதால் என்னென்ன விளைவுகள் ஏற்படுகின்றன தெரியுமா?

1. 'நீ எங்கேடா உருப்படப் போகிறாய்' என்று குழந்தைகளை திட்டுவதால் - அவர்களின் தன்னம்பிக்கையை நாம் அழித்து விடுகிறோம் தெரியுமா? அவர்களுக்குள் பொதிந்திருக்கின்ற ஆற்றல்கள் அனைத்தும் எப்படி வெளிப்படும் சொல்லுங்கள்?

2. மற்றவர்கள் முன்பு திட்டப் படும் போது - நமது குழந்தைகள் கூனிக் குறுகி விடுகிறார்கள். திட்டுவது குழந்தைகளின் மனத்தில் ஆழமான காயத்தை ஏற்படுத்தி விடுகிறது. அவர்களின் சுய மரியாதை பறிக்கப் படுகிறது. ஒரு தடவை திட்டுவதால் ஏற்பட்ட காயத்தை ஆற்றிட பத்து தடவை நாம் 'மருந்து' இட வேண்டுமாம்.

3, குழந்தைகளை திட்டுவதால் - பெற்றோர் ஒரு அழகற்ற முன்மாதிரியாக (அழகான முன்மாதிரிக்கு எதிர்ப்பதம்) ஆகி விடுகிறார்கள். திட்டுவது குழந்தைகளின் கோப உணர்ச்சியைத் தூண்டி விடுகிறது. இதன் மூலம் - நமது குழந்தைகள் மற்றவர்களை திட்டுவதற்கும் அவர்கள் எதிர்காலத்தில் வன்முறை மிக்கவர்களாக மாறுவதற்கும் வழி வகுத்து விடுகிறோம்.

4. நாம் விளையாட்டுக்காக திட்டி விடலாம். ஆனால் நமது திட்டு இறைவனிடத்தில் ஏற்றுக் கொள்ளப் பட்டு விட்டால் நமது குழந்தைகளின் கதி என்னவாகும்?

5. நாம் ஏதாவது ஒரு வேலையைக் கொடுத்திருப்போம். நமது செல்வம் அதனை எக்குத் தப்பாக செய்து விட்டு வந்திருக்கலாம். அல்லது ஏதாவது ஒரு பொருளை வாங்கிக் கொடுத்திருப்போம். ஒன்று தொலைத்து விட்டு வந்திருப்பான். அல்லது அதனை உடைத்து விட்டு வந்திருப்பான். 'நீ ஒன்னுக்கும் லாயக்கில்லைடா' என்று வசை பாடி விடுவோம். பத்தொன்பது வயது பையன் ஒருவன். அப்பா ஒரு கைபேசி ஒன்றை வாங்கிக் கொடுத்திருந்தார். ஒரே வாரத்தில் அதனைத் தொலைத்து விட்டான். தந்தை திட்டுவார் என்று பயந்து மகன் தற்கொலை செய்து கொண்ட செய்தியை சமீபத்தில் படித்திருப்பீர்கள்.

ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது - ஒரு குழந்தை தனது பதினாறு வயதை அடைவதற்குள் பெற்றோர்களிடமும் ஆசிரியர்களிடமும் மொத்தம் 17000 முறை திட்டு வாங்குகிறதாம். என்னவாகும் குழந்தைகள்?

திட்டுவதால் - நமது குழந்தைகளின் கண்ணியம் பாதிக்கப் படுகிறது.

அண்ணல் நபியவர்கள் சொன்னார்கள்: ' உங்கள் குழந்தைகளை கண்ணியப் படுத்துங்கள்' என்று! எப்படி கண்ணியப் படுத்துவது? நாம் அழகாக அவர்களிடம் பேசிட வேண்டும். அழகாக அவர்களைப் பேச வைத்திட வேண்டும். மற்றவர்களிடம் அழகாக அவர்களை அறிமுகப் படுத்திட வேண்டும். இறை வாக்கு ஒன்றை உங்களுக்கு நினைவு படுத்துகிறோம்.

இப்போது ஒரு திருமறை வசனத்தை உங்கள் கவனத்துக்குக் கொண்டு வருவோம்:

'மனிதர்களிடம் அழகானதைப் பேசுங்கள்' என்கிறான் வல்லோன் அல்லாஹூ தஆலா. (2:83)

அழகாகப் பேசுவது என்பது மற்றவர்களைப் பாராட்டிப் பேசுவதும் தான். ஆனால் இந்த இறைக் கட்டளைக்கு முன்னும் பின்னும் அல்லாஹ் என்ன சொல்லியிருக்கிறான் என்று பாருங்கள்:

- அல்லாஹ்வைத் தவிர வேறு எவரையும் வணங்கக் கூடாது.

- பெற்றோருக்கு நன்மை செய்யுங்கள்.

- உறவினர்க்கும் நன்மை செய்யுங்கள்.

- அநாதைகளுக்கும் நன்மை செய்யுங்கள்.

- ஏழைகளுக்கும் நன்மை செய்யுங்கள்.

- மனிதர்களிடம் அழகானதைப் பேசுங்கள்.

- தொழுகையை நிலை நிறுத்துங்கள்.

- ஸகாத்தையும் கொடுத்து வாருங்கள்.

எப்படிப்பட்ட உயர்ந்த வணக்க வழிபாடுகளுடன் மனிதர்களிடம் அழகானதைப் பேசுங்கள் என்ற கட்டளையையும் இணைத்துச் சொல்கிறான் அல்லாஹ் என்று ஒரு கணம் சிந்தியுங்கள். மேற்கண்ட வல்லோன் அல்லாஹ் பனி இஸ்ரவேலர்களிடம் வாங்கிய உறுதி மொழிகள் தான் மேற்கண்ட இறைக் கட்டனைகள் அனைத்தும். அல்லாஹ்விடம் உறுதி மொழி செய்வது என்பது எவ்வளவு பெரிய விஷயம்! சிந்தியுங்கள்.

Comments