மாய சுழற்சி மறைந்து விட்டதா?

ஒரு ஆண் - தன் மனைவியிடமும், தான் பெற்ற பிள்ளைகளிடமும், மற்றவர்களிடமும் மிக மிக முக்கியமாக எதிர்பார்ப்பது என்ன?

மற்றவர்களால் - தான் - கண்ணியப்படுத்தப்பட வேண்டும்! (To be respected). இதுவே ஒவ்வொரு ஆண்மகனின் முதன்மையான தேவையும், எதிர்பார்ப்பும் ஆகும்! (Primary Need for men).

இதனை அனைவருக்கும் முதலாக ஒரு மனைவி புரிந்து கொண்டிருக்க வேண்டும். அதாவது ஒரு கணவனின் முதல் தேவையே - அவன் கண்ணியப் படுத்தப்படுவது தான்!


ஒரு கணவன் எப்போது தன் மனைவி தன்னைக் கண்ணியப்படுத்துவதாக உணர்கிறான் எனில் அவள் தன் பேச்சைக் கேட்டு நடக்கும்போது தான்!

தன் பேச்சைக் கேட்டு நடக்கத் தவறும்போது தான் - கணவன் நினைக்கிறான்:

"என் மனைவி என்னை மதிப்பதே இல்லை!"

எந்த நிலையிலும் ஒரு மனைவி தன் கணவனுக்குக் கட்டுப்பட்டு நடந்திட வேண்டும் என்று நபிமொழிகள் மூலமாக நமக்கு வழிகாட்டப்பட்டிருக்கும் சூட்சுமமே - ஒரு கணவனின் முதன்மையான தேவையான  "கண்ணியத்தில்"  ஒரு மனைவி குறை வைத்திடக்கூடாது என்பதற்காகத்தான்!

ஆனால் பெரும்பாலான மனைவியருக்கு இது புரிவதே இல்லை! இதுவே திருமணப் பிரச்னைகளுக்கு பாதிக் காரணமாகும்.

**
அது போலவே - ஒரு பெண் - தன் கணவனிடமும், தான் பெற்ற பிள்ளைகளிடமும், மற்றவர்களிடமும் மிக மிக முக்கியமாக எதிர்பார்ப்பது என்ன?

மற்றவர்கள் தன் மீது அன்பு செலுத்திட வேண்டும்! (To be loved). தம்மிடம் பாசம் காட்டிட வேண்டும்; தம்மை மற்றவர்கள் நேசித்திட வேண்டும்! அவ்வளவு தான் அவர்களின் முதன்மையான எதிர்பார்ப்பு! (Primary Need for women).

இதனை அனைவருக்கும் முதலாக ஒரு கணவன் புரிந்து கொண்டிருக்க வேண்டும். அதாவது தன் கணவன் தன்மீது அன்பு செலுத்திட வேண்டும்; காதல் மழையைப் பொழிந்திட வேண்டும்; பாசம் காட்டிட வேண்டும் - என்று தான் ஒவ்வொரு மனைவியும் தம் கணவனிடம் எதிர்பார்க்கின்றனர்.

அதாவது ஒரு மனைவியின் முதல் தேவையே - தன் கணவனின் முழுமையான அன்புக்குச் சொந்தக்காரியாக -  தான் நடத்தப்பட வேண்டும் என்பது தான்!

ஒரு மனைவி தன் கணவன் தன்னை நேசிப்பதாக எப்படி உணர்ந்து கொள்கிறாள் தெரியுமா?

தன் கணவனின் ஒவ்வொரு சொல்லிலிருந்தும், ஒவ்வொரு சின்னச் சின்ன செயலிலிருந்தும் - ஏன்? தன் கணவனின் முக பாவத்திலிருந்தும் கூட - அவள் தெரிந்து கொண்டு விடுகிறாள் - தன் கணவன் தன் மீது அன்பு வைத்திருக்கின்றானா இல்லையா என்று!

ஒரு சிறிய சொல்லை வைத்தே அல்லது  ஒரு சிறிய செயலை வைத்தே சொல்லி விடுவாள் மனைவி:

"என் கணவன் என் மீது அன்பு செலுத்துவதே இல்லை!"

ஆனால் பெரும்பாலான கணவன்மார்களுக்கு இது புரிவதே இல்லை! இதுவே திருமணப் பிரச்னைகளுக்கு இன்னொரு பாதிக் காரணமாகும்.

***

இந்த சூட்சுமம் புரியாத பெரும்பாலான கணவன் மனைவியர்கள் தான் - ஒரு விதமான - "மாய சுழற்சி" ஒன்றில் சிக்கிக் கொள்கிறார்கள்!  அது என்ன மாய சுழற்சி?

தன் மீது அன்பு செலுத்தாத கணவனை - ஒரு மனைவி கண்ணியப்படுத்திட மாட்டாள்!

தனக்குக் கண்ணியம் அளித்திடாத மனைவியின் மீது - ஒரு கணவன் - அன்பு செலுத்திட மாட்டான்!

மேலே இருக்கும் இரண்டு வரிகளை மீண்டும் மீண்டும் படியுங்கள்!

மாய சுழற்சி ஒன்று தென்படுகிறதா?



இந்த மாய சுழற்சியை  - Crazy Cycle - என்று அழைக்கிறார்கள் உளவியல் அறிஞர்கள்.

கண்ணுக்குத் தெரியாத சுழற்சி என்பதால் அதனை நாம் மாய சுழற்சி என்று சொல்லலாம்.

இந்த மாய சுழற்சியை உடைக்காத வரை - கணவன் மனைவி பிரச்னை தீர வாய்ப்பே கிடையாது!

இந்த மாய சுழற்சியை உடைத்திட முடியுமா?

அது மிக மிக இலகுவானது!

***

அது ஒரு மிகச் சிறிய பயிற்சி தான்!

முதலில் ஒரு நாள்! ஒரே ஒரு நாள் மட்டும் தான்!

இதனை மட்டும் செய்து பாருங்கள்:

இதனை கணவனும் மனைவியும் சேர்ந்து தான் செய்திட வேண்டும் என்பதில்லை!

துவக்கி வைப்பவர்கள் ஏராளமான நன்மைகளைப் பெற்றுக் கொள்ளலாம்! அவ்வளவு தான்!!

அந்தப் பயிற்சி இது தான்!

கணவன்மார்களே! எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல், எந்த வித நிபந்தனையும் இல்லாமல் - உங்கள் மனைவியின் மீது முழுமையான "அன்பைச் செலுத்துங்கள்!" அதில் எந்தக்குறையும் வைத்து விடாதீர்கள்! அவர்கள் இதற்கு முன்னர் உங்களைக் கண்ணியக் குறைவாக நடத்தியிருந்தாலும் சரியே!

அவர்களிடம் அன்பாகப் பேசுங்கள்! அன்பை உங்கள் செயல்களால் வெளிப்படுத்துங்கள்! அன்பை உங்கள் நெருக்கத்தாலும் வெளிப்படுத்துங்கள்! Tell me! Show me! Touch me! - ஃபார்முலா நினைவுக்கு வருகிறதா! அதனை அப்படியே செயல்படுத்துங்கள்! முதலில் ஒரே ஒரு நாள் மட்டும்!

அதாவது - "Show your wife complete love - "unconditionally" - at least for one day as a starting point!"

இப்படிச் செய்கின்ற கணவன் அந்த மாய சுழற்சியை உடைத்தெறிந்து விட்டார்!

அடுத்து -

மனைவியரே! அது போலவே  எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல், எந்த வித நிபந்தனையும் இல்லாமல் - உங்கள் கணவரின் எல்லாவிதமான எதிர்பார்ப்புகளுக்கும், கட்டளைகளுக்கும், கொஞ்சம் கூட முகம் கோணாமல் - செவி சாய்த்து உங்கள் கணவரை மிக மிக கண்ணியமாக நடத்துங்கள்! அதில் எந்தக்குறையும் வைத்து விடாதீர்கள்! அவர்கள் இதற்கு முன்னர் உங்கள் மீது பாசம் காட்டிடாதவராக இருந்திருந்தாலும் சரியே!

அவரிடம் கண்ணியமாகப் பேசுங்கள்; கண்ணியமாக நடத்துங்கள்; கண்ணியக் குறைவான ஒரு வார்த்தை கூட வேண்டாம்; அப்படியே அவருக்குக் கட்டுப்பட்டு விடுங்கள்; கொஞ்சம் கூட முகம் சுழித்து விடக்கூடாது; அது போல முதலில் ஒரே ஒரு நாள் மட்டும்!

அதாவது - "Show your husband complete respect - "unconditionally" - at least for one day as a starting point!"

இப்படிச் செய்கின்ற மனைவி அந்த மாய சுழற்சியை உடைத்தெறிந்து விட்டார்!

***

பின்னர் இப்பயிற்சியை - தொடர்ந்து ஒரு மூன்று நாட்களுக்கு - விரிவு படுத்துங்கள்! இடையிலே சிறு சிறு "தவறுகள்" (lapses) நிகழ்ந்து விட்டாலும், மீண்டும் பயிற்சியை மனம் தளராமல் தொடருங்கள்! உங்கள் துணைவர்/ துணைவியரிடம் எந்த மாற்றமும் தென்படவில்லை என்றாலும் - பயிற்சியைக் கைவிட்டு விட வேண்டாம்! அல்லாஹ்வின் மீது "நம்பிக்கை" வைத்து விடாப்பிடியாகத் தொடருங்கள்!

பின்னர் இதே பயிற்சியை பத்து நாட்கள், இருபது நாட்கள் என்று விரிவு படுத்துங்கள்!

என்ன நடக்கும்?

எந்த வித எதிர்பார்ப்பும் இல்லாமல் தன் மீது அன்பு மழை பொழியும் கணவனுக்கு அப்படியே கட்டுப்பட்டு விடுவாள் மனைவி! தன் கணவனைக் கண்ணியப்படுத்திடுவாள் மனைவி!

அது போல எந்த வித எதிர்பார்ப்பும் இல்லாமல் தன்னை மதித்து நடக்கும் மனைவியின் மீது காதல் கொள்வான் கணவன்; அவள் மீது அன்பு மழையைப் பொழிந்திடுவான் கணவன்!

மேலே இருக்கும் இரண்டு வரிகளை மீண்டும் மீண்டும் படியுங்கள்!

மாய சுழற்சி மறைந்து விட்டதா?

Comments

Post a Comment