குழந்தைகளைத் திட்டுவதால் ஏற்படும் விளைவுகள்!

தவறு செய்கின்ற குழந்தைகளைத் திருத்திட பெரும்பாலான பெற்றோர்கள் தேர்ந்தெடுப்பது இரண்டு முறைகளைத் தான்:

ஒன்று: திட்டுவது இன்னொன்று: அடிப்பது

இந்த இரண்டு முறைகளுமே தவறு!


முதலில் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளைத் திட்டுவதை எடுத்துக் கொள்வோம்.

எந்த ஒரு தாயாவது தான் பெற்றெடுத்த குழந்தைகயை 'சனியனே!' என்று அழைப்பாளா? ஆனால் அழைக்கிறார்களே! இதை எங்கே போய்ச் சொல்வது?

'சனியனே! இங்கே வந்து தொலையேன், உன்னை எத்தனை தடவைக் கூப்பிடறது!' என்று திட்டுகின்ற தாய்மார்களை நாம் பார்த்துக் கொண்டு தானே இருக்கிறோம்.

இன்னும் எப்படியெல்லாம் திட்டுகிறோம் தெரியுமா?

'இங்கே வாடா நாயே!'

'உயிரை வாங்காதேடா!'

'நீ ஒன்னுக்கும் லாயக்கில்லைடா!'

'டேய்! சோம்பேறிக் கழுதை!'

பயிலரங்கம் ஒன்றில் கலந்து கொண்டோரிடம் கேட்கப்பட்டது. பெற்றோர்கள் தம் குழந்தைகளை வேறு என்னென்ன சொற்களால் திட்டுகிறார்கள் என்று!

அவர்கள் எழுதித் தந்ததிலிருந்து:

தடிமாடு, குரங்கு, லூஸ், நாய், பேய், பிசாசு, எருமை, கழுதை....

அறிவு இல்லை? திருட்டு நாய்! தொலைஞ்சு போ! .......

**

ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது - ஒரு குழந்தை தனது பதினாறு வயதை அடைவதற்குள் பெற்றோர்களிடமும் ஆசிரியர்களிடமும் மொத்தம் 17000 முறை திட்டு வாங்குகிறதாம். என்னவாகும் குழந்தைகள்?

***

குழந்தைகளை திட்டுவதால் என்னென்ன விளைவுகள் ஏற்படுகின்றன தெரியுமா?

1. பெற்றவர்கள் தங்கள் குழந்தைகளைத் தொடர்ந்து திட்டிக் கொண்டே இருந்தால் - அது பெற்றவர் -  குழந்தை நல்லுறவையே பாதிப்படையச் செய்து விடுகிறது! பெற்றவர் நல்லுறவு பாதிப்படைந்து விட்டால் - அந்தக் குழந்தை - "பாதுகாப்பற்ற மனநிலை" ஒன்றுக்குத் தள்ளப்பட்டு விடுகிறது.   The child feels insecure!

2. 'நீ எங்கேடா உருப்படப் போகிறாய்' என்று குழந்தைகளை திட்டுவதால் - அவர்களின் தன்னம்பிக்கையை நாம் அழித்து விடுகிறோம் தெரியுமா? அவர்களுக்குள் பொதிந்திருக்கின்ற ஆற்றல்கள் (hidden talents) அனைத்தும் எப்படி வெளிப்படும் சொல்லுங்கள்? திட்டப்படுகின்ற குழந்தைகள் தங்களின் கருத்துக்களை வெளியே சொல்ல பயப்படுவார்கள்! எந்த ஒரு விஷயத்திற்கும் தாமாகவே நல்லதொரு முடிவை எடுத்திட அவர்கள் அஞ்சுவார்கள்! புதிதாத எந்த ஒன்றையும் சாதித்திட வேண்டும் என்ற ஊக்கம் (initiative) மங்கிப்போய் விடும்! பெற்றவர்கள் அவர்களைத் தட்டிக் கொடுக்க மாட்டார்கள்! மட்டம் தட்டுதல் மட்டும் தவறாமல் நடந்து கொண்டிருக்கும்!

3. திட்டுவதால் - நமது குழந்தைகளின் கண்ணியம் பாதிக்கப்படுகிறது. மற்றவர்கள் முன்பு திட்டப்படும் போது - நமது குழந்தைகள் கூனிக் குறுகி விடுகிறார்கள் (scolding leads to low self esteem). தங்களுக்கு எந்த ஒரு மதிப்புமில்லையே என்று கையறு நிலைக்கு ஆளாகிறார்கள்! திட்டுவது குழந்தைகளின் மனத்தில் ஆழமான காயத்தை ஏற்படுத்தி விடுகிறது. அவர்களின் சுயமரியாதை பறிக்கப்படுகிறது. ஒரு தடவை திட்டுவதால் ஏற்பட்ட காயத்தை ஆற்றிட பத்து தடவை நாம் 'மருந்து' இட வேண்டுமாம்.

அண்ணல் நபியவர்கள் சொன்னார்கள்: ' உங்கள் குழந்தைகளை கண்ணியப் படுத்துங்கள்!' (நூல்: இப்னு மாஜா)

4, குழந்தைகளை திட்டுவதால் - பெற்றோர் ஒரு அழகற்ற முன்மாதிரியாக ஆகி விடுகிறார்கள். இதன் மூலம் - நமது குழந்தைகள் மற்றவர்களை திட்டுவதற்கு நாமே வழி வகுத்துத் தந்து விடுகிறோம்! திட்டுதல் என்கின்ற கெட்ட பழக்கம் ஒரு தொற்று நோய் போல!

5. திட்டுவது குழந்தைகளின் கோப உணர்ச்சியைத் தூண்டி விடுகிறது. தங்கள் கோபத்தை அடக்கிக் கொள்வார்கள்; அவர்கள் வாய் திறக்க மாட்டார்கள். அடக்கி வைக்கப்படுகின்ற அந்தக் கோபம் அவர்கள் எதிர்காலத்தில் வன்முறை மிக்கவர்களாக மாறுவதற்கு வழி வகுக்கிறது.

6. நமது குழந்தைகள் தங்களின் தவறுகளை ஒப்புக் கொள்ள பயப்படுவார்கள். பெற்றோர்கள் திட்டுவார்கள் என்ற பயம் - அவர்களைத் தற்கொலைக்குத் தூண்டி விடுகிறது. நாம் ஏதாவது ஒரு வேலையைக் கொடுத்திருப்போம். நமது செல்வம் அதனை எக்குத் தப்பாக செய்து விட்டு வந்திருக்கலாம். அல்லது ஏதாவது ஒரு பொருளை வாங்கிக் கொடுத்திருப்போம். ஒன்று தொலைத்து விட்டு வந்திருப்பான். அல்லது அதனை உடைத்து விட்டு வந்திருப்பான். 'நீ ஒன்னுக்கும் லாயக்கில்லைடா' என்று வசை பாடி விடுவோம். பத்தொன்பது வயது பையன் ஒருவன். அப்பா ஒரு கைபேசி ஒன்றை வாங்கிக் கொடுத்திருந்தார். ஒரே வாரத்தில் அதனைத் தொலைத்து விட்டான். தந்தை திட்டுவார் என்று பயந்து மகன் தற்கொலை என்று செய்தி வருகிறது.

***
இறை வாக்கு ஒன்றை உங்களுக்கு நினைவு படுத்துகிறோம்.

'மனிதர்களிடம் அழகானதைப் பேசுங்கள்!'  (குர் ஆன் 2 : 83)

அழகானதைப் பேசுங்கள் என்ற இந்த இறைக் கட்டளைக்கு முன்னும் பின்னும் அல்லாஹ் வேறு என்னென்ன கட்டளைகளை விதித்திருக்கிறான் என்று பாருங்கள்:

- அல்லாஹ்வைத் தவிர வேறு எவரையும் வணங்கக் கூடாது.

- பெற்றோருக்கு நன்மை செய்யுங்கள்.

- உறவினர்க்கும் நன்மை செய்யுங்கள்.

- அநாதைகளுக்கும் நன்மை செய்யுங்கள்.

- ஏழைகளுக்கும் நன்மை செய்யுங்கள்.

- மனிதர்களிடம் அழகானதைப் பேசுங்கள்.

- தொழுகையை நிலை நிறுத்துங்கள்.

- ஸகாத்தையும் கொடுத்து வாருங்கள்.

எப்படிப்பட்ட உயர்ந்த வணக்க வழிபாடுகளுடன் மனிதர்களிடம் அழகானதைப் பேசுங்கள் என்ற கட்டளையையும் இணைத்துச் சொல்கிறான் அல்லாஹ் என்று ஒரு கணம் சிந்தியுங்கள்.

வல்லோன் அல்லாஹ் பனி இஸ்ரவேலர்களிடம் வாங்கிய உறுதிமொழிகள் தான் மேற்கண்ட இறைக் கட்டனைகள் அனைத்தும்.

அல்லாஹ்விடம் உறுதி மொழி செய்வது என்பது எவ்வளவு பெரிய விஷயம்! சிந்தியுங்கள்.

Comments