மூன்று வகையான குடும்பங்கள்!

முதல் வகை:

மிகக் கடுமையான கட்டுப்பாடுகளைக் கொண்ட குடும்பங்கள்! very strict and very harsh! கடுகடுப்பான முகங்கள்; நகைச்சுவை உணர்வு அற்ற மனிதர்கள்; எதையோ பரிகொடுத்தது போல் - எல்லாரும் முகத்தைத் தூக்கி வைத்திருக்கும் சூழல்; பய உணர்ச்சியுடன் சுற்றி வரும் குழந்தைகள்; ஒரே வரியில் சொல்வதானால் - அது குழந்தைகளுக்கு ஒரு சிறைச்சாலை!
தந்தை வீட்டில் இல்லாத போது சற்றே மகிழ்ச்சி! ஆனால் தந்தை வீட்டுக்கு வந்து விட்டாலோ அங்கே மயான அமைதி; குழந்தைகள் என்ன செய்வார்கள்? ஒன்று வெளியே ஓடி விடுவார்கள்; அல்லது வீட்டில் எங்காவது ஒளிந்து கொள்வார்கள்.

எப்போதும் அதிகாரம் செலுத்தும் தந்தை. குரலில் கூட கொடூரம். இதில் முரண்பாடு என்னவென்றால் - இந்தத் தந்தை தான் வீட்டுக்கு வெளியே மார்க்கப்பற்றுள்ளவர் என்று அறியப்படுபவர்! "அல்லாஹ் நரகத்தில் போட்டு விடுவான்" என்று அடிக்கடி குழந்தைகளை பயமுறுத்துபவர் இவர். குழந்தைகள் இங்கே "வளர்வதில்லை" என்பது தான் கவலை அளிக்கக்கூடிய விஷயம்!

**

இரண்டாவது வகை:

இதற்கு நேர் எதிரான வகையைச் சேர்ந்த குடும்பங்கள்! அதாவது - கட்டுப்பாடுகள் என்பது அறவே இல்லாத குடும்பங்கள். இதனை ஆங்கிலத்தில் disorganized family என்கிறார்கள்.

இரண்டு சான்றுகளைச் சொன்னால் போதும்.

ஒன்று: இரவில் மிகத்தாமதமாகவே இவர்கள் தூங்கச் செல்வார்கள்; காலையில் எட்டு மணி வரை கூட தூங்கிக் கொண்டிருப்பார்கள்; உணவு உண்ணும் நேரம் கூட - ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதம் தான் இங்கே!

இரண்டு: ஒரு பொருளை எங்கேயாவது வைத்து விட்டு தேடுவார்கள், பாருங்கள்! அப்படி ஒரு தேடல்! "இங்கே தானே வைத்தேன்! நீ பார்த்தாயா?" -என்று ஒவ்வொரு பொருளையும் தேடி எடுப்பதிலேயே நேரம் ஓடிக் கொண்டிருக்கும் இந்த இல்லங்களில்!

குழந்தைகளிடம் "பாக்கெட் மணி" பொங்கி வழியும். அவர்கள் எங்கே போகிறார்கள்; யாருடன் சேர்கிறார்கள்; என்ன செய்கிறார்கள் - என்பது பற்றியெல்லாம் பெற்றவர்கள் கவலைப்படுவதே இல்லை! இந்தப் பெற்றவர்களுக்கு - குழந்தைகளுடன் செலவழிக்க என்று நேரமே இருப்பதில்லை!

**

மூன்றாவது வகை:

இந்த வகைக் குடும்பங்கள் - நெகிழ்ச்சியான கட்டுப்பாடுகளுடன் மகிழ்ச்சியாக வாழும் குடும்பங்கள். ஆங்கிலத்தில் organized family - என்று அழைக்கிறார்கள்.

இங்கே தந்தையும் தாயும் குழந்தை வளர்ப்பு பற்றி அறிந்திருப்பார்கள்; ஒன்று - அவர்கள் தங்களின் பெற்றோர்களிடமிருந்து அனுபவமாகப் படித்துக் கொண்டிருப்பார்கள்; அல்லது மார்க்கக்கல்வி அவர்களுக்கு அதனைக் கற்றுக் கொடுத்திருக்கும்.

இந்தக் குடும்பங்களில் - இன்ன பொருள் இன்ன இடத்தில் தான்! இன்ன இன்ன நேரத்தில் இன்ன இன்ன விஷயங்கள் தான்!

வீட்டுச் சாவியா? அது இன்ன இடத்தில் தான்! நோட்டுப் புத்தகங்களா? அது அந்த அலமாரியின் மேல் தட்டில் தான்! உப்பு, புளி உட்பட அது அது அந்தந்த இடங்களில் அழகாக அமர்ந்து அலங்கரித்துக் கொண்டிருக்கும்! 


பயன்படாத பொருள்களை அவர்கள் அப்புறப்படுத்தி விடுவார்கள்; அளவுக்கு அதிகமாக ஒவ்வொன்றையும் வாங்கிக் குவித்து வைத்திருக்க மாட்டார்கள். வீடு மிக சுத்தமாக இருக்கும் - கழிவறைகள் உட்பட.

அடுத்து - எந்தெந்த நேரத்தில் எது எதுவோ அவை அனைத்தும் தவறாமல் நடந்து கொண்டிருக்கும். அதே நேரத்தில் நெகிழ்ச்சியுடன் நடந்து கொள்வார்கள் பெற்றோர்கள்.

வீட்டுப்பாடம் எழுத வேண்டிய நேரம் அது; எதிர்வீட்டுக் குழந்தைகள் விளையாட அழைக்கின்றார்கள்; "அம்மா! நான் விளையாடப் போகிறேன், அம்மா!" என்பான் மகன். "ஓக்கே! இஷாவுக்கு பாங்கு சொன்னதும் வீட்டுக்கு வந்து விட வேண்டும்; காலையில் ஃபஜ்ர் தொழுததும் வீட்டுப்பாடம் எழுதி விட வேண்டும், சரியா?" என்பார் தாய். மறு நாள் காலை அந்தச் சிறுவன் - தொழுது விட்டு, வீட்டுப்பாடம் எழுதிக் கொண்டிருக்கும் அழகைப் பார்த்து, பூரித்துப் போய் விடுவார் தாய்! பள்ளிக்கூடம் அனுப்பு முன், அவனைக் கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்து அனுப்பி வைப்பாள் அந்தத் தாய்!

**

இந்த மூன்று வகை குடும்பங்களில் எந்த வகை குடும்பங்களில் குழந்தைகள் மிக நன்றாக வளர்கிறார்கள்?

மூன்றாவது வகைக் குடும்பங்களில் தான் என்று நீங்களே சொல்லி விடுவீர்கள்!

அதாவது கட்டுப்பாடுகளும் வேண்டும்; அந்தக் கட்டுப்பாடுகளுடன் நெகிழ்ச்சியும் கை கோர்த்துச் சென்றிட வேண்டும்.

இப்படிப்பட்ட குடும்பங்கள் எங்கே இருக்கிறது என்கிறீர்களா?

அது உங்கள் குடும்பம் தான்! அதுவும் இன்றிலிருந்தே!

Comments