குழந்தைகளுக்காக, ப்ளீஸ்!

கணவன் மனைவியர் கருத்து வேறுபாடுகள் தவிர்க்க முடியாதவை என்பது அனைவரும் அறிந்த விஷயம் தான்!

ஆனால் அந்த கருத்து வேறுபாடுகளை முன்னிருத்தி குழந்தைகளுக்கு முன்பாகவே, கணவனும் மனைவியும் "சண்டை" போட்டுக் கொள்ளாதீர்கள் என்பதற்காகவே இந்தப் பதிவு.

இவ்வாறு குழந்தைகளுக்கு முன்பாகவே "மோதிக் கொள்ளும்" பெற்றோர்களை இரண்டு விதமாகப் பிரிக்கலாம்.

ஒன்று:
கணவனும் சண்டை போடுவார்; மனைவியும் சண்டை போடுவார்; கடினமான சொற்களால் ஒருவரை ஒருவர் (HARSH CRITICISM) திட்டிக் கொள்வார்கள்; ஒருவரை ஒருவர் அவமானப்படுத்திக் கொள்வர்(CONTEMPT); ஒருவர் மீது ஒருவர் குற்றம் சுமத்திக் கொள்வார்கள் (BLAMING); தன் மீது தப்பே கிடையாது (DEFENSIVE) என்று வாதாடுவார்கள்; இருவரும் குரலை உயர்த்துவார்கள்; குழந்தைகள் அருகில் இருப்பதெல்லாம் அவர்கள் கண்களுக்குத் தெரிவதில்லை! இந்த சண்டையில் யாரும் சளைத்தவர்கள் கிடையாது! விட்டுக் கொடுப்பது என்ற பேச்சுக்கே இங்கே இடமில்லை!

இரண்டு:

இங்கேயும் கணவனும் மனைவியும் சண்டை போட்டுக் கொள்வார்கள்; திட்டிக் கொள்வார்கள்; குற்றம் சுமத்திக் கொள்வார்கள்; தன் மீது தப்பே இல்லை என்று வாதாடியும் கொள்வார்கள்; ஆனால் - ஒரு கட்டத்தில் - கணவனோ அல்லது மனைவியோ - "இவரோடு" சண்டை போடுவதில் எந்தவிதமான பயனும் இல்லை என்று முடிவு கட்டிக் கொண்டு - ஒதுங்கி விடுவார்கள்; இதற்குப் பெயர் தான் STONE WALLING! இவ்வாறு ஒதுங்கி விடுபவர்கள் பெரும்பாலும் கணவன்மார்கள் தானாம்!

பெற்றவர்கள் இருவரும் தொடர்ந்து சண்டை போட்டுக் கொண்டிருந்தாலும் சரி, அல்லது இருவரில் ஒருவர் மட்டும் ஒதுங்கிச் சென்று கொண்டிருந்தாலும் சரி, இதனால் குழந்தைகள் வெகுவாக பாதிக்கப்படுகிறார்கள் என்பது தான் நிதரிசனமான உண்மை!

எப்படி பாதிக்கப்படுகிறார்கள் தெரியுமா?

விட்டுக் கொடுக்காமல் தொடர்ந்து கணவனும் மனைவியும் சண்டை போட்டுக் கொள்கின்ற பெற்றோர்களின் குழந்தைகள் - பிறருடன் சண்டை போடக்கூடியவர்களாக உருவாகிறார்களாம்!

எந்த வயதில் தெரியுமா? எட்டு வயதிலிருந்தே! இந்தக் குழந்தைகள் தான் எந்தவிதமான கட்டுப்பாடுகளையும் உடைத்துக் காட்டுவார்களாம்! They only - break the rules! சட்டென்று கோபப்பட்டு மற்றக் குழந்தைகளை அடித்து விடுபவர்கள் இவர்கள் தாம்!

பெற்றவர்களில் இருவரில் ஒருவர் (குறிப்பாக தந்தை) ஒதுங்கி விடும் நிலை தொடர்கின்ற குடும்பத்தில் வளர்கின்ற குழந்தைகள் - ஆழ்ந்த சோகத்தினால் பாதிக்கப்பட்டவர்களாக மாறுகிறார்கள். They become highly depressed!

இந்தக் குழந்தைகள் நன்றாகப் படிக்க மாட்டார்கள்; நண்பர்கள் என்று இவர்களுக்கு யாரும் இருக்க மாட்டார்கள்!

எனவே பெற்றோர்களை நாம் கெஞ்சிக் கேட்டுக் கொள்வதெல்லாம் ஒன்றே ஒன்று தான்:

குழந்தைகளுக்காக, ப்ளீஸ்!

Comments