கவலை - ஓர் ஆய்வு - பகுதி 4


Ghamma - என்ற சொல்லும் கவலையைக் குறிக்கும் இன்னொரு அரபிச் சொல் ஆகும்!

ஆங்கில அகராதியில் இதன் பொருள்கள் வருமாறு:

Ghamma:  To cover, veil, conceal, to fill someone with sadness, pain or grief, to pain, grieve, distress,

Ghumma: To obscure, incomprehensible, to be overcast (sky) to fill with sadness, be worried, be sad, grieve, pine, worry

Ghamm – affliction, sorrow, distress, anxiety,

Ghummat – Affliction,

Ghamaam - Clouds,

Aghamm – covered with dense hair, shaggy, thick, dense (clouds)

அகராதிப் பொருள்களை சற்றே கவனித்தால் - இச்சொல்லுக்கு இரண்டு பொருள்கள் இருப்பதைக் காணலாம்.  ஒன்று: கவலை மற்றொன்று: மேகம்

கவலைக்கும் மேகத்துக்கும் என்ன சம்பந்தம்?

Ghamm - எனும்  இச்சொல் குறிக்கின்ற "கவலை" என்பது எப்படிப்பட்டதென்றால் - மேகத்தால் சூழப்பட்டு இருள் ஒன்று கவ்விக் கொள்வதைப் போல, பிரச்னை ஒன்றில் சிக்கிக் கொண்டு விட்டு, அதிலிருந்து வெளியே வர வழி இல்லாத நிலையில் ஏற்படுகின்ற கவலை ஆகும்!

திருமறையில்  - Ghamaam - அதாவது மேகம் எனும் பொருளில் பின் வரும் வசனங்களில் இடம்பெற்றிருப்பதை நாம் காணலாம். (2:57, 2:210,  7:160, 25:25)

**
திருமறையில் மொத்தம் பத்து தடவைகள் இச்சொல் வெவ்வேறு வடிவங்களில் இடம் பெற்றுள்ளன. அவை வருமாறு:

3:153       3:154       20:40       21:88       22:22     

10:71      2:57         2:210       7:160       25:25


**
ஒரு சில வசனங்களை மட்டும் பார்ப்போம்:

3: 153


اِذْ تُصْعِدُوْنَ وَلَا تَلْوٗنَ عَلٰٓى اَحَدٍ وَّالرَّسُوْلُ يَدْعُوْكُمْ فِىْۤ اُخْرٰٮكُمْ فَاَثَابَكُمْ غَمًّا ۢ بِغَمٍّ لِّـكَيْلَا تَحْزَنُوْا عَلٰى مَا فَاتَكُمْ وَلَا مَاۤ اَصَابَكُمْ‌ؕ وَاللّٰهُ خَبِيْرٌۢ بِمَا تَعْمَلُوْنَ‏

(நினைவு கூறுங்கள்! உஹது களத்தில்) உங்கள் பின்னால் இருந்து இறைதூதர் உங்களை அழைத்துக் கொண்டிருக்க, நீங்கள் எவரையும் திரும்பிப் பார்க்காமல் மேட்டின்மேல் ஏறிக் கொள்ள ஓடிக் கொண்டிருந்தீர்கள்; ஆகவே - பலனாக இறைவன் துக்கத்தின்மேல் துக்கத்தை (Ghammam bi Ghammin) உங்களுக்குக் கொடுத்தான்.....


20: 40

  إِذْ تَمْشِي أُخْتُكَ فَتَقُولُ هَلْ أَدُلُّكُمْ عَلَىٰ مَنْ يَكْفُلُهُ ۖ فَرَجَعْنَاكَ إِلَىٰ أُمِّكَ كَيْ تَقَرَّ عَيْنُهَا وَلَا تَحْزَنَ ۚ وَقَتَلْتَ نَفْسًا فَنَجَّيْنَاكَ مِنَ الْغَمِّ وَفَتَنَّاكَ فُتُونًا ۚ فَلَبِثْتَ سِنِينَ فِي أَهْلِ مَدْيَنَ ثُمَّ جِئْتَ عَلَىٰ قَدَرٍ يَا مُوسَىٰ

..... பின்னர் நீர் ஒரு மனிதனைக் கொன்று விட்டீர்; அப்பொழுதும் நாம் உம்மை அக்கவலையிலிருந்து (Ghammi) விடுவித்தோம்; மேலும் உம்மைப் பல சோதனைகளைக் கொண்டு சோதித்தோம். அப்பால் நீர் பல ஆண்டுகளாக மதியன் வாசிகளிடையே தங்கியிருந்தீர்; மூஸாவே! பிறகு நீர் (நம் தூதுக்குரிய) தக்க பருவத்தை அடைந்தீர்.


21: 87 - 88

இன்னும் (நினைவு கூர்வீராக:) துன்னூன் (யூனுஸ் தம் சமூகத்தவரை விட்டும்) கோபமாக வெளியேறிய போது, அவரை நாம் நெருக்கடியில் ஆக்கமாட்டோம் என்று எண்ணிக் கொண்டார்; எனவே அவர் (மீன் வயிற்றின்) ஆழ்ந்த இருளிலிருந்து “உன்னைத் தவிர வணக்கத்திற்குரிய நாயன் யாருமில்லை; நீ மிகவும் தூய்மையானவன்; நிச்சயமாக நான் அநியாயக்காரர்களில் ஒருவனாகி விட்டேன்” என்று பிரார்த்தித்தார். எனவே, நாம் அவருடைய பிரார்த்தனையை ஏற்றுக் கொண்டோம்; அவரைத் துக்கத்திலிருந்தும் (Ghammi) விடுவித்தோம். இவ்வாறே முஃமின்களையும் விடுவிப்போம்.


10:71

மேலும் (நபியே!) நீர் அவர்களுக்கு நூஹ்வின் சரித்திரத்தை ஓதிக்காண்பிப்பீராக! அவர் தம் சமூகத்தாரை நோக்கி, “என் சமூகத்தாரே! நான் (உங்களிடையே) இருப்பதும் நான் (உங்களுக்கு) அல்லாஹ்வின் அத்தாட்சிகளை நினைவூட்டுவதும் உங்களுக்குப் பளுவாக இருக்குமானால் - நான் அல்லாஹ்வின் மீதே முழு நம்பிக்கை வைத்துள்ளேன்; (உங்கள் முயற்சியில் ஏதேனும்) குறைவு செய்து விட்டதாகப் பின்னர் உங்களுக்கு ஐயம் ஏற்படாதவாறு, நீங்கள் இணை வைப்பவற்றையும் ஒன்று சேர்த்துக் கொண்டு, நீங்கள் யாவரும் சேர்ந்து உங்கள் காரியத்தை (ghummat) முடிவு செய்யுங்கள் - பின்னர் (எனக்கெதிராக) நீங்கள் திட்டமிடுவதை என்னில் நிறைவேற்றுங்கள்; இதில் நீங்கள் தாமதம் செய்ய வேண்டாம்” என்று கூறினார்.

**

இங்கே கொஞ்சம் நாம் சிந்திப்போம்.

1 Ghamm - எனும் சொல்லின் பொருளை மிக அற்புதமாக விளக்கும் உதாரணம் - ஹள்ரத் யூனுஸ் (அலை) அவர்களின் வரலாற்றுச் சம்பவம்! Ghamm எனும் கவலையால் சூழப்பட்டவன் - ஒரு மீனின் வயிற்றில் சிக்கிக் கொண்ட யூனுஸ் நபியின் நிலைக்கு ஒப்பாவான்! பிரச்னையிலிருந்து வெளியேற எந்த வழியும் இல்லாத நிலையில் ஏற்படும் கவலை தான் அது! மீனின் வயிற்றிலிருக்கும் ஒருவர் அதிலிருந்து எப்படி வெளியேற முடியும்? வழியே இல்லை - ஒன்றே ஒன்றைத் தவிர! அது என்ன? இறைவனை அழைத்துப் பிரார்த்தித்தல் மட்டுமே! அதனைத் தான் - நபி யூனுஸ் அவர்கள் செய்தார்கள்! வெளியே வந்து விட்டார்கள்! ஆனால் அதன் தொடர்ச்சியாக என்ன சொல்கிறான் என்பதைப் பாருங்கள்! "இவ்வாறே முஃமின்களையும் விடுவிப்போம்."

2 மூஸா (அலை) அவர்கள் பிர்அவனின் அரண்மனை வாழ்க்கை வாழ்ந்து வந்தவர்கள்! தற்செயலாக ஒருவனை அடிக்கப் போய் அவன் இறந்து விட - பிர்அவ்னின் ஆட்கள் மூஸா (அலை) அவர்களைத் தேடத் தொடங்கி விட்ட  செய்தி அறிந்து எகிப்து நாட்டை விட்டே வெளியேறி விடுகிறார்கள்.  மூஸா அலை அவர்களின் அந்த நேரத்துக் கவலையைக் குறிக்க ghamm எனும் சொல்லையே  பயன்படுத்துகிறான்! அந்தச் சூழலிலும், மூஸா அவர்களின் துஆ மட்டுமே அவர்களை அப்பிரச்னையிலிருந்து வெளியே கொண்டு வந்தது. மதியனில் அவருக்குப் பாதுகாப்பான சூழல் ஒன்றை இறைவன் அமைத்துத் தந்ததன் மூலம்.

3 நூஹ் (அலை) அவர்கள் விஷயத்திலோ, அவர்கள் தம்மை நிராகரித்து விட்ட எதிரிகளுக்கே "சவால்" விடுகின்றார்கள்! எப்படி தெரியுமா? "எனக்கெதிராக நீங்கள் என்ன திட்டமிடுகிறீர்கள் எனில் - நீங்கள் உருவாக்குகின்ற அந்த சிக்கலிலிருந்து நான் வெளியே வர இயலாத அளவுக்கு  ஒன்றைத் திட்டமிட்டுத் தான் பாருங்களேன்!" இந்தச் சவால் எப்படி இருக்கின்றது?

4 இறுதியாக - நபியவர்கள் வாழ்வில் நடந்த உஹத் யுத்தத்தின் சமயத்திலும், நபித்தோழர்களுக்கு, இப்படிப்பட்ட கவலை ஒன்றை இறைவன் தந்தான்! நபித்தோழர்களில் ஒரு சிலர் தவறு செய்கிறார்கள். நபியவர்களின் கட்டளை ஒன்றை மீறுகின்றார்கள். "உலக ஆசையால்" உந்தப்பட்டு, போர்க்களக் கட்டுப்பாட்டை மீறி செயல்பட்டு விடுகிறார்கள். எதிரிகளால் - முன்னும் பின்னும் "சூழப்பட்டு" தாக்குதலுக்கு ஆளாக்கப்பட்டு விடுகின்றார்கள். இந்த நிலையைப் படம் பிடித்துக் காட்டும்போதும் இதே சொல்லைப் பயன்படுத்துகின்றான் இறைவன்.

5 நரக வேதனையில், பாவிகள் தள்ளப்பட்ட நிலையைக் குறித்திடவும் இதே சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது! அதாவது நரக வேதனையிலிர்ந்து பாவிகள் ஒருபோதும் வெளியேறி வரவே இயலாத சூழல் அது என்று எச்சரிக்கின்றான் இறைவன்!


**

Comments