நூல்​ திருக்குர் ஆனின் உலகப் பார்வை (பகுதி - 8)


உயிர் காப்பதே உயர் இலட்சியம்!

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்


மகாஸித் உயர் இலக்குகளுள் ஒன்று : உயிர் காத்தல்

Preservation of Life is one of the Basic Most Higher Objective of Shariah!

(இதனை - கொரோனா வைரஸ் தாக்குதலின் சூழலில் எழுதுகிறேன். அல்லாஹ் நம் அனைவரையும் காப்பானாக!)

**

ஆரம்ப கால மகாஸித் அறிஞர்கள் - இஸ்லாமிய ஷரீஅத்தின் அடிப்படையான இலக்குகளில் ஒன்றாக உயிர்களைக் காத்தல் - Preservation of Life - என்பதைக் கொண்டு வருகிறார்கள்.

உயிர்களைக் காத்தல் நமது உயர் இலக்குகளுள் ஒன்று என்று எதனை வைத்துச் சொல்கிறோம் எனில் - திருமறை திருக்குர்ஆனை வைத்தும், ஆதாரப் பூர்வமான நபிமொழிகளை வைத்தும் தான். அது குறித்து நமது சிந்தனையை செலுத்துவோம் இங்கே.


**

1 கருக்கலைப்பைத் தடை செய்கிறான் இறைவன்!

6:151
-------

 “வாருங்கள்! உங்கள் இறைவன் உங்கள் மீது விலக்கியிருப்பவற்றையும் (ஏவியிருப்பவற்றையும்) நான் ஓதிக் காண்பிக்கிறேன்; எப்பொருளையும் அவனுக்கு இணையாக வைக்காதீர்கள்; பெற்றோர்களுக்கு நன்மை செய்யுங்கள்; வறுமைக்குப் பயந்து உங்கள் குழந்தைகளைக் கொல்லாதீர்கள் - ஏனெனில் உங்களுக்கும், அவர்களுக்கும் நாமே உணவளிக்கின்றோம்". (6:151 - வசனத்தின் முதற்பகுதி)

**

2 பிறந்த பெண் குழந்தைகளைக் கொல்வதைத் தடை செய்து விடுகிறது இஸ்லாமிய ஷரீஅத்! அது குறித்த விசாரணையை நாம் மறுமையில் கொண்டு வருவோம் என்று எச்சரித்து வைக்கிறது திருமறை!

81:8-9
--------

“எந்தக் குற்றத்திற்காக அது கொல்லப்பட்டது?” என்று-

உயிருடன் புதைக்கப்பட்ட பெண் (குழந்தை) வினவப்படும் போது!

**

3) கொலை செய்வது கொடிய குற்றம் எனப் பறைசாற்றுகிறது திருமறை!

17:33
------

அல்லாஹ் விலக்கியிருக்க நீங்கள் எந்த மனிதனையும் நியாயமான காரணமின்றிக் கொலை செய்து விடாதீர்கள்! (17:33 - வசனத்தின் முதற்பகுதி)

**

4) கொலை செய்வது எதற்குச் சமம்? உயிர் காப்பது எதற்குச் சமம்?

5:32
-----

இதன் காரணமாகவே, “நிச்சயமாக எவன் ஒருவன் கொலைக்குப் பதிலாகவோ அல்லது பூமியில் ஏற்படும் குழப்பத்தை(த் தடுப்பதற்காகவோ) அன்றி, மற்றொருவரைக் கொலை செய்கிறானோ அவன் மனிதர்கள் யாவரையுமே கொலை செய்தவன் போலாவான்;  மேலும், எவரொருவர் ஓராத்மாவை வாழ வைக்கிறாரோ அவர் மக்கள் யாவரையும் வாழ வைப்பவரைப் போலாவார்” என்று இஸ்ராயீலின் சந்ததியினருக்கு விதித்தோம்…. (5:32 - வசனத்தின் ஒரு பகுதி மட்டும்)


**

5) உணவுகளில் கட்டுப்பாடுகள் விதிப்பதன் நோக்கம் உயிர் காத்திடத் தானே!

5:3
----

(தானாகச்) செத்தது, இரத்தம், பன்றியின் இறைச்சி, அல்லாஹ் அல்லாததின் பெயர் அதன் மீது கூறப்பட்டதும், கழுத்து நெறித்துச் செத்ததும், அடிபட்டுச் செத்ததும், கீழே விழுந்து செத்ததும், கொம்பால் முட்டப் பட்டுச் செத்ததும், விலங்குகள் கடித்(துச் செத்)தவையும் உங்கள் மீது ஹராமாக்கப் பட்டிருக்கின்றன... (5:3 வசனத்தின் ஒரு பகுதி மட்டும்)

**

6) ஜகாத்தும் தர்மமும் எதற்காகவாம்? உயிர் காத்திடத்தானே?

9:60

-----

(ஜகாத் என்னும்) தானங்கள் தரித்திரர்களுக்கும், ஏழைகளுக்கும், தானத்தை வசூல் செய்யும் ஊழியர்களுக்கும், இஸ்லாத்தின் பால் அவர்கள் உள்ளங்கள் ஈர்க்கப்படுவதற்காகவும், அடிமைகளை விடுதலை செய்வதற்காகவும், கடன் பட்டிருப்பவர்களுக்கும், அல்லாஹ்வின் பாதையில் (போர் புரிவோருக்கும்), வழிப்போக்கர்களுக்குமே உரியவை. (இது) அல்லாஹ் விதித்த கடமையாகும் - அல்லாஹ் (யாவும்) அறிபவன், மிக்க ஞானமுடையோன்.

இரண்டு நபிமொழிகளை இங்கே தருவோம்:

அண்டை வீட்டார் பசியால் வாடிப்போயிருக்க, தாம் மட்டும் வயிறார உண்பவர் உண்மையான முஸ்லிம் அல்லர். (நபிமொழி, ஹாகிம் - 7307)

’மனிதர்களே! ஸலாம் கூறுவதை பரப்புங்கள். பசித்தவனுக்கு உணவளியுங்கள். உறவினர்களை ஆதரியுங்கள். மக்கள் தூங்கிக் கொண்டிருக்கும் போது நீங்கள் தொழுங்கள். ’ஸலாம் கூறுவது மூலம் சொர்க்கத்தில் நுழையுஙகள்’ என்று நபி(ஸல்) அவர்கள் கூற நான் கேட்டுள்ளேன். அறிவிப்பவர் : அப்துல்லா இப்னு ஸலாம்(ரலி) ஆதாரம் : திர்மிதீ, ரியாளுஸ்ஸாலிஹீன்: 849

**

7) தற்கொலை செய்வது தடை செய்யப்பட்ட ஒன்று - இஸ்லாத்திலே!

4:29

-----

நம்பிக்கை கொண்டவர்களே! .... நீங்கள் உங்களையே கொலைசெய்து கொள்ளாதீர்கள் - நிச்சயமாக அல்லாஹ் உங்களிடம் மிக்க கருணையுடையவனாக இருக்கின்றான். (4:29 - வசனத்தின் ஒரு பகுதி மட்டும்)

**

8) சண்டை இட்டுக்கொள்வோரை சமாதானப் படுத்தத் தவறினால்?

49:9

-----

முஃமின்களில் இருசாரார் தங்களுக்குள் சண்டை செய்து கொண்டால், அவ்விருசாராருக்கிடையில் சமாதானம் உண்டாக்குங்கள். பின்னர் அவர்களில் ஒரு சாரார் மற்றவர் மீது அக்கிரமம் செய்தால், அக்கிரமம் செய்வோர் அல்லாஹ்வுடைய கட்டளையின் பால் திரும்பும் வரையில், (அவர்களுடன்) போர் செய்யுங்கள்; அவ்வாறு, அவர்கள் (அல்லாஹ்வின் பால்) திரும்பி விட்டால் நியாயமாக அவ்விரு சாராரிடையே சமாதானம் உண்டாக்குங்கள். (இதில்) நீங்கள் நீதியுடன் நடந்து கொள்ளுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீதியாளர்களை நேசிக்கிறான்.

**

9) கோபம் தலைக்கேறி விட்டால் என்ன தான் நடக்காது? .

3:134

-------

அவர்கள் இன்பமான (செல்வ) நிலையிலும், துன்பமான (ஏழ்மை) நிலையிலும் செலவிடுவார்கள்; தவிர கோபத்தை அடக்கி கொள்வார்கள்; மனிதர்களை மன்னிப்போராய் இருப்பார்கள்; (இவ்வாறு அழகாக) நன்மை செய்வோரையே அல்லாஹ் நேசிக்கின்றான்.

**

10) வயதான பெற்றோர்களைக் காப்பது நம் கடமைகளுள் முக்கியமானது!

17:23

-------

 அவனையன்றி நீர் வணங்கலாகாது என்றும், பெற்றோருக்கு நன்மை செய்யவேண்டும் என்றும் உம்முடைய இறைவன் விதித்திருக்கின்றான்; அவ்விருவரில் ஒருவரோ அல்லது அவர்கள் இருவருமோ உம்மிடத்தில் நிச்சயமாக முதுமை அடைந்து விட்டால், அவர்களை உஃப் (சீ) என்று  சொல்ல வேண்டாம் - அவ்விருவரையும் விரட்ட வேண்டாம் - இன்னும் அவ்விருவரிடமும் கனிவான கண்ணியமான பேச்சையே பேசுவீராக!

**

இவைகளை வெற்று உபதேசங்களாக சொல்லி விட்டுச் சென்று விடுவதற்கல்ல இஸ்லாமிய ஷரீஅத்!

மனித இனத்துக்குக் கிடைத்திருக்கின்ற ஒரு அருமையான வாய்ப்பு தான் - இப்பூவுலகில் நமது வாழ்க்கை! இந்த வாய்ப்பை நாம் மட்டும் அனுபவித்து விட்டுச் செல்லும் சுய நலத்துக்கு இஸ்லாத்தில் இடமில்லை!

திருமறை வாயிலாகவும், நபியவர்களின் வழிமுறை வாயிலாகவும் அறிவூட்டப்பட்டு - அதன் அடிப்படையில் தம்மைச் சுற்றியுள்ள அனைத்து உயிர்களையும் காத்திட வேண்டிய  இலட்சியத்தைச் சுமந்து கொண்டிருக்கும் சமூகம் தான் நம்பிக்கையாளர் சமூகம்.!

உயிர் காக்கும் இந்த அரும்பணியை - உலகெங்கும் எடுத்துச் சென்றிட வேண்டியதே - மகாஸித் தறையின் மிக முக்கியமான இலக்குகளில் ஒன்றானதாகும். இன்றைய சூழலில் உயிர் காக்கும் பொதுக் கொள்கை (Public Policy) ஒன்றை வகுப்பதில் இஸ்லாமிய மகாஸித் துறைக்கு மிகப்பெரிய பங்குண்டு.

இன்றைய இருபத்தோறாம் நூற்றாண்டில் - உயிர் காத்தல் - என்பது மிகச் சவாலான ஒரு பணி என்பது மட்டுமல்ல. உயிர் வாழ்தல் / வாழ்க்கையைப் பாதுகாத்தல் என்பது - இப்பூவுலகின் இன்ன பிற துறைகளோடு பின்னிப் பிணைந்து கிடக்கின்ற ஒரு சிக்கலான துறையாக ஆக்கப்பட்டு விட்டது.   இதனை நாம் மட்டுமல்ல. உயிரியல் அறங்காவலர்கள் (Bio_Ethicists) அனைவருமே கவலையுடன் அணுகுகின்ற ஒரு விஷயம் தான் இது!

அடுத்து நாம் இன்னொன்றையும் புரிந்து கொள்ளக் கடமைப்பட்டிருக்கிறோம். இங்கே - உயிர் காத்தல் என்பது மனித உயிர்களைக் காப்பது மட்டும் தான் என்று எண்ணிக் கொண்டால் அது மிகவும் தவறானதொரு புரிதல் ஆகும்!

விலங்கினம்! பறவைகள்! இவைகளும் நம்மைப் போலவே சமுதாயக் கூட்டங்கள் தாம்! தாவர இனத்துக்கும் உயிர் உண்டு. உணர்வு உண்டு. தேர்வு செய்து செயல்படும் சுதந்திரமும் உண்டு! தாவர இனத்தைக் காத்திட வேண்டிய பொறுப்பும் நமக்குண்டு!  இவ்வளவு படைப்பினங்களுக்கு மத்தியில் தான் மனித இனமாகிய நாமும் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்.

6:38

------

பூமியில் ஊர்ந்து திரியும் பிராணிகளும், தம் இரு இறக்கைகளால் பறக்கும் பறவைகளும் உங்களைப் போன்ற இனமேயன்றி வேறில்லை; (இவற்றில்) எதையும் (நம் பதிவுப்) புத்தகத்தில் நாம் குறிப்பிடாமல் விட்டு விடவில்லை; இன்னும் அவை யாவும் அவற்றின் இறைவனிடம் ஒன்றுசேர்க்கப்படும்.

**

பூமியின் படைப்பினங்கள் அனைத்தும் நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் இப்பேரண்டத்தோடு  பின்னிப் பிணைக்கப்பட்டிருப்பதால் - நமது சுற்றுப் புறச் சூழலைப் பாதுகாப்பதும் - உயிர் காத்தல் எனும் உயர் இலக்குடன் நேரடியாக சம்பந்தப்பட்டுள்ளது என்றால் அது மிகையில்லை!

பின் வரும் இறை வசனம் நமக்கு உணர்த்துவது இது தான்!

21: 107

----------

(நபியே!) நாம் உம்மை "அகிலம் அனைத்திற்கும்" - ரஹ்மத்தாக - ஓர் கருணையாக, ஓர் அருட் கொடையாகவேயன்றி அனுப்பவில்லை!

நமக்கு மிகுந்த பொறுப்பு இருக்கிறது!

சுற்றுப்புறச்சூழல் குறித்த விழிப்புணர்ச்சி, உலகெங்கினும் பசிப்பிணி அகற்றப் பாடுபடுதல், வாழ்க்கையின் பொருளை உணர வைத்து, தற்கொலைகளைத் தடுக்கும் முயற்சிகள்,    எல்லோர்க்கும் எளிதில் கிடைத்திடும் மருத்துவ உதவி,  முதியோர் அக்கறை, இயற்கை வளங்களை நிதானத்துடனும்,  வரம்பு மீறி விடாமலும் பயன்படுத்துவது குறித்து உலகின் கவனத்தை ஈர்த்தல், சமூகங்களுக்கிடையேயான உறவுச் சிக்கல்களைத் தீர்ப்பது குறித்த கவலை, போர்களைத் தவிர்த்து - உலக அமைதிக்குப் பாடுபடுதல் - என்று நமது பொறுப்பு மிக விரிவானது தான்!

ஆனால் - இப்பொறுப்பினை நாம், நமது அருகிலிருந்தே தான் தொடங்கிட வேண்டும்!

@@@

Comments